புதன், 29 டிசம்பர், 2010

தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை: கீரனூர் ஜாகீர் ராஜா

ல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.


தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.

பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.

தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.

மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.

பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.

ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.

எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.

கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!

இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.

செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.

இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.

ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.

குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.

எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்

பெருங்காடியும் இவள் மக்களும்

திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக

நீர் வார்த்துக் கொடுத்தோம்

என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.

ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.

இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!

(அக்டோபர் 31, 2010 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

செவ்வாய், 14 டிசம்பர், 2010

குழந்தைகள் புத்திசாலிகளாக வீட்டில் நூலகம்: ஆய்வில் தகவல்

குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்க, அவரவர் வீடுகளில் சிறு நூலகங்கள் இருந்தாலே போதும் என அமெரிக்கா, நெவேடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக, குழந்தைகளுக்கு வகுப்பு பாடங்களுடன் தனித்திறனாய்வு பயிற்சிகளாக, யோகா, தியானம், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு போன்ற சிறப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

மேலும், குழந்தைகளின் உடலுக்கும், மனதிற்கும் சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வலியுறுத்துவது வழக்கம். குழந்தைகள் கல்வியில் ஆர்வம் செலுத்துவது குறித்து, அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகம் 20 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆய்வில், வீட்டில் 500 புத்தகங்கள் கொண்ட சிறு நூலகம் இருக்கும் பட்சத்தில், குழந்தைகளின் ஆர்வம் புத்தகங்கள் பக்கம் திரும்புவது தெளிவானது.

மேலும், இந்த ஆய்வில் மூன்று ஆண்டுகள் மட்டுமே படித்த பெற்றோர் மற்றும் 16 ஆண்டுகள் படித்த பெற்றோர் வீடுகளில், சிறு நூலகம் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குழந்தைகளின் படிப்பில் பெரும் மாறுதல்கள் காணப்பட்டது. சிறு நூலகங்கள் இருக்கும் வீட்டில் மூன்று வயதிலேயே குழந்தைகள் புத்தகங்கள் பக்கம் திரும்புவது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு நூலகம் உள்ள வீடுகளில் வளரும் குழந்தைகளின் கல்வித் தரமும் சராசரி உயர்ந்தது.

இந்த ஆய்வின் மூலம், பெற்றவர்கள் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால் தான், குழந்தைகளும் நன்றாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையும் மாறியுள்ளது.

நன்றி: தினமலர் - 14.12.2010

சனி, 27 நவம்பர், 2010

நான் யார்?

லகத்தில் பிறந்த அத்தனை ஜீவன்களும் சுகமாய் இருக்கவே விரும்புகின்றன. ஒவ்வொரு உயிரும் தன்னிடத்திலேயே மிகப் பிரியமாக இருக்கிறது. இந்தப் பிரியம் ஒரு சுகம். அந்தச் சுகத்தை நித்திரையின்போது மனம் நன்றாக அனுபவிக்கிறது. தனக்குள் ஒடுங்கி தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நன்றாகத் தூங்கினேன் என்கிற சந்தோஷத்தோடு எழுந்திருக்கிறது. விழித்திருக்கிற நிலையில் தன்னில் தான் ஒடுங்குதல், தன்னை அறிதல் என்பது நிகழ வேண்டும்.

'நான் யார்' என்கிற கேள்வியைக் கேட்டுப் பதில் பெறுவதே இதற்கு எளிமையான வழி. உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்... 'நான் யார்? நான் யார்? உடம்பா? உடம்பு எனில், தூங்கும்போது இந்த உடம்பு எங்கே இருந்தது? அதைப் பற்றிய அறிவு எங்கே இருந்தது? வேறு ஏதோ ஒன்று தூங்கி, வேறு ஏதோ ஒன்று ஒடுங்கி உள்ளே இருந்ததல்லவா! உடம்பைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்ததல்லவா?

அப்படியானால் 'நான்' என்பது உடம்பல்ல. எனில், புலன்களாலும், புலன்களின் அனுபவத்தாலும் மூளையின் ஞாபக சக்தியாலும் ஏற்பட்ட மனம்தான் 'நானா'? மனம் என்ன செய்யும்? ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும். தூங்கும்போது கனவு காணும்; கனவில் சண்டை போடும்; சந்தோஷப் படும்; ஏறும்; இறங்கும்; அலையும். ஆனால், கனவில்லாத நேரமும் இருந்ததே! கனவில்லாத தூக்கத்தைதானே நல்ல தூக்கம் என்கிறோம்; ஆனந்தமாகத் தூங்கினோம் என்று சொல் கிறோம். அப்படியானால், விழித்திருக்கும் போது அலையும் மனமும், கனவின்போது அலையும் மனமும் நானல்ல. வேறு ஏதோ ஒன்று ஆனந்தமாகத் தூங்கியது. அது எது?

'நான்' யாரென்று தெரியாமல் விழித்து நிற்கிறேனே... அது நானா? இல்லை; அதுவும் நீ இல்லை. அது இல்லை நான்... இது இல்லை நான்... என்று ஒவ்வொன்றாக, எதை நான் என்று நினைத்திருக்கிறோமோ அதையெல்லாம் புறந்தள்ளி, தள்ளமுடியாமல் எது மீதி நிற்கிறதோ, அதுவே 'நான்'.

உன் அறிவால், உன் அனுபவத்தால் இந்த உலகத்தைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண் டிருக்கிறாய். இந்த உலகம் நல்லது என்றும், கெட்டது என்றும் நீயாக ஒரு முடிவுக்கு வருகிறாய். உண்மை என்ன என்று உன்னால் பார்க்க முடியவில்லை. எந்த விஷயத்திலும் அதன் உண்மையை, அதன் சத்தியத்தை உன்னால் அறியமுடிவதில்லை.

உதாரணமாக, இரவில் ஒரு தாம்புக் கயிற்றைப் பாம்பு என்று நினைத்துப் பதறி ஓடி அலைகிறாய். உன் ஆத்ம நண்பன் உன்னை நிலைநிறுத்தி, அதைப் பார் என்று சொல்லி, தன் கையால் அதைத் தூக்கி, கயிறு என்று காண்பித்த பிறகு, 'பாம்பு' உடனே காணாமல் போய், 'அட, கயிறு!' என்ற நிம்மதி தொற்றிக்கொள்கிறது. எல்லாம் உனது கற்பனை!

நன்றி: பாலகுமாரன் - "சக்திவிகடன்"

திங்கள், 22 நவம்பர், 2010

ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்!

நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது. மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆக்சிஜன் செல்வது தடைபட்டால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

சுவாசம்: மூச்சுக்குழல், நுரையீரல், உதரவிதானம், காற்று நுண்ணறைகள், மூச்சுக்கிளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம்.

* உதரவிதானம் சுருங்கி விரியும் போது சுவாசம் நிகழ்கிறது. உதாரவிதானம் சுருங்கி ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுகிறது. விரியும்போது கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.

* ஒரு நுரையீரலில் 30 ஆயிரம் சிறு மூச்சுக்குழல்கள் உள்ளன.

* 600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன.

* வல நுரையீரல் எடை 620 கிராம், இட நுரையீரல் 560 கிராம்.

* நுரையீரல்களில் தசைகள் இல்லை. மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகிறது.

* சுவாசத்தின் போது காற்று உள்சென்று வெளிவரும் அளவை ஸ்பைரோ மீட்டரால் கணக்கிடலாம்.

* நுரையீரல்களின் மொத்த காற்றின் கொள்ளளவு 4.5 லிட்டர். சுவாசத்தின் போது அரை லிட்டர் காற்று உள்ளே செல்கிறது.

*முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.

பாதிப்பு: நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும்.

புகை பிடித்தல், வீட்டிற்கு வெளியே - உள்ளே மாசு, நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகியன இதற்கு காரணம்.

தடுக்க வழி: புகைப்பதால் வரும் புகையில் மூன்றில் ஒரு பங்கு புகைபிடிப்போரையும், 2 பங்கு சுற்றியுள்ளோரையும் பாதிக்கிறது. நாம், நம்மை சுற்றியுள்ளோர் புகைக்காமலும் தடுப்பது அவசியம்.

* தொற்று வியாதிகளில் 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. எனவே கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* கார் என்ஜினை தேவையின்றி ஓட்டக்கூடாது.

* திறந்த வெளியில் பொருட்களை எரிக்க கூடாது.

* மாசு தடுப்பு குறித்த சட்டங்களை பின்பற்ற வேண்டும்.

* புகையில்லா அடுப்பை பயன்படுத்தவும், மின் உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

* வீட்டை சுற்றிலும் கழிவுநீர் தேங்க விடக்கூடாது.

* சோபா, மிதியடி, மெத்தை, நாற்காலிகளில் தூசி படிய விடக்கூடாது.

* உடன் பணிபுரிபவருக்கு ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் இருந்தால் நாம் முக மூடியும், தடுப்பு உடையும் அணிவது அவசியம்.

வேண்டாம் சிகரெட்: சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம்.

ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்!

நன்றி: தினமலர்

சனி, 20 நவம்பர், 2010

குழந்தைகள் - கலீல் கிப்ரான்

ங்கள் குழந்தைகள்

உங்கள் குழந்தைகள் அல்ல

அவர்கள்

உங்கள் வாழ்க்கைக்கான ஏக்கத்தின்

புதல்வர்களும் புதல்விகளும்;

அவர்கள்

உங்கள் மூலம் இந்த உலகிற்கு

வந்துள்ளார்களே தவிர

உங்களில் இருந்து அல்ல

அவர்கள்

உங்களுடனேயே இருந்தாலும்

அவர்கள்

உங்களுடையவர்கள் அல்ல.

அவர்களுக்கு

உங்கள் அன்பை வழங்கலாமே தவிர

உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது.

ஏனெனில்

அவர்கள் அவர்களுக்கான

சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின்

தேகங்களுக்கு ஒரு இல்லத்தை

நீங்கள் வழங்கி இருக்கலாம் ;

ஆன்மாக்களுக்கு அல்ல.

ஏனெனில்

அவர்களின் ஆன்மா

கற்பனையிலும் உங்களால்

பிரவேசிக்க முடியாத

நாளை எனும் வீட்டினில்

ஜொலிக்கிறது.

நீங்கள்

அவர்களை போன்றிருக்க முயற்சிக்கலாம்;

ஆனால் உங்களை போன்று அவர்களை

ஆக்கிட முயற்சிக்காதீர்கள்.

ஏனெனில்

வாழ்க்கை என்பது

பின்னோக்கி செல்வதுமல்ல;

நேற்றைய தினத்தோடு

தேங்கிநின்று விடுவதுமல்ல

- கலீல் கிப்ரான்


நன்றி: இந்நேரம். காம்

வியாழன், 18 நவம்பர், 2010

ஆஹா... அருந்ததி ராய்

திகாரத்துக்கு எதிராக அஞ்சாமல் போராடும் துணிச்சல்காரர், அருந்ததி ராய்!

காஷ்மீர், ஈழம், மாவோயிஸ்ட்டுகள்... என அனலடிக்கும் பிரச்னைகள் அனைத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் எழுத்துப் போராளி!

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 1961-ம் வருடம் நவம்பர் 24-ம் தேதி பிறந்தவர். கேரள அம்மாவுக்கும் பெங்காலி அப்பாவுக்கும் பிறந்தவரின் இளம் பருவம் முழுக்க ஆலப்புழாவில் இருக்கும் 'அய்மெனம்' (Ayemenem) எனும் அழகிய கிராமத்தில் கழிந்தது!

அய்மெனம் கிராமத்தில் கம்யூனிசத்தின் தாக்கம் அதிகம். இதைப்பற்றி, 'அப்போது எல்லாம் அடுத்த வாரம் புரட்சி வந்துவிடும் என்பதுபோலவே இருக்கும்' என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார் தனது நூலில்!

கோட்டயத்தில்தான் பள்ளிப் படிப்பு. ஊட்டி லவ்டேலில் இருக்கும் லாரன்ஸ் பள்ளியிலும் சில வருடங்கள் படித்தார். 16 வயதில் டெல்லிக்குச் சென்று கட்டடக் கலை படிப்பில் சேர்ந்தார்!

டெல்லியில் உடன் படித்த சீனியர் ஒருவரைக் காதல் மணம் புரிந்துகொண்டார். ஆனால், நான்கே வருடங்களில் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது!

1997-ல் புக்கர் பரிசு வென்ற இவருடைய 'The God of Small Things' விற்பனையிலும் செம ஹிட். மே மாதம் வெளியான நாவல் ஜூன் மாதமே விற்றுத் தீர்ந்தது. அட்வான்ஸாக மட்டும் அருந்ததி ராய்க்குக் கிடைத்த தொகை 5 லட்சம் பவுண்ட்!

தனது 40-வது வயதில் புக்கர் பரிசு வென்றார் அருந்ததி ராய். இப்போது வரை புக்கர் பரிசு வென்ற ஒரே இந்திய எழுத்தாளர் ராய்தான்!

'The God of Small Things' நாவலை 97-ம் வருடத்தின் உலகின் தலை சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்தது 'டைம்' பத்திரிகை. நாவல் வெளியாகி உலகமே கொண்டாடிக்கொண்டு இருக்க... மீண்டும் டி.வி. சீரியலுக்கு திரைக்கதை எழுத வந்தார் அருந்ததி ராய். The Banyan Tree என்ற சீரியலின் திரைக்கதை ராய் எழுதியதே!

புக்கர் பரிசு வென்றதும், 'இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை!' என்பது அருந்ததியின் பதில் மரியாதை!

நாவல் எழுதிப் புகழ் பெறும் வரை, டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எடுத்த ஏரோபிக்ஸ் வகுப்புகள் மூலம் கிடைத்தது மட்டுமே வருமானம்!

நர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், விவசாயிகளின் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், புக்கர் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த பணத்தில் 30 ஆயிரம் டாலரை 'நர்மதாவைக் காப்பாற்றுவோம் அமைப்பு'க்கு வழங்கினார்!

பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது, 'வல்லரசின் முதல் படி' என்று தேசமே கொண்டாடியது. ஆனால், 'அணு ஆயுத அரசியல் மிக மோசமானது!' என்று 'The end of imagination' எனும் கட்டுரையில் வெடித்தார் அருந்ததி ராய்!

1985-ல் வெளியான Massey Sahib என்ற திரைப்படத்தில் அருந்ததி ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அந்தப் பட இயக்குநர் பிரதீப்பை இரண்டாவ தாகத் திருமணம் செய்துகொண்டார்!

பிரதீப் இயக்கிய In Which Annie Gives It Those Ones படத்துக்கு அருந்ததி திரைக்கதை எழுதினார். இதற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது!

சேகர் கபூரின் 'பண்டிட் குயின்' திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்தார். The Great Indian Rape Trick என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், 'உயிருடன் இருக்கும் பூலான்தேவியின் வாழ்க்கையை அவருடைய அனுமதி இன்றி சினிமாவாக எடுத்தது தவறு!' என்று கடும் கண்டனம் தெரிவித்தார்!

நர்மதா அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை, 'நாகரிக வன்முறை' என்று விமர்சித்தார். இதற்காக இவர் மீது 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்குப் பதிவு செய்தது நீதிமன்றம். அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்க மறுத்தார் ராய். அதனால், அடை யாளமாக ஒருநாள் சிறைத் தண்டனையும், 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரே ஒருநாள் சிறை சென்று வந்தார் அருந்ததி ராய்!

2003-ம் வருடம் நியூயார்க் நகரில் 'ஏகாதிபத்திய ஜனநாயகம் - உடனடித் தயாரிப்பு' என்ற தலைப்பில் அமெரிக்காவை விமர்சித்து, அருந்ததி ராய் ஆற்றிய நீண்ட உரை உலகப் புகழ் பெற்றது!

2006-ம் வருடம் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது, 'War Criminal' என்று சாடி கட்டுரை எழுதினார் ராய்!

கேரளாவின் முத்தங்கா காடுகளில் ஆதிவாசி மக்கள் கொடூரமாக அடித்துத் துரத்தப்பட்டபோது, உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தவர், 'உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது' என்று கேரளாவின் அப்போதைய முதல்வர் ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம் எழுதினார்!

இலங்கையில் யுத்தம் நடந்தபோது, எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் பலரும் கள்ள மௌனம் சாதித்தபோது, 'இலங்கையில் நடப்பது ஓர் இனப் படுகொலை' என்று வெளிப்படையாகக் கட்டுரை எழுதியவர் ராய்!

தண்டகாரண்யா காட்டில் இந்திய அரசு நடத்தி வரும் போரை 'இந்தியாவின் இதயத்தின் மீதான போர்' என்று வர்ணித்துக் கட்டுரை எழுதிய அருந்ததி ராய், 10 நாட்களுக்கும் மேல் நேரில் சென்று காட்டுக்குள் தங்கி இருந்து திரும்பினார். அந்த அனுபவத்தை 'தோழர்களுடன் ஒரு பயணம்' என்று நீண்ட கட்டுரையாக எழுதினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 'இந்தப் போரின் C.E.O' என்றே குறிப்பிடுகிறார் ராய்!

2004-ம் வருடம் வன்முறைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அருந்ததி ராய்க்கு 'சிட்னி அமைதி விருது' வழங்கியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். The Algebra of Infinite Justice என்ற கட்டுரைத் தொகுப்புக்காக 2006-ம் ஆண்டு இந்திய அரசு சாகித்திய அகாடமி விருது அறிவித்தது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்!

இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது 'ஒசாமா பின்லேடன், ஜார்ஜ் புஷ் இருவருமே கிரிமினல்கள்தான். ஒரே ஒரு வித்தியாசம், பின்லேடனை மக்கள் யாரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை!' என்று இவர் வெளியிட்ட கருத்து, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கவைத்தது!

1997-ம் வருடமே அடுத்த நாவல் எழுத ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அரசியல் கட்டுரைகள்தான் அதிகம் எழுதினார். இன்னும் நாவல் எழுதவில்லை. சமீபத்தில் வெளியான அருந்ததி ராயின் Field Notes on Democracy:Listening to Grasshoppers புத்தகமும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் நிறைந்ததே!

Come September என்ற தலைப்பில் நியூ மெக்சிகோவில் அருந்ததி ராய் 64 நிமிடங்கள் பேசினார். அதிகாரம், ஆயுதம் மற்றும் கார்ப்பரேட் உலகின் அரசியலை அம்பலப்படுத்தும் அந்தப் பேச்சை அடிப்படையாக வைத்து, நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவர் WE என்ற பெயரில் டாக்குமென்ட்டரி எடுத்தார். ஏராளமான பணம் செலவழித்து, இணையத்தில் அந்தப் படத்தை இலவசமாகக் கிடைக்கச் செய்த அந்த நபர், கடைசி வரை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை!

'மற்றொரு மாற்று உலகம் சாத்தியமானது மட்டுமல்ல, நான் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஓர் அமைதியான நாள் ஒன்றில், என் பயணத் தின் மூச்சுக் காற்றை நான் உணர்கிறேன்' ராயின் நம்பிக்கை வார்த்தைகள் இவை!

நன்றி: ஆனந்த விகடன் - அருந்ததிராய் 25

திங்கள், 8 நவம்பர், 2010

தமிழ்ச் சினிமா - பாவேந்தர் பாரதிதாசன்

ருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே

ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்

திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பியர்கள்

தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்

‘இருவிழியால் அதுகாணும் நாள் எந்த நாளோ,

என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,

இருள் கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்

எதிர்வக்கும் நாள்எந்நாள்' என்றுபல நினைத்தேன்.



ஒலியுருவப் படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்

ஓடினேன்; ஓடியுட்கார்ந்து தேன்இரவில் ஒருநாள்

புலிவாழும் காட்டினில் ஆங்கிலப்பெண் ஒருத்தி

புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை

மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி

வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்

எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை

எழில் முதுகிற் கைவைத்தான்! புதுமை ஒன்றுகண்டேன்.



உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,

உயிர் அதிர்ந்த காரணத்தால் உடல் அதிர்ந்து நின்றே.

தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது

சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்

சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்

சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!

களங்கமில்லாத காட்சி, அதில் இயற்கை யெழில்கண்டேன்!

கதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே!



என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக!

ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்

உள்ளவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!

ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!



வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!

மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!

வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!

வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!

அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்!

அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை

கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!



பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!

பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!

சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்

சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து

வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!

மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.

இரக்கமுற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!



படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்

பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,

படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!

பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி

இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி

இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்

படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்

படமெடுத்தா டும்;தமிழர் பங்கமெலாம் போமே!

சனி, 6 நவம்பர், 2010

இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவையா?

ஹாஜா முஹயதீன். ஜே என்பவரின் பதிவை  இங்கு தருகிறேன். என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதனால்! கோவையில் நடந்த கொடூரம் (இரு குழந்தைகள் கடத்திக்கொலை) அறிந்து மனம் பதறி இரண்டு நாட்களாய்த் தூக்கம் வராமல் தவித்தேன். என் ஆதங்கம் இவரின் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.


