சனி, 15 ஜூலை, 2017

விக்ரமாதித்யன் - நேர்காணல்

‘‘கவிதைகள் சத்தம் போடக்கூடாது!’’ - விக்ரமாதித்யன்

சந்திப்பு : வெய்யில், கதிர்பாரதி - படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்
தமாக சிலுசிலுக்கிறது குற்றாலத் தூறல். மலைமீதுள்ள ஒரு பூங்காவுக்குப்  புறப்பட்டோம். எந்தவித உதவியையும் மறுத்து தானாகவே மலை ஏறுவதாக அடம்பிடிக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். ஒவ்வொரு பதிலுக்குப் பிறகும் `இது ரீடருக்கு கன்வே ஆகிரும்ல?’ என்று கண் சிமிட்டுகிறார். ஒரு மனிதர் இவ்வளவு சிரிப்பதைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விக்ரமாதித்யனின் முழுமுதல் அடையாளம் அந்தச் சிரிப்பு. இடையிடையே கொஞ்சம் கொஞ்சும் ஆங்கிலம். `எந்த ஒளிவுமறையும் வேணாம் என்னா... என்ன வேணாலும் கேளுப்பா’ என்றவரோடு உரையாடியதிலிருந்து...
``முதலில், உங்களைப் பாதித்த கவிதை வரிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

``நிறைய இருக்கே. கம்பதாசனின் திரைப்பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றில் `கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே’, `கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்...’ பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். `மன்னாதி மன்னன்’ படத்தில் கவிஞர் கண்ணதாசனின் `கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ...’ போன்ற சில பாடல் வரிகள் என்னில் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்.’’

``திரைப்பாடல்களில் சரி... கவிதையில்?’’

``நான் வந்தது திரைப்பாடல்களின் வழியே என்பதால், இதை மறைக்காமல் சொன்னேன். அப்படிச் சொல்லித்தானே ஆகவேண்டும்.’’

`` `திரைப்படப் பாடல்கள் பாதிப்பில் கவிஞன் ஆனேன்’ என்று சொன்ன முதல் நவீனக் கவிஞர் நீங்கள்தான்போல?’’

``அப்படி ஒருவன் வந்துதானே ஆக வேண்டும் (சிரிக்கிறார்). இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கவிதைகளில் என்று வரும்போது, `குறுந்தொகை’ வரியான `சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.’ செம்புலப் பெயல்நீரார் எழுதிய `யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்’ ஆகிய வரிகள் எனக்குப் பிடித்தமானவை. மரண பயம் வந்தால், யம பயம் போக்கும் `மகா ம்ருத்யுஞ்சய மந்திரம்’ வரிகளை வாசிப்பேன். சிலப்பதிகாரத்தில் வரும் `கானல் வரிகள்’ எல்லாம் என்னை வேறு இடத்துக்கு நகர்த்தியவை. கம்பனின் வரிகளும் அப்படித்தான். அப்புறம் கண்ணதாசன் கவிதைகள்... என்னைப் பெரிதும் பாதித்தவை.’’

`` `ஒரு கவிதைக்கான அடிப்படை அம்சமாக இது இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று நீங்கள் எதைச் சொல்வீர்கள்?’’

``கவிதைக்கு அப்படி ஒரு வரையறையைச் சொல்லிவிட முடியாது.’’

``கவிதையைத் தாண்டி சிறுகதை, நாவல்... என்று பிற இலக்கிய வடிவத்துக்குள் நீங்கள் விரிவாகப் போகாததற்கு என்ன காரணம்?’’

``அடிப்படையில் என்னைப் பெரிய கவிஞனாகவோ, எழுத்தாளனாகவோ நான் கருதிக்கொண்டதில்லை. கவிதைகளில் பெரிய மாஸ்டராக வேண்டும் என்பதெல்லாம் என் லட்சியமும் அல்ல. `நாமும் எழுதினால் என்ன?’ என்ற ஆசையில் எழுத வந்தவன்தான் நான். ஆனால், மிக நல்ல வாசகன். 

சிறுகதைகளை நான் எழுத வரும்போது யதார்த்தவாதம் மலையேறிவிட்டது. ஆனாலும், என்னளவில் நான் எழுதியவை நல்ல கதைகள்தான். சுவாரஸ்யத்துக்காக ஆங்காங்கே சில வர்ணனைகள் சேர்த்திருப்பேன். என் கதைகள் கிட்டத்தட்ட ‘ஆட்டோ பயோகிராஃபிதான். அவற்றுக்கு ஒரு லிட்டரரி மெரிட் இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. 70-களில் எழுத வேண்டிய கதைகளை 80-களில் எழுதியது என் தவறுதான். அதில் காலமே ஒரு ‘ரோல்’ செய்துவிட்டது. ஆனாலும், பெருமாள்முருகன் `நிகழ்’ இதழிலும், சா.கந்தசாமி ‘தினமணி கதிர்’ இதழிலும், கந்தர்வன் ‘செம்மலர்’ இதழிலும் என் கதைகள் பற்றி விமர்சனம் எழுதத்தான் செய்தார்கள். அது போதும்.’’

``உங்களுக்கு சினிமா பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்ததா, சினிமா பாடல்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்னவாக இருக்கிறது?’’

‘`சினிமா பாடல் எழுத எனக்கு பயம். அதை எழுதுவதற்கான ‘ஸ்டாமினா’ என்னிடம் கிடையாது. ஒரு கவிதையை நன்கு எழுதிவிட வேண்டும் என்பதற்காக ஒரு குவார்ட்டர் மது சாப்பிடுபவன் நான். சினிமா பாடல் என்பது எல்லோரையும் திருப்திப்படுத்தவேண்டிய ஒரு விஷயம். அப்படி சினிமாவுக்குப் பாடல் எழுதியிருந்தால்... அவ்வளவுதான், ஒழிந்து போயிருப்பேன். தவிரவும், என் சுபாவத்துக்கு சினிமாவுக்குப் பாடல் எழுதவெல்லாம் வராது. ஏனென்றால், ஒரு விஷயத்தில் ஒருமுறை சறுக்கிவிட்டால், மீண்டும் அதில் முயன்று பார்க்காத சுபாவம் எனக்கு. சினிமா பாடல் எழுதுவதற்கு அந்தச் சுபாவம் கைகொடுக்காது. அப்படி எழுதும் ஆர்வமும் திட்டமும் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. என் எனர்ஜி, கவிதை எழுதுவதற்கே போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் 1991-ம் ஆண்டுக்குப் பிறகு நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகை வேலையைக்கூட விட்டுவிட்டேன்’’

`` `கவிதைக்குள் ஏதாவது ஒன்றைக் கொண்டுவரவே முடியவில்லையே, மொழிப்படுத்த முடியவில்லையே’ என உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?’’

