செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நவீன இலக்கியச் சிற்பி தி.ஜானகிராமன்

வீன இலக்கிய எழுத்தாளர்களுள் மிக அதிகமாகப் பேசப்பட்டவர் தி.ஜானகிராமன். அதிலும் "அம்மா வந்தாள்' எனும் நாவல் எழுதியதற்காக அவர், அவரது ஜாதியிலிருந்தே நீக்கப்பட்டார். ஏனெனில் தி.ஜா.வின் படைப்புகளில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே இருந்தனர். ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்பை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால் அப்பெண்கள் நம் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தேவக்குடி என்னும் சிற்றூரில் 1921-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை மிகச்சிறந்த சொற்பொழிவாளரான தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர். அவர் குடும்பம், மரபு காப்பதில் ஆர்வமுள்ள பழமைப்பிடிப்புள்ள பொருளாதார வசதிகொண்ட குடும்பம்.

தி.ஜா. பிறந்த ஆறாவது மாதத்திலேயே அவருடைய குடும்பம் கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்தது. இரண்டாண்டுகள் மட்டும் அங்கிருந்துவிட்டு பின்னர் தி.ஜா.வின் வாழ்வு தஞ்சைக்கு மாற்றலானது. தஞ்சாவூர் புனிதபீட்டர் தொடக்கப் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரி பள்ளியிலும் தொடக்கக்கல்வி கற்ற அவர், உயர்நிலைக் கல்வியை கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.

பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர் மீடியட்டும், பி.ஏ.வும் படித்த அவர், எல்.டி. பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தி.ஜா.வுக்கு, கு.ப.ராஜகோபாலன் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.

1943-44-இல் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஓராண்டு சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தார். அதன்பிறகு, 1945 முதல் 1954 வரை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குத்தாலம் மற்றும் அய்யம்பேட்டை பள்ளிகளில் பணிபுரிந்தார்.

பின்னர், 1954 முதல் 14 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிய தி.ஜா., தில்லி வானொலி நிலையத்தில் 1968 முதல் 1974 வரை உதவித் தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்தார். பிறகு பதவி உயர்வு பெற்று, 1974 முதல் 1981 வரை தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கல்லூரியில் படித்த காலத்திலேயே அவருக்குச் சுதந்திரப் போராட்ட உணர்வு மேலோங்கி இருந்தது. கும்பகோணத்தில் பெசண்ட் தெருவில் 1936-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற நேரு பேசிய கூட்டத்தில் கலந்துகொள்ள கல்லூரியில் இசைவுபெறாத விடுப்பு எடுத்தமைக்கு தி.ஜா. எட்டணா அபராதம் கட்டினார். அந்த அபராதத்தை எதிர்த்து கல்லூரியில் வேலை நிறுத்தமும் நடந்தது. இவருடைய செம்பருத்தி, மோகமுள் ஆகிய நாவல்களில் சுதந்திர தாகம், அந்நியத்துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைக் காணமுடியும்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் தி.ஜா. கும்பகோணம் ஆங்கிலப் பேராசிரியர் சீதாராமையர் மூலம் ஆங்கில இலக்கியங்களை அறிந்தவர், கல்லூரிப் படிப்பை முடித்து, பணிக்குச் செல்லாமல் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றார்.

தந்தையோடு புராண இசைச் சொற்பொழிவுக்குச் சென்றதோடு அவருக்குப் பின்பாட்டுப் பாடியதால் தி.ஜா., இளம் பருவத்திலேயே இசையறிவு வாய்க்கப் பெற்றிருந்தார். உமையாள்புரம் சாமிநாதையர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயர் ஆகியோரை இசைத்துறை ஆசிரியர்களாகக் கொண்டிருந்தார்.

வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். சமையற்கலையிலும் வல்லுநராகத் திகழ்ந்த தி.ஜா., இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவராக விளங்கினார்.

தி.ஜா. எழுதிய 85 சிறுகதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மோகமுள், அமிர்தம், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம், மலர்மஞ்சம், உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, செம்பருத்தி ஆகிய நாவல்களும்; பிடிகருணை, மனிதாபிமானம், யாதும் ஊரே, அக்பர் சாஸ்திரி, அடி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், எருமைப் பொங்கல், கமலம், கொட்டுமேளம், சிவஞானம் முதலிய சிறுகதைகளும்; நாலுவேலி நிலம், வடிவேல் வாத்தியார் ஆகிய நாடகங்களும்; உதய சூரியன், (ஜப்பான் பயண நூல்), அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை), கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை), நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாகப் பயணம்) ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியம் மற்றும் இசைக்கலை பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தி.ஜா. சிறந்த இசை விமர்சகரும்கூட.