ம் நாட்டில் இன்று தினசரி நடக்கும் கொலைகளைக் கண்டு யாரும் சட்டை செய்வதில்லை. எங்கோ யாருக்கோ நடக்கிறது. செய்திப் பத்திரிக்கைகள் முனதினம் நடந்த குற்றங்களை பெயர், ஊர், வயது, போட்டோ எல்லாம் போட்டு அடுத்த நாள் காலையில் நமக்கு தெரிவித்துவிடுகிறது. மேலதிக விவரங்களை தர துப்பறியும் பத்திரிக்கைகள் (து!!) காத்திருக்கின்றன.

வாரம் ஒரு முறை வந்துக் கொண்டிருந்த இந்த மாதிரி பத்திரிக்கைகள் குற்றங்கள் பெருகிவருவதால் திணறிப்போய் சமூக சேவையை விரிவு படுத்தி வாரம் இருமுறை ஆக்கிவிட்டன.

இப்படி தினசரி குற்றங்களைக் கேட்டு படித்து பழகிவிட்டதால் ஒரு கிறுகிறுப்பே இல்லாமல் போய்விட்டது. பத்தோடு பதினொன்றாக சொத்துக்கள், பணம் சம்பந்தப்பட்ட கொலைகள் நடப்பதால் நமக்கு அது ஒரு நிறைவைத் தருவதில்லை.

அடுத்து வந்த கள்ளக்காதல், கற்பழிப்பு முதலான பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருந்தன. இதைப் புரிந்து கொண்ட பத்திரிக்கைகள் யார் யாரை வைத்திருந்தான் அது யாருடைய மனைவி எப்படி விஷயம் லீக் அவுட் ஆனது கத்தியால் குத்தினானா? கல்லைத்தூக்கிப் போட்டாளா? போன்று நேரில் பார்த்து (பார்த்தது போலத்தான்!!) விளக்கமாக எழுதி புண்ணியம் தேடிக் கொண்டன.

இன்றைக்கும் இந்த மாதிரி பலான மேட்டர் இல்லாத பத்திரிக்கைகள் பொட்டலம் கட்டத்தான் லாயக்கு. யாரும் வாங்குவதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால் செக்ஸ் புக்கை பத்திரமாக துணிக்கு அடியிலும் பெட்டுக்கு அடியிலும் போட்டு வைத்து யாரும் இல்லாதபோது ரகசியமாக எடுத்து படிக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பா நம் முதுகில் டின் கட்டுவார் இந்த மாதிரி பத்திரிக்கைகள் வெளியில் போடடு வைக்கலாம் அந்த வகையில் நமக்கு ஒரு வாய்ப்பு.

அது போகட்டும்.

இந்தப் பதிவு பத்திரிக்கைகள் பற்றியல்ல.

இப்படி கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் லஞ்சம் என்று பத்திரிக்கைகள் நமது மூளைக்குள் ஏற்றி ஏற்றி எல்லாமே சாதாரண நிகழ்வாகிவிட்டது. இது மாதிரி எதைக் கேள்விப்ட்டாலும் நம் ரத்தம் கொதிப்பதில்லை.

ஆனால் சிறிது இடைவெளிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்னால் நம் ரத்தம் கொதித்தது. நம் கண்ணில் நீர் வழிந்தது. கோவையில் பணத்துக்காக இரண்டு பிஞ்சு பாலகர்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்த செய்தி கேட்டு நெஞ்சம் துடித்தது.

"இழுத்து வச்சி அறுக்கணும் முதல் தலையை கொய்யணும்" வரை எல்லாருடைய ஆவேசமும் ஒரே மாதிரி இருந்தன.

பதற வேண்டாம்.

குழந்தைகளை பலாத்காரம் செய்து நீரில் மூழ்கடித்து கொன்றது மென்மையான செயல். கை வெட்டுதல், தலையை சீவுதல் போன்ற அரபு நாட்டு இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை.

அனாவசியமாக குற்றவாளியை கொன்று அவன் திருந்தி வாழ உள்ள வாய்ப்பை கெடுத்துவிட வேண்டாம்.

நம் நாட்டு சட்டம் அதன் கடமையைச் செய்யும். சிறிய தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதன் பிறகு அவன் நம்முடன் ஒன்றாக திருந்தி வாழ்வான். அவன் மட்டும் அல்ல. இதைவிட் மோசமான குற்றம் செய்தவனையும் நம்முடன் திருந்தி வாழ அனுமதிப்போம்.

இன்னும் நிறைய குழந்தைகள் மிச்சமிருக்கின்றன.

நம் முறை வரட்டும்.

அப்போது நிதானமாக பதறுவோம்.

நன்றி: ஹாஜா முஹயதீன். ஜே
http://kanavuoonjal.wordpress.com/

''எல்லாவற்றையும் சந்தேகப்படு!''

ன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தால் மட்டும் போதுமா?
நம்பிக்கை... இதுதான் நேர்மையான, உண்மையான கேரக்டர் உள்ள கார்
டிரைவர்களின் மூலதனம். காரில் பயணிக்கும் எஜமானர் தன் உயிரையே நம்பி ஒப்படைக்கிறார். அவரது குடும்பத்தினரின் உயிர்களுக்கு டிரைவர்தான் காப்பாளர். ஆட்டோ, டாக்ஸி, பஸ்களிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு டிரைவர் காட்டும் அக்கறையும் லேசுப்பட்டதல்ல!

எத்தனையோ நல்ல டிரைவர்கள் இருக்கும் போது, நம்பிக்கை மோசடி செய்யும் சில கயவர்களும் அந்தப் போர்வையில் இந்த சமூகத்தில் நடமாடுகிறார்கள். பணியில் தாங்கள் தனது கூட்டாளிகளுக்கு துப்புக் கொடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடவைப்பது ஒரு ரகம்! பணியைவிட்டு நீக்கப்பட்ட டிரைவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகுஅந்த குடும்பத்திடமே கைவரிசை காட்டுவது அடுத்த ரகம்!

கார் உரிமையாளர்களின் வீட்டில் இருக்கும் சிறுவர்கள், தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்கள்... இவர்கள்தான் க்ரைம் எண்ணம் கொண்டவர்களின் எளிய இலக்கு.

சிறுவர்களைக் கடத்தி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கிறார்கள். முதியவர்கள் என்றால், அவர்களை எதிர்ப்பின்றித் தாக்கிக் கொன்று... வீட்டில் உள்ள நகை, பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகள் என்றால் காதல் வலை வீசி, வெளியூருக்கு அழைத்துச் சென்று சீரழித்து... அதன்பின் தங்கள் பிளாக்மெயிலைத் தொடரு கிறார்கள். மானத்துக்கு பயப்படுகிறோம் என்ற பெயரில் இது போன்ற விதிவிலக்கான கயவர்களிடம் பணத்தைக் கொடுத்து, போலீஸ§க்குக்கூட தெரிவிக்காமல் பெண்களை மீட்டிருக்கிறார்கள் பல குடும்பங்களில்.

திருமணமான பெண் என்றால், வீட்டில் ஆண் இல்லாத நேரம் எது என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்து... குடும்பக் கஷ்டங்களைச் சொல்லி பண உதவி பெறுவதுபோல் நடித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவங்களும் உண்டு.

எத்தனையோ குடும்ப ரகசியங்கள், ஆபீஸ் ரகசியங்கள்... இதையெல்லாம் தனிஅறையில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு காரில் போகும்போது பேசுவதும் நடக்கிறது. 'நம்ம டிரைவர் நல்லவர்' என்று நம்புவது இயல்புதான்! சகலத்தையும் காது கொடுத்துக் கேட்கும் எல்லா டிரைவர்களுமே நல்லவர்களாக இருந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெரும் தொகை பற்றிய உரையாடல்கள், பின் ஸீட்டில் அரங்கேறும் பலவீனங்கள் போன்றவை பல சமயங்களில் நல்லவர்களைக்கூட தப்பு வழிக்குத் தூண்டிவிடுவது உண்டு.

நில விஷயங்கள், நகை, பணம்பற்றி பயணங்களின் போது விலாவாரியாகப் பேசும் பழக்கத்தை நம்மவர்கள் தவிர்க்க பழகவேண்டும்.

முன்பெல்லாம் செல்வந்தர்களும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுமே சொந்த கார் வாங்குவார்கள். நிகழ் காலத்தில் நடுத்தரவாசியின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் காரும் ஒன்றாகி விட்டது. அடுத்துத் தேடுவது - டிரைவரை! நல்ல கேரக்டர் உள்ள பையன்... குடிக்காதவன்... திருமணம் ஆனவன் என்கிற பாயின்ட்களை அலசி ஆராய்ந்து அவனது முழு ஜாதகங்கத்தையும் புரட்டிவிட்டுத்தான் வேலைக்கே அமர்த்த வேண்டும். கார்களின் எண்ணிக்கை அதிகமானதே தவிர, அவற்றை ஓட்ட முறையான பயிற்சியும் நிதானமும் பெற்ற டிரைவர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

சென்னை மட்டுமல்ல... தமிழகத்தின்அனைத்து ஊர்களிலும் பார்த்தால், சொந்த கார் வைத்திருப்பவர் களில் கணிசமானவருக்கு டிரைவிங் தெரியாது. இவர் களுக்குப் பெரும் தலைவலி - டிரைவர் தேவை! இங்குதான்... க்ரைம் சம்பவங்களுக்கான அடித்தளம் விரிவாகிறது.\

1990களில் அடையாரைச் சேர்ந்த பிரபல தொழிலதி பரின் மகன் ஸ்ரீராமை கடத்திக் கொன்றவனும் அவர்கள் வீட்டு கார்டிரைவர்தான். இதேபோல்தான் நாகர்கோவிலிலும் நடந்தது... திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் வயதான தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவரது டிரைவரின் நடத்தை சரியில்லை என்று விலக்கிவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, கெஞ்சிக்கூத்தாடி மீண்டும் வேலைக்குச் சேர்ந்தவன், பணத்தைக் கொள்ளையடிக்க திட்டம்போட்டு, அந்த முதியவரைக் கொன்று விட்டான். உடல்நிலை சரியில்லாத அவர் மனைவியை காரில் கட்டிப்போட்டு, விக்கிரவாண்டி அருகே ரோட்டு ஓரத்தில் கொன்று எரித்துவிட்டான். கொஞ்ச நாளில், கொலைகார டிரைவரையும், அவனது கூட்டாளிகளையும் நாங்கள்பிடித்துவிட்டோம்.

சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன்... அவர்மனைவி மற்றும் வேலைக்காரப் பெண்மணி ஆகியோர் படுகொலையான விவகாரத் திலும் ஒரு டிரைவரின் தொடர்பை நாம் அறிவோம்! பல்வேறு பிசினஸ், சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர் சரவணன். சொந்தமாக கார் வைத்திருந்த அவர், தேவைப்படும் போது, அருகில் உள்ள டிராவல்ஸ் ஆபீஸ§க்கு போன்பண்ணி டிரைவரை வரவழைத்துக் கொள்வார். 10, 15 டிரைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சரவணன் காரை ஓட்டி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் படுகொலை யின் மையப் புள்ளி. சென்னை மாநகர காவல்துறையின் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

பொதுவாக ஐ.டி. மற்றும் மல்டி நேஷனல் கம்பெனிகள் தங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்களை அழைத்து வரவும், வீட்டில் கொண்டுபோய் விடவும் கார் அனுப்புவது வழக்கம். பெங்களூருவில் சமீபத்தில் ஒரு சம்பவம். அங்குள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்த இளம் பெண்ணை ஏற்றிச் சென்ற காரின் டிரைவர் நடுவழியில் நிறுத்தி, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான்.

தமிழகத்திலும் ஏராளமான வேன்கள், ஆட்டோக்கள், கார்களை தனியார் கம்பெனிகள் பயன்படுத்தி வருகின்றன. ஐ.டி. கம்பெனிகள் பெரும்பாலும் இரவு வேளைகளில்தான் செயல்படுகின்றன. படித்த இளம் பெண்கள்தான் அதிகம் வேலை பார்க்கிறார்கள். ஆபீஸ் காரை அனுப்பி ஊழியர்களை வீட்டில் இருந்து அழைத்து வரும்போது, முதல் ஆளாக இளம் பெண் பயணிக்கக் கூடாது. அதேபோல், நிறுவனத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டுப் போகும்போது, கடைசி ஆளாக இளம் பெண் காரில் இருக்கக் கூடாது. இதற்கெல்லாம் அந்தந்த நிறுவனங்கள்தான் பொறுப்பேற்று கவனிக்க வேண்டும்.

''எல்லாவற்றையும் சந்தேகப்படு!'' என்பது போலீஸ் மூளை.

இன்றைய நாட்டு நடப்பில் பொதுமக்களுக்கும் அதுவேதான் விதி!

இப்படிக்கு: கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.
                       (தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.)


நன்றி: ஜுனியர் விகடன்

செவ்வாய், 2 நவம்பர், 2010

காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?

ழகொளிர் காசுமீரத் தேசத்தின் மேனியெங்கும் குருதி பூத்துக் கிடக்கிறது. நான்கு மாதங்களாகத் தொடர்ந்து வரும் காசுமீரத்து மக்களின் பேரெழுச்சிக்கு இந்திய அரசும் அதன் முகமையாகிய சம்மு-காசுமீர் மாநில அரசும் துப்பாக்கிக் குண்டுகளாலேயே விடையளித்துள்ளன. இளைஞர்களும் பெண்களும் சிறுவர் சிறுமியருமாக இதுவரை கொல்லப்பட்டவர்களின் தொகை 105 என்பது அரசின் கணக்கு. உண்மைத் தொகை இதைப் போல் பல மடங்கு இருக்கும் என்பதை எளிதில் உய்த்துணரலாம்.

காயமுற்றவர்களால் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன. ஆயிரக் கணக்கானவர்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்த அடக்குமுறைக்கும் பணியாது விடுதலைக்காகப் போராடும் காசுமீரத்து மக்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள். அடக்குமுறையால் சிதையுண்டு மீண்டெழுந்து போராடத் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மக்களினத்திற்கும் காசுமீரத்துப் போராட்டம் ஒரு கலங்கரை விளக்கம்.
அடக்குமுறைக்குப் பணியாத காசுமீரத்து மக்களை ஆசை வார்த்தைகளால் மயக்கும் முயற்சியில் இந்திய வல்லாதிக்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.

காசுமீரத்துக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று சென்றது. இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் திராவிடவாதிகளாகவும் பல்வேறு பெயர்களில் இந்திய வல்லாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்கும் கூட்டத்தினர் சிறிநகர் சென்றனர். அவர்களது இந்தியவாதம் எதுவும் காசுமீரிகளிடம் கிஞ்சிற்றும் எடுபடவில்லை. மக்கள் அனைவரும் விடுதலைக் குறிக்கோளில் உறுதியாகவும், இந்திய அரசின் கொலைகார அடக்குமுறை குறித்து சீற்றங்கொண்டும் இருப்பதை அவர்கள் கண்டு திரும்பினர்.
இந்தக் குழுவினர் இந்திய அரசிடம் அறிக்கையளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசு எட்டுக் கூறுகள் கொண்ட தீர்வுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

முதலாவதாக, காசுமீரிகளிடம் பேச்சு நடத்துவதற்காக ஒரு பிரமுகர் குழு அமைக்கப்படுமாம். இரண்டாவதாக, கடந்த நான்கு மாத காலத்தில் தளைப்படுத்தப்பட்ட இளைஞர்களையும் மாணவர்களையும் விடுதலை செய்யுமாறும், வழக்குகளை விலக்கிக் கொள்ளுமாறும் மாநில அரசை இந்திய அரசு வலியுறுத்துமாம். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தளைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து மறுஆய்வு செய்யப்படுமாம். மைய அரசுப் படைகளைப் பணியில் ஈடுபடுத்துவது, மையக் காவல் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, கலவரப் பகுதி ஆணையை மறுஆய்வு செய்வது ஆகியவை குறித்து மைய அரசு மாநில அரசுடன் பேச்சு நடத்துமாம். வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 இலட்சம் வீதம் உதவிநிதி வழங்கப்படுமாம். சம்மு, லடாக் வட்டாரங்களுக்குத் தனித்தனிச் சிறப்புப் பணிக்குழுக்கள் அமைத்து, வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுமாம். மூடப்;பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்படுமாம். கல்வி தொடர்பான அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதல் சிறப்பு உதவியாக மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படுமாம்.


காசுமீரத்து மக்களைப் பார்த்து இப்படியொரு திட்டத்தைச் சொல்வதற்குத் தில்லி ஆட்சியாளர்கள் ஒன்றும் தெரியாத மூடர்களாகவோ எல்லாம் தெரிந்த ஏமாற்றுப் பேர்வழிகளாகவோதான் இருக்க வேண்டும். ஏனென்றால் காசுமீரத்து மக்கள் போராட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளுக்கோ உடனடிக் கோரிக்கைகளுக்கோ இந்தத் தீர்வுத் திட்டம் விடை சொல்லவே இல்லை. அவற்றை அறவே கண்டுகொள்ள மறுக்கும் அரச அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை.

காசுமீரத் தேசத்தில் ஒரு பகுதியை இந்தியாவும், மறு பகுதியை பாகிஸ்தானும் கைப்பற்றி வைத்துள்ளன. இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதே அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் காசுமீரத்து மக்களின் ஒற்றைக் குறிக்கோள். இதற்காக அவர்கள் எல்லா வகையிலும் எல்லா வடிவத்திலும் போராடியிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசும், அதன் ஊதுகுழல்களும் காசுமீரம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுடன் இருப்பதா, பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனிநாடு என்ற பழைய தகுநிலையை மீட்டுக் கொள்வதா என்ற சிக்கலுக்கு முடிவு காணும் தன்-தீர்வுரிமை காசுமீரத் தேசத்தின் பிறப்புரிமையாகும். காசுமீரம் இந்தியாவுடனேயே இருக்க வேண்டும், அதுதான் நல்லது எனக் கருதுவோர் அதைக் காசுமீர மக்களிடமே எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு எந்தத் தடையுமில்லை. அதை விடுத்துப் படைவலிமையைக் கொண்டும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும் காசுமீரத்தைக் கட்டாயப்படுத்திக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பது எவ்வகையான சனநாயகம்? காசுமீரத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்திலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவையிலும், சிறிநகரத்துச் செஞ்சதுக்கத்தில் பண்டித நேரு ஆற்றிய உரையிலும் அளித்த வாக்குறுதிகள் என்னாயின? 'காசுமீரை இழக்க மாட்டோம், இழக்கவே மாட்டோம்' என்று மன நோயாளிகளைப் போல் வெறிக்கூச்சல் போடுவதால் இந்த வரலாற்று உண்மைகளை மறைத்;து விட முடியும் என்று இந்தியவாதிகள் நினைக்கிறார்கள்.

காசுமீரத்து மக்களில் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பதை நடுநிலை நோக்கர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். காசுமீர மக்களில் பெரும்பான்மையினர் விடுதலை கோருகின்றனர் என்பதை இந்திய அரசாலோ, அதன் இடதுசாரி வலதுசாரிச் சாமரங்களாலோ கூட மறுக்கவியலாது. பெரும்பான்மை மக்கள் விரும்பினாலும் விட்டுவிட முடியாது என்பதே இவர்களின் பிடிவாதமான நிலைப்பாடு. அப்படியானால் 1974-75இல் சிக்கிமை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது சொல்லப்பட்ட நியாயம் காசுமீரத்துக்குப் பொருந்தாதா? அப்போது என்ன சொன்னார்கள்? சோகியால் அரச வம்ச ஆட்சியில் சிக்கிம் தனிநாடாகத் திகழ்ந்தது. மன்னராட்சிக்கு எதிராக மக்கள் சனநாயக உரிமைகளுக்காகப் போராடினார்கள். அங்கு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாய் இருப்பதைப் பயன்படுத்தி 1974இல் அதனை இந்தியாவின் இணை மாநிலம் ஆக்கினார்கள். அடுத்த ஆண்டே முழு மாநிலம் ஆக்கி விட்டார்கள். சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பியதாகவே வைத்துக் கொள்வோம். அந்த விருப்பத்தின் அடிப்படையில் சிக்கிமை இந்தியாவுடன் இணைத்தது நியாயம் என்றால் அதே மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் காசுமீர் தனிநாடாவதை அனுமதிப்பதுதானே நியாயமாக இருக்க முடியும்?

இந்திய அரசு இந்தியாவின் எந்தப் பகுதியையும் யாருக்கும் எப்போதும் எந்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்றால், தமிழ்த் தேசத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எந்தத் தமிழனிடமும் அனுமதி கேட்காமலேயே சிங்கள அரசுக்கு விட்டுக் கொடுத்தது எப்படி? கொடுத்தது கொடுத்ததுதான், திருப்பிக் கேட்க மாட்டோம் என்று இப்போதும் எஸ்.எம். கிருட்டிணா அறுதியிட்டு உரைக்கிறாரே, இது எப்படி?