``இருக்கிறது... அது மரணபயம். மரணம் குறித்து, தற்கொலை உணர்வு பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால், இன்று வரைக்கும் தமிழ்க் கவிதைகளில் மரணபயம் பற்றிப் பெரிதாக யாரும் எழுதவில்லை.  மரணபயத்தைப் பார்த்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்கூட அதை எழுதவில்லை. சமீபகாலமாக எனக்கு மரணபயம் வருகிறது. சமீபத்தில் அல்சர் வந்தபோதுகூட அந்த பயத்தை உணர்ந்தேன். ஆனால், அதைப்பற்றி இன்னும் நான் எழுதவில்லை. ஏனென்றால்,  எழுதுவதற்கு அது சவாலானது.’’

``எளிமையாக எழுத வருகிற விஷயம் எதுவும் உண்டா?’’


``என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது எளிமையானது அல்ல. அது ஒருவகையான வாதை. என் கவிதைகள் அனைத்தும் தானாக அமைபவை. ஏறக்குறைய அருள்வாக்கு வருவது போலத்தான் எனக்கு கவிதை வருவதும். ஆனால், நான் எழுதுவது பூசாரிகளின் அருள்வாக்கு அல்ல.’’

``நன்றாக வராத கவிதைகளைப் பிரசுரத்துக்குக் கொடுக்காமல் கிழித்துப்போட்டது உண்டா?’’

``இல்லை. வைத்திருக்கிறேன். நிறைய வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு கவிஞனிடமும் அப்படியான கவிதைகள் இருக்கத்தான் செய்யும். நான் கொஞ்சம் அதிகமாக எழுதுவதால், என்னிடம் அதிகமாக இருக்கிறது.’’

``பிறகு அவற்றை என்னதான் செய்வீர்கள்?”

``ஏதாவதொரு சமயத்தில் எடுத்துப் பார்க்கும்போது தெறிப்பான இரண்டு, மூன்று வரிகள் தென்படும். அவற்றைக் குறுங்கவிதை ஆக்கிவிடுவேன்.’’

``ஜோதிடத்தின்மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு நம்பிக்கை?’’

``ஜோதிடம்... ஏறக்குறைய ஒருவகையான சயின்ஸ்தான். தவிரவும், இது ஓர் அசலான சப்ஜெக்ட். என் அனுபவத்தில் ஜோதிடத்தை அப்படித்தான் சொல்வேன்.  ஏனென்றால், அனுபவத்துக்குச் சரிவராத எதையும் நான் ஏற்றுக்கொண்டதில்லை. ஆரம்பத்தில் ஜோதிடம் சம்பந்தமான புத்தகங்களை வாசித்தபோதே, அந்தக் கலை என்னை ஈர்க்க ஆரம்பித்தது. இன்னொரு விஷயம், `நமக்கு உதவிசெய்ய நினைக்கிற நல்ல மனிதர்கள், நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள், நமக்கு ஏதோ கொஞ்சம் திறமையும் இருக்கிறது, கவிதை எழுதுகிறோம், பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறோம், நாலு பெரிய மனிதர்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இருந்தும், லௌகீக வாழ்க்கையில் ஏன் எதுவும் ‘க்ளிக்’ ஆக மாட்டேன் என்கிறது. அதைத் தெரிந்து கொள்வோமே’ என்றுதான் நான் ஜோதிடத்துக்குள் வந்தேன். 

இப்போது  ஜாதகத்தை வைத்து ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் ஏறக்குறைய என்னால் சொல்லிவிட முடியும். கவிதையும் இலக்கியமும் ஒரு புதிய பிரபஞ்சத்தைத்  திறந்துவிடுவதை அனுபவித்துப் பார்த்த எனக்கு, ஜோதிடமும் அதைத் தந்தபோது, நான் அதற்குள் ஆழ்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். எவன் ஒருவன் ‘மாஸ்டர் பொயட்’ ஆவான் என்பதை அவனது ஜாதகத்தை வைத்து என்னால் சொல்லிவிட முடியும். ஏன் ஒருவன் அரசியல் கவிதை எழுதுகிறான், ஏன் ஒருவன் நையாண்டிக் கவிதை எழுதுகிறான், ஏன் ஒருவன் காதல் கவிதை எழுதுகிறான் என்பதெல்லாம் அவன் ஜாதகத்திலே இருக்கிறது தெரியுமா?’’

``ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்போது இருக்கிற பத்து இளம் கவிஞர்களின் ஜாதகத்தைக் கொடுத்தால், யார் ‘மாஸ்டர் பொயட்’ ஆவார் என்று உங்களால் சொல்லிவிட முடியுமா?’’


``நிச்சயமாகச் சொல்லிவிட முடியும். ஒருவருக்கு வாக்கு ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சூரியன் ஆதிக்கம் இருந்தால் அவன்தான் மாஸ்டர் பொயட்.’’

``உங்கள் வாக்கு ஸ்தானத்தில் இவை எல்லாம் இருக்கின்றனவா?’’

``(குதூகலமாகச் சிரிக்கிறார்) ஆமாம்... எனக்கு அப்படி இருக்கிறது. எனக்கு இருப்பதுபோல இன்னொரு கவிஞரைச் சொல்லட்டுமா? (மர்மப் புன்னகையோடு ரகசியம்போலச் சொல்கிறார்) லக்ஷ்மி மணிவண்ணன். ஆனால், எங்கள் இரண்டு பேருக்கும் லௌகீக வாழ்க்கை சிறப்பாக இருக்காது. இதில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன.’’

