திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது: ரவி தமிழ்வாணன்

"மக்கள் தொகை எண்ணிக்கை பெருகிவிட்டது; மனிதர்கள் குறைந்து விட்டனர். இதற்கு, முக்கிய காரணம், இயந்திர வாழ்க்கையை பின்பற்றுவது தான். ஆரம்பத்தில், அச்சு துறையில், எழுத்துக்களை கையில் கோர்க்கும் முறை இருந்தது. கணினி வளர்ச்சியால், ஆயிரம் பக்கங்களை நான்கு நாட்களில் உருவாக்கும் அளவிற்கு, அச்சு துறை முன்னேற்றம் கண்டுள்ளது. புத்தகங்கள் தான், கற்பனை சக்தியை வளர்க்கும் மிகப் பெரிய கருவி.

கணினி வளர்ச்சியில், அனைத்து தகவலும் விரல் நுனியில் கிடைத்தாலும், புத்தகத்தை படித்து பெரும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. புத்தகம் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவது போய், "டிவி' நிகழ்ச்சியில் அதிகம் நேரம் செலவிடுவது அதிகரித்து உள்ளது.புத்தகங்களை தொடர்ந்து படிக்கும் பழக்கம் மூலம், "டிவி' யில் அதிகம் நேரம் செலவிடுவது குறையும்.

ஒரு சில புத்தகங்கள், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. துரோகம் செய்யாத, கைமாத்து கேட்காத, மிகச் சிறந்த தோழன் புத்தகங்கள்தான். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். புத்தக படிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக, பல வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு சென்றிருக்கிறேன். பதிப்பாளன் என்பதால், அரசை பாராட்டுவதாக எண்ண வேண்டாம். தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், வேறு எந்த நாட்டிலும் நூலகம் கிடையாது. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக, அண்ணா நூலகம் அமைந்துள்ளது.ஒரு முறையாவது, அந்த நூலகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்.

இன்று, தாய்மொழி, புத்தகம் இந்த இரண்டிலும் இருந்து, இளைஞர்கள் விலகியுள்ளனர். ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது. பெற்றோர்கள், அடுத்த தலைமுறைக்கு, புத்தகங்களை சொத்தாக கொடுக்க வேண்டும்".

நன்றி: தினமலர் 28.2.2011

சனி, 26 பிப்ரவரி, 2011

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?' - லலிதா ராம்

லலிதா ராம்
னக்கு கல்லூரியில் சங்கர் என்று ஒரு நண்பன் உண்டு. 'அரியலூர் அர்னால்ட்' என்று கல்லூரி முழுவதும் பிரபலமான அவனுக்கு, சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. முதல் வருட விடுமுறையின் போது, எழும்பூர் இரயிலடியில் காத்துக்கொண்டிருந்த அவன் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். களிப்பென்றால் அப்படி ஒரு களிப்பு. கடற்கரை, பார்த்தசாரதி கோயில், மஹாபலிபுரம் என்று ஒரு இடம் விடாமல் ஐந்து நாள் சுற்றிவிட்டு அவன் ஊருக்கு திரும்புகையில், "உங்க "கூவாரம்பட்டி" நமக்கு ஒத்து வராது சாமி, காவேரி தண்ணிய குடிச்சுபுட்டு உங்க ஊரு க்ளோரின் தண்ணிய மனுஷன் குடிப்பானா.." என்று அடுக்கிக் கொண்டே போனான். அவன் ஐந்து நாள் அடித்த கூத்தையெல்லாம், ஒரு ஐந்து நிமிடப் பாடலுக்குள் படம் பிடித்துக்காட்டிவிட்டார் ராஜா.

(கி)ராமராஜன் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும் என்பது உறுதி. 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடலில் வரும் 'சொர்க்கமே என்றாலும்' பாடலில், மேற்சொன்ன சூழலை அழகாக கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் ராஜா. இந்த பாடல் அமைந்த ராகம் 'ஹம்ஸநாதம்'. தியாகராஜர், 'உன் அவையில் ஏதாவது சேவகம் செய்யும் பாக்கியத்தை எனக்களிப்பாய் ராமா' என்று இந்த ராகத்தில் அமைந்த 'பண்டுரீதி' பாடல் மூலம் வேண்டுகிறார். இந்த ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்களைக் கேட்கும்போது "அட! இந்த ராகத்தை இப்படியெல்லாம் கூட உபயோகிக்க முடியுமா" என்று பிரமிப்பாக இருக்கிறது.