இந்திய விடுதலை குறித்து உரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒரு கட்டத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் முன்வந்தார்கள். அதிகாரக் கைமாற்றத்திற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக ஆணையங்கள் அமைக்கவும் செய்தார்கள். இந்தியா தொடர்பாகப் பிரித்தானியர் செய்ததைக் காசுமீரம் தொடர்பாக இந்தியர் செய்தால் என்ன? குடியா முழ்கிப் போகும்? விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே இந்த வீம்பர்களின் நாக்கு அழுகியா போகும்?

அடிப்படைக் குறிக்கோள் ஒரு புறமிருக்க, காசுமீரத்து மக்களின் உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற அமைதிச் சூழலை ஏற்படுத்தவும் செய்ய வேண்டியது என்ன? இந்தியப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். ஆயுதப் படைகள் தனியதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், கலவரப் பகுதிகள் சட்டம் போன்ற வெறுப்புக்குரிய கறுப்புச் சட்டங்களை விலக்கி;க் கொள்ள வேண்டும். போராட்டம் தொடர்பாகச் சிறைப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மோதல்' கொலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்த படையினரைத் தளைப்படுத்திக் கூண்டிலேற்றித் தண்டிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்யாமல் புற்றுநோய்க்குப் புனுகு தடவுவது போல் எட்டுக் கூறுகள் கொண்ட கூறுகெட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசு, ஏன்? இப்படியொரு பஞ்சுமிட்டாய்த் திட்டத்தைக் கடைக்கோடி காசுமீரி கூட ஏற்க மாட்டார் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். அப்படியானால் இந்தத் திட்டத்திற்கு வேறு உள்நோக்கம் இருக்க வேண்டும். “நாங்கள் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பினோம், சமரசத் திட்டம் அறிவித்தோம், எதற்கும் அவர்கள் ஒத்துவரவில்லை” என்று சொல்லி, தனது வன்முறையை மறைத்து, காசுமீர் மக்களை வன்முறையாளர்களாகக் காட்டி, உளவுத் துறையின் மூலம் சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, காசுமீரத்து மக்கள் தலைவர்கள் மீது பழிசுமத்தி, அரச பயங்கரவாத அடக்குமுறையை ஏவுவது, மக்களின் உரிமைப் போராட்டத்தைக் குருதிச் சேற்றில் அமிழ்த்துவது… இதுவே இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டமாக இருக்க வேண்டும் என ஐயுறுகிறோம்.

இது குறித்து காசுமீரத்து மக்களும் அவர்களுக்கு ஆதரவான சனநாயக ஆற்றல்;களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஈழத்தில் நடந்தது போல் இன்னோர் இனப்படுகொலை எங்கும் நிகழ விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

காசுமீரத்து மக்களின் போராட்டத்துக்கு ஆதரவான இயக்கங்களை எங்கெங்கும் நடத்துவதும் அதற்காக மக்களைத் திரட்டுவதுமே இந்தியாவின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்கப் பயன்படும். வியத்நாமின் போராட்டத்தை நம் போராட்டமாகவே பார்த்தோம். காசுமீரப் போராட்டத்தையும் நம் போராட்டமாகவே பார்க்க வேண்டும். என் பெயர் வியத்நாம், உன் பெயர் வியத்நாம், நம் பெயர் வியத்நாம் என்று முழங்கியதைப் போல், என் பெயர் காசுமீர், உன் பெயர் காசுமீர், நம் பெயர் காசுமீர் என்று முழங்குவோம்.

நன்றி: தேசத்தின் குரல்
சமூகநீதித் தமிழ்த்தேசம்
கீற்று.காம்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நபிகளாரின் வாழ்வும் வாக்கும் - பெரியார்

தம் சம்பந்தமானது என்றால் பலர் அது ஏதோ ரொம்பப் பெரிய சங்கதி;  மாற்றக்கூடாத சங்கதி என்பதாகக் கருதுகிறார்கள், மாற்றப் பயப்படுகிறார்கள்.

மதம் என்றால் என்ன? மக்கள் சமுதாயத்துக்கு, மக்கள் வாழ்வுக்கு, மனிதர்களோடு மனிதர்கள் கலந்து வாழுவதற்கு என்னென்ன கோட்பாடுகள், கொள்கை, திட்டங்கள், நடப்புகள் வேண்டுமோ அதை ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்வதுதான் மதம் ஆகும்.

ஆனால் மக்கள் இதை ரயில் தண்டவாளத்தைப்போல ஆக்கி, இதில் மாற்றங் கூடாது, சிந்திக்கக் கூடாது என்பதாக மூடத்தனத்தின் மீது ஏற்றிவிட்டதால் இப்போது மதம் என்றால் ஏதோ புரியாத பெரிய சங்கதியாகத் தோன்றுகிறது பலருக்கு.

இப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தின் வாழ்வு நடப்பமைக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, அப்படிப்பட்டதான ஓர் அமைப்பு ஏற்பட்ட காலத்தில் உலகம் எப்படி எந்த உருவத்தில் இருந்ததோ அதே உருவத்திலேயே, அமைப்பிலேயே எல்லாக் காலத்துக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, தேவையுமில்லை, அதேபடி இருக்கவும் முடியாது. மனிதனின் எண்ணமும், படிப்பும், அறிவுநிலையும் அவனது ஆசாபாசமும், பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே தன்மையில் இருக்கவும் முடியாது.

ஆதாரத்தின் அடிப்படையில் மாற்றம் காண மனிதனுக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் நடப்பில் மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும். ஒரு மதத்தில் சொல்லப்பட்ட ஒரு காரியத்துக்கு ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ப, அவரவர்களின் வசதி, தன்மை, நன்மைக்கு, எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியில் வியாக்கியானம், பொருள் செய்வதன் மூலமாக இந்த மாற்றங்கள் ஏற்படலாம்.

எல்லா மத மக்களிடமும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மதச்சார்பான ஏட்டில், பாட்டில், அடிப்படையில் மாற்றம் இல்லாவிட்டாலும் வியாக்கியானத்தில், அவற்றுக்கு பாஷ்யங் கூறுவதன் மூலம் நடப்பில் இன்று மாறுபாடு காணமுடிகிறது. பல மதத்திலும் நாம் பார்க்கிறோமே, ஆதாரங்கள், அடிப்படைகள் அப்படியே இருக்க வியாக்கியானத்தின்மூலம் நடப்பில் மாறுதல் காணுவதை, உதாரணம் வேண்டுமானால் பல மத வேத சாஸ்திரக் கருத்துகளையும் அந்த மத மக்கள் நடப்புகளையும் பாருங்கள்.

என்னிடம் பல பெரியவர்கள் பேசுகிறபோது பல தடவை கூறியிருக்கிறார்கள். நீ சொல்கிற கருத்துகள் சரிதான், ஆனாலும் இந்தக் கருத்துகளை நீ சொந்தமாகச் சொல்கிறாயே என்றால் மக்கள் அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் நீ இப்போது சொல்கிற இதே கருத்துகளை நீயே உன் சொந்தத்தில் சொல்கிறாய் என்பதாக இல்லாமல், பழைய கருத்துகளுக்கு மெருகு கொடுத்து மதச் சார்பில், மதக் கருத்துகளில் சொல்லப்படும் கோட்பாடுகளுக்கு இதுதான் கருத்துப் பொருள், என்பதாக அர்த்தம் சொல்லிச், சொன்னால் மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார்கள். பலர் இந்தப்படிச் சொன்னார்கள். உலகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரென்று சொல்லப்படும் காந்தியாரே என்னிடம் இந்தப்படியாகக் கூறியிருக்கிறார். ஒரு ஆதாரத்துக்கு, பல வியாக்கியானம்தான் ஒரு மதத்தில், பல கிளைகள் ஏற்பட்டதற்குக் காரணமாகும்.

மற்றும் நண்பர் ஆச்சாரியார் அவர்கள் ஒன்று சொன்னார், பேசுவதினால் எந்தச் சீர்திருத்தமும் செய்துவிட முடியாது; நடத்தையில் செய்யவேண்டும் என்று. அது ரொம்பவும் சரியான பேச்சு; இன்றைய நிகழ்ச்சிக்கு இது மிகவும் பொருத்தமான பேச்சு; ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பேச்சைவிட நடத்தைதான் முக்கியம்.

நபி அவர்கள் தாம் சொன்ன காரியங்களைத் தாமும் நடந்து காண்பித்தார். அதுவும் தம்மைப் பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வுச் செயலுக்கு ஒரு முன்மாதிரியாக அவர் நடப்பைக் கையாளுகிற மாதிரியான தன்மையில் நடத்திக் காண்பித்தார். அதுவேதான் இன்று அந்த மக்களைப் பெரிதும் கட்டுப்படுத்தி ஆட்சி புரிகிறது. ஆகவேதான் அது மிகவும் பொருத்தமானது என்று கூறுகிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் சங்கதிதான் பெரிது என்று மற்றவர்களை அடித்துப் பேசுவதில் பயன்இல்லை. நடத்தையில் அதைக் காண்பிக்கவேண்டும்.

நண்பர் ஆச்சாரியார் அவர்களும், நானும் ஒன்றாக, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். இதை நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் யாரும் மயங்கிவிடுகிறவர்கள் அல்ல. அவர், அவர் போக்கிலேயே இருப்பார்; அதே மாதிரி நானும் என் போக்கிலிருந்து மாறமாட்டேன். ஏன் இதை இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றால் நீங்கள் எங்களைப்பற்றிச் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் சாதாரண ஜனங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறேன். இந்தச் சந்திப்புக்கு எவனாவது ஏதாவது ஒரு உள் கருத்து கட்டிவிட்டால் அதை எளிதில் நம்பிவிடுவார்கள். ஆனதால் இதில் உள் கருத்து ஒன்றும் இல்லை, மனிதத் தன்மை எங்களை இங்கு ஒன்று கூட்டி இருக்கிறது. உள்ளபடி இந்த நாள் என்னால் மறக்க முடியாத ஒரு முக்கியமான விசேஷ நாள் என்றே சொல்வேன். இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

அய்யா அவர்களும், (கனம் ஆச்சாரியார் அவர்களும்) நானும், இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்; ஒன்றாக எவ்வளவோ கஷ்டப்பட்டோம்; பல ரகசியமான சங்கதிகள் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு தூரம் இணைந்து காரியமாற்றியிருக்கிறோம். நடுவில் அபிப்பிராய பேதம் ஏற்பட்டதால் பிரியவேண்டியதாகி இரண்டுபேரும் வெவ்வேறு முனையில் பாடுபடுகிறோம். ஆனதினால் அப்படிப்பட்டவர்களை, இங்குச் சேர்த்திருப்பது ஒரு பெரிய காரியமல்ல. அபிப்பிராய பேதத்தின் காரணமாக நாங்கள் இப்படி ஒருவருக்கொருவர் பிரிந்துவிட்டாலுங்கூட எங்களுக்குள் இருந்த நட்பு இன்றுவரை ஒரு சிறிது கூட குறைந்துவிடவில்லை.

மற்றும் தோழர்களே! நீங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் எதிரி இன்னார் என்று யாரையும் கருதிவிடாதீர்கள்; அப்படிச் சொல்லவும் செய்யாதீர்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலுங்கூட மனிதத்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டு நபி அவர்களின் கருத்துகளில், கொள்கைகளில் உங்களுக்குச் சரியென்றுபட்டவற்றை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.
------------------------
(20.12.1953 அன்று சென்னை ஐகோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு).

நன்றி: கீற்று

ஏ.டி.எம் (ATM) கதை

.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron).

நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்றாட வாழ்வில் பெரும் பயனளிக்கக் கூடியது 'ஏ.டி.எம்.' என்றால், அது அணுவளவும் மிகையாகாது.

இந்த ஏ.டி.எம்.மின் பயன்பாடுகள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. நம்மில் அனைவருக்குமே கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

ஏ.டி.எம்.மை Any time money என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், அவசர காலத்தில் நினைத்த மாத்திரத்தில் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்வதற்கு வசதியாக, நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே ஏ.டி.எம். மையங்கள் விரவிக் கிடப்பதை அறிவோம்.

இச்சிறப்புமிக்க எந்திரத்தை முதன்முதலில் உருவாக்கியவரே ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron). அவரின் 84 வது வயதில் சமீபத்தில்தான் (மே, 2010) காலமானார்.
ஏ.டி.எம். உருவாவதற்கு தூண்டுகோலாக இருந்ததே ஜானின் மோசமான அனுபவம் ஒன்றுதான். ஒருநாள் அவசரத் தேவைக்காக பணம் எடுப்பதற்கு வங்கிக்குச் சென்றார், ஜான். ஆனால், வங்கியின் வேலை நேரம் முடிந்துவிட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிகழ்வுக்கு வருத்தப்பட்ட ஜானின் மூளையில் உதித்தது ஒரு யோசனை...

'சாக்லெட் வெண்டிங் மெஷினைப் போலவே பணப்பட்டுவாடாவுக்கு மெஷின் உருவாக்கினால் என்ன?' என்பதே அந்த யோசனை.

உடனடியாக செயல்படத் தொடங்கிய ஜான், முதன்முதலில் ஏ.டி.எம்.மை உருவாக்கினார். அதற்கு உரிய அங்கீகாரமும் கிடைத்தது.

அதன்பின், முதன்முதலில் கடந்த 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.

அதேபோல், ஆரம்ப காலக்கட்டத்தில் 6 இலக்க ரகசிய குறீயிட்டு எண் (PIN) தான் பயன்படுத்தப்பட்டது. அதனை தன்னுடைய மனைவியால் நினைவில்கொள்ள முடியாததை அறிந்த ஜான், நான்கு இலக்க 'பின்' (PIN)நம்பரை உருவாக்கித் தந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

நன்றி:  விகடன்

சனி, 30 அக்டோபர், 2010

ஆதலினால் கனவு காண்பீர்!

"கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றது. கனவு காண்பது மிகவும் முக்கியம்,''என சச்சின் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின் (37). ஒருநாள் (17,598), டெஸ்ட் (14,240) என இரண்டிலும் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு இவருக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்தார். கடந்த 2002க்குப் பின் மீண்டும் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர் விருது, இரண்டு ஆசிய விருதுகளை பெற்றார். இப்படி அசத்திக் கொண்டிருந்தாலும், இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது என்கிறார் சச்சின். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழியில், கனவுகள் காண வேண்டும் என்கிறார்.

இது குறித்து லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டியில் "கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றதாக இருக்கும். கனவுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் கனவுகள் இருந்தால் தான், அவற்றை நாம் அடைய முடியும். இந்த கனவுகள் தான் என்னை கடினமாக உழைக்க தூண்டுகிறது" என்று கூறியிருக்கிறார்.

நன்றி: தினமலர் - 30.10.2010

வியாழன், 28 அக்டோபர், 2010

பட்டொளி வீசி பறக்குது பாரீர்..!

சாராய சீசாவுக்குள்
அடைபட்டுக்கிடக்கிறது
தேசம்..!

மக்களின் வரிப்பணம்
அரசுக்கருவூலத்தில்
அடைக்கலமாகி..
திரும்பி வருகின்றன
இலவசம் என்னும்..
"இழிசொல்லுடன்..!"

செத்த பின்பு சிதைமூட்டும்
திருநாட்டில்..
இன உணர்வு செத்ததற்காக
தன் உயிர்ச்சதையில்
தீமூட்டி எரிந்தனர்
அப்துல் ரவூப்பும்
முத்துக்குமாரும்..

ஈழம் கருகிய இறுதி நேரத்தில்
பிண வாடை முகர்ந்தும்
அதிகாரத்தின் வேர்
அறுந்து விடாமல்
உரத்த குரலில்
துயரப்படுகிறார்கள்
உடன்பிறப்புகள்..!

”வாக்களிக்க யாரும் இனி
வருந்த வேண்டாம்..!”
எந்திரங்கள் பழகிக்கொண்டன
ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க..!

தேசியக் கொடியில் -

ஈழத்தமிழனின்
இரத்தம் தெறித்து
சிவப்பு நிறமானது..!

”பாக்சைட்”டுக்காக
பசுமை வேட்டையாடியதில்
பச்சை நிறம் கீழே
பட்டொளி வீசி பறக்கிறது..!

ஏகாதிபத்தியத்திடம்
சரணடைபவர்களுக்காக
வெண்சாமரம் வீசுகிறது
வெள்ளைக் கொடி..!

- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com )

கைப்பேசி: 9940448693

அருந்ததி ராயின் அறிக்கை

நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: ஆபிதீன் பக்கங்கள்

சனி, 23 அக்டோபர், 2010

கனவுகளின் விளக்கம் 1 – சிக்மன்ட் ஃப்ராய்ட்

லகையே புரட்டிப்போட்ட பத்துப் புத்தகங்களில் ஒன்றான, சிக்மன்ட் ஃப்ராய்டின் "The Interpretation of Dreams" என்னும் நூலின் தமிழாக்கத்தினை எழுத்தாளர் நாகூர் ரூமி அவர்கள் வழங்குகிறார். படித்துப் பயன் அடைவோம்!

முன்னுரை

கனவு காண்பது மனித குலத்திற்கே பொதுவான செயல்பாடுதான் என்றாலும் இஸ்லாம், ஹிந்து மதம், புத்தம், கிறிஸ்தவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங்களைக் கொண்ட இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் கனவானது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடாகிறது. அது ஒரு religious issueஆக கருதப்படுகிறது என்றால் மிகையாகாது.

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற எந்த முக்கியமானதொரு நிகழ்ச்சிக்கு முன்னோ அல்லது பின்னோ நம் வீட்டுப்பெரியவர்கள் அதன் தொடர்பாகக் கனவு கண்டதாகச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். நான்கூட என் தாத்தா இறந்து போவதற்குமுன் என் வீட்டு பீர்க்கங்கொடி பட்டுப்போவதாகக் கனவு கண்டு அதை என் பாட்டியிடம் சொல்ல, அவள் யாரோ இறப்பதற்கான அறிகுறி அது என உணர்ந்து அழுதாள். பிறகு சில நாட்களில் என் தாத்தாவும் இறந்துபோனார்.

ஒரு கனவு கண்டுவிட்டால் அதை நாம் எல்லாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்றும் கனவுகளை சரியாக விளக்குவதற்கென்று தகுதி படைத்த சிலர் உண்டு என்றும் நம்புகிறோம். அப்படி ஒரு சிலருக்கு அத்தகுதிகள் உண்டு என்பது உண்மையோ பொய்யோ, அப்படி நாம் நம்பி அந்த ஒரு சிலரிடம் மட்டுமே விளக்கம் கேட்கிறோம் என்பதே கனவுக்கு நம் வாழ்வில் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும்.

எனவே முக்கியத்துவம் வாய்ந்த நம் கனவுகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது முதலில் அவசியமாகிறது. இதுவரை கனவின் விளக்கங்களாக தமிழ் உலகுக்கு வந்துள்ள எந்த நூலும் இந்த அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக, கனவுக்கு அகராதி போட்டு அதன் அர்த்தத்தைச் சுருக்குவதாகவும் அற்புதமான கனவுகளைக் காண்பதற்குரிய தகுதி பெற்றவராக ஆசிரியர் தன்னைக் காண்பித்துக் கொள்வதாகவும்தான் உள்ளது.

ஆகவே, விளக்கம் அறிவதற்குத் தகுதி உள்ளவரைத் தேடும் அவசியமின்றி, நம்முடைய கனவுகளை அல்லது நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானபூர்வமானதொரு அடிப்படையைத் தருவதும் அந்த அடிப்படையைத் தந்த சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவரான சிக்மன்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) என்ற மேதையை இந்த தொடர்பில் அறிமுகப்படுத்துவதும் இந்த நூலின் நோக்கமாகும்.

அத்தியாயம் – 1

சிக்மன்ட் ஃப்ராய்ட் யார்?

விரல்விட்டு எண்ணக்கூடிய சில தனி மனிதர்களின் சேவைகளுக்கும் சாதனைகளுக்கும்தான் இந்த உலகமே கடமைப்பட்டுள்ளது என்பது வியப்புதரக்கூடிய உண்மையே. அந்த ஒரு சிலரில் சிக்மன்ட் ஃப்ராய்டும் ஒருவர். அவர் ஒரு பெரிய மேதை என்பதனால் மட்டும் நாம் அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் மனித மனம் என்னும் மகத்தான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள செலவிட்டார். அதன் பலனாக அவர் கண்டறிந்த உண்மைகள் இந்த உலகத்தையே உலுக்கின. அதன் சிந்தனைப் போக்கையே மாற்றின. அதுகாறும் மனிதனை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம், இலக்கியம், சமயம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம் போன்றவைகளின் மூலமாக அறிந்துவந்த உலகு, முதன் முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்து கொண்டது.

அதாவது, மனிதன் தன்னைப்பற்றி தனக்கே தெரியாத உண்மைகள அறிந்துகொள்ள ஃப்ராய்டின் கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் உதவின. Psychoanalysis மனஅலசல் முறையை ஃப்ராய்டுதான் முதன் முதலில் உருவாக்கினார். Psychoanalysis என்ற சொல்லைக் கொடுத்தவரே அவர்தான். மனித மனத்தின் செயல்பாடுகளையும் மனதைப் பீடிக்கும் நோய்களையும் கண்டுணரும் முறையாகவும் மருத்துவமாகவும் மனஅலசல் அமைந்தது. அதோடு, ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனத்தையும் அதன் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கலாச்சாரக்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் அது உதவியது.