``வேறு யார் யாரின் ஜாதகங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?’’
``ஷங்கர்ராமசுப்ரமணியனுக்கு வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறான்; செவ்வாய் பார்ப்பான். ரொம்பத் தாமதமாகத்தான் ஷங்கருக்கு நான் ஒன்றைச் சொன்னேன்...  அது `நீ பெண்களைப் பற்றி எது எழுதினாலும் சரியா வரும்’ என்பதுதான். அவரின் சக்சஸ்ஃபுல் கவிதைகள் எல்லாம் பெண்களைப் பற்றி எழுதியதுதான். உதாரணம், `மணி பாப்பா’ கவிதை. அப்புறம் `நல்லதங்காள்’, `பிராயநதி’ போன்ற அவரது சக்சஸ்ஃபுல் கவிதைகள் எல்லாம் பெண்கள் பற்றியதுதான். காரணம், அவர் ஜாதகம் அப்படி.’’

``இப்படி ஒவ்வொரு கவிஞருக்கும் அவருக்கான  ‘கவிதை ஏரியாவை’ உங்களால் சொல்லிவிட முடியுமா?’’


``நான் என்று இல்லை... ஜாதகம் பார்ப்பதில் மாஸ்டராக இருக்கும் எந்த ஜோசியக்காரராலும் சொல்லிவிட முடியும். எல்லாவற்றையும்விட, `நீ என்ன செய்ய வேண்டும், எதில் ஜொலிப்பாய்?’ என்பது எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன்படிதான் நடக்கும்.’’
``நம்பிராஜன், விக்ரமாதித்யன் நம்பி, உத்திராடன், அபராஜிதா... போன்ற புனைபெயர்களில் எழுதியிருக்கிறீர்கள். எதற்கு இத்தனை புனைபெயர்கள்?’’

``ம்... மற்ற பெயர்களுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அபராஜிதா என்பது ஒரு எக்ஸ்ட்ரார்டினரி பியூட்டிஃபுல் கேர்ள்.... (அடக்க முடியாமல் சிரிக்கிறார்).’’ 

``ஓ... உங்கள் காதலியா?’’

``காதலி எல்லாம் இல்லை. சும்மா பார்த்ததுதான். (நீண்ட யோசனை) ஒருவேளை, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால்... பார்ப்போம். ஆனால், இன்னொன்றையும் சொல்கிறேன். என் ஜாதகக் கணிப்புப்படி, எனக்கு அடுத்த பிறவி என்பது கிடையாது. நான் செய்கிற அனைத்து நல்லது கெட்டதுகளும் இந்தப் பிறவிக்குள்தான். என்னைவிட ஜோதிடத்தில் மாஸ்டர் யாராவது என் ஜாதகத்தைப் பார்த்து, ‘உனக்கு அடுத்த பிறவி உண்டு’ என்று சொன்னால், நன்றாகத்தான் இருக்கும். (வாய்விட்டுச் சிரிக்கிறார்).’’

``புனைபெயர்களில் எழுதுவதற்கும் உங்களின் ஜோதிட நம்பிக்கைக்கும் தொடர்பு இருக்கிறதா?’’

``ஆமாம்... நிறைய இருக்கிறது. என் தசாபுத்திகள் மாறும்போது நான் பெயர்களை மாற்றிக்கொள்வேன். இதைத் திட்டமிட்டுத்தான் செய்கிறேன். என்னுடைய நட்சத்திரம் உத்திராடம். அதனால் `உத்திராடன்’ என்ற பெயரில் எழுதினேன். ஜோதிடப்படி என் எழுத்து, கவிதை புனைபெயர்கள் எல்லாம் முடிவாகின்றன.’’

``உங்களை நிறைய பேர் கலகவாதி என்கிறார்கள். உண்மையாக, உங்களை நீங்கள் கலகவாதி என்று நம்புகிறீர்களா?’’


``அது அன்றைக்குக் குடிப்பதைப் பொறுத்தது. ஆனால், வேண்டும் என்று நான் எதையும் சொல்வதில்லை; செய்வதில்லை.’’ 

``குடியைக் கொண்டாடுகிற கவிஞர் நீங்கள். குடிக்கும் உங்களுடைய கவிதைக்குமான முதல் உறவு எப்படித் தொடங்குகிறது?’’


``தமிழ் ஒரு துடியான மொழி. என் கவிதைகளில் மரபார்ந்த ஒரு சப்தம் இருக்கும். தமிழின் துடியான சப்த நயங்களை, என் கவிதைகளில் கொண்டுவருவதற்கு எனக்கு ஆல்கஹால் துணைசெய்கிறது. `இதற்காக மட்டும்தான் நீங்கள் குடிக்கிறீங்களா?’ எனக் கேட்டால், சத்தியமாக இல்லை. ஏனென்றால், எனக்குக் குடிப்பதும் பிடிக்கும். குடிப்பதை நான் மிகவும் விரும்பியே செய்கிறேன்.’’
``எப்போது முதன்முதலாகக் குடித்தீர்கள்?’’

``கவிஞர் கண்ணதாசனின் ஊரான சிறுகூடல்பட்டிக்குப் பக்கத்து ஊரில்தான் நான் முதன்முதலில் கள் குடித்தேன். அது 1969-ம் ஆண்டு. மேலூர் ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பார்த்த வேலையை விட்டுவிட்டு, குன்றக்குடி அடிகளாரிடம் அட்டெண்டராக வேலைக்குச் சேர்ந்தேன். சாமி (குன்றக்குடி அடிகளார்) பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்... என மாதத்தில் பாதி நாட்கள் வெளியில்தான் இருப்பார். அவரது கார் மடத்தைவிட்டு வெளியே போனதும், குடும்பஸ்தர்கள் வீட்டுக்குப் போய்விடுவார்கள். பேச்சுலர்கள் ரூமுக்குப் போய்விடுவார்கள். 

ஒருநாள், அடிகளார் மடத்தைவிட்டு வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கிளம்பிப்போனதும்,  ‘செட்’ ஒன்று கூடியது.  ஒருவர், தனது உடல் பிரச்னைக்காக ஒரு மரத்துக் கள்ளை ஒரு மண்டலத்துக்குக் குடித்து ‘சிகிச்சை’ செய்துகொண்டிருந்தார். அவருடன் போய்தான் நான் குடித்தேன். முதன்முதலாகக் குடித்தபோது, ‘ஆஹா... உலகத்துல இது நல்ல விஷயமாத்தானே இருக்கிறது’ என்று நினைத்தேன். இப்போது வரை குடிக்கிறேன். சலித்ததே இல்லை (வெடித்துச் சிரிக்கிறார்).’’ 