பாடலின் முன்னிசையை கவனியுங்கள். வெளிதேசத்தில் இறங்கிய ஒரு கிராமத்தான், 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து' பிரம்மிப்பது போன்ற உணர்வை மிக அழகாக வெளியிடுகிறது. இளையராஜாவின் குரல் பாடலின் சூழ்நிலைக்கு அற்புதமாய் பொருந்தியுள்ளது. பாடலின் பல்லவி, கிராமிய இசைக்கும், கர்நாடக இசைக்கும் இடையே நடக்கும் ஒரு அழகான சம்பாஷணையைப்போல் அமைந்துள்ளது. முதல் 'இடையிசையில்' வயலினும், கீ-போர்டும் வாத்திய-அமைப்பை நன்றாக அலங்கரிக்கின்றன. தன் ஊரை விட்டு வந்த கிராமத்து ஆசாமியின் வெவ்வேறு ஏக்கங்களை பாடலின் சரணங்கள் பட்டியலிடுகின்றன. "தாகம் தீர ஏது மோரு" என்ற வரியை உற்று கேளுங்கள். அது இந்த ராகத்தின் 'typical' பிரயோகமாகும். இரண்டாவது இடையிசையில், ஜானகி கிராமிய இசையில் பாட, அதற்கு மேற்கத்திய வாத்தியங்கள் மூலம் அழகாக பதிலளித்திருக்கிறார் ராஜா. கங்கை அமரனின் வரிகள் பாடலுக்கு மெருகு சேர்க்கிறது. இதை போன்று அழகாய் பாடல் எழுதக்கூடியவரை, அவர் அண்ணன் கூட 'ஓ ரங்கா, ஸ்ரீலங்கா' போன்ற பாடல்கள் எழுதவே அதிகம் பயன்படுத்தியது வருத்தத்திற்குரியது.

இந்த ராகத்தில் வேறு சில பாடல்கள் மூலம், பல்வேறு சூழ்நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார் ராஜா. "தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் காதல் ரசத்தை குழைத்திருக்கிறார். "இசையில் தொடங்குதம்மா" பாடலில் இந்த ராகத்தின் ஹிந்துஸ்தானி வடிவத்தை காட்டியிருக்கிறார். "ஓம் நமஹ" பாடலில் ஒரு 'meditative mood' உருவாக்கியுள்ளார்.

ராஜாவைத் தொடர்ந்து பரத்வாஜ், 'பூவேலி' படத்தில், 'ஒரு பூ எழுதும் கவிதை' என்ற அற்புதமான ஹம்ஸநாதத்தை அளித்திருக்கிறார். 'அன்பே சிவம்' படத்தில் வரும் "பூ வாசம்" பாடலை வித்யாசாகர் சொக்க வைக்கும் வண்ணம் இந்த ராகத்தில் அமைத்துள்ளார். இங்கு குறிப்பிட்ட அனைத்துமே அற்புதமான பாடல்கள்தான். எனினும், ராகத்தின் அடிப்படையில் பெரும்பாலும் மெலடிகளைத்தான் உருவாக்க முடியும் என்ற பொதுவான அபிப்ராயத்தை 'சொர்க்கமே என்றாலும்' பாடல் உடைப்பதால், அதனை விரிவாக எழுதினேன்.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



இசைஞானி இளையராஜாவும் மாயாமாளவகௌளை ராகமும் - லலிதா ராம்


லலிதா ராம்
ள்ளியில் எப்படி முதன்முதலில் ஆனா – ஆவன்னாவில் பாடத்தைத் தொடங்குவோமோ, அதுபோல் சங்கீதத்தில் பாலபாடங்கள் அனைத்தும் மாயமாளவகௌளை ராகத்தின் அடிப்படியிலேயே இருக்கும். அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நம் கட்டுரைக் கச்சேரியையும் துவக்குவோம்.

திரையிசையில் காலம்கால்மாய் உபயோகமாகும் ராகங்களில் மாயமாளவகௌளை முக்கியமானது 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா'வில் துவங்கி, 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' வரையில் எறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களாலும் கையாளப்பட்ட ராகம் இது !