ஒரு மருத்துவராக, குறிப்பாக நரம்பியல் நிபுணராக, தொழில்செய்த ஃப்ராய்ட் எத்தனையோ புத்தகங்களில் தான் கண்டுபிடித்த உண்மைகளைச் சொல்லியிருந்தாலும் அவருடைய The Interpretation of Dreams, கனவுகளின் விளக்கம், என்னும் நூலே மிகச்சிறந்ததாகவும் உலகத்தை மாற்றிய பத்து நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதனை சுருக்கமாகத் தருவது ஃப்ராய்டை மட்டுமல்ல நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்ளவும் நிச்சயம் உதவும்.

வாழ்க்கைக் குறிப்பு

ஃப்ராய்ட் கி.பி. 1856-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி ஃப்ரெய்பெர்க் (Freiberg) என்ற ஊரில், தற்போது செக்கோஸ்லாவேகியாவாக உள்ள மொராவியா ( Moravia) நாட்டில் பிறந்தார். 1859-ம் ஆண்டு அவர் குடும்பம் வியென்னா நகருக்குக் குடிபெயர்ந்தது. வியென்னா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்றார் ஃப்ராய்ட். மனித மூளையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தார். விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மனித மனம் சம்மந்தமான கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தார்.

திருப்புமுனை

1885-ன் இறுதியில் நரம்பு மண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சியைத் தொடர, பாரிஸ் நகரம் சென்றார். பத்தொன்பது வாரங்கள் அங்கு தங்கி ஜீன் மார்ட்டின் ச்சார்காட் (Jean Martin Charcot) என்ற பிரபல மருத்துவரின் கீழ் பணிபுரிந்தார். இது அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஹிஸ்டீரியா நோயாளிகளை ச்சார்காட் அணுகிய முறை ஃப்ராய்டுக்கு ஒரு முற்றிலும் புதிய தீர்வுக்கான விதையைக் கொடுத்தது. உதாரணமாக, உடலுறுப்பு ஒன்று இயங்காமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு ச்சார்காட் ஹிப்னாடிஸம் மூலம் நோய் நீங்கிவிட்டது என்ற கருத்தைத் திணிப்பதன் மூலம் நிவாரணம் உண்டாக்கினார். அதைப்பார்த்த ஃப்ராய்ட், மனித மூளையை நம்புவதைவிட மனித மனத்தின் சக்திகளை ஆராய்வது பயன்தரும் என்று புரிந்து கொண்டார்.

இரண்டு நட்புகள்

பாரிஸிலிருந்து திரும்பி வந்தபிறகு மார்த்தா பெர்னைஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆறு குழந்தைகளைப் பெற்றார். அதில் அன்னா என்ற மகள் அவரைப்போலவே பிற்காலத்தில் மனஅலசல் நிபுணரானார்.

திருமணமான காலகட்டத்தில் வில்எல்ம் ஃப்லீஸ் (Wilhelm Fleiss) என்ற மருத்துவரோடு நட்பு ஏற்பட்டு பதினைந்து வருட காலம் அது தொடர்ந்தது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். மனித உடலில் சில பகுதிகள் பாலுணர்ச்சியை அதிகம் தூண்டக்கூடியவையாக உள்ளன. குழந்தைகளுக்கும் பாலுணர்ச்சி உண்டு என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக இந்த நட்பு வித்திட்டது.

ஜோஸப் பிரவர் ( Joseph Breuer ) என்ற மருத்துவரோடு ஏற்பட்ட நட்பு இன்னும் ஆழமானது. முக்கியமானது. மன அலசல் என்ற முறை கண்டுபிடிக்கப் படுவதற்கே பிரவரின் நட்புதான் காரணமாக இருந்தது.

ஃப்ராய்ட் மனநோயாளிகளுக்கு ச்சார்காட் தந்த ஹிப்னாடிஸ முறையில் வைத்தியம் செய்துகொண்டிருந்தபோது, பிரவர்தான் அன்னா – ஓ என்ற பெண் நோயாளிக்கு வித்தியாசமான முறையில் சிகிச்சையளித்தார். நோயாளியை ரிலாக்;ஸ்டாக உட்கார அல்லது படுக்கச் செய்து, மனதில் வந்ததையெல்லாம் பேசச் செய்தார். மனதில் இருந்த குப்பைகளையெல்லாம் வெளியில் கொட்டிய உடனேயே, சிம்னி விளக்கைத் துடைத்தமாதிரி சுத்தமாகி, நோய் குறையவும் மறையவும் ஆரம்பித்தது. இங்கிருந்துதான், இதன் நீட்சியாகத்தான் ஃப்ராய்ட் தன் free association என்ற சிகிச்சை முறையைத் தொடங்கினார். ஃப்ராய்டும் பிரவரும் இணைந்து Studies in Hysteria என்ற நூலையும் எழுதினர்.

கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி

1897 ஜூலையிலிருந்துதான், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஃப்ராய்ட் கனவுகளைப் பற்றிய தனது ஆராய்ச்சியில் இறங்கினார். பிரபஞ்ச மனத்தை அறிந்துகொள்ள உதவும் ராஜபாட்டை என்று கனவுகளை அவர் வர்ணித்தார். 1899-ல் வெளியான கனவுகளின் விளக்கம் (The Interpretation of Dreams ) என்ற நூல்தான் இவரின் தலைசிறந்த படைப்பு அல்லது பங்களிப்பு என்று அறிஞர் பலராலும் கருதப்படுகிறது.

கனவுகள் யாவும் நனவில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் களமாக, வடிகாலாக அமைகிறது எனவும் அந்த ஆசைகள் பெரும்பாலும் பாலுணர்வு சம்பந்தப் பட்டதாகவே உள்ளன என்றும் கண்டறிந்து கூறினார். ஃபராய்ட் பொதுவாக மனிதனுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் ஆழ்மனதில் கிடக்கும் பாலுணர்வே காரணம் என்று நம்பினார். இது உண்மை என்றாலும் மிகைப்படுத்தப்பட்டது என்பதையும் தனது கொள்கைள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பாடு உணரத்தலைப்பட்டார்.

குறிப்பாக, முதல் உலகப் போரின்போது மனநோய்க்கு ஆளான போர்வீரர்களின் கனவுகளை அவர்களின் குழந்தைப்பருவ பாலுணர்வு அடிப்படையில் விளக்க முடியாததை இங்கு குறிப்பிடலாம். குழந்தைப்பருவ பாலுணர்வே – infantile sexuality – மனிதனின் ஒட்டுமொத்த குணாம்சத்துக்கும் காரணம் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி, மற்ற உணர்வுகளும் மனிதனை குறிப்பிட்ட குணாம்சங்களுள்ளவனாக மாற்ற வல்லவை என்பதை அவர் 1920 க்குப் பிறகு புரிந்துகொண்டார் என்பதை அவருடைய பிற்கால எழுத்துக்கள் காட்டும்.

1904-ல் வெளியான The Psychopathology of Everyday Life என்ற நூல் நம் அன்றாட வாழ்வில் நிகழும் மறந்துபோதல், வார்த்தைகளைத் தவறாகச் சொல்லுதல், மாற்றிச் சொல்லுதல் போன்றவற்றின் பின்னணியில் மறைந்து கிடக்கும் மனநோய்களைப் பற்றியது.

1905-ல் வெளியான Jokes and their Relation to the Unconscious என்ற நூல், நகைச்சுவையின் பின்னால் மறைந்துள்ள சோகத்தை, பிரச்சனைகளைப் பற்றியது.

இதே வருடம் வெளியான Three Essays on the Theory of Sexuality என்ற நூல் இவரை ஒரு பாலியல் மருத்துவ நிபுணராக நிர்மாணித்தது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, மனநோயாளியாக மாறுவதற்கும் சரி, பாலியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளே காரணம் என்று ஃப்ராய்ட் கருதினார். குழந்தை தாயின் தனங்களில் பாலருந்துவதற்கும் தாய், பால் கொடுப்பதற்கும்கூட பசியோ பாசமோ காரணமல்ல, பாலுணர்வே அடிப்படைக் காரணம் என்று விளக்கினார் என்றால் பார்த்துக் கொள்ள வேண்டும் ! இந்த கருத்தை பின்னாளில் எரிக் ஃப்ரம் (Erich Fromm) போன்ற சமூகவியலாளர்கள் மிகக்கடுமையாக விமர்சித்து ஆதாரபூர்வமாக மறுத்துள்ளனர்.

1920 களில்; வெளிவந்த அவருடைய புத்தகங்களான டீநலழனெ வாந Beyond the Pleasure Principle மற்றும் Ego and the Id ஆகியவை பாலுணர்வு என்ற வட்டத்திலிருந்து அவர் வெளிவர யத்தனித்ததைச் சுட்டும்.

இதில் வேடிக்கை என்னவெனில், மனித மனத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து பிட்டுப்பிட்டு வைத்தவர்தான் ஃப்ராய்ட் என்றாலும் அவர் ஆராய்ந்த அத்தனை மனங்களுமே மனநோயாளிகளுடைய நோயுற்ற மனங்கள் ! அத்தகைய மனங்களிலிருந்து ஆரோக்கியமான உண்மைகள் கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

ஃப்ராய்ட் 1939-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி இந்த உலகைவிட்டு மறைந்தார். எனினும் கனவுகள் உள்ளவரை, கனவு காண்கின்ற கடைசி மனிதன் உள்ளவரை அவர் ஃபீனிக்ஸ் பறவையைப்போல உயிர்த்து எழுந்து கொண்டேயிருப்பார்.

ஃப்ராய்டின் கோட்பாடுகளில் தவறு உள்ளது என்பது பின்னால் நிரூபிக்கப் பட்டாலும், கனவு பற்றி விஞ்ஞானபூர்வமாக அறிந்து கொள்ள ஃப்ராய்டின் சிந்தனையை பரிச்சயம் கொள்வது முதலில் அவசியம். அதற்கு சிறந்;த வழி அவருடைய எழுத்தைப் படிப்பதுதான். உலகத்தை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்றான சிக்மன்ட் ஃப்ராய்ட் எழுதிய வுhந ஐவெநசிசநவயவழைn ழக னுசநயஅள என்ற நூலின் சாறு இனி வரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக்குடித்துவிட்டால், இனி கனவு கண்டு பயந்து எழ வேண்டிய அவசியமிருக்காது.

அத்தியாயம் – 2

கனவைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள்

வரலாற்றுக்கு முந்திய கருத்தும் கனவின் சில குணாம்சங்களும்

கனவைப் பற்றிய தனது ஆராய்ச்சியை ஃப்ராய்டு திடீரென்று ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்கிவிடவில்லை. தனக்கு முந்திய ஆராய்ச்சிகளையெல்லாம் படித்து அலசி கரைத்துக் குடித்துவிட்டுத்தான் அவர் தனக்கான சில முடிவுகளுக்கு வருகிறார். அடிக்கடி Wundt , Hildebrandt , Maury , Jessen , Radestock , Krauss , Strumpell , Kant போன்ற உளவியலாளர்கள், மருத்துவர்கள், தத்துவவாதிகள் போன்றோரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவார். கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அந்த ஆராய்ச்சிகள் பற்றிய அறிவு இன்றியமையாதவை. எனவே அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறோம். அதோடு, இந்த நூல் முழுவதும் பேசுவது ஃப்ராய்டுதான் என்றாலும் அங்கங்கே அழுத்தம்கொடுக்க வேண்டி அவ்வப்போது அவரே பேசுவதாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அதற்கு அர்த்தம் மற்றவையெல்லாம் அவர் சொல்லாதது என்பதல்ல.

இன்றல்ல நேற்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கனவுகளைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறான். ஆனால் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்த அணுகுமுறை மிகச்சமீபத்தியதே.

அரிஸ்டாட்டிலுக்கு முந்திய காலத்தில் கனவுகள் தெய்வீக அறிவிப்பு என்றும் தீர்க்கதரிசி ஆபிரஹாமுக்கு மகனை வெட்டி பலி கொடுக்க வேண்டுமென்று இறைவன் கனவில் கட்டளை பிறப்பித்ததைப் போன்ற நேரடி தீர்க்க தரிசனங்கள் என்றும் மேலும் வருங்காலத்தை முன்னறிவிக்க வல்லவை என்றும் கருதப்பட்டு வந்தன.

தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியமேற்படவில்லை.

எனினும் இந்த காலகட்டத்தில் சிற்சில உண்மைகள் அறியப்பட்டன. சின்ன வி;களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதன் கனவுகளிடம் இருந்துதான் கற்றுக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவு மிகைப்படுத்திக் காட்டும் தன்மையுடையது என்பதையும் நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியக் குறைவை அது அறிவிக்கும் எனவும், கனவானது தூக்க நிலையின் சிந்தனை என்பதாகவும் கிரேக்கத் தத்துவவாதி அரிஸ்டாட்டில் சரியாக அறிந்து வைத்திருந்தார்.கனவுகளைப் பற்றிப் பேசும் அவருடை இரண்டு புத்தகங்கள் மூலமாக இந்த தகவலை நாம் பெறுகிறோம். தீ மிதியில் கலந்து கொள்வதாக கனவு வரும். உண்மையில் உறங்கிக் கொண்டிருந்தவரின்; பக்கத்தில் யாராவது டார்டாய்ஸ் – சரி, மெழுகுவர்த்தி – ஏற்றி வைத்திருப்பர். அவ்வளவுதான்.

கனவுகள் வேறொரு உலகத்திலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன என்பதை தூங்கி விழித்த – தூங்கி வழிந்த அல்ல – அனைவருமே ஒத்துக்கொள்வர்.

கனவு நமது நனவு வாழ்வைக் காட்டுவதில்லை. நம்மை நனவு வாழ்விலிருந்து விடுவிப்பதே கனவின் நோக்கமாக உள்ளது. நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சனையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாக கனவு உள்ளது என்று டாக்டர் பர்டாக் ((Burdach) கூறுகிறார்.இதே கருத்தை பல ஆராய்சியாளர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததுதான் கனவில் வருகின்றன என்ற கருத்தை மோரி முன் வைக்கிறார். கனவு காண்பவரின் வயது, வாழ்முறை, அனுபவம், அவர் ஆணா பெண்ணா போன்றவைதான் கனவின் உள்விஷயங்;களைத் தீர்மானிக்கின்றன என்று ஜெஸ்ஸன் என்ற உளவியலாளர் கூறுகிறார்.

கனவானது நனவு வாழ்வோடு சம்பந்தப் பட்டிருந்தாலும் நனவு வாழ்வுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத விஷயங்களையும் காட்ட வல்லது என்று ஹில்டெப்ரான் கூறுகிறார். உதாரணமாக, செயின்ட் ஹெலினா தீவுக்கு கடற்பயணம் செய்து அங்கு சிறைக் கைதியாக இருக்கும் நெப்போலியனைச் சந்தித்து மதுவகைகளை அவனுக்கு அளிப்பதாக கனவு காணும் ஒருவன் நிஜவாழ்வில் நெப்போலியனை வெறுக்கக்கூடியவனாக, மதுவோடு சம்பந்தப் படாதவனாக, நெப்போலியன் இறந்த பிறகே பிறந்தவனாக இருக்கக்கூடிய வாய்ப்புண்டு.

பெரும் புதிராக உள்ள இந்த கனவு என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? காரணிகள் எவை? போன்ற கேள்விகளுக்கு விஞ்ஞானம் விடை காண முற்பட்டபோது கனவின் பல குணாம்சங்களைப் பற்றியும் அதன் விளைவாக அல்லது வழியாக மனித மனத்தின் இயக்கத்தைப் பற்றியும், ஆழத்தில் அமுங்கிக் கிடக்கும் ஆசைகளைப் பற்றியும் ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.

கனவின் குணாம்சங்களை அறிந்து கொள்ளும்போது கனவு மெல்ல மெல்ல தானே விளங்க ஆரம்பித்துவிடும். அதற்குமுன் சில பிரயோகங்களையும் (terms) எந்த அர்த்தத்தில் அவை இந்த நூலில் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றும் பார்க்க வேண்டியது அவசியம்.

1.குறியீடு(Symbol)

ஒன்றை மற்றொன்றால் குறிப்பது. அந்த மற்றொன்றே குறியீடு. ரோஜா என்றால் அது மென்மை, அழகு போன்றவற்றிற்குக் குறியீடு. அதேபோல் நெருப்பு என்றால் அது அழிவு, காமம், நிலையாமை இவற்றிற்குக் குறியீடு. இவற்றில் இரண்டுவகைக் குறியீடுகள் உண்டு. ஒன்று எல்லாக் காலத்துக்கும், நாட்டுக்கும் பொதுவான பிரபஞ்சக் குறியீடு (Universal Symbol). பிரபஞ்சக் குறியீடு யார் கனவில் வந்தாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான். மேற்கூறிய ரோஜா அல்லது நெருப்பு அதற்கு உதாரணம். மற்றொன்று தனிக்குறியீடு (Accidental Symbol). அதாவது தனி ஒரு மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக அர்த்தம் தருகின்ற குறியீடு. உதாரணமாக நாம் ஏதாவது ஒரு ஊருக்குப் போயிருக்கும்போது ஒரு துயரமான சம்பவம் ஏற்பட்டு விட்டால், பின்னால் அந்த ஊரின் பெயர் சொல்லப்படும் போதெல்லாம் நமக்கு அது ஒரு துக்க உணர்வை ஏற்படுத்தும். அந்த ஊரின் பெயர் நமக்கு துக்கத்தின் குறியீடு. ஆனால் எல்லோருக்கும் இது இந்த அர்த்தம் தராது. இது தனிக்குறியீடு.

2. வெளி விஷயம் ( Manifest Contest )

கனவில் வரும் காட்சி அல்லது காட்சிகளை வெளி விஷயம் என்று கொள்வோம். வெளி விஷயம் கனவின் அர்த்தம் அல்ல. உதாரணமாக வடதுருவக் குளிரில் நாம் விறைத்துக் கொண்டிருப்பதாக காட்சி வந்தால் அதன் அர்த்தம் நம்மீது யாரோ ஐஸ் கட்டியைப் போடுகிறார்கள் என்பதாக இருக்கலாம்.

3.உள் விஷயம் ( Latent Content )

கனவுக் காட்சிகள் மூலம் கனவு நமக்கு உணர்த்த வரும் விஷயம், கொண்டு வரும் செய்த, கொண்டிருக்கும் அர்த்தம். இவைகளை உள் விஷயம் என்று கொள்வோம்.

4.ஆழ்மனம் ( The Unconscious )

மனிதனின் மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1) வெளி மனம் (வுhந ஊழளெஉழைரள). அதாவது நமது பிரக்ஞை செயல்படுகின்ற பகுதி. 2) உள் மனம் (வுhந ளுரடிஉழளெஉழைரள). 3) பிரபஞ்ச மனம் அல்லது ஆழ் மனம் (வுhந ருnஉழளெஉழைரள). உள் மனமும் பிரபஞ்ச மனமும் மனிதனின் பிரக்ஞை நிலைக்கு அப்பாற் பட்டவை. இவைகளின் பிரிவின் நுணுக்கம் நமக்கு இப்போது அவசியமில்லை. கனவைப் பற்றிய தொடர்பில் பிரபஞ்ச மனம் என்று சொல்வது குழப்பத்தைத் தோற்றுவிக்குமாகையால் இதை ஆழ் மனம் என்று குறிப்போம். கனவின் குணாம்சங்களைப் பார்க்கும்போது, தேவையான இடங்களில் உதாரணங்களோடும் மிக முக்கியமானவைகளை தனித்தனியே பகுதிகளாகவும் பார்க்கலாம்.

5.கனவெண்ணம் ( Dream thought )

கனவை உருவாக்குகின்ற எண்ணம் அல்லது எண்ணங்கள்.

கனவின் குணாம்சங்கள்

விளக்கப் படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது என்றொரு முதுமொழி உண்டு. இது கவனிக்கத்தக்கது. கடிதம் ஒரு செய்தியைக் கொண்டுவருகிறது. அதேபோல கனவும் ஒரு செய்தியைச் சொல்லுகிறது. கடிதத்தைத் திறந்தால்தான் செய்தியைப் படிக்க முடியும். கனவை விளக்கினால்தான் அர்த்தம் புரியும். எனவே கனவு என்பது நமக்கு நாமே அனுப்பிக் கொள்ளும் கடிதம் அல்லது செய்தி. அது நாம் தூங்கும்போது நடக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்பாடு. காட்சி வடிவ சிந்தனை. அதன் குணங்களை அறிந்துகொள்வதற்கும் இதனை மனதில் நிறுத்திக்கொள்ளுதல் அவசியம்.