`` `நிதானம் தவறும் அளவுக்குக் குடிக்கிறோமே...’ என என்றைக்காவது குற்றஉணர்ச்சி அடைந்தது உண்டா?’’


``குறைவாகக் குடிப்பதில் எனக்கு என்றைக்குமே ஈடுபாடு இருந்தது கிடையாது. நான் குடித்தேன் என்றால்... அவ்வளவுதான். அது வேறு நிலை. அந்த நிலையை எப்படியாவது தொட்டுவிடவே துடித்திருக்கிறேன். சிலர்... தினமும் சிறு அளவு மது எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால், `அட, இவர்கள்கூடக் குடிக்கிறார்களா?’ என்று தோன்றும். நான் குடியின் அடிமுடியைத் தேடுபவன். அப்படி இருந்தும் குடி என்றைக்கும் எனக்கு ஒரு பிரச்னையாகவோ, குற்றவுணர்ச்சியாகவோ இருந்தது கிடையாது. ஆனால், தமிழ்ச் சூழலில், வளர்ந்துவிட்ட ஒரு மகனுக்கு, தன் தந்தை நிதானமில்லாத அளவுக்குக் குடிக்கிறார் என்றால், அது எம்பரேஸிங் சிச்சுவேஷனை உண்டாக்கிவிடுகிறது. அவர்கள் சங்கடப்படுகிறார்கள். என் மனைவிக்குக் கடும் துன்பமாகவும் என் குடி மாறிவிட்டிருக்கிறது. அதனால், அவர்கள் கஷடப்படுகிறார்களே என்ற  ‘அவர்களை முன்னிட்ட’ குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கிறது.

மற்றபடி, குடித்துவிட்டுத் தெருவில் விழுந்துகிடப்பதிலும்கூட எனக்கு ஒன்றுமில்லை. நண்பர்கள்... அதாவது இளைய படைப்பாளிகள், `என் திருமணத்துக்கு வாங்க...’, `வெளியீட்டு விழாவுக்கு வாங்க...’ என்று அழைத்தால்கூட, ‘இதோ பாரு, நான் வந்தா ரொம்பக் குழப்பமாயிடும். நான் வராத வரைக்கும் உனக்கு நல்லது. நல்லா கொண்டாடு’ என்று சொல்லிவிடுவேன்.

சிறுவயதில் திருநெல்வேலியில் இருக்கும்போது சாராயக் கடையைத் தாண்டிப் போவதற்கே பயந்த ஆள்தான் நான். ஊரைவிட்டுப் பிழைப்புக்காக வெளியேறியது, படிக்க முடியாமல் போனது, இளமையில் வறுமை என இளவயதிலேயே மனஅழுத்தம் அதிகமாக இருந்தது. ஆக, ஆரம்பத்திலேயே தப்பான ஒரு தருணத்தில் குடிக்குள் வந்ததால், இப்போது வரைக்கும் அதற்குள்ளேயே இருக்கிறேன்.’’

``தமிழ்நாட்டில் இன்றைக்கு குடிப்பழக்கம் இளைய தலைமுறையை கடுமையாகப் பாதித்திருக்கிறது. அதுவொரு சமூக நோயாகவே நிலைபெற்றுவிட்டது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``குடி, சமூக நோயாக மாறிவிட்டது; உண்மைதான். இது தமிழ்நாட்டின் சாபக்கேடுதான். இதில் மாற்றுக்கருத்து இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் `மாதத்தின் முதல் நாள், கேரளாவில் சாராயக் கடைகள் எல்லாவற்றுக்கும் விடுமுறை’ என்று சொல்வார்கள். ஒரு குடிமகன் முதல் தேதி வாங்கும் சம்பளத்தை வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும். குடியில் கரைத்துவிடக் கூடாது என்கிற கரிசனம்தான் அதற்குக் காரணம். இந்தக் கரிசனம்... அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும். 

தேவையில்லாத பொருளாதார இழப்பு, உயிர் இழப்பு இதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. குடி, கட்டாயம் சமூகச் சீரழிவுதான். அதில் மாற்றுக் கருத்தெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால், உடனடியாக மதுவிலக்கைக் கொண்டுவந்தாலும் சிக்கல்தான். அப்படிக் கொண்டுவந்து விட்டால், இங்கே பலர் அரைக்கிறுக்காகச் சுற்றிக்கொண்டு அலைவார்கள். அரசாங்கம் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துத்தான் செயல்பட வேண்டும்.” 

``நீங்கள் பத்திரிகையாளராகவும் வேலை செய்திருக்கிறீர்கள். இன்றைக்கு இருக்கும் ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

``தமிழ் ஜர்னலிஸம் நன்கு வளர்ந்திருக்கிறது. முன்பைக் காட்டிலும் எண்ணிக்கையிலும் உள்ளடக்கத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. 

இந்தியச் சுதந்திரத்துக்கு வயது 70 ஆகிவிட்டது. ஆனால், ஏன் இன்றைக்கும் பீகாரிகள் மைகிரேட் ஆகி, கொல்கத்தா வருகிறார்கள். ராமநாதபுரத்தில் இருக்கிறவன் ஏன் பிழைப்புத் தேடி சென்னை வருகிறான்? திருநெல்வேலியில் இருக்கிறவனுக்குப் பிழைப்பு சென்னையில் மட்டும்தான் இருக்கிறதா? ஏன் இந்தத் தலைமுறைக்கு பிறப்பு ஓரிடத்திலும், பிழைப்பு மற்றோர்  இடத்திலும், இறப்பு வேறோர் இடத்திலும் இருக்கிறது? ஒரே காரணம்தான்... அது வெறும் வயிற்றுப்பாடு. 70 வருடங்களாக இந்திய அரசு என்னதான் செய்கிறது? வாழ்வின் நிர்பந்தத்தின்பேரில் நடக்கும் மைகிரேஷன் எவ்வளவு வேதனையானது தெரியுமா? அவனவனுக்கு அவன் வாழ்கிற இடத்திலேயே வாழ வழிசெய்து கொடுக்க முடியாத அளவுக்கு இங்கே என்ன நெருக்கடி வந்துவிட்டது? அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் ஏமாற்றுகிறார்கள். நாம் இந்தத் தலைவலிகளோடு வாழப் பழகிக்கொண்டோம். இதை ஏன் எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை? இதையெல்லாம் ஊடகங்கள் காத்திரமாக எழுத வேண்டும்.’’