தி.ஜா., மொழிபெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கினார். அறிவியல்துறை சார்ந்து, என்.டச் எழுதிய "அணு எங்கள் ஊழியன்; ஜார்ஜ் காமோ எழுதிய "பூமி என்னும் கிரகம்' ஆகிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மேலும், நோபல் பரிசுபெற்ற கிரேசியா டெலடாவின் அன்னை, டெல்மேஜரின் "கிரிஸ்கா' ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

இவைதவிர, வில்லியம் ஃபாக்னரின் "12' எனும் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுதியும், பார் லாகர்க்விஸ்ட் எழுதிய "ட்வார்ப்' எனும் நாவலும் தி.ஜா.வால் "குள்ளன்' என எழுதப்பட்டு அச்சேறாமல் இருக்கின்றன.

தி.ஜா.வின் "அம்மா வந்தாள்' நாவல் ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் மரப்பசு, மோகமுள், அம்மா வந்தாள் ஆகியவை மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோகமுள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. "சக்தி வைத்தியம்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

தி.ஜா. என்றாலே அவருடைய நாவல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டதால் அவரைச் சிறந்த நாவலாசிரியராகக் கருதுவதே வழக்கமாகிவிட்டது. ஆனால், தி.ஜா.வின் எழுத்தழகும் ஆழ்மனமும் வெளிப்படுவது சிறுகதைகளில்தான் என்று துணிந்து கூறலாம்.

தி.ஜா.வின் எல்லா கதைகளிலுமே மனிதநேயம் அடி இழையாக ஓடுவதைக் காணலாம். பெரும்பாலான நாவல்கள் தஞ்சை மண்ணை அடிப்படையாக வைத்து எழுந்தவை. நகரங்களில் நடைபெறும் சம்பவங்களையும் கிராமத்தோடு இணைத்துக் காட்டுவதைக் காணமுடியும். அத்துடன் அவருடைய பாத்திரப்படைப்புகள் அனைத்தும் அவர் நேரில் கண்டவர்களே ஆவர்.

தி.ஜா.வின் எழுத்தைப் படித்து ஆதரித்தவர்களைவிட எதிர்த்தவர்கள்தாம் அதிகம். பாலியல் உணர்வுகளை குறிப்பாகப் பெண்களை ஒளிவு மறைவு இல்லாமல் அவர் எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. இதற்கெல்லாம் அவர் எந்தவித மறுப்பும் சொல்லாமல், என் கடன் எழுத்துப்பணியே என்றிருந்தார். ஓய்வு பெற்று சென்னையில் வசித்தபோது "கணையாழி' பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 1982-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி காலமானார்.

"தமிழின் நெடும்பரப்பில் தி.ஜானகிராமன் ஓர் அற்புதம், பூரணமான ஓர் இலக்கிய அனுபவம் என்பது முழு உண்மையே'' என்று க.நா.சுப்பிரமணியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி- தமிழ்மணி


வியாழன், 7 ஏப்ரல், 2011

கோபத்தை தவிர்த்தால் வாழ்க்கை அழகாகும்!

னதை கூலாக வைத்திருப்பது, வாழ்நாளை அதிகரித்து, வாழும் நாட்களை அழகாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும். மனதை ஜெயித்தவர்கள், வாழ்க்கையை ஜெயித்தவர்கள் என்று சொல்லலாம்.

அந்த மனதை ஜெயிக்க, அதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான், நம் உடல் இயக்கமும், செயல் இயக்கமும் பிரச்னையில்லாமல் சீராகப் போகும். மன அழுத்தம், மன பதற்றம், மன சோர்வு என்று மனதை இன்னும் சிக்கலாக்குவது, கோபம் தான். இன்றைய பரபரப்பு வாழ்க்கை முறையில், கோபம் வருவதற்கான காரணம், அளவுக்கு மீறிய வேலைச் சுமை தான். தினசரி வாழ்க்கையில், சில விஷயங்களை சரியாக கடைபிடித்தாலே, இந்த பிரச்னையிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்து விடலாம். அதிக வேலைப்பளு தான் பிரச்னைக்கு காரணம் என்றால், தினமும் குறைந்தது அரை மணி நேரம் பாட்டு கேட்பது, பிடித்த புத்தகம் படிப்பது போன்ற மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை செய்வது நல்லது.

நினைத்தது நடக்கவில்லை என்றால் தான், மன அழுத்தம் அதிகமாகிறது. எந்த விஷயம் நடக்குமோ, அதற்கான எதிர்பார்ப்பை மட்டும் மனதிற்குள் வளர்த்து கொள்வது நல்லது. நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால், பிரச்னையை ஒரு நல்ல தோழமையிடம் பகிர்ந்து கொள்வது, மனச்சுமையை குறைத்து, பிரச்னையை எதிர்கொள்வதற்கான வழிகளை சொல்லும்.

அதையும் மீறி பிரச்னை அதிகமானால், மனநல மருத்துவரை நாடுவதே சிறந்தது.



நன்றி: மனநல மருத்துவர் பத்மாவதி (தினமலர் கட்டுரை)







திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...