குணாம்சங்கள்

1. கனவு தானாக எதையும் சொல்வதில்லை. நம் நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்தே அது காட்சிகளை அமைக்கிறது. இதில் எவ்வித சந்தேகமுமில்லை. நமது விழிப்புநிலை அனுபவங்கள் கனவில் நினைவுகொள்ளப்படுகின்றன. அல்லது மறுஉயிர்ப்பு செய்யப்படுகின்றன. ஆனால் கனவுக்கும் நனவுக்கும் உள்ள தொடர்பை நாம் புரிந்து கொள்வது கடினம். நனவில் நாம் அறவே மறந்துவிட்டிருக்கிற, நினைவில் கொண்டுவரமுடியாத விஷயங்களை கனவு துல்லியமாக ஞாபகப் படுத்துகின்ற தகுதி பெற்றது. உதாரணமாக, நாம் நனவு வாழ்வில் எப்போதோ பரிச்சயம்கொண்ட அந்நிய மொழியை, நனவில் பேசியதைவிட சரளமாகவும் சரியாகவும் கனவில் பேசுவதைக் கூறலாம். விழிப்பில் இப்படிப்பட்ட வி; என் பிரக்ஞையில் கிடையவே கிடையாது என்று சாதிக்கின்ற அளவுக்கு மறந்து விட்டிருப்பவைகளை நினைவுகூர்கின்ற கனவுகளை ஹைபர்னீஸிக் ( hypermnesic ) கனவுகள் என்று உளவியலாளர் கூறுகின்றனர்.எனவே

2. கனவுக்கு அபார ஞாபக சக்தி உண்டு

3. கனவின் தெரிவு : கனவு, தான் நினைவுகூறத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விஷயம் அல்லது அனுபவம் நம் நனவு வாழ்வில் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, நம்மை மிகவும் பாதித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம்கூட முக்கியத்துவமற்றதுகூட கனவில் வரலாம். நமது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு, அதனால் மிகவும் பாதிக்கப்பட்டு, அதையே நினைத்துக்கொண்டு உறங்கினாலும், வரும் கனவு, அதை விட்டுவிட்டு, நாம் என்றோ ஒருநாள் தெருவில் சென்றபோது நம்மை எதிர்கொண்ட ஒருவரின் முகத்திலிருந்த, நாம் கவனிக்காது விட்ட, தழும்பை நினைவுகூறலாம். நமது பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞை அற்றோ, நமது மூளையில் பதிவான எதையும் நம் நினைவிலிருந்து நாம் நிரந்தரமாக இழப்பது கிடையாது என்பது இதிலிருந்து விளங்கும்.

4. பொதுவாக நமக்கு சாதாரணமாக வரும் கனவுகளின் மூலம் ( the source of normal dreams ) கனவு காண்பதற்கு முந்திய நாள் அல்லது அதற்கு முந்திய நாள் நிகழ்ச்சியாக இருக்கும். அதாவது மிகச்சமீபத்திய நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்திப் பார்ப்பது, கனவைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

5. எல்லாக் கனவுகளுமே பெரும்பாலும் குறியீட்டுத் தன்மை கொண்டவை. கனவின் காட்சிகளே குறியீடுகள். நம் நனவு வாழ்வின் அனுபவ உணர்வுகளை கனவுகள் அப்படியே காட்டுவதில்லை. எனவேதான் கனவுகளை விளக்க வேண்டிய அவசியமேற்படுகிறது. கனவின் காட்சிகள் பெரும்பாலும் தனிக்குறியீடுகளாகவே இருக்கும். கனவு கண்டவனின் வாழ்க்கைப் பின்னணியை நாம் அறியாவிட்டால் கனவெண்ணங்களை அறியமுடியாது. எனவே கனவுகள் குறியீட்டுத்தன்மை கொண்டவை அல்லது சங்கேத மொழி பேசுபவை அல்லது உள் விஷயம் கொண்டவை என்று அறியலாம். கனவின் வெளி விஷயம் , குறியீடு அல்லது குறியீடுகளாகும்.

உதாரணமாக, நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விட்டுவிடுவதாக கனவுகாண்பதாக வைத்துக்கொள்வோம். ரயில், அதற்காக நாம் ஓடிவருதல், ஆனால் ரயில் புறப்பட்டு விடுதல் ஆகியன காட்சிகள் அல்லது குறியீடுகள் அல்லது கனவின் வெளி விஷயம். இக்கனவு மரணத்தைப் பற்றிpய நமது பயத்தை வெளிப்படுத்துகிறது. மறைமுகமாக. என்றைக்காவது ஒருநாள் சாவோம் என்ற உண்மை தெரிந்திருந்தாலும் குறைந்த பட்சம் இப்போது வேண்டாம் என்றே நாம் நினைப்போம். இக்கனவின்படி நாம் ரயிலை விட்டுவிட்டோம். அதாவது நாம் புறப்படவில்லை. நமக்கு இப்போது புறப்பாடு, அதாவது மரணம், இல்லை. நீ இப்போது சாகமாட்டாய் என்று கனவு கூறுகிறது. புறப்பாடு என்ற வார்த்தை இறப்பைக் குறிக்கும் பிரபஞ்சக் குறியீடு. கனவில் ரயிலும் நம்மைவிட்டுவிட்டுப் புறப்படுவதும் நமக்கு மரணம் அப்போது இல்லை என்பதன் குறியீடுகள்.

கனவுகள் குறியீட்டுத்தன்மை கொண்டவை என்ற அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் கனவுகளை விளக்கவே முடியாது. அதோடு, ஒரு கனவை விளக்க, பிரபஞ்சக் குறியீடுகள் பற்றிய அறிவையும் நாம் கருதத்தக்க அளவு பெற்றிருத்தல் அவசியம்.

6. கனவுகள் நம்முடைய வாழ்வில் தனித்தனியே பார்க்கும்போது சம்பந்தமற்ற பல விஷயங்களை ஏதோ ஒரு தொடர்பின் அடிப்படையில் ஒன்றுசேர்த்து காட்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. ( A dream works in association ). உதாரணமாக மேற்கூறிய கனவையே எடுத்துக் கொள்ளலாம். ரயிலுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ரயில் என்பது புறப்படும். புறப்பாடு மரணத்தைச் சுட்டும். புறப்படுகின்ற எந்த வாகனத்தையும் மரணத்தின் குறியீடாக அது காட்டலாம். இன்ன மனிதருடைய கனவில் கனவு ஏன் மரணத்தின் குறியீடாக ரயிலைத் தேர்ந்தெடுத்தது? மற்ற வாகனங்கள் ஏன் வரக்கூடாது? போன்ற கேள்விகளுக்கு குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் பின்புலத்தை அறிந்தால்தான் விடை கிடைக்கும்.

7. ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ் மனத்திலிருக்கும் விருப்பமொன்று நிறைவேறி விட்டதாகக் காட்டும். அது பெரும்பாலும் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று ஃப்ராய்ட் கூறுகிறார். கனவைப் பற்றிய அவருடைய ஆராய்ச்சியில் மிகமுக்கியமான அம்சம் கனவு நமது விருப்பம் நிறைவேற்றுவதாகக் காட்டும் தன்மை கொண்டது என்பது. ( A dream is the fulfillment of a wish ) இந்த விருப்பம் பெரும்பாலும் நம் குழந்தைப் பருவத்திலிருந்து அமுக்கப்பட்ட ஒன்றாக ( repressed ) இருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட ரயிலைத்தவற விடும் கனவிலேயே இந்த விருப்ப நிறைவேற்றம் என்ற அம்சத்தைக் காணலாம். நாம் இப்போது சாகக்கூடாது என்ற விருப்பமே இப்போது நீ புறப்படவில்லை என்பதாக, விருப்பம் நிறைவேறிவிடுவதாக, காலன் என்ற ரயில் இவனை விட்டுவிட்டுப் போய்விடுவதாக, கனவில் வருகிறது.

ஃப்ராய்டின் நண்பர் ஒருவர் அவரிடம் தனது மனைவி மாதவிடாய் வருவதாகக் கனவு கண்டதாகக் கூறுகிறார். அப்படியானால் உண்மையிலேயே மாதவிடாய் வரவில்லை எனவும் அதாவது அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள் எனவும் ஃப்ராய்ட் விளக்கம் தருகிறார். அதாவது விடாய் வராதால், வரவேண்டும் என்ற விருப்பம் அவள் கனவில் நிறைவேறியுள்ளது.

இப்படிப்பட்ட விருப்பம் நிறைவேற்றும் கனவுகள் பெரியவர்களுக்கு வரும்போது அது அவர்கள் ஆழ் மனத்தில் அமுக்கப்பட்டுக் கிடந்த விருப்பமாகவும், குழந்தைகளுக்கு வரும்பொழுது, அது அவர்கள் நனவு வாழ்வில் நிறைவேற்றப்படாத சின்னச் சின்ன ஆசைகளாகவும் இருக்கும்.

8. கனவு குழந்தைப் பருவ விருப்பங்களை நினைவு கூறும். அவ்விருப்பங்கள் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.

9. கனவுகள் பாலுணர்ச்சியை உணர்த்தும். மறைமுகமாகவோ, பிரபஞ்சக் குறியீடுகள் மூலமாகவோ, தனிக்குறியீடு மூலமாகவோ அல்லது வெளிப்படையாகவோ. அது நமது குழந்தைப்பருவ ஆழ்மன விருப்பமாகவும் இருக்கலாம்.

10. கனவின் காட்சிகள் கனவெண்ணங்களின் நம்பகமான படப்பிடிப்பல்ல. அவைகளை பல வகைகளிலும் சுருக்கியும் சிதைத்துமே கனவு காட்சிகளாக்குகிறது. எந்த முழுமையான கனவிலும் இடைவெளிகள் உண்டு. பல கனவெண்ணங்களை கனவு சென்சார் செய்து விட்டுவிடுவதன் மூலம் கனவுகள் துண்டுதுண்டாகத் தொடர்பற்றவைபோல் தோன்றுகின்றன. கனவை விளக்குவது இதனாலும் கடினமாகிறது. எனவே கனவென்பது ஒரு சுருக்க நிகழ்வு.( It is a work of condensation ).

11. கனவு ஒரு கழிவாகவும் பயன்படுகிறது. கனவு ஏன் வருகிறது, அதன் நோக்கம் என்ன என்பது பற்றிய ராபர்ட் என்பவரின் ஆராய்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. நாம் பெரும்பாலும் நம் நனவு வாழ்வில் எந்த முக்கியத்துவமும் கொடுத்து கவனத்தில் வைத்துக்கொள்ளாத அற்பமான விஷயங்களைப் பற்றியே அதிகமாக கனவுகாண்கிறோம். இதனாலும் கனவை விளக்குவது கடினமான காரியமாகிறது. மேலும் கனவுகாணத் தகுதியில்லாத ஒரு மனிதன் காலப்போக்கில் பைத்தியமாகிவிடலாம். மூளை ஏற்கனவே நம்மை மிகவும் பாதித்த, சிந்தனை செய்த எண்ணங்களின் சுமையால் அழுத்தப்பட்டுள்ளது. இச்சமயம் சம்மந்தமில்லாத அற்ப வி;களும் மூட்டையாகச் சேர்ந்து விட்டால் மூளை குழம்பி பைத்தியம்தான் பிடிக்கும். எனவேதான் கனவு நம் மூளை பதிவு செய்த தினசரி அற்பங்களின் சுமையிலிருந்து கனவுக்காட்சிகள் மூலம் நம் சுமையைக் குறைக்கிறது. அந்த அற்ப விஷயங்களை வெளியேற்றிவிடுகிறது. கனவின் நோக்கம், செயல்பாடு இதாகிறது என்கிறார்.

12. கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். கனவை உருவாக்குகின்ற கனவெண்ணங்களில் ஏதாவதொன்று எதையாவது விமர்சனம் அல்லது கிண்டல் செய்கின்ற நோக்கம் கொண்டிருக்குமானால் கனவு அபத்தமானதாக இருக்கும். ஒரு முரண்பாட்டை எடுத்துச் சொல்ல வரும் கனவும் அபத்தமானதாகவே இருக்கும். ரொம்பவும் அபத்தமாகத் தோன்றுகின்ற கனவுகள் மிகவும் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கலாம். எனவே கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படியிருப்பதில்லை. கனவெண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாதவரை.

13. கனவுகள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை வாய்ந்தவை. இக்கருத்து தவறானதென்று வாதிடுவதற்கில்லை. இயற்கை உளவியலில் இதற்கு விளக்கம் காண முடியும் என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.

இக்குணாம்சங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. ஒன்றை விளக்கும்போது மற்றொன்று தெளிவாகலாம். கனவின் குணாம்சங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பே இது. இவ்வளவுதான் என்று சொல்வதற்கில்லை. மேலும் முக்கியமான தன்மைகளை தனித்தனியாக சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கனவை உருவாக்குவது எது?

நாம் தூங்கும்போது நம் தூக்கம் பாதிக்கப்பட்டால், அதற்கு பதில்போல, ஒரு எதிர்ச்செயல்பாடாக கனவு இருக்கிறது. அஜீரணக் கோளாறினாலேயே கனவு ஏற்படுகிறது என்ற முதுமொழியை இங்கே பொருத்திப்பார்க்கலாம்.

கனவுகள் தெய்வத்தின் விருப்பம் கொண்டு உருவாவது என்ற நம்பிய நம் மூதாதையர்கள் அதன் காரணிகள் யாவை என அறியும் முயற்சியில் ஈடுபடவில்லை. கனவு ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்துவிட்டது. எனவே அது விஞ்ஞானத்தின் பிரச்சனையாயிற்று. பல சந்தேகங்கள், ஆராய்ச்சிகளுக்குப்பின், கனவு உண்டாவதற்கு பல வகைப்பட்ட காரணங்கள் உண்டு எனவும், அது உளவியல் ரீதியாகவுமிருக்கலாம், உடலியல் ரீதியாகவுமிருக்கலாம் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்தது. உடல் ரீதியாக கனவைத் தூண்டுபவைகளில் புறஉணர்வுத் தூண்டுதல் மற்றும் உள்ளுறுப்பு உணர்வுத் தூண்டுதல் ஆகியவை பற்றி சற்று விரிவாக பார்க்க வேண்டியது அவசியம்.

புற உணர்வுத்தூண்டுதல் ((External Sensory Stimuli)

1883 – 84 வாக்கில் ஸ்ட்ரம்ப்பெல் என்ற மருத்துவர் அனஸ்தீஸியா எனப்படும் உணர்வற்ற தன்மையினால் பாதிக்கப்பட்ட தன் நோயாளி ஒருவரைப் பற்றிய குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அந்த நோயாளியின் முக்கியமான சில, புற உலகிற்குத் திறந்திருக்கிற, உணர்வு உறுப்புக்களை மூடிவிட்டால் அவர் தூங்கிவிடுவாராம் என்று குறிப்பிடுகின்றார். உதாரணமாக வாயையும் செவிகளையும் மூடிவிடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அவர் தூங்கிவிடுவார்.

கேட்பதற்கு விந்தையாக இருக்கும் இது நாமும் நம்மை அறியாமல் பின்பற்றுவதுதான். திட்டமிட்டு அதை நாம் செய்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமலிருக்கிறோம். அவ்வளவுதான். இது தவிர வித்தியாசம் எதுவுமில்லை நமக்கும் அந்த நோயாளிக்கும். நம்மால் உணர்வு உறுப்புகளுக்கு உணர்வுத்தூண்டுதல் முழுமையாகச் செல்லாமல் தடுக்கவோ, உணர்வு உறுகின்ற தன்மையை அந்த உறுப்புகளிலிருந்து பிரித்துவைக்கவோ முடியாது. ஸ்ட்ரம்ப்பெல்லின் பரிசோதனையை நாமும் தினம் தினம் நம்மையறியாமல் செய்து பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். நாம் உறங்கச்செல்லும்போது என்ன செய்கிறோம்? மிக முக்கிய உணர்வு உறுப்புகளாகிய கண்களை மூடிக்கொள்கிறோம் அல்லவா?

என்றாலும் சக்தி வாய்ந்த எந்த உணர்வும் நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முடியும். உறக்கத்தில் நம்மை வந்தடைகின்ற அந்த தூண்டுதலே நம் கனவுகளுக்குக் காரணிகளாக அமையமுடியும். ஜெஸ்ஸன் என்பவர் இவ்வகையான புற உணர்வுத் தூண்டுதல்கள் மூலம் உண்டாகும் கனவுகளைப் பற்றிய சிறு பட்டியலைத் தருகிறார். அவர் கூறுகிறார் :

நம்மை தூக்கத்தில் வந்தடைகின்ற ஒவ்வொரு உணர்வும் அதற்குத் தொடர்புள்ள கனவுப் படிமங்களை அல்லது காட்சிகளை உருவாக்குகிறது. இடியின் சப்தம் நம்மை போர்க்களத்தின் நடுவே நிறுத்தலாம். சேவல் கூவினால் பயங்கரமாக ஒரு மனிதன் அலறலாம். கதவு கிறீச்சிட்டால் திருடர்கள் வரலாம் கனவில். நம் படுக்கைத்துணி இரவில் கீழே விழுந்து விட்டால் நாம் நிர்வாணமாக நடக்கலாம் அல்லது தண்ணீரில் விழலாம். நம் தலையணைக்குக் கீழ் தலை போய்விட்டால் கனவில் ஒரு பெரிய பாறைக்குக்கீழ் தலை நசுங்கலாம். விந்து பெருகிவிட்டால் காமாந்தகக் கனவுகள் வரலாம். சுடு தண்ணீரில் கால்களை வைத்துக்கொண்டிருந்த ஒருவர் தான் எட்னா என்ற எரிமலையின் மீது ஏறிவிட்டதாகவும் அதன் தகிப்பையும் கனவில் உணர்ந்தாராம். தலையைத் திறந்து கொண்டு உறங்கிய ஒருவருக்கு அவர் ஒரு மார்க்கச் சடங்கில் திறந்த தலையுடன் கலந்து கொள்வதாகக் கனவு வந்ததாம். நமக்கு திருப்பதிக்குப்போய் மொட்டையடித்துக் கொண்டு வருவதாகவோ அல்லது அரஃபாத் மைதானத்தில் மொட்டைத்தலையுடன் செல்வதாகவோ கனவு வரலாம்.

மோரி என்ற ஃப்ரெஞ்சுக்காரர் கனவுகளைப் பற்றி பல பரிசோதனைகள் நடத்தியவர். அவர் கண்ட இரண்டு பிரபலமான கனவுகளை இங்கு சொல்வது பொருந்தும்.

அவர் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் நெற்றியில் ஒரு துளி நீர் விடப்பட்டது. உடனே அவர் தான் இத்தாலியில் இருப்பதாகவும் பயங்கரமாக வியர்த்துக் கொட்டுவதாகவும் ஆர்விடோ எனும் வெள்ளைநிற மதுபானம் அருந்திக்கொண்டிருப்பதாகவும் கனவு கண்டார்.

இன்னொரு கனவில் அவர் உடல்நலமில்லாமல் படுத்திருக்கிறார். அவரது தாயாரும் பக்கத்தில் உள்ளார். அது நெப்போலியனின் பயங்கர ஆட்சிக்காலம். பலபேர் கொலைசெய்யப்படுகின்ற காட்சியை தானே பார்க்க நேரிடுகிறது. கடைசியில் இவரையும் கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்கிறார்கள். கில்லட்டின் என்று சொல்லப்படும் கொலைக்கருவியின் கீழ் இவர் தலை பலவந்தமாக வைக்கப்படுகிறது. தன் தலை தன் உடலிலிருந்து துண்டிக்கப்படுவதை அவர் காண்கிறார்.

மிகுந்த வேதனையுடன் அவர் விழித்தபோது தன் படுக்கையின் தலைமாட்டுப் பக்கம் கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்டிருந்ததாம். பரிசோதனைக்குப்பின் ஒரு கில்லட்டினின் கூர்மையான தகடுகள் தலையில் விழுந்திருந்தால் எப்படியிருக்குமோ அதே விதத்தில் அவர் தலையில் அடிபட்டு நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தனவாம்.

கனவுக்கான மூலக்காரணிகளுள் புற உணர்வுத் தூண்டுதலே மிகவும் நிச்சயப்படுத்தப்பட்டதாகும் என்று இம்மாதிரயான உதாரணங்கள் மூலம் அறிய முடிகிறது. நனவு வாழ்வில் பல வரு;கள் அல்லது பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம் எப்படி கனவில் சில நிமி;களாக அல்லது வினாடிகளாக சுருங்கிவிடுகின்றன என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. அதோடு, புறஉணர்வுத் தூண்டுதலால் வரும் கனவுகளில் தூண்டிய உணர்வுகள் அதே வடிவங்களில் வருவதில்லை. தொடர்புள்ள வௌ;வேறு வடிவங்கள் மூலம் நமக்கு உணர்த்தப்படும்.

அதோடு இன்ன புறஉணர்வுத் தூண்டுதலுக்கு இன்ன தொடர்புள்ள காட்சிதான் வரும் என்பதில்லை. ஒரே உணர்வுக்கு – உதாரணமாக அலாரத்தின் சப்தம் – பல தடவைகளில் வௌ;வேறு காட்சிகள் வரலாம். எனவே யானையைக் கண்டால் வயிற்று வலி, பூனையைக் கண்டால் இடுப்பு வலி என்று முடிந்த முடிவாக கனவு அகராதி போடுவது சிறுபிள்ளைத் தனமானது.