``நவீனம், பின்நவீனம், பின்காலனியம் போன்ற இசங்கள் குறித்து தமிழ்ச் சூழலில் தொடர்ந்து உரையாடல் நடந்துவருகிறது. இசங்கள் சார்ந்த போக்குகள் உங்களை பாதித்திருக்கின்றனவா?’’


``பின்நவீனத்துவம், நல்ல அறிவுஜீவி சமூகத்துக்குத் தேவையான ஒன்றுதான். சமூகக் கரிசனம்கொண்ட, சமூகத்தில் ஓரிடத்தில் குவியும் அதிகாரத்தைக் கட்டுடைக்க, செயல்பாட்டிலும் எழுத்திலும்  இடதுசாரிச் சிந்தனையாளர்கள் முன்னெடுத்த முக்கியப் பங்களிப்பு அது. அதில் நான் எந்தக் குறையையும் காணவில்லை. அதை முன்னெடுத்துச் சொன்னவர்கள் செய்த குழப்பத்தில்தான் என்னைப் போன்றவர்கள் இசங்களைக் கொஞ்சம் சுணக்கமாக அணுகினோம். தமிழில் பின்நவீனத்துவம் பேசியவர்களில் முக்கியமானவர்கள் நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்கள். இவர்கள்  பின்நவீனத்தைக் கவிதைப் பயிற்சிப் பட்டறையில் வைத்துச் சொல்லிக்கொடுத்தார்கள். அப்படிச் செய்யாமல், அதைப்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தால், விக்ரமாதித்யன் போன்றவர்களுக்கு இன்னும் அதிகப் புரிதல் வந்திருக்கும். ஆனால், இவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.

இவர்கள் முன்னெடுத்த தத்துவம் சரியானதாக இருக்கும்போது, அதை எதிராளியும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எளிமையாகச் சொல்லவேண்டும் அல்லவா... இலக்கியத்தில் புதிய வகைச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துகிறவர்களுக்கு humbleness வேண்டும். ஆனால், `எனக்கு எல்லாம் தெரியும். உனக்கு இதெல்லாம் தெரியுமா?’ என எதிராளியை  மிரளவைக்கத்தான் பார்த்தார்கள். எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு பின்நவீனத்துவம் குறித்துத் தமிழில் சொல்லத் தெரியவில்லை. காரணம், அவருக்குத் தமிழைக் காட்டிலும் ஆங்கிலம்தான் நன்கு தெரியும். ஆரம்பத்தில் பிரேம்-ரமேஷ் கட்டுரைகளை எல்லாம் படிக்கவே முடியாது. பின்னாளில் அவர்கள் தமிழில் மாற்றம் வந்தது. இங்கே மொழி ரொம்ப முக்கியம். எளிய தமிழில், எல்லோருக்கும் புரியும் வகையில் பின்நவீனத்தை முன்னெடுத்தவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. குறைகள் அவர்களுடையது. எங்களுடையது அல்ல. தவிரவும், இந்த இசங்கள் எதுவும் என்னை பாதிக்கவில்லை.’’ 

``அதே நேரத்தில், ஆங்கிலம் அறிந்த பலர் மேலை இலக்கியங்களிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு மூலம் பல நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்களே?’’

``உண்மைதான். க.நா.சு-வின் பங்களிப்பு அளப்பரியது. நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என மொழிபெயர்ப்பில் அவர் உலகம் மிகப் பெரியது. அதேபோல வங்க இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்து மிக முக்கியப் பங்காற்றியவர் ஆர்.சண்முக சுந்தரம். ஒரு பெரிய தொகுப்புப் போடுகிற அளவுக்குப் புதுமைப்பித்தன்கூட கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். கவிதைகளில், பிரம்மராஜன், `மீட்சி’ புத்தகத்தில் வெளியிட்ட உலகக் கவிதைகள் முக்கியமான கான்ட்ரிபியூஷன்தான். 

ழாக் ப்ரெவரின் `சொற்கள்’ கவிதைத் தொகுப்பு, தமிழில் சிறந்த கவிஞர்கள் பலரையும் பாதித்தன. லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராமசுப்ரமணியன் போன்றவர்கள், இதைத் தங்கள் புத்தக முன்னுரையில் நேர்மையாகவே பதிவுசெய்திருக்கிறார்கள். 

70-களில் ரஷ்யாவின் இலக்கிய முன்னோடிகள்,  மாயாகோவ்ஸ்கி, புஷ்கின் போன்றோர் இடதுசாரி வட்டத்தில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கினர். பாப்லோ நெருதாவின் கவிதைகள் சுகுமாரன் போன்றோரைப் பாதித்ததாக அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை. இப்படிச் சொல்வதால், உலக மொழிபெயர்ப்புக் கவிதைகளை நான் ‘சப்பட்டை’ என்று சொல்லவில்லை. முக்கியமானவைதான். 

ஆனால், என் மனது முழுக்க முழுக்க என் மண்ணில்தான் இருக்கிறது. என்னை சங்கக் கவிதைகள் பாதிக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயர், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் கவிதைகள்தாம் கவர்கின்றன. மற்றபடி ஒரு கவிதை வாசகனாக நான் உலகக் கவிதைகளை வாசிக்கிறேன். பிரமிள் ஒருமுறை, `எதிர்க் கவிதை எழுதுவதற்கு பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள் உந்து சக்தியாக இருக்கும். வானம்பாடிக் கவிதைகள் பூர்ஷ்வா அழகியல்தன்மைகொண்டவை. அவை மக்களுக்குத் தேவையில்லை. பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள்தாம் உண்மையான மக்கள் கவிதைகள்’ எனச்  சொன்னார். அது எனக்கு உபயோகமாக இருந்தது. தமிழில் சுயம்புலிங்கத்தை அப்படியான ஒரு கவிஞராகச் சொல்லலாம். அதேநேரத்தில் நம்முடைய தனிப்பாடல் திரட்டு முக்கியமான எதிர்க்கவிதைகள்தான்.

``தமிழில் அரசியல் கவிதைகள், கவிஞர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?’’