பதினைந்தாவது மேளகர்த்தா ராகமாகிய இந்த ராகத்தில், தியாகராஜரின், 'துளசிதள முலசே' என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது ('உன்னால் முடியும் தமிபி'யில் ரமேஷ் அரவிந்த், ஜெமினி கணேசனைக் கவர இந்தப் பாடலைத்தான் பாடுவார்; 'How to Name It' ஆல்பத்தின் 'Study of Violin' பகுதியில் இப் பாடல் முழுவதும் வரும்). திரையிசையில் இந்த ராகம் பல்வேறு சூழ்நிலைகளைச் சித்தரிக்க பயனாகியிருக்கிறது.

இசையமைப்பாளர்களுக்கு இந்த ராகம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறினால் இந்த ராகத்துக்குக் கிடைத்த வரமாக இசைஞானி இளையராஜாவைச் சொல்லலாம் அந்த அளவுக்கு மாயமாளவகௌளையின் ஆதிமூதல் அந்தம்வரை அலசித் தள்ளியிருக்கிறார் ராஜா. அவற்றுள் எந்த ஒன்றை உதாரணமாய் எடுப்பது என்று முடிவுசெய்வதற்குள் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்துவிடும் போலிருக்கிறது. ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தால், குறைந்தது 15 பாடல்களாவது என்னை முறைப்பதுபோல் ஒரு பிரம்மை ! ஒரு வழியாக, சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வழியில் குலுக்கல் முறையைப் பின்பற்றி, 'கோபுர வாசலிலே' திரைப்படத்தில் வரும், 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' எனும் பாடலைத் தேர்வு செய்தேன்.

'Yes, I love this Loveable Idiot' என்ற அறைகூவலுடன் துவங்கும் பாடலின் முன்னோட்ட இசையிலேயே சூழ்நிலையின் முழுத் தாக்கத்தையும் சித்தரிக்கிறார் ராஜா, காதாநாயகி உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உலகே அத்ர்ந்திட தன் காதலை வெளிப்படுத்தும்போது மடைதிறந்த வெள்ளமெனப் பொங்கும் உணர்வுகளை சில நூறு வயலின்களின் ஆக்ரோஷமான வெடிப்பின் மூலம் மனக்கண் முன் அழகாய் நிறுத்துகிறார் ! பாடலை நன்கு கவனித்தால், 'இடம் மாறும்', 'பரிமாறும்', 'வழிந்தோடும்', 'கலந்தாட' என்ற வார்த்தைகளெல்லாம் ஒரு வித அசைவைக் குறிக்கும் சொற்கள், இந்த அசைவை, அதன் முந்தைய வார்த்தைகளான (முறையே) 'இதயம்', 'இளமை', 'அமுதம்', 'அழகில்' ஆகிய சொற்களில் ஒருவித அசைவைக் கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தேகமானால் இந்த நான்கு வரிகளையும் அந்த அசைவு இல்லாமல் பாடிப்பாருங்கள் பாடலின் ஜீவனே போனதுபோல் தோன்றும். மிகவும் அனுபவித்து சிந்தித்தாலன்றி இவ்வாறு அமைத்திருக்கமுடியாது !

இந்த அசைவை 'கமகம்' என்று சொல்லுவார்கள். இந்த கமகம், இந்திய பாரம்பரிய இசைக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாகும்.

பாடலின் இடையிசையில் வயலினும், குழலும் மாறிமாறி இருவரின் சம்பாஷணையைப் போல் அமைந்திருக்கிறது – மொத்த பாடலும் ஒருவித பரவச நிலையை அழகாக சித்தரிக்கிறது. பாடல் முழுவதும் மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் அற்புதமாய் பின்னிவருவது தனிச்சிறப்பு ! உன்னதமான வாத்திய அமைப்போடு பாலு மற்றும் சித்ராவின் சர்க்கரைக் குரல்களில் இழையல் குழையல்களும், வாலியின் அற்புதமான பாடல் வரிகளும் இப்பாடல் சோபிக்க முக்கியக் காரணங்களாகும்.

இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்

* பூங்கதவே தாள் திறவாய் : நிழல்கள்

* ஏ ஷப்பா – கர்ணா

* பூவ எடுத்து ஒரு மாலை – அம்மன் கோவில் கிழக்காலே

* சொல்லாயோ சோலைக்கிளி – அல்லி அர்ஜுனா

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



ராகத்தை எப்படி புரிந்து கொள்வது? - லலிதா ராம்

லலிதா ராம்
ப்பொழுது ஒரு ராகத்தை எப்படி புரிந்து கொள்வதென்று பார்ப்போம். ஒரே ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் அமைந்த இரு பாடல்களை எடுத்துக்கொண்டு கவனமாகக்கேளுங்கள். இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் தோன்றினால் ரொம்ப நல்லது. இரண்டும் ஒரே ராகத்தின் இரு பிரயோகங்களை படம் பிடிக்கின்றன என்று அர்த்தம். இப்பொழுது மூன்றாவதாக அதே ராகத்தில் ஒரு பாடலைக் கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் முன்னால் கேட்ட பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் ஒரு ஒற்றுமை தோன்றும். (ஒருநாள் கேட்டுவிட்டு "அட போய்யா எல்லாம் கட்டுக்கதை" என்று சொன்னால் ஒன்றும் செய்ய்ய முடியாது. பொறுமையாக கேளுங்கள். காலப்போக்கில் இந்த "pattern matching" சூட்சுமம் நிச்சயம் கைவர ஆரம்பிக்கும்).

பல ராகங்கள் முதல் முறை கேட்கும்போது ஒரே மாதிரிதான் தோன்றும். உதாரணமாக, ஆபேரிக்கும் சுத்ததன்யாசிக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லையெனில் யாரேனும் சங்கீதம் நன்றாய் தெரிந்தவரிடம்போய் கேட்டு விடாதீர். "ஓ!!!இதென்ன பெரிய விஷயம்!!! சுத்தன்யாசில 'ரி' வராது" என்று எதாவது கூறிவைப்பார். ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிடும் (சொந்த அனுபவம் ஐயா!!). முதலில் இரண்டு ராகங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என்று தெரிந்தாலே 'moral victory'-தான். நிறைய கேட்க கேட்க வித்தியாசம் தானே புரிபடும்.

சரி இவ்வளவு நேரம் அடிப்படை விஷயமெல்லாம் அலசியாகிவிட்டது. நல்ல உணவிற்கு முன்பு கொஞ்சம் சூப் குடிப்பது போலத்தான் இதெல்லாம். சூப் குடித்தால் நல்லது அதற்காக சூப் இல்லாவிடில் சாப்பிடவே முடியாது என்று எதாவது உண்டா என்ன? அதைப்போலத்தான் இந்த theoretical சமாச்சாரங்களும். இனி வாரம் ஒரு ராகம் என எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் ஆழம் சென்று பார்ப்போம்.

இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா? இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி "பொறுப்புள்ள பையனாக வா" என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்? அதே படத்தில், 'இதழில் கதையெழுதும் நேரமிது' என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா? உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது? அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப்பார்த்தால் கூடப்போதும் அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம் !!

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



ஸ ரி க ம ப த நி - லலிதா ராம்

லலிதா ராம்
சென்ற வாரம் எழுதியதை கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எவ்வளவு என்றும் கேட்கும் நண்பனிடம் காட்டினேன். படித்துவிட்டு அவன், "எல்லாம் சரிடா, ஆனால் இந்த ஸ்வரம் ஸ்வரம்-னு அடிக்கடி வருதே! அப்படினா என்ன" என்று கேட்டான். அவனுக்கு பொறுமையாக விளக்கியவுடன் "அட! நம்ப ஸரிகமபதனிஸ !!!, இதை சொல்லவா இவ்வளவு ரவுசு விட்ட?" என்றான். ஆக சங்கீதம் தெரிகிறதோ இல்லையோ எல்லொருக்கும் ஸ ரி க ம ப த நி தெரிந்துதான் இருக்கிறது. இதை இவ்வளவு பிரபலமாக்கிய பள்ளிக்கூட பாடலாசிரியர்களைப் பற்றி இரண்டு வார்த்தையேனும் கூறாவிடில் நான் பெரும்பாவத்திற்கு ஆளாவேன். என் பள்ளி பருவத்தில் என் தந்தைக்கு அடிக்கடி மாற்றல் இருந்ததால், பல பள்ளிகள் மாற வேண்டியிருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லிவைத்தார்ப்போல் வருட ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் அதே ஸரிகமபதனி-தான். இதில் வேறு இந்த பாட்டு வாத்தியார்களை காலை assembly-யில் பாடச் சொல்லிவிடுவார்கள். mic-ஐ பார்த்தவுடன் இவர்களுக்கு என்னமோ music academy-யில், ரேடியோவில், டிரான்சிஸ்டரில் எல்லாம் கச்சேரி செய்வது போல ஒரு நினைப்பு வந்து விடும். தேசிய கீதத்தைக்கூட ஏதோ சங்கராபரண கீர்த்தனையைப் போல கமகம் பிருகாவெல்லாம் கொடுத்து 5-நிமிடத்துக்குப் பாடுவார்கள். தாலி என்றால் என்னவென்றே தெரியாத இளைஞன் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் இருப்பது போல இந்த மாதிரி பாட்டு வாத்தியார்கள் எல்லா பள்ளிகளிலும் உண்டு. அப்படி யாரும் எங்கள் பள்ளியில் இல்லை என்று கூறுபவர்களூக்காகவே பார்த்திபன் படமெடுத்து ஸரிகமபதநி புகழை கோபால் பல்போடி புகழ் அளவுக்குப் பரப்பி விட்டார்.