மனது எந்த சூழலில் ஒரு குறிப்பிட்;ட உணர்வை வாங்கிக்கொள்கிறதோ அந்த சூழலுக்குத் தகுந்த வடிவங்களை கனவில் அடைகிறது என்று ஸ்ட்ராம்ப்பெல், வன்ட் போன்ற உளவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் காலார நடந்து போகும்போது தூரத்தில் தெரியும் ஒன்று குதிரைபோல் நமக்குத் தோன்றலாம். சற்று அருகில் நெருங்கியதும் அது அமர்ந்திருக்கும் பசு என்று முடிவு கட்டலாம். கடைசியில் அங்கே நாலைந்துபேர் அமர்ந்திருக்கும் ஒரு கும்பலாக இருக்கலாம். இதைப்போலவே தூக்கத்தில் நம்மை வந்தடைகின்ற உணர்வுகளும் நிச்சயமற்ற தன்மை கொண்டனவாக இருக்கின்றன. எனவே அதன் அடிப்படையில் கனவில் பின்னப்படும் காட்சிகள் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தக்கபடி வௌ;வேறாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. உதாரணத்திற்கு ஹில்டெப்ரான்டின் கடிகாரக் கனவுகளைப் பார்க்கலாம்.

ஹில்டெப்ரான் ஒரே புறஉணர்வுத் தூண்டுதலினால் மூன்று வேறு வேறு காட்சிகளைக் கொண்ட கனவுகளைக் காண்கிறார். அவற்றில் இரண்டைப் பார்க்கலாம்.

முதல் கனவு : ஒரு வசந்தகாலக் காலை வேளையில் அவர் காலாற நடந்து போகிறார். பச்சை வயல் வெளிகள் வழியே. பக்கத்து கிராமத்துக்கு வந்துவிடுகிறார். கிராமத்தினர் தங்களது சிறப்பு ஆடைகளில், கைகளில் பைபிளை ஏந்திய வண்ணம் தேவாலயத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளனர். ஆமாம்;. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை ஜபம் சற்று நேரத்தில் ஆரம்பித்துவிடும். மணி அடிப்பவன் தேவாலயத்தின் மீதேறி மணியை நெருங்கும் சப்தம் கேட்டது. இப்பொழுது தொழுகையை அறிவித்து மணி அடிக்கும். அதுபோலவே மணி அடித்தது. ஆனால் அடித்துக்கொண்டே இருந்தது. நிற்காமல். செவிப்பறைகள் கிழியுமாறு. விழித்துப் பார்த்தபோது அலாரம்தான் அப்படி அலறிக்கொண்டிருந்தது.

இரண்டாவது கனவு : வீட்டு சமையல்காரி நிறைய பீங்கான்களையும் கோப்பைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, டைனிங் ஹாலை நோக்கி கொண்டுபோய்க் கொண்டிருந்தாள். அதிலிருந்த சைனா கோப்பையொன்று நழுவிவிடும் நிலையிலிருந்தது. பயந்தபடியே வாசல்படியில் அவள் தடுக்கி நிலைதடுமாற, எல்லாம் கீழே விழுந்து ஒரே சப்த மயம். ஆனால் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால் நொறுங்கும் சப்தமாக அல்ல. மணியடிப்பதுபோல. விழித்ததும் பக்கத்தில் அலாரம் அலறிக்கொண்டிருந்தது. அலாரத்தின் சப்தம் என்ற ஒரே காரணி ஏன் இரண்டு அல்லது மூன்று விதமான கனவுகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். ஆனால் கனவுகள் அப்படித்தான்.

மூர்லி வோல்டு (Mourly Vold) என்பவர் ஒரு பரிசோதனை செய்தார். அதாவது தூங்கிக்கொண்டிருப்பவரின் உடலுறுப்பில் ஏதாவதொன்றின் நிலையை, உதாரணமாக கையை, மாற்றுவதன் மூலம் கனவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கண்டுபிடித்தார். கீழ்க்கண்டவாறு அவர் தன் முடிவுகளை அறிவிக்கிறார் :

1. கனவில் ஒருவரின் உடலுறுப்பு எந்த நிலையிலிருக்கிறதோ அதே நிலையில்தான் விழிப்பு நிலையிலும் இருக்கும். அதாவது கனவில் கை அசைந்து கொண்டிருந்தால் நனவிலும் அசைந்துகொண்டுள்ளதாக அர்த்தம்.

2. கனவு காண்பவரின் உடலசைவு அல்லது அசைவின்மை கனவில் இன்னொருவரின் உடலசைவாக அல்லது அசைவின்மையாகத் தெரியலாம்.

3. தூங்கிக் கொண்டிருப்பவரின் உடல் உறுப்புக்களின் அசைவை நிறுத்தினால் அல்லது தொந்தரவு செய்தால் அதுகூட கனவாக வரலாம். காலாட்டிக்கொண்டே தூங்குபவரின் காலை நிறுத்தினால் அதனால்கூட கனவு வரலாம்.

4. தூக்கத்தில் உள்ளவரின் உடலுறுப்புகளின் நிலை கனவில் மிருகமாக வரலாம். கனவில் வரும் நாய்களும் பேய்களும் நமது கையாகவோ காலாகவோ முகமாகவோ இருக்கலாம் !

5. குறிப்பிட்ட நிலையில் உள்ள தூங்குபவரின் உடலுறுப்புகள் அதற்கேற்ற எண்ணங்களையும் கனவில் ஏற்படுத்தலாம். உதாரணமாக விரல்களின் நிலையில் எண்களைப்பற்றிய கனவுகள் வரலாம்.

ஒருமுறை ஃப்ராய்டுக்கு விரையின் அடியில் ஆப்பிள் அளவு பெரிய கொப்புளம் வந்து மிகவும் அவஸ்தைப்பட்டார். ஒவ்வொரு அசைவும் சித்திரவதையாக இருந்தது. அந்த நேரத்தில் தூங்கும்போது வந்த கனவில் அவர் குதிரை சவாரி செய்துகொண்டிருந்தார்! குதிரைச் சவாரியை ஃப்ராய்ட் ஒருமுறைதான் நிஜவாழ்வில் செய்திருந்தாராம். அந்த கொப்புளத்தின் வேதனையோடு எந்த வேலையையும் செய்திருக்கலாம் கஷ்டப்பட்டு. ஆனால் ஒரு வேலை மட்டும் நிச்சயமாகச் செய்திருக்கவே முடியாது. அதுதான் குதிரைச்சவாரி செய்வது! ஆனால் அதை நன்றாகச் செய்வதாகத்தான் கனவு! அதாவது அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற விருப்பத்தை கனவு நிறைவேற்றியிருக்கிறது.

நமது உடல் உறுப்புகளின் அனுபவங்களினால் ஏற்படும் கனவுகள் எந்த மாதிரியான காட்சிகளைத் தோற்றுவிக்கும் என்று முடிந்த முடிபாக கூற முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம்.

உள்ளுறுப்பு உணர்வுத் தூண்டுதல் ( Internal Organic Somatic Stimuli )

நமது உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களின் இயக்கங்களை நாம் எப்போதும் பிரக்ஞையில் கொள்வதில்லை. நம்மை அறியாமலேயே அவை நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் உள்ளுறுப்புக்கள் நோய்வாய்ப்படும்போது அவைகளின் அசௌகரியத்தை நாம் கனவுகள் மூலமாக அறியலாம். விழிப்பு நிலையில் அறிவதற்கு முன்பே கனவின் மூலமாக உள்ளுறுப்புகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்திக் கொள்வது சாத்தியமே. அரிஸ்டாட்டில்கூட தனது னுந னுiஎiயெவழைn என்ற நூலில் கூறுகிறார். அதாவது அரிஸ்டாட்டில் காலத்திலேயே கனவுகள் நோயறிவிக்கும் என்ற உண்மை உணரப்பட்டுள்ளது. மேலும் நமது மனமானது அல்லது மூளையானது உடல் சம்பந்தப்பட்ட உணர்வு நிகழ்வுகளை, விழிப்பு நிலையில்விட, உறக்க நிலையிலேயே அதிகமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்கிறது என்று ஸ்ட்ரம்ப்பெல் அறிவிக்கிறார்.

நாற்பத்துமூன்று வயதான ஒருத்தி அடிக்கடி கவலை தரும் கனவுகள் கண்டுகொண்டிருந்தாள். மருத்துவ பரிசோதனைகளுக்குப்பின் அவளுக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்தது. இருதயம், நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒழுங்கீனங்கள் அடிக்கடி கவலைக்கனவுகள் மூலமாக அறிவிக்கப்படுகிறது என்பது விஞ்ஞானரீதியாக எல்லா மருத்துவர்களும் ஒத்துக்கொண்ட ஒன்றாயிற்று.

குறைந்த நேரக்கனவாகவும் விழிக்கும் நிலையில் அது ஒரு பயங்கரமான மரணத்தை அல்லது ஒரு பயங்கர முடிவைக்கொண்டதாகவும் இருக்கும் கனவு இருதய நோயை அறிவிப்பதாக இருக்கும். மூச்சுத்திணறல், கூட்ட நெரிசல், ஓட்டம் முதலியவைகள் கனவில் வரும்போது அது நுரையீரல் பாதிப்பை அறிவிப்பதாக இருக்கலாம்.

ஆனால் நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியக் குறைவே கனவுகள் வரக்காரணம் என்று எண்ணுவது தவறாகும். ஆரோக்கியமானவர்களுக்கும், ஏன் எல்லோருக்குமே ஒவ்வோர் இரவும் கனவு வரலாம். எனவே கனவு கண்டவுடன் உடனே நமது உடலில் ஏதோ கோளாறு என்று எண்ணத்தேவையி;ல்லை. கனவுகள் நோயையும் அறிவிக்கும் அவ்வளவுதான்.

கனவுகளின் ஞாபக சக்தி

யானைகளுக்கு அபார ஞாபக சக்தி என்று சொல்வர். ஆனால் கனவுகளின் ஞாபக சக்தியோ பல நூறு யானைகளுக்குச் சமம். கனவில் வரும் காட்சிகள் யாவும் நம்முடைய நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்து எடுக்கப் பட்டவையே. அதாவது நனவு வாழ்வின் அனுபவங்கள் கனவில் மறுபடியும் நினைவு கொள்ளப்படுகின்றன. நூற்றுக்கு நூறு அப்படியே நினைவுகூறப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் கனவுக்கும் நனவுக்குமுள்ள இந்த தொடர்பு கனவையும் நனவையும் ஒத்துப்பார்த்தால் எளிதாகப் புரிந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு. பல சமயங்களில் இந்த தொடர்பு புரிந்து கொள்ளவே படாமல் (முடியாமல்) ரகசியமானதாகவே இருந்துவிடுகிறது. இந்த ரகசியத் திரையை கிழிப்பதற்கு கனவின் ஞாபக சக்தி பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கனவில் கண்ட ஒரு விஷயம், ஒரு அம்சம், ஒரு பொருள், ஒரு ஆள், ஒரு பெயர் இன்ன பிற நனவில் நாம் கண்டதாகவோ தெரிந்ததாகவோ இருக்காது. நனவு வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு அனுபவமே கிடையாது என்றுகூட நாம் அடித்துக் கூறலாம். ஆனால் நீண்டதொரு இடைவெளிக்குப்பின் ஏற்படும் ஒரு புதிய அனுபவம் நாம் முன்னால் கனவில் கண்டது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்பதை உறுதிப்படுத்தலாம்.

டெல்போஃப் (Delboeuf ) என்ற தத்துவவாதி ஒருவர் ஒரு கனவு கண்டார். தன் வீட்டு நீள வராந்தா பனியால் நிரம்பியுள்ளது. அதில் இரண்டு சிறிய பல்லிகள் பாதி புதையுண்டு உறைந்த நிலையில் உள்ளன. ஆனால் சாகவில்லை. இரக்கம் கொண்ட அவர் அப்பல்லிகளை விடுவித்து அவைகளின் வீட்டுக்குள் (ஓட்டைக்குள்) கொண்டு விடுகிறார். அதோடு அவைகள் சாப்பிடும் சில இலைகளையும் அதற்குள் போடுகிறார். அந்த இலைகளின் தாவரப்பெயர் அஸ்ப்ளீனியம் ரூட்டா முராலிஸ் என்றும் கனவு சொல்கிறது. கொஞ்ச நேரம் கழித்து பல்லிகளை விட்டுவந்த ஓட்டைகளை நோக்கி மேலும் இரண்டு, மூன்று, நான்கு என ஒரு பல்லிப் பட்டாளமே ஊர்வலமாக வர ஆரம்பிக்கிறது. ஜூராஸிக்பார்க் படத்தில் வரும் டைனோக்களின் கூட்டம் மாதிரி.

கனவிலிருந்து விழித்த பிறகு அவருக்கு ஒரே ஆச்சர்யம். ஏனெனில் அஸ்ப்ளீனியம் என்று ஒரு தாவரப்பெயரே அவருக்குத் தெரியாது. பின் எப்படி அப்படி ஒரு பெயர் கனவில் வந்தது? உண்மையில் அப்படி ஒரு பெயர் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தால் இருந்தது ! அஸ்ப்ளீனியம் ரூட்டா முராரியா என்றிருந்தது !

இந்த கனவை அவர் கண்டது 1862ல். அதன் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து தனது நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அங்கே பூக்களைப் பதியவைத்து அதன் தாவரப் பெயர்களும் கீழே எழுதப்பட்;ட ஒரு ஆல்பம் இருந்தது. அதைப் புரட்டிக்கொண்டிருந்தார். அதில் அவர் கனவில் கண்ட அஸ்ப்ளீனியம் இருந்தது. வேடிக்கை என்னவென்றால், அதன் கீழே அதன் தாவரப்பெயர் அவர் கையாலேயே எழுதப்பட்டிருந்தது !

இப்போது எல்லாம் விளங்கிவிட்டது. 1860ல் (அதாவது பல்லிக் கனவு வந்ததற்கு இரண்டு வருடங்களுக்கு முன்) அவரது நண்பரின் சகோதரி அவரைப் பார்க்க வந்தார். அவர்தான் அந்த தாவர ஆல்பத்தைக் கொண்டுவந்தார். ஒரு தாவரவியல் நிபுணர் சொல்லச் சொல்ல, அந்த ஆல்பத்திலிருந்த ஒவ்வொரு பூவின் தாவரப் பெயரையும் அவளுக்காக அவர்தான் தன் கைப்பட எழுதினார். அப்போது எழுதியதுதான் அஸ்ப்ளீனியம் !

சரி. ஆனால் இதுவரை பாதிக்கனவுதான் விளங்கியுள்ளது. 1877ல் ஒருநாள் (பல்லிக் கனவுக்கு பதினைந்து வருடம் கழித்து) ஒரு பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தார். அதில் ஒரு பக்கத்தில் ஒரு பல்லிக்கூட்ட ஊர்வல ஃபோட்டோ அல்லது வரைபடம் இருந்தது. அந்த பத்திரிக்கை 1861ம் வருடத்தையது. அதைப் பார்த்தபின்தான் தானும் அந்த பத்திரிக்கையின் சந்தாதாரர் என்ற நினைவு வந்தது !

ஒருவருக்கு அடிக்கடி முஸ்ஸிடன் என்ற சொல் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அது ஃப்ரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஊரின் பெயர் என்பதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. பின் ஒரு கனவு கண்டார். அதில் அவர் ஒரு ஆளுடன் பேசுகிறார். அந்த ஆள் தான் முஸ்ஸிடனிலிருந்து வருவதாச் சொல்கிறான். அது எங்கே உள்ளது என்று கேட்க, அது டோர்டோன் என்ற பகுதியில் உள்ள ஊர் என்று சொல்கிறான்.

கனவு கொடுத்த இந்த தகவல்மீது நம்பிக்கை இல்லாமல் விசாரித்தார் அவர். கனவு சொன்ன தகவல் முழுக்க முழுக்க சரியானது என்று தெரிந்தது. கனவில் பெறப்படும் அறிவு நனவு வாழ்வினதைவிட துல்லியமானதாகவும் சரியாகவும் உள்ளது என்பதையும் கனவின் துல்லியமான ஞாபக சக்தியையும் இவை நிரூபிக்கின்றன.

ஒரு இசையமைப்பாளர் கனவில் ஒரு மெட்டைக் கேட்டார். அது ரொம்ப புதியதாகவும் இருந்தது. நனவு வாழ்வில் எங்குமே, எப்போதுமே கேட்டமாதிரி இல்லை. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இசை பற்றிய புத்தகத்தில் அந்த மெட்டு பற்றிய குறிப்புகளைக் கண்டு ஆச்சர்யமுற்றார்.

தன் நோயாளிகளில் பலர் தங்கள் நனவு வாழ்வில் மறந்துவிட்ட பல மேற்கோள்களையும் சில கெட்ட வார்த்தைகளையும் கனவுகளில் நினைவு கூர்ந்ததாக ஃப்ராய்டு கூறுகிறார். ஒரு நோயாளி ஒருவர் தன் கனவில் ஹோட்டலில் போய் கோன்;ட்டுஸோசா என்ற ஒன்றைக் கொண்டு வரும்படி ஆர்டர் கொடுக்கிறார். ஆனால் அவர் ஆர்டர் செய்த பொருள் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. அது ஒரு போலந்து நாட்டு மதுபான வகை என்று ஃப்ராய்டு சொல்கிறார். பிறகு ஒருநாள் ஹோட்டல் வாசல் விளம்பரப் பலகையிலிருந்து ஃப்ராய்டு சொன்னது சரிதான் என்று அந்த நோயாளி அறிந்துகொள்கிறார்.

ஃப்ராய்டுக்;குக்கூட பல வரு;களாக ஒரு தேவாலயத்தின் கோபுரமும் ஒரு இருட்டான பகுதியும் அதையொட்டி பயமுறுத்தும் உருவங்களும் அடிக்கடி கனவில் வந்துகொண்டிருந்தன. 1895ல் அவர் இத்தாலியில் உள்ள பாடுவா நகர பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். மறுபடி 1907ல் சென்றபோதுதான் கனவில் கண்ட தேவாலய கோபுரத்தை அங்கே கண்டார். மேலும் அவர் கண்ட பயமுறுத்தும் உருவங்கள் தேவாலயத்தின் பக்கத்திலிருந்த மதுக்கடையின் சித்திர வேலைப்பாடுகள் எனவும் தெரிந்து கொண்டார்.

கனவு தனக்கான காட்சிகளையும் நிகழ்வுகளையும் அமைப்பதற்காக நனவு வாழ்வின் பல நிலைகளிலிருந்தும் வி;களை எடுத்துக் கொள்கிறது. அதில் முக்கியமானது குழந்தைப் பருவ அனுபவம்.

மோரி தன் குழந்தைப் பருவத்தில் தன் ஊருக்குப் பக்கத்தில் இருந்த ட்ரில்போர்ட் என்ற ஒரு கிராமத்திற்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு ஒரு பாலம் கட்டப் பட்டுக்கொண்டிருந்தது. அதன் மேற்பார்வையாளராக அவர் தந்தையார் இருந்தார். மோரி கண்ட கனவில் அவர் மறுபடியும் குழந்தையாகி ட்ரில்போர்ட் தெருக்களில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாதிரியான சீருடை அணிந்த ஒருவர் வந்து தன் பெயர் ஸி எனவும் தான் அந்த பாலத்தின் வாட்ச்மேன் எனவும் கூறினார்.

இந்த கனவை மோரி நம்பவில்லை. ஆனால் தன் வீட்டு வேலைக்கார கிழவியிடம் கேட்டபோது அது உண்மைதான் என்பது உறுதியானது.

என்னுடைய கனவொன்றில் ஒரு டாக்டர் வந்தார். அவருடைய முகம் என் பள்ளிக்கூடத்து வாத்தியார் ஒருவரின் முகத்தைப்போல இருந்தது. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. என் கனவை அம்மாவிடம் சொல்லிக் கேட்டபோது, ஆமாம் அப்படி ஒரு டாக்டர் இருந்தார். அவருக்கு ஒற்றைக்கண் என்றார்கள். என் பள்ளிக்கூட வாத்தியாருக்கும் ஒற்றைக்கண்தான் ! அந்த டாக்டரை நான் பார்த்து முப்பத்தெட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அவரைப் பற்றி என் நனவு வாழ்வில் ஒருமுறைகூட எண்ணிப்பார்த்தது கிடையாது – என்று ஃப்ராய்டு கூறுகிறார்.