``ரொம்ப அரிதான அபூர்வமான ஒன்றைப் பற்றிக் கேட்கிறீர்களே... (சிரிக்கிறார்). ஸ்பெசிமன் இல்லாத ஒன்று சேலஞ்சிங்காகத்தான் இருக்கும். காதல் கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். என்ன... கொஞ்சம் உண்மையாக இருக்க வேண்டும். அதைவிடப் பெரிய கஷ்டம், அது யாயும் ஞாயும்... என்ற சங்கக் கவிதையின் உயரத்துக்குப் போகவேண்டும். அப்படிப் போகாமல், ஒரு காதல் கவிதை தேவையே இல்லை.

பிரச்னை என்னவென்றால், மார்க்ஸிய - லெனினிஸ்ட்டுகளாக முழுமையாகச் செயல்பட்டவர்களால்கூட நல்ல இடதுசாரிக் கவிதைகளை எழுத முடியவில்லை. இங்கே ஒரு முக்கியமான அரசியல் கவிஞர் என யவனிகா ஸ்ரீராமைச் சொல்லலாம். அவர் பேசிக்கலி லெஃப்ட்டிஸ்ட். தமிழ் நவீனக் கவிதைகளில் அவரது அதிகமான பங்களிப்பு, அதன் அரசியல்தான். அதனால்தான் அவர் கவிதைகள் குறித்து ஷங்கர்ராமசுப்ரமணியன், `அது ரஷ்யன் லாங்வேஜ் மாதிரி இருக்கு’ என்கிறார். ஐ ரியலி ஃபீல் இட். 

யவனிகா ஸ்ரீராமுக்கு முன்னர் ஆத்மாநாமின் பல கவிதைகள் அரசியல் பிரக்ஞையோடு எழுதப்பட்டவைதாம். அப்புறம் சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகளில்’ சில கவிதைகள்... அப்புறம் மலைச்சாமியைக் குறிப்பிடலாம், அவர் இயல்பிலேயே ஓர் இடதுசாரி. அவரது கவிதைகள் ரொம்ப டேரிங்காக இருக்காது. இந்த இடத்தில் பிரேம் - ரமேஷின் அரசியல் கவிதைகள் மிகவும் செயற்கையானவை என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவை பின்நவீனத்துவம் உண்டுபண்ணிய கோளாறுகளில் ஒன்று. ஆனால், ரமேஷ் மட்டும் தனியாக வந்து எழுதிய கவிதைகளை மறுபடியும் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்த அரசியல் கவிஞர்கள் சர்க்கிள் நிறைவடைந்துவிடுகிறது. 

பாலஸ்தீனத்தில் அரசியல் கவிதைகள் இயல்பாகவே எழும்பிவரும்... அங்கே சூழல் அப்படி. போரில் தினமும் உயிர்கள் பலியா கின்றன. ஈழத்தில் அரசியல் கவிதைகள் எழுதுவதற்கான காலச்சூழல் நிலவுகிறது. ஆனால், இந்தியாவில் எம்.எல். மூவ்மென்டைத் தவிர வேறு யாரும் அரசாங்கத்தை, அதன் இறையாண்மையை எதிர்ப்பதில்லை. மாநிலங்களில்கூட 

பொதுமக்களைப் பாதிக்கிற அளவுக்கு பிரளயமான எந்த விஷயங்களும் நடக்கவில்லை. அதனால், என்னளவில் சொல்கிறேன்... அரசியல் கவிதைகள் எழுதுவதற்கான அரசியல் சூழல் இந்தியாவில் இல்லை.’’
``இந்தியாவில் தலித்கள், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்கின்றன. பரவலாக இந்தியா முழுக்கப் போராட்டங்கள் சிறிதும் பெரிதுமாக நடந்துவருகின்றன. இந்தச் சூழலில், ஒடுக்கப்பட்ட,  சிறுபான்மை மக்கள் சார்பான அரசியல் நியாயங்களைப் பேசுகிற கவிதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்... உங்கள் பார்வையில் அவை அரசியல் கவிதைகள் இல்லையா?’’ 

``முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... கவிதைகள் சத்தம் போடக் கூடாது. பாலஸ்தீனத்தில் எழுதப்படும் அரசியல் கவிதைகள்கூடச் சத்தம் போடுவதில்லை தெரியுமா? இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. நேரடியாகக் களத்தில் இறங்கி, துன்பப்பட்டு, நொந்து, களநிலவரம் தெரிந்து எழுதுவது ஒரு வகை. லண்டன், அமெரிக்காவில் பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு எழுதுவது இன்னொரு வகை. இதை அவர்கள் எழுதும் கவிதைகளில் இருந்தே உணர்ந்துகொள்ள முடியும். பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு எழுதுவதில் உக்கிரத்தன்மை அதிகமாக இருக்கும். களத்தில் உழல்பவர்கள் எழுதுகிற கவிதைகளில் அவர்களின் பிரச்னை அமைதியாக, அர்த்தபூர்வமாகப் பேசப்பட்டிருக்கும்.

தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை அல்ட்டிமேட் கோல், சங்கக் கவிதைகள்தாம். அவற்றைத் தாண்டி முன்னுதாரணங்களே இல்லை. அப்படி வரவும் முடியாது. மொழி சார்ந்தும் கவித்துவம் சார்ந்தும் உச்சபட்ச  சாதனைகள் சங்கக் கவிதைகளில் நிகழ்த்தப்பட்டுவிட்டன. குறிப்பாக, அகப் பாடல்கள்.

புறப்பாடல்களில் அந்தச் சாதனை கொஞ்சம் குறைவுதான்.  அன்றைக்கு ஊரும் நாடும் சின்னதாக இருந்ததால், புறப்பாடல்களில் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. அதில்கூட அரசியல் தன்மைகொண்ட கவிதைகள் இருக்கின்றன. அரசனை இடித்துரைக்கிறார் ஔவையார். முடியாட்சியில் அரசனை இடித்துரைப்பதே அந்தக் காலத்தில் பெரிய விஷயம். தலித் கவிதைகளாகட்டும், அரசியல் கவிதைகளாகட்டும்.. சத்தமாக மட்டுமில்லை. அவை துவேஷமானதாகவும் இருக்கின்றன. 

தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனாக ஒருவன் இன உணர்வோடு, மொழி உணர்வோடு இருப்பதுகூட குற்றமில்லைதான். ஆனால், அந்தத் துவேஷத்தைக் கவிதைகளில் காட்டக் கூடாது என்பது என் அபிப்ராயம். பெரிய அரசியல் கவிஞன் என்று சொல்லப்பட்டாலும் நெருதா அதிகமாகப் பேசப்பட்டது அவரது காதல் கவிதைகளால்தான். ரஷ்யாவில் புஷ்கின், மாயாகோவ்ஸ்கி, மாக்ஸிம் கார்க்கி... என பொலிட்டிக்கலாக எழுதினார்கள் என்றால், அதற்கு ஆதரவான பொலிட்டிக்கல் க்ளைமேட் அங்கே இருந்தது. அதனால் அவர்கள் எழுத்துகள் விரும்பி வாசிக்கப்பட்டன. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்... காலம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு ரோல் எடுத்துக்கொண்டே இருக்கும். அதைத்தான் நாம் கன்சிடர் செய்ய வேண்டும்.’’

``அதிகாரத்தால் குரல் நசுக்கப்படுகிற நிலத்திலிருந்து எழுதும் ஒரு கவிஞனின் கவிதைகளில் சத்தம் வரத்தானே செய்யும்? பாரதியின் அரசியல் கவிதைகளில்கூட சத்தம் இருக்கிறது; அறைகூவல் இருக்கிறது. ஆத்மாநாம்கூட... `செய்... ஏதாவது செய்’ என்று சத்தம் போடுகிறாரே?’’


``அவற்றை எல்லாம் யார் கவிதைகளாக கன்சிடர் செய்கிறார்கள்? பாரதி மாபெரும் கவிஞன். அதில் நோ டிஸ்பியூட். ஆனால், அவனின் கவிதைகளில்கூட சில பொயட்ரி லிமிட்டேஷன்ஸ் உண்டு. தவிரவும், பாரதியின் பாடல்களில்கூட பிற்கால யாப்பு, கிளிக்கண்ணி, காவடிச் சிந்து உண்டு.  ஒன்று சொல்லவா..? தமிழில் மிகச் சிறந்த பாடலாசிரியன் பாரதிதான். அவன் ராகம், தாளம் தெரிந்துதான் அந்தச் சப்தத்தை அனுமதித்தான். அது மேடைகளில் பாட, பிரசங்கம் செய்யப் பயன்பட்டது. ஆனால், அதுவல்ல பாரதி. `கண்ணன் பாட்டு’, `பாஞ்சாலி சபதம்’ போன்றவற்றில்தான் பாரதி நிலைத்து நிற்கிறான். அதனால்தான் அவன் மாபெரும் கவிஞன். அப்புறம், கவிதையில் `நீ... வா... போ...’ என்று சொன்னாலே அந்தக் கவிதை டீகிரேட் ஆகிவிடுகிறது. இன்றைக்கு இவ்வளவு ஊடகங்கள் வந்துவிட்டன. விவாதங்கள் பெருகிவிட்டன. `இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது’ என்று ஊடகங்கள் விவாதிக்கின்றன. பெஸ்ட் ஸ்காலர்கள் பத்து இருபது பேர் கருத்து சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது, `இதை நீ செய்... இதைச் செய்யாதே’ என்று சொல்வதா கவிஞனின் வேலை? முதலில் தமிழில் கவிதைகளை யார் படிக்கிறார்கள்? அதுவே பெரிய பிரச்னையாக இருக்கிறது.

மாக்ஸிம் கார்க்கியின் எழுத்தில் சத்தம் இருக்கும். ஏனென்றால், அவன் உருவாகிவந்த பின்னணிதான் காரணம். அவன் பெரிய கல்வி கற்றவன் இல்லை. ஆனால், டாஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, துர்கனேவ், ஆன்டன் செக்காவ் போன்றோரின் எழுத்துகளில் அந்தச் சத்தம் இருக்காது. காரணம், அவர்கள் கற்ற கல்வி, அவர்களின் குடும்பப் பின்புலம் இவைதாம் அவர்களை மாஸ்டர் ஆக்கக் காரணம். அவர்கள் படைப்பு செவ்வியல் ஆக, அதுதான் காரணம்.’’

‘`மாக்ஸிம் கார்க்கி போன்ற பெரிய கல்வி வாய்ப்பற்ற நாட்டுப்புறத்தானின் குரல் சத்தமாகத்தானே இருக்கும்... அதை எப்படிக் குறைசொல்ல முடியும்? ஒரு படைப்பு நீங்கள் குறிப்பிடும் ‘செவ்வியல்’தன்மையோடு இருந்தாக வேண்டிய கட்டாயம் என்ன?’’

``செவ்வியல் தன்மையோடு இருப்பதுதான் நீண்ட ஆயுளோடு இருக்கும். அதுதான் இலக்கியத்தின் சூட்சுமம். அந்த இடத்தை நோக்கித்தான் நாம் போக வேண்டும். நம் இலக்கியம் போகவேண்டும். வாசகர், விமர்சகர்... இப்படி எவரையும் பற்றி கன்சிடர் செய்யாமல், செவ்வியல் தன்மை நோக்கிப் போவதுதான் ஒரு கவிஞனின் எழுத்தாளனின் அல்ட்டிமேட் நோக்கமாக இருக்க வேண்டும். எங்கேயோ இருக்கிற டால்ஸ்டாய் பற்றி, `சித்தார்த்தன்’ நாவல் எழுதிய ஹெர்மன் ஹெஸ்ஸே பற்றி எதற்குப் பேசுகிறோம்? அதன் செவ்வியல்தன்மைக்கும் ‘வாழ்க்கை என்பது எம்ப்டினெஸ்’ என்று அது சொல்வதற்காகவும்தானே? ஒரு எழுத்தாளன் செவ்வியல்தன்மையை நோக்கிப்போவதுதான் அவன் லட்சியமாக இருக்க வேண்டும் . ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல. அது  ஒரு சவாலான வேலை.’’

``நாட்டார் மொழியில், சாமானியர்களின் வாழ்வியலை எழுதும் என்.டி.ராஜ்குமார், ஒடியன் லட்சுமணன், மு.ஹரிகிருஷ்ணன், கறுத்தடையான், வா.மு.கோமு... இவர்களின் கவிதைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?’’

‘`இவர்களில் கறுத்தடையானிடம் நல்ல கவித்துவம் இருக்கிறது. அவர் இன்னும் கொஞ்சம் வாசிக்க வேண்டும். அதற்குள் அவர் சிறுகதை, நாவல் என்று போய்விட்டார். காரணம், அவர் கவிதைகள் பற்றி யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பதுதான். ஆனால், நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது பிரசுரமாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மற்றபடி வா.மு.கோமு போன்றவர்களிடம் கவிதை சம்பந்தமாக ஏதோ ஒன்று இருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கவிதைகள் பற்றிய லேர்னிங் குறைவாக இருக்கிறது.’’

``என்.டி.ராஜ்குமார் போன்றவர்களையும் அப்படிச் சொல்கிறீர்களா?’’

``என்.டி.ராஜ்குமாரின் கவிதை ரசனையை நான் பாராட்டியிருக்கிறேன். அவருடைய  `ஒடக்கு’ கவிதைத் தொகுப்புக்கு நான் கட்டுரை வாசித்திருக்கிறேன். அதற்குக் காரணம், அந்தத் தொகுப்பு முழுக்க அவரது குடும்பம் சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த சில தொன்மங்களைக் கவிதையாக்கி யிருந்தார். ஆனால், `ஒடக்கு’ தொகுப்புக்குப் பிறகு வந்த அவரது கவிதைகள் ஒன்றும் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மொழி சார்ந்த ஒன்றில், பத்து வருடங்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும். அதை என்.டி.ராஜ்குமார் செய்யவில்லை.
``பெண்கள் எழுதுகிற கவிதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அவர்கள் கவிதைகளிலுமே எனக்கு நிறைய சங்கடங்கள் இருக்கின்றன. சங்கப் பெண் கவிஞர்களான வெள்ளிவீதியார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஔவையார் போன்றோரை தற்காலப் பெண்கவிஞர்கள் யாரும் தாண்டவே இல்லை. பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, சுகிர்தராணி, பெருந்தேவி, குட்டி ரேவதி... நால்வரும் முக்கியமானவர்கள். இவர்கள் கவிதைகளைக்கூட மொழிதான் தூக்கி நிறுத்துகிறது. கன்ட்டென்ட் புதிதாக இல்லை. பாரதி சொன்ன `சொல் புதிது பொருள் புதிதில்’, இவர்களிடம் சொல் புதிதாக இருக்கிறது. பொருளில் புதிது இல்லையே.
லீனா மணிமேகலை, மேலே சொன்ன நால்வர் வரிசையில் வரக்கூடிய பொட்டென்ஷியல் உள்ள கவிஞர்தான். ஆனால், அவருக்கு வேறு திசைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கவிதையைப் பொறுத்தவரை `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்பதுதான் சரியானதாக இருக்கும். அதற்காக இவர்களை லக்ஷ்மி மணிவண்ணன், சபரிநாதன், பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம் அளவுக்கான கவிஞர்களாக என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.” 

``உங்கள் கவிதைகளில், கவிதைத் தலைப்புகளில் இந்து மதம் சார்ந்த, தத்துவம் சார்ந்த சொல்லாடல்கள் நிறையவே தென்படுகின்றன. இது உங்களுக்கு பலமா... பலவீனமா?’’


``நான் இந்து மதத்தை ஏற்றுக்கொள்கிறவன் அல்ல. வாழ்க்கையில் மோசமானவனாக இருந்தபோதிலும், ஒரு கவிஞனாக எல்லாவற்றையும் கடந்து, மன அளவில் ஓர் உயர்ந்த நிலையில் இருக்கிறேன். ஆனால், எனக்கு கங்கை பிடித்திருக்கிறது, காசி விஸ்வநாதர் பிடித்திருக்கிறது, சம்ஸ்கிருதத்தின்மீது எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை. எல்லாம் பிடித்திருக்கின்றன. என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?”

``சமஸ்கிருதத்தின் மீது எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை என்கிறீர்கள். எதையும் நாம் விரும்பிக் கற்பது வேறு, இந்தித் திணிப்பு போன்ற சூழலை... அதைத் தொடரும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``கலைஞனுக்கு மொழி, இனம் போன்ற எல்லைக்கோடுகள் தேவையில்லை என்பது என் வாதம். ஏக இந்தியாவை ஏற்றுக்கொண்டவர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதில் எப்படிக் குறைந்துபோவார்கள்? எனக்கு இந்தி தெரியாததால் என் வடஇந்தியப் பயணத்தை காதுகேட்காத, வாய்பேச இயலாத ஒரு மனிதனைப்போலக் கழிக்க நேர்ந்ததை நினைத்து இப்போதும் வெட்கப்படுகிறேன். ஆனால், இந்தித் திணிப்பு என்பது எப்படி ஓர் அரசியலோ அப்படித்தான் இந்தி எதிர்ப்பு என்பதும். இவற்றுக்குள் நான் சிக்க விரும்பவில்லை.’’ 

``சரி விடுங்கள்... காதல் என்ற உணர்வு அல்லது வார்த்தை உங்களுக்கு எப்போது அறிமுகமானது? இப்போது காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’


``அப்போதும் இப்போதும் எப்போதும் மிக நல்ல வார்த்தை என்றால், அது காதல்தான். வாழ்க்கையில் நான் சோற்றுக்காக, படிப்புக்காக, வேலைக்காக ஓடிக்கொண்டே இருந்தேன். என் மனைவியோடு  கணவனாக, பிள்ளைகளுக்குத் தகப்பனாக நான் சேர்ந்து இருந்தது மிகவும் கொஞ்சம் காலம்தான். வயிற்றுப் பாட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் ஓடிக்கொண்டே இருந்ததில், காதல்  ‘பாஸிங் கிளவுட்ஸ்’போல சட்டென என்னைக் கடந்துபோய்விட்டது. ஆனால், காதலிக்காமல் எல்லாம் இல்லை. அந்தக் காதல் நிலைக்க, சில வேலைகள் செய்ய வேண்டும். அதைச் செய்கிற அளவுக்கான சொகுசை, நிதானத்தை, வாழ்க்கை எனக்குத் தரவில்லை. மற்றபடி பெண்கள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களே.’’

``ஒரு