ஏழு ஸ்வரம், ஏழு ஸ்வரம் என்று அடிக்கடி பல பாடல்களில் வருவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இருப்பது 12 ஸ்வரங்கள் (7-ஐ ஸ்வரம் என்றும், 12-ஐ ஸ்வரஸ்தானம் என்றும் கூறுவர்.). ஸ்வரங்கள் என்னமோ ஸ ரி க ம ப த நி தான் என்றாலும் இதில் ஸா மற்றும் பா-வைத்தவிர மற்ற எல்லா ஸ்வரங்களும் double action கதாநாயகிகள். இந்த 12 ஸ்வரங்களை வைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான ஸரிகமபதநி-க்களை உருவாக்க முடியுமல்லவா? (various combinations). அப்படி உருவாகும் 72 ஸரிகமபதநி-க்களைத்தான் மேளகர்த்தா ராகங்கள் என குறிக்கிறோம். ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலிருந்தும் பல கோடி ராகங்கள் உருவாக முடியும். அந்த ராகங்களுக்கு ஜன்ய ராகங்கள் என்று பெயர்.

"என்னைய்யா நீ!! ஏதோ கணக்கு பாடம் போல அடுக்கிக்கிட்டே போற? இந்த விஷயமெல்லாம் விளங்கினால்தான் ராகம் எல்லாம் புரியுமா" என்று கேட்டால், அதற்கான பதில், "நிச்சயமாக இல்லை" என்பதாகும். (எனக்கு விஷயம் தெரியும்னு காட்டிக்கொள்ள வேண்டுமில்லையா) உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ராகம் எல்லாம் ஒரு அளவுக்கு புரிய ஆரம்பித்தவுடன்தான் இந்த விஷயம் எல்லாம் விளங்கியது. இந்த சமாச்சாரமெல்லாம் புரிந்தால் ரொம்ப நல்லது, அப்படி புரியாவிடினும் பெரிய பாதகமில்லை.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்





திரையிசையும் கர்னாடக இசையும் - லலிதா ராம்

லலிதா ராம்
சென்னைக்கு அருகிலிருக்கும் "Ashok Leyland" நிறுவனத்தில் ஒரே நாளில் தயாராகும் 3 வண்டிகளை தொடருங்கள்.  ஒன்று தட்டுமுட்டுச்சாமான்கள் ஏற்றிச்செல்லும் லாரியாக மாறும். ஒன்று குளிர்பதனவசதி கொண்ட டூரிஸ்ட்டு பஸ் ஆகும். இன்னொன்று எப்பொழுதும் தாமதமாய் வரும் பல்லவன் பேருந்தாகும். அதைப்போலத்தான் திரையிசையும் கர்னாடக இசையும்.

திரைப்படங்களில் தாலாட்டுப்பாட்டு, காதல் பாட்டு, காதலியை காதலன் கிண்டல் அடிப்பது, கதாநாயகன் நயாகராவுக்குச்சென்று தமிழ் குடியின் தொன்மையை பற்றி பாடுவது, பக்திப்பாடல், ரயிலில் தவிறிப்போன இரு சகோதரர்களை இணைக்கும் குடும்பப்பாடல். தத்து(பித்து)வப்பாடல் என்று பலவிதமான சூழ்நிலைக்கேற்ப பாடல் அமைக்கிறார்கள். ஒவ்வொறு பாடலையும் கேட்கும்போதே அந்த சூழ்நிலை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