கனவுகளுக்கு அபார ஞாபக சக்தி உண்டென்பது மட்டுமல்ல, அவை கடந்த காலத்திலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விஷயம் நமக்கு நனவு வாழ்வில் ஆர்வமில்லாததாக, முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் அது கனவுக்கு முக்கியமானது. நம்முடைய நினைவாற்றலானது கனவில் நடந்து கொள்ளும் விதம் நினைவாற்றலைப் பற்றிய எந்த ஒரு கருத்தையும் முன்வைப்பதற்கு மிகவும் முக்கியமானது. நனவு வாழ்வில் பெறப்பட்ட எந்த அறிவையும் நாம் நிரந்தரமாக இழப்பதில்லை என்பதை இது உறுதி செய்கிறது. கனவென்பதே ஒருவிதமான ஞாபகப் படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்லுமளவிற்கு நினைவாற்றல் கனவுகளுக்கான விளக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படி நினைவுகூறும் கனவுகளைத்தான் ஹைபர்னீஸிக் ( (hypermnesic) கனவுகள் என்று சொல்வர். ஆனால் கனவுகளில் நினைவு கூறப்படுவதெல்லாம் பகுதிகள்தான். இதை ஒரு விதியாகவே வைத்துக்கொள்ளலாம். ரொம்ப விதிவிலக்காக ஒருசில கனவுகளில் மட்டும்தான் கனவு வாழ்வின் அனுபவங்கள் முழுமையாக அப்படியே நினைவுகூறப்படுகின்றன.

கனவு ஏன் மறந்துபோகிறது?

விழித்ததும் கனவு கரைந்து போகிறதென்பது காலங்கண்ட உண்மை. என்றாலும் அவைகளை நினைவுகொள்வது சாத்தியம்தான். இப்படி கனவுகளை நினைவுகொள்ள முயலும்போது, கனவின் ஒரு பகுதிதான் ஞாபகம் வந்ததாகவும் பெரும்பகுதி மறந்துவிட்டதாகவும் தோன்றும். விழித்தவுடன் இருக்கின்ற நினைவும் நேரம் செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்லும். ஒரு கனவைக் கண்டு விழித்தவுடன் நினைத்துப் பார்ப்பதற்கும், ஆசுவாசமாக சாயங்காலம் எண்ணிப்பார்ப்பதற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. நேரம் ஆகஆக, கனவின் நிறைய வி;கள் மறந்துவிட்டிருக்கும். கனவு கண்டோமா என்பதே சந்தேகத்திற்கு உரியதாகிவிடும். பொதுவாக அனைவருக்கும் இந்த அனுபவம்தான்.

ஆனால் விதிவிலக்காக சில கனவுகள் அப்படியே ஞாபகமிருக்கும். இருபத்தைந்து முப்பது வரு;களுக்கு முன் தன் நோயாளிகள் கண்ட கனவுகளைக்கூட அவர்கள் அட்சரம் பிசகாமல் ஞாபகம் வைத்திருக்க, அவற்றை தான் ஆராய்ச்சி செய்ய முடிந்ததாக ஃப்ராய்டு கூறுகிறார்.முப்பத்தேழு வரு;களுக்கு முன்பு நான் கண்ட கனவு ஒன்று இன்னும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

விழிப்பு நிலையில் நாம் ஏன் பல விஷயங்களை மறந்துபோகிறோம்? அதே காரணங்களால்தான் கனவுகளையும் மறந்து போகிறோம். நனவில் நம் மனதில் தங்கக்கூடிய அளவுக்கு வலுவாக இல்லாத பலவீனமான விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். கனவுக் காட்சிகளும் அப்படித்தான். வலுவான காட்சிகள் நினைவிலும் பலவீனமானவை மறந்தும் போகின்றன. ஆனால் பலவீனம் காரணமாகத்தான் கனவுகள் மறந்து போகின்றன என்று அடித்துக் கூறிவிடவும் முடியாது.

ஏனெனில், பல சமயங்களில், கனவுகளில் வந்த மிகத்தெளிவான படிமங்கள், விஷயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் நிழலாட்டம் பலகீனமான பல விஷயங்கள் நினைவில் உள்ளன.

மேலும், திரும்பத் திரும்ப ஒரு விஷயம் நடந்தால், அது நமது நினைவில் பதியும். இது நனவு வாழ்வில்தான் சாத்தியம். ஆனால் கனவுக்காட்சிகளோ மிகவும் பிரத்தியேகமானவை. வீடியோ படம்போல ரீவைண்டு பண்ணி பார்க்க முடியாது. ஒரு முறைதான். இதன் காரணமாகவும் கனவுகள் மறந்து போகின்றன.

கனவுகள் மறந்து போவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவற்றின் ஒழுங்கின்மை. காட்சிகள், கருத்துக்கள், உணர்ச்சிகள், வசனங்கள் எல்லாம் திரைப்படம்போல ஒன்றோடொன்று கோர்க்கப் பட்டு, வரிசைக்கிரமமாக இருந்தால் அதன் ஒழுங்கும் அர்த்தமும் நினைவுகொள்வதற்கு ஏதுவாக இருக்கும். ஒரேயொரு கவிதை வரியைக்கூட கண்டபடி சொற்களைப் பிரித்து மாற்றிப் போட்டுவிட்டால் மனசில் நிற்காது. நினைவில் தங்குவதன் காரணமே ஒழுங்கு, இசைவு, வரிசை, அர்த்தம் ஆகியவைதான். ஆனால் கனவோ எந்த ஒழுங்குமற்றது. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதது. அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது.எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன.

விழித்த மறு கணமே அது துண்டு துண்டாகச் சிதறிவிடுகிறது. ஆனால் ரொம்ப அரிதாக முழுவதுமாக நினைவு கொள்ளப்பட்ட கனவுகள் அதி வினோதமானவை, ஒழுங்கற்றவை என்று ரேட்ஸ்டாக் கூறுவது இதுகாறும் சொன்னதை உடைப்பதாக உள்ளது.

சூரியன் உதிக்கும்போது நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்துவிடுவதுபோல, விடிந்துவிட்ட(விழித்துவிட்ட) நாளுக்கான உணர்வுகள் உடலையும் மனதையும் வந்தடையும்போது, கனவுகள் தங்கள் பிடியை விலக்கிக் கொள்கின்றன. இதன் காரணமாகவும் அவை மறந்து போகின்றன.

கனவுகளைப் பற்றி பெரும்பாலோர் எந்தவித அக்கறையும் கொள்வதில்லை. அக்கறையின்மை, ஆர்வமின்மை காரணமாகவும் கனவு மறந்து போகிறது. கனவுகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனுக்கு அப்படிச் செய்யாதவனைவிட அதிகமான கனவுகளும் வரும். கனவுகள் அதிகமான அளவில் நினைவிலும் இருக்கும். கனவுகளை நினைவில் வைத்திருப்பதில் உள்ள சிரமங்களும் கனவுகளை ஆராய்கின்ற ஒருவனுக்கு இருக்காது.

கனவுகள் ஏன் மறந்து போகின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்தவர்கள் மேலும் சில முடிவுகளுக்கு வந்தார்கள்.

காலையில் மறந்து போன ஒரு கனவு, அந்த நாளின் பிற்பகுதியில் நினைவுக்கு வரலாம். அல்லது அன்று நடக்கும் ஒரு அகஸ்மாத்தான நிகழ்ச்சி மறந்துபோன கனவை அல்லது அதன் முக்கிய குறிப்புகளை டக்கென்று நினைவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் கனவின் பெரும்பகுதி மறந்துவிட்டிருக்கும் பட்சம், நினைவு கொள்ளப் பட்ட பகுதிகள் எந்த அளவுக்கு கனவுக்கு உண்மையானவை என்றும் சொல்ல முடியாது. நம்முடைய ஞாபக சக்தி கண்டதை காணாததாகவும் காணாததை கண்டதாகவும் சொல்லி விடலாம்.

எனவே கனவுகளை நினைவு கூறும்போது நம்முடைய ஞாபக சக்தி கனவுகளை சிதைத்து விடுகின்ற வாய்ப்பு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இவைகள் கனவுகளை நினைவுகொள்வதில் உள்ள பிரச்சனைகள்.

கனவுகளின் உளவியல் ரீதியான தன்மைகள்

நமது மன இயக்கங்களின் விளைவாகத்தான் கனவுகள் உண்டாகின்றன என்பதுதான் கனவுகளைப் பற்றிய நமது ஆராய்ச்சியின் துவக்கம். எனினும் உருவாகிவிட்ட அதாவது தயாரிக்கப்பட்டுவிட்ட ஒரு கனவானது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதன் தனித்த, அற்புதமான இயக்கத்தில் அதற்கு பிரம்மா நாம்தான், நம் மனம்தான் என்பதையே நாம் மறந்து விடுகிறோம். நான் கனவு காண்கிறேன் என்று சொல்லாமல் ஒரு கனவு வந்தது என்று ஒரு தனித்த அந்தஸ்தை அதற்கு கொடுக்கத் தயங்குவதில்லை நாம்.

கனவுகள் பெரும்பாலும் கண்ணால் காணக்கூடிய காட்சிகள் அல்லது படிமங்கள் (எளைரயட iஅயபநள) மூலமாகவே சிந்திக்கின்றன. தேவைக்கேற்றபடி சப்த படிமங்களையும் மற்ற புலன் சார்ந்த படிமங்களையும் உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கின்றன. விழிப்பு நிலையில் நாம் கருத்துக் கோள்களை சிந்திப்பதுபோல, கனவுகள் காட்சி ரூபத்தில் சிந்திக்கின்றன. கனவு என்பதே காட்சி வடிவ சிந்தனை என்று சொல்லலாம்.

இவ்வகை காட்சிகள் மூலமாக, கனவுகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை உருவாக்குகின்றன. அந்த காட்சிகள் ஏதோ ஒன்றை நிகழ்த்துகின்றன. எனவே கனவில் நாம் சிந்திப்பதில்லை. அனுபவிக்கிறோம். அதாவது உண்மையிலேயே நடப்பதாக நம்புகிறோம். விழித்த பிறகுதான், நாம் கனவு கண்டுகொண்டிருந்தோம் அல்லது வித்தியாசமானதொரு முறையில் சிந்தித்துக் கொண்டிருந்தோம், உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்பது புரியும். பகல் கனவுக்கும் (day-dreaming) உண்மையான கனவுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான். பகல் கனவென்பது வெறும் கற்பனை என்பது நமக்கே தெரியும்.

புற உலகத் தொல்லைகளிலிருந்து நமது மனமும் நாமும் விடுபட்டிருக்கும்போதுதான் தூக்கமும் கனவும் சாத்தியமாகிறது. ஆனால் தொல்லை என்று சொல்லும்போது அது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப் படுகிறது. ஒருவனுடைய தொல்லை இன்னொருவனுக்கு தாலாட்டாகும் வாய்ப்பும் உண்டு. விளக்கு எரியும்போதே தூங்கிப் பழகியவனுக்கு இருட்டில் தூக்கம் வராது.

தூங்கும்போது மனது புற உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. ஆனால் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப் படுவதில்லை. தூங்கும்போது கேட்கவோ உணரவோ முடியாதெனில் தூங்குபவனை எழுப்பவே முடியாதே !

புற உலகத் தூண்டுதல்களின் வலிமையினால் மட்டும் தூங்கும் ஒருவன் எழுந்துவிடுவதில்லை. அவனை எழுப்ப உளவியல் ரீதியான, மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு சூழல் தேவைப்படுகிறது. தூங்கும் ஒருவனை ஏதோ ஒரு வார்த்தையைச் சொல்லி எழுப்ப முடியாது. ஆனால் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் எழுந்து விடுவான். சிம்ரன், ஜோதிகா என்று சொன்னாலும் எழலாம். ஏனெனில் அவர்களும் அவன் மனதோடு மிகவும் சம்பந்தப்பட்டவர்கள்!

எனவே தூங்குகின்றவனுடைய மனமானது புற உலகிலிருந்து அவனை வந்தடையும் தூண்டுதல்களுக்கிடையேயான வித்தியாசத்தை உணர்கிறது. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட புற உணர்வுத் தூண்டுதல் சூழ்நிலையின் இருப்பும் இல்லாமையும்கூட அவனது தூக்கத்தைக் கலைக்க வல்லதாயுள்ளது. அதனால்தான் ஆலையின் சப்தத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவன் கரண்ட் போனால் விழித்துக் கொள்கிறான். இருட்டில் தூங்கிப் பழகியவன் திடீரென்று ஸ்விட்ச் போட்டால் (ஒளி வந்தால்) விழித்துக் கொள்கிறான். தூக்கம் கலையாத சூழ்நிலைகளே கனவுகளுக்கு ஏற்றவை என்பதை சொல்லத் தேவையில்லை.

கனவுகள், அதன் காட்சிகள் எல்லாம் ஒன்றோடென்று தொடர்பில்லாதவையாக உள்ளன. முரண்பாடுகளை அவைகள் எளிதாக ஏற்றுக் கொள்கின்றன. எந்த எதிர்ப்புமின்றி. நடக்க முடியாதவைகளை அவைகள் இயற்கையென ஏற்றுக்கொள்கின்றன. தர்க்க ரீதியான அறிவுக்கு அவை எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கனவுகளில் பேசுவதைப் போலவோ நடப்பதைப்போலவோ ஒருவன் நிஜ வாழ்வில் செய்ய முயன்றால் அவன் பைத்தியமென கணிக்கப் படுவான்.

ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தன்மையானது கனவுகளுக்கு அடிப்படையானது. அதாவது ஒரு மூளையுள்ள மனிதனின் மன இயக்கங்கள் எல்லாம் ஒரு முட்டாளுடையதாக மாறிப்போனால் உள்ள நிலைமைதான் கனவினுடையது. மூன்றையும் மூன்றையும் பெருக்கினால் இருபதாகும். நாய் கவிதை பாடும். வருடங்கள் நிமிஷங்களாகும். கனவில் எல்லாம் நடக்கும். ஆச்சர்யங்களின்றி. அதுதான் இயற்கை என்பதைப் போல்.

கனவில் ஒழுக்க உணர்வு

கனவுகள் மனிதனின் நல்லது கெட்டது பற்றிய பிரக்ஞையைக் கொண்டுள்ளனவா என்ற கேள்விக்கு உளவியலாளர்கள் ஆம் என்றும் இல்லை என்றும் பதில் தந்துள்ளனர்.

நனவில் நாம் இருப்பதைவிட நல்லவனாக நாம் கனவில் மாறுவதில்லை. மாறாக, நம் மனசாட்சி கனவில் தூங்கிவிடுகிறது. எந்தவித விருப்பு வெறுப்போ வருத்தமோ இன்றி நாம் கனவில் திருடலாம், வன்முறை நிகழ்த்தலாம், கொலைகூட செய்யலாம் என்று ஜெஸ்ஸன் கூறுகிறார்.

வோல்கெல்ட் (Volkelt) கூறுகிறார் : பால் உறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கனவு காண்பவன் கட்டவிழ்த்தது போல் உள்ளான். எந்தவித வெட்கமும் அடைவதில்லை. தான் மட்டுமல்லாது, தான் நனவு வாழ்வில் மிகவும் மதிக்கும் சிலரோடு விரும்பத் தகாத காரியங்களில் மிகவும் இயற்கையாக ஈடுபட்டிருப்பதை அவன் காண்பான்.

இதற்கு நேர் மாறாகவும் சிலர் கருத்து வைக்கின்றனர். நிஜ வாழ்வில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அதற்கு மாறாக நாம் கனவினல் பேசுவதோ நடந்துகொள்வதோ இல்லை என்கிறார் Schopenhauer. ஒரு நல்லவன் கனவிலும் நல்லவனாகவே உள்ளான். கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற கெடுதிகளிலிருந்து அவன் தன்னை கனவிலும் காத்துக்கொள்கிறான். ஆனால் கெட்டவனோ கனவிலும் அப்படியே உள்ளான் என்கிறார் ஹாஃப்னர்((Haffner).

இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள் ஒழுக்கக் குறைவான கனவுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட கனவுகள் ஒரு நல்லவனுக்கு வந்தாலும் அதற்கு அவர்கள் அவனை பொறுப்பாக்குவதில்லை. எப்படி ஒரு அபத்தமான கனவு வந்தால் அதை வைத்து கனவு கண்டவனின் அறிவில் கோளாறு உள்ளது என்று முடிவு செய்ய முடியாதோ அதே போல ஒழுக்கக் குறைவான கனவுகளுக்கு அதைக்கண்டவனும் பொறுப்பாக முடியாது என்பது இவர்களின் வாதம். ஆனால் இதில் விஷேம் என்னவென்றால், எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான கனவுகள் வரத்தான் செய்கின்றன என்பது ஒரு அழகான உண்மை !

ஷோல்ஸ் கூறுகிறார் : உண்மை கனவில் இருக்கிறது. வெளி உலகிற்கு நாம் எந்த முகம் காட்டிக் கொண்டிருந்தாலும் கனவில் நம் உண்மையான முகத்தை நாம் கண்டுகொள்வோம். உண்மையில் கண்ணியத்திற்குரிய ஒரு மனிதன் கனவில் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ள மாட்டான்.

இந்த பிரச்சனை பற்றி ஆழமாக ஆராய்ந்த ஹில்டெப்ரான்கூட மனிதன் தன் கனவில் புரியும் (தகாத) செயல்களுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது. ஆனால் பொறுப்பு ஏற்காமல் இருக்கவும் முடியாது என்கிறார். மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல. மேலும், நம்முடைய நோக்கத்தின்மீது யாராவது மாசு கற்பிக்க முற்படும்போது, கனவிலும் நான் அப்படி நினைத்ததில்லை என்று நாம் கூறுவதுண்டு. நம்முடைய விழிப்பு நிலையில் நம் பிரக்ஞையில் நெருப்பில்லாமல் கனவில் புகையாது. ஏனெனில் கனவு எதையும் சுதந்திரமாக கண்டுபிடிப்பதில்லை. ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் அது வலை பின்னுகிறது.

எனவே கனவானது நம்முடைய விழிப்பு நிலையில் அறிய வழியில்லாத நம் மனதின் ஆழங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது. அது மனிதனுடைய உண்மையான குணாம்சத்தைக் காட்டுகிறது. முழுமையாக அல்ல என்றாலும். இதுவே இப்படிப் பட்ட கனவுகளின் முக்கியத்துவம் ஆகும் என்பதாகக் கூறுகிறார்.

ஸ்ட்ரிக்கர் சொல்வதோடு இப்பகுதியை முடிக்கலாம் : கனவுகள் முழுமையாக மாயத்தோற்றங்களை மட்டும் கொண்டிருப்பதில்லை. உதாரணமாக ஒருவன் கனவில் கள்ளர்களைக் கண்டு பயப்படுவதாக வைத்துக் கொண்டால், அக்கள்ளர்கள் பொய் என்றாலும் அந்த பயம் உண்மை.

கனவுகளும் மன நோய்களும்

கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்து கனவுகள் வெளிப்படுத்தும் மன நோய்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை என ஃப்ராய்ட் கருதுகிறார்.

கனவு காண்பவனின் நினைவும் மன நோயாளியின் நிலையும் ஒன்றே என்று உளவியலாளர் நினைக்கின்றனர். கனவு மன நோயின் ஆரம்பத்தை அறிவிப்பதாகக்கூட இருக்கலாம். ஒரே கனவிலும் மன நோய் தன்னை வெளிப்படுத்தலாம். அல்லது படிப்படியாக பல கனவுகள் மூலம் தெரியவரலாம். பைத்தியம் என்பவன் விழிப்பு நிலையிலேயே நடந்துகொண்டே கனவு காண்பவன் என்கிறார் ஜெர்மன் தத்துவ ஞானி கான்ட். பைத்தியம் என்பது விழிப்பு நிலையில் ஏற்படும் கனவு என்கிறார் க்ராஸ்(Krauss). கனவு ஒரு குறுகிய கால மனநோய். மனநோய் என்பது ஒரு நீண்ட கனவு என்கிறார் N.ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் நடக்கின்ற அனைத்தையும் நாம் கனவில் அனுபவிக்கிறோம் என்கிறார் வன்ட்.

மனநோயாளிக்கும் கனவு காண்பவனுக்குமிடையே பல ஒற்றுமைகளை தனது ஆராய்ச்சியில் காண்கிறார் ராட்ஸ்டாக். இந்த ஆராய்ச்சியின் விளைவு கனவையும் மனநோயையும் பற்றிய ஒரு முக்கிய கோட்பாடாக விரிகிறது. உதாரணமாக வறுமையினால் மனநோய்க்கு ஆளான ஒருவன் பெரிய பணக்காரனைப்போல பாவனைகள் செய்வதையும், தன் அன்பான குழந்தையை இழந்ததால் பைத்தியம் பிடித்த ஒருத்தி, அந்த நிலையில் தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவிப்பதையும் காணலாம். இதே போன்றதே நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவன் தான் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக இருப்பதாக கனவு காண்பதும் ஏழை ஒருவன் தன்னை பணக்காரனாகக் கனவு காண்பதும்.

அத்தியாயம் – 3

கனவுகளை விளக்கும் முறை

கனவுகள் யாவையும் விளக்க முடியும். அதாவது கனவுகளை விளக்குவது என்பதன் பொருள் என்னவென்றால் கனவுக்கு ஒரு அர்த்தம் தருதலாகும். ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தமுண்டு. அது எவ்வளவு ரகசியமானதானாலும் சரி.