உதாரணமாக "பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடலை கேட்கும் பொழுதே இருவர் காலை வேளையில் "jogging" செல்வது போன்ற உணர்வு மனதில் எழுகிறது. இதைத்தான் கர்நாடக இசையில் ராகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு ராகமும் ஒரு குறிப்பிட்ட ஸ்வர வரிசையில் அமைக்கப்பெற்றது. நம் வாழ்வில் உள்ளதுபோல் ராகங்ளுக்கும் ஏறுமுகம், இறங்குமுகம் உண்டு. ஏறுமுகத்தை ஆரோஹனம் என்றும் இறங்கு முகத்தை அவரோஹனம் என்றும் குறிக்கிறோம். ஆக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த அந்த ராகங்களை பயன்படுத்திதான் இசையோவியம் வரைகின்றனர் நம் இசையமைப்பாளர்கள். உதாரணமாக மோகனம் ராகத்தை எடுத்துக்கொண்டால், பெயர் சொல்வதைப் போலவே அது சந்தோஷத்தை குறிக்கும் ராகம். (இதற்காக இருமல் சூரண விளம்பரமெல்லாம் கரஹரப்ரியா ராகமா என்று கேட்டுவிடாதீர்கள்).

திரையிசையில் பிரபலமான இந்த ராகத்தில் உதாரணத்திற்க்காக "ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே" என்ற பாடலை எடுத்துக்கொள்வோம். தலைவனும் தலைவியும் உல்லாசமாய் படகு சவாரி செய்து கொண்டு சல்லபமாய் பாடுவது போன்று படமாக்கப்பட்ட பாடல். பாடலை கேட்கும்போதே நம் முன் காட்சி தோன்றுகிறது இல்லையா. மற்றொறு சந்தோஷத்தை குறிக்கும் ராகமான பிலஹரியில்தான் பாரதியார் "விடுதலை விடுதலை" என்று அரைக்கூவலிட்ட பாடலை மெட்டமைத்திருந்தார். (பாரதியார் அமைத்த ராகத்திலேயே இன்றும் பாடப்படும் சொர்ப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்று. சிந்து பைரவி படத்தில் தியாகராஜர் அமைத்த ராகத்தின் மெட்டை மாற்றி அமைத்துவிட்டார் என்று இளையராஜாவின் மேல் பாய்ந்தவர்கள் பாரதியின் ராகங்களை மாற்றிப் பாடுபவர்களை ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று எனக்கு இது நாள் வரை விளங்கவில்லை.)

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவே. அப்படியெனில், நாம் முன்பு கூறியது தவறென்றல்லவா ஆகிறது? ஒன்று செய்யுங்கள், உங்கள் வீட்டு அம்மையாரையும் அடுத்த வீட்டு அம்மையாரையும் ஒரே விதமான சாமான்களை கொடுத்து எதேனும் ஒரு பதார்தத்தை செய்யச் சொல்லுங்கள். வெகு நிச்சயமாக கூறுகிறேன், இரண்டிற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசமாவது கூறிவிடலாம். அதே போலத்தான் ஒரு ராகம் என்பது ஸ்வரங்களின் கூட்டமைப்பு. ஒரு ராகத்தை பாடும்போது அவர் அவர் விருப்பம் போல ஸ்வரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது அவர் அவர் கற்பனைக்கேற்ப வெவ்வேறு முறைகளில் ஸ்வரங்களைக் கோர்க்கலாம். அப்படி பல வகையான ஸ்வரக்கோர்ப்புகளின் பெயரே "பிரயோகங்கள்". ஒரே ராகத்தின் வெவ்வேறு பிரயோகங்கள் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடும். இதுவே ஒரே ராகத்தில் அமைந்த இரு பாடல்கள் நமக்கு வித்தியசமாய் ஒலிக்கக் காரணம். இதுவரை உபயோகப்படுத்தப்படாத எத்தனையோ பிரயோகங்கள் இன்னும் இருப்பதால்தான் புதிது புதிதாய் பல பாடல்கள் வந்துகொண்டிருக்கிறது.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



கர்நாடக சங்கீதம் ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல - லலிதா ராம்