இரண்டு முறைகள்

கனவுகளை விளக்குவதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. முதல் முறை, ஒரு கனவை அப்படியே முழுசாக எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வேறொன்றை, வேறொரு அர்த்தத்தை அதனிடத்தில் வைப்பது. இது குறியீட்டு விளக்க முறை (Symbolic Interpretation). பைபிளில் ஃபிர்அவ்னின் ((Pharaoh) கனவை யூஸூஃப் (Joseph) விளக்குவது இந்த வகையைச் சேர்ந்தது. ஏழு கொழுத்த பசுக்கள் ஏழு நோஞ்சான் பசுக்களை சாப்பிட்டுவிடுவதாக அவன் கனவு காண்கிறான். எகிப்தில் ஏழு வருடம் பஞ்சம் வரும் என்றும் அது, முந்தைய ஏழு வருடங்களின் செழிப்பையும் வளத்தையும் காலி செய்துவிடும் என்றும் யூஸூஃப் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். இங்கே பசுக்கள் பஞ்சத்திற்கும் செழிப்புக்கும் குறியீடு.

இறந்த தனது தந்தையை எரியூட்டுவதற்கு முந்திய நாளிரவு ஃப்ராய்ட் ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் அல்லது போஸ்டரைப் பார்க்கிறார். அது நீங்கள் ஒரு கண்ணை மூடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் என்று சொல்கிறது.

தந்தையின் ஈமச்சடங்குகளை மிகவும் எளிமையாகச் செய்யவே ஃப்ராய்ட் விரும்புகிறார். தந்தையின் விருப்பத்திற்கிணங்க. ஆனால் மற்ற உறவினர்கள் அவ்வளவு எளிமையாகச் செய்வதை விரும்பவில்லை. ஈமச்சடங்கிற்கு வருபவர்கள் முன்னிலையில் அந்தஸ்து குறைவாக இருக்கக்கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக கனவு வருகிறது. ஒரு கண்ணை மூடினால் கண்ணடிப்பதுபோல் இருக்கும். அதாவது உறவினர்கள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கனவு சொல்வதாக ஃப்ராய்ட் எடுத்துக்கொள்கிறார். இதுவும் குறியீட்டு விளக்கம்தான்.

கனவுகள் வருங்காலத்தைச் சொல்பவையாக உள்ளன என்ற கருத்தே பைபிள் காலத்திலிருந்து, தீர்க்கதரிசிகளின் காலத்திலிருந்து பெறப்பட்ட எச்சம்தான் என்று ஃப்ராய்ட் கருதுகிறார். இந்த குறியீட்டு விளக்கங்கள் யாவும் வருங்காலத்தைச் சுட்டுபவையாகவே பெரும்பாலும் உள்ளன என்றாலும் இப்படித்தான் குறியீட்டு விளக்கம் தரவேண்டும் என்பதற்கான அளவுகோல்களோ முறைகளோ எதுவும் கிடையாது.

எனவே இவ்வகை விளக்கங்களில் வெற்றி என்பது விளக்குபவரின் தகுதியைச் சார்ந்தே இருந்தது. இப்படி விளக்கக் கூடியவரும் அசாதாரணமானவராகவும் சிறப்புத் தகுதிகள் உள்ளவராகவும், அருள்பாலிக்கப்பட்ட தெய்வீகமானவராகவும் கருதப்பட்டார். ஆனால் இந்தவகை விளக்கங்கள் புரிந்து கொள்ள கடினமான, குழப்பமான கனவுகளை விளக்கப் போதுமானதாக இல்லை.

இரண்டாவது முறையை அவிழ்க்கும் முறை ((Decoding Method) என்று சொல்லலாம். இந்த முறையானது கனவை ஒரு சங்கேத பாஷையாக எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கனவை விளக்க முற்படுகிறது. இது கனவை மட்டும் பார்க்காமல், கனவு காண்பவருடைய குணம் மற்றும் அவரது சூழ்நிலை, வாழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

எனவே இந்த முறைப்படி, ஒரே கனவு நாலு பேருக்கு நாலு விதமாக அர்த்தப்படல் சாத்தியமாகிறது. கனவை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளாமல் அதன் பகுதிகளை தனித்தனியே இந்த முறை அலசுகிறது. கனவுகள் குழப்பமானதாகவும் புரிந்து கொள்ள கடினமானதாகவும் இருந்ததுதான் இந்த அவிழ்க்கும் முறை வரக்காரணமாக அமைந்தது.

ஆனால் இந்த இரண்டு முறைகளுமே விஞ்ஞானத்தின் வரம்புகளுக்குள் வராதவை. முதல் முறையைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இரண்டாவது முறையோ ஒரு அர்த்த அகராதியை (key dream-book) நம்பியுள்ளது.

ஆனால் ஒரு ஆச்சர்யம் என்னவெனில், சில கனவுகளை விளக்குவதற்கு இன்றைய விஞ்ஞானத்தால் முடியவில்லை. ஆனால் அந்தக் காலத்திலிருந்து போற்றிப் பாதுகாக்கப் பட்ட நம்பிக்கைகளே பெருமளவில் கனவுகளை விளக்க உதவுகின்றன என்பதை என்னுடைய அனுபவத்தில் அறிந்து கொண்டேன். எனினும் கனவுகளுக்கு அர்த்தம் உண்டு என்றும் அவைகளை விளக்க ஒரு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை சாத்தியம்தான் என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.

ஃப்ராய்டின் கனவு விளக்க அலசல் முறை

அடிப்படையில் ஃப்ராய்ட் ஒரு மனநோய் மருத்துவர். குறிப்பாக ஹிஸ்டீரியா எனப்படும் மனநோய்க்கு ஆளானவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலே அவர் பல வருடங்கள்; செலவிட்டார். அவருடைய அணுகுமுறைகளில் அவர் பெரும்பாலும் ஜோஸப் பிரவரையே பின்பற்றி வந்தார். மன அலசல் என்ற ஒரு முறையைக் கண்டுபிடித்ததில்தான் அவர் பிரவரிடமிருந்து தனித்துவிடுகிறார். இந்த ஹிஸ்டீரியா நோயாளிகளின் பிரச்சனைகளும் அதற்கான ஃப்ராய்டின் மனஅலசல் முறைத் தீர்வுகளும்தான் அவரைத் தன் நோயாளிகளின் கனவுகளையும் கிட்டத்தட்ட அதே முறையில் விளக்குவதில் கொண்டுபோய் விட்டது.

கனவானது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றாகவும் அதே சமயம் நோய்;க்கான தீர்வைச் சுட்டும் வழியாகவும் உள்ளது என்று அவர் கண்டார். அதை விளக்குவதற்கு நோயாளிகள் மருத்துவரோடு ஒத்துழைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக இரண்டு வகைகளில் அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

ஒன்று : மன இயக்கங்களை அவர்கள் முன்னைவிட உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இரண்டு : மனதில் வருகின்ற எண்ணங்களையெல்லாம் சின்னது பெரியது, முக்கியமானது முக்கியமற்றது, நல்லது கெட்டது, நியாயமானது அநியாயமானது, அழகானது அசிங்கமானது போன்ற பாகுபாடுகள் எதுவும் செய்யாமல், தீர்ப்பு எதுவும் வழங்காமல், சாதாரணமாக நமது அறிவு செய்கின்ற விமர்சன வேலைகளையெல்லாம் செய்யாமல் வருவதையெல்லாம் அப்படியே மறைக்காமல், ஒன்று விடாமல் டாக்டரிடம் கொட்டிவிட வேண்டும்.

இது மிக முக்கியமானது. இந்த மனநிலைக்குச் சாதகமான உடல் சூழ்நிலையையும், (உதாரணமாக தளர்ச்சியாக சாய்ந்து கொள்வது, கண்களை மூடிக்கொள்வது), ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ரீதியில் அவர்கள் தங்கள் கனவுகளையும் சொல்வார்களேயானால் அவைகளை பூரணமாக விளக்கி விடுதல் சாத்தியம் என்கிறார் ஃப்ராய்ட்.

கனவுகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது முதல் படி. நீண்ட ஒரு கனவின் ஒரு பகுதியாக ஒரு சப்தம் கேட்பதாக வைத்துக்கொண்டால் அந்த சப்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நோயாளியை டாக்டர் கேட்பார். நோயாளி சுதந்திரமாக சொல்வதை (free association) வைத்து கனவை ஃப்ராய்ட் புரிந்து கொள்வார்.

இந்த முறை பாரம்பரியமாக கையாளப்பட்டு வந்த குறியீட்டு முறைக்கு முற்றிலும் மாற்றமானது. ஆனால் அவிழ்க்கும் முறைக்கு மிகவும் நெருக்கமானது. எனினும் அதனினின்றும் வித்தியாசமானது. ஏனெனில் முடிந்த முடிபாக உள்ள எந்த ஒரு கனவு அகராதியையும் ஃப்ராய்டின் முறை நம்பியிருக்கவில்லை.

இந்த முறையில் ஒரே கனவு பத்து பேருக்கு பத்துமாதிரியான அர்த்தங்கள் கொடுக்கும் சாத்தியமுண்டு. இந்த மாதிரி படிப்படியாக அலசிப் பார்க்காமல் கனவின் அர்த்தங்களை தன்னால் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் ஃப்ராய்ட். இந்த ரீதியில் மனநோயாளியின் கனவில் தொடங்கி, சாதாரண ஆரோக்கியமானவர்களின் கனவிலிருந்து தன்னுடைய மற்றும் தன் குழந்தைகளின் கனவுகள்வரை இந்த அலசல் முறையைப் பயன்படுத்தி விளக்குகிறார்.

இர்மா கனவு

தன்னுடைய கனவு ஒன்றையே முதலில் உதாரணமாக தந்து விளக்குகிறார் ஃப்ராய்ட். இர்மா என்ற ஒரு இளம் விதவை ஹிஸ்டீரியா நோயாளிக்கு அவர் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருடைய சிகிச்சை முழு வெற்றி அளிக்கவில்லை. இர்மாவின் மனக்கவலைகள் மற்றும் மன இறுக்கம் மறைந்ததே தவிர, உடல் உபாதைகள் குறைந்தபாடில்லை. ஃப்ராய்ட் சொன்ன ஒரு தீர்வையும் இர்மாவின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறையின்போது சிகிச்சை தற்காலிகமாக தடைபட்டிருந்தது.

ஒருநாள் இர்மாவின் கிராமத்து வீட்டில் தங்கியிருந்த ஓட்டோ என்ற இன்னொரு மருத்துவ நண்பரை ஃப்ராய்ட் சந்திக்கிறார். இர்மா பற்றி விசாரிக்கிறார். பரவாயில்லை ஆனால் இன்னும் சரியாகவில்லை என்று ஓட்டோ சொல்கிறார். அந்த பதில் ஃப்ராய்டை எரிச்சல் படுத்துகிறது. அன்று இரவு அவர் ஒரு கனவு காண்கிறார்.

கனவில் ஒரு வீட்டின் பெரிய ஹாலில் விருந்துக்காக பலர் கூடியுள்ளனர். அங்கே இர்மா வருகிறாள். உடனே ஃப்ராய்ட் அவளை தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கிறார். அவள் தனது தொண்டை, வயிறு மற்றும் அடிவயிறு ஆகியவற்றில் தாங்கமுடியாத வலி இருப்பதாகச் சொல்கிறாள். அவர் வாயைத்திறந்து காட்டச் சொல்கிறார். அவள் தயங்குகிறாள். பின்னர் திறந்து காட்டும்போதும் ஆரம்பத்தில் சரியாகத் திறக்கவில்லை. நண்பர்-மருத்துவர் ஓட்டோவும் அங்கிருக்கிறார். ஓட்டோ அவளுக்கு ஒரு இன்ஜெக்; வேறு போட்டுள்ளார். இப்படிச்செல்கிறது கனவு.

இந்த கனவை வார்த்தை வார்த்தையாக, காட்சி காட்சியாக அலசி புரிந்து கொள்ள முயல்கிறார் ஃப்ராய்ட். இர்மா நிஜ வாழ்வில் மனம் திறந்து அவரிடம் எதையும் சரியாகச் சொல்லவில்லை என்பதே அவள் கனவில் வாயைத் திறக்கத் தயங்குவதும் சரியாகத் திறக்காததும் குறிக்கிறது என்றும் மேலும் அவளுடைய வேதனைகளுக்கு தான் காரணமல்ல அந்த ஓட்டோதான் காரணமாக இருக்கவேண்டும் என்ற தனது விருப்பத்தை கனவு நிறைவேற்றுவதாகவும் கூறி முடிக்கிறார்.

கனவின் முக்கியமான தன்மையான விருப்ப நிறைவேற்றம் என்பதை அவர் இக்கனவின் விளக்கத்தின் மூலம் ஸ்தாபிக்க முயலுகிறார்.

அத்தியாயம் – 4

கனவென்பது விருப்ப நிறைவேற்றம்

(A Dream is the Fulfilment of a Wish)
ஒரு இசைக்கருவியின் மீது எதிர்பாராமல் நடந்த தாக்குதலால் உண்டாகும் வரையறுக்கப் படாத அபஸ்வரங்கள் அல்ல கனவுகள். மாறாக, அவைகள் முழுக்க முழுக்க அர்த்தங்கள் பொதிந்தவை. அவைகள் நமது ஆசைகளின் நிறைவேற்றங்கள். நமது கனவுகள் நனவாவது முதலில் கனவுகளில்தான் !

கனவுகள் நமது ஆசைகளை நிறைவேற்றுகின்றன என்று சொல்லிவிட்டோம். ஆனால் இது எல்லாக் கனவுகளுக்கும் உள்ள பொதுவான குணம்தானா அல்லது சில குறிப்பிட்ட கனவுகளுக்கு மட்டும்தானா என்று பார்ப்பது அவசியம். ஒரு கனவு ஆசையை நிறைவேற்றுவதாகவும், இன்னொன்று பயத்தை நிறைவேற்றுவதாகவும், இன்னொன்று சிந்தனையை, இன்னொன்று வெறும் ஞாபகத்தைக் காட்டுவதாக – இப்படி இருக்கலாமல்லவா?

ஆனால் இந்த குழப்பங்கள் எதுவும் தேவையின்றி, விருப்ப நிறைவேற்றக் கனவுகள் யாவும் மிகவும் வெளிப்படையாக அமைகின்றன. இதை நிரூபிப்பது மிகவும் எளிது. ஆனால் இத்தகைய கனவுகளின் ஒளிவு மறைவற்ற இந்த மொழி எப்படி நம் முன்னோர்களுக்கு புரியாமல் போனது என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

உதாரணமாக, ஆலிவ் அல்லது அதையொத்த அதிகமாக உப்பிடப்பட்ட உணவை நான் மாலையில் சாப்பிட்டால், இரவில் நிச்சயமாக தாகம் எடுக்கும். அந்த தாகம் என் தூக்கத்தைக் கலைத்து எழுப்பிவிடும். ஆனால் விழிப்பதற்கு முன் கனவு வரும். இப்படி வரும் கனவுகளிலெல்லாம் ஒரே காட்சிதான். நான் எதையாவது குடித்துக் கொண்டிருப்பேன். பிறகு விழித்துவிடுவேன். உண்மையிலேயே எதையாவது குடித்து என் தாகத்தைத் தணித்துக்கொள்ள. குடிக்க வேண்டுமென்ற விருப்பத்தை தாகம் ஏற்படுத்துகிறது. கனவு அந்த விருப்பத்தை நிறைவேற்றுகிறது. ஃப்ராய்டின் விதையில் அடிபட்டபோது கண்ட குதிரைச் சவாரி கனவையும் எடுத்துக்கொள்ளலாம்.

வசதியான கனவுகள்

விழிப்பு ஏற்படுத்தாமல் தூக்கம் தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிற கனவுகள் எல்லாமே ஒருவகையில் வசதியான கனவுகள்தான். கனவுகள் தூக்கத்தைக் கெடுப்பதில்லை. அவை தூக்கத்தின் காவல் தெய்வங்கள். கனவுகள் வருவதன் முக்கியமான காரணங்களில் ஒன்றே நன்றாக தூங்கவேண்டும் என்பதுதான். ஒவ்வொரு வெற்றிகரமான கனவும் இந்த விருப்பத்தை நிறைவேற்றுகிறது.

பொதுவாக நான் நன்றாக உறங்குபவன். சின்னச் சின்ன தேவைகளுக்காகவெல்லாம் லேசில் எழமாட்டேன். என் தாகத்தைத் தணிக்க என் கனவே போதுமானதாக இருந்திருந்தால் நான் விழித்திருக்கவே மாட்டேன். அப்படிப்பட்ட கனவுகளை நான் வசதியான கனவுகள் ((dreams of convenience) என்று அழைக்கிறேன்.

வசதியான கனவுகளில், செயலின் இடத்தை கனவே எடுத்துக் கொள்கிறது. பல நேரங்களில் நமக்கு இத்தகைய கனவுகளே வருகின்றன. என் மருத்துவ நண்பன் ஓட்டோவைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை நிறைவேற்ற அந்த இர்மா கனவே போதுமானதாக இருந்ததைப் போல, தண்ணீர் தேவைப்பட்ட கனவு இல்லாதது என் துரதிருஷ்டமே. இர்மா கனவு ஒரு வசதியான கனவு. என் இளமைக் காலங்களில் இத்தகைய கனவுகள் நிறைய வரும்.

என்னைப் போலவே தூக்கத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு மருத்துவ மாணவன் ஒரு கனவைச் சொன்னான். அவன் வீட்டுக்கார அம்மா எப்போதுமே அவனை காலையில் எழுப்பி விடுவாள். ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டுமென்று. ரொம்ப பொறுப்பாக. அன்று காலையில் அவள் வந்து அவனை சப்தம் போட்டு எழுப்பியபோது, அதற்கு பதிலாக, அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் அவன் ஆஸ்பத்திரி படுக்கை ஒன்றில் இருக்கிறான். அதில், பெப்பி, மருத்துவ மாணவன், வயது 22 என்ற போர்டும் இருந்தது. நான் ஆஸ்பத்திரியிலேயே இருப்பதால், இனிமேல் நான் அங்கே போக வேண்டியதில்லை என்று கனவிலேயே அவன் சொல்லிக் கொண்டான். எனவே திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டான்!

மாதவிடாய் கனவு

தன் மனைவிக்கு மாதவிடாய் வந்ததாக அவள் கனவு கண்டதாக ஒரு நண்பர் ஃப்ராய்டிடம் சொல்லிக்காட்டி விளக்கம் கேட்கிறார். மாதவிடாய் வராததால், வரவேண்டும் என்ற விருப்பத்தை கனவு நிறைவேற்றியிருக்கிறது. அதாவது, விடாய் வராததால் அவள் கர்ப்பமாகி இருப்பதற்கான அறிகுறிக் கனவு இது என்று ஃப்ராய்ட் விளக்குகிறார். இது ஏற்கனவே சொல்லப்பட்டதும்கூட.

பால் திட்டுக் கனவு

ஒரு குழந்தை பெற்ற ஒருத்தி தன் பனியனின் மேல்பக்கம் பால் போன்ற நிறத்தில் திட்டுத் திட்டாகத் தெரிவதாக கனவு கண்டதாக அவள் கணவன் கூற, அதுவும் கருவுற்ற அறிவிப்புதான் ஆனால் இரண்டாவது குழந்தைக்குக் கொடுப்பதற்கு பால் நிறைய சுரக்க வேண்டும் என்று அவள் விரும்புவதாக ஃப்ராய்ட் விளக்குகிறார்.

இம்மாதிரியான விருப்ப நிறைவேற்றக் கனவுகள் அடிக்கடி வரும். அதோடு அவைகள் எளிமையானதாகவும் சின்ன சின்ன கனவுகளாகவும் இருக்கும். இம்மாதிரியான கனவுகள் குழந்தைகளுக்கு அடிக்கடி வருகின்றன. அவைகள் வளர்ந்தவர்களின் கனவுகளைப் போல சுவாரஸ்யமானவைகளாக இருப்பதில்லை. ஆனாலும் குழந்தைகளின் கனவுகள் விருப்ப நிறைவேற்றக் கனவுகளுக்கு நல்ல உதாரணங்களாக அமைகின்றன.

குழந்தைகளின் கனவுகள்

ஒருமுறை ஃப்ராய்ட் தன் குழந்தைகளை ஏற்காடு கொடைக்கானல் மாதிரியான ஒரு மலைப்பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறார். சிம்னி ஹ்யூட் என்ற மலைப்பகுதியைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி சிலாகிக்கிறார். ஒவ்வொரு மலை கண்ணில் படும்போதும் இதுவா இதுவா என்று கேட்டுக்கேட்டு அவர் ஐந்து வயது மகன் நச்சரிக்கிறான். இல்லை என்ற பதில் அவனை ஏமாற்றிக் கொண்டே வருகிறது. மறுநாள் காலை சந்தோஷ முகத்துடன் அவன் வந்து சொல்கிறான் : நேற்று இரவு நாம் எல்லோரும் சிம்னி ஹ்யூட்டில் இருந்ததாக கனவு கண்டேன். ஏரியை முதன் முதலாக படகில் கடந்துசென்றபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது ஃப்ராய்டின் மூன்று வயது மகளுக்கு. ஆனால் ஒரு வருத்தம். படகுப் பயணம் ரொம்ப சீக்கிரம் முடிந்துவிட்டது. ஆனால் அன்று இரவு கனவில் அவள் படகில் நீண்ட நேரம் மனதார சவாரி செய்துகொண்டிருந்தாளாம்!

(தொடரும்)

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...