லலிதா ராம்
ண்ணகி மதுரை நகரை எரித்த காலம் முதல் கண்ணகி சிலை அருங்காட்சியகம் சென்ற காலம் வரை உள்ள தமிழர் சரித்திரத்தை எடுத்துப்பார்த்தால்,தமிழர் வாழ்வில் இசை இரண்டறக் கலந்துதான் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு வகையான பாடலைக்கொண்டுதான் தன் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அல்லது வேறேதும் ஒரு உணர்வையோ தமிழன் வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட தமிழனிடம் இன்று போய் "நீ கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா" என்று கேட்டால்,பெரும்பாலானவர் கூறும் பதில் "அட!அதுக்கெல்லாம் ரொம்ப அறிவு வேணுமையா! நான் நிறைய பாட்டு கேப்பேன் ஆனால் எல்லாம் சினிமா பாட்டுதான்" என்பது.

இப்படி ஒரு பதிலை கேட்க நேரிடும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன் முதலில் கர்நாடக இசை நம்மிலிருந்து அந்நியப்பட்டு போனதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். காலை வேளையில் கலர் கலராய் கனவு கண்டு கணக்கு டீச்சரை கட்டி வைத்து உதைக்கும் கணத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தன் தேன் மதுரக் குரலால் கனவை கலைத்து விடுவார். அன்று விழும் இந்த இசையின் மீதுள்ள வெறுப்பிற்கான முதல் விதை. அப்படி அதிகாலையை விட்டுவிட்டால் யாராவது பெரிய மனிதர் மண்டையைப் போட்ட அன்று நாம் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி மெகா சீரியல்களை ரத்து செய்துவிட்டு லால்குடி ஜெயராமனின் சுபபந்துவராளியை ஒளிபரப்பிவிடுவார்கள். ஆக.. நேரம்கெட்ட நேரத்தில் வந்து நம் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும் விஷயமாகவே கர்நாடக சங்கீதம் உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு சராசரி தமிழ் வீட்டின் இல்லத்தரசியிடம் போய் "உங்களுக்கு ரசம் சமைக்கத் தெரியுமா?" என்று கேட்டு,அதற்கு அவர் "ஐயோ! அதற்கெல்லாம் ரொம்ப அறிவு வேண்டும் எனக்கு சாம்பார்தான் சமைக்கத் தெரியும்" என்று கூறினால் உங்களுக்கு சிரிப்பு வருமா? வராதா?

சாம்பார் வைக்க உபயோகப்படும் அதே பருப்பு, பொடி, கடுகு ஆகியவைதானே ரசம் வைக்கவும் உபயோகிக்கிறோம்! அப்படியிருக்க, இந்த பெண்மணி ஏன் ரசம் வைக்க computer science படிக்க வேண்டும் என்கிறாள் என்று நினைக்கத்தோன்றும் அல்லவா! அதே போலத்தான் கர்நாடக இசையும் திரையிசையும் ஒரே அடிப்படையில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகின் எல்லா வகை இசைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஒரு குழந்தையிடம் அச்சிலிட்ட வடிவான கற்கண்டையும், கரடுமுரடான கற்கண்டையும் கொடுத்தால்,அது கரமுரடானதை சுவைக்காமலே எனக்கு வேண்டாம் என்பதுபோல், வெளிப்பார்வைக்கு கரடுமுரடாய் தெரியும் கர்நாடகயிசையை நாம் அந்நியப்படுத்திவிட்டோம்.

தமிழருக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்காதெனில் 'சிந்து பைரவி' என்ற படம் மூலைமுடுக்கெல்லாம் கொடிகட்டிப் பறந்ததெப்படி? வேற்று பாஷைப் பாடல்களெனினும், "சங்கராபரணம்" படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவியது எப்படி? அட! அவ்வளவு ஏன்? உங்கள் வீட்டில் எவரேனும் பெரியவர் இருந்தால் அவருக்குப்பிடித்த திரைப்பாடலை சொல்லச் சொல்லுங்கள். அவர்கூறும் M.K.T அல்லது K.B.S பாடிய பாடல் எங்கிருந்து வந்தது? எல்லாம் கர்நாடக இசைதானே!!

கர்நாடக சங்கீதம் அடிப்படையில் பக்தியை வெளிப்படுத்தும் இசை. ஆனால் திரைப்படங்களில் அனுதினம் நடக்கும் யதார்த்தங்களைக்காட்ட வேண்டியிருப்பதால், அதற்கேற்றார்போல இசையையும் சற்று மாற்றியமைக்கின்றனர்,அவ்வளவே!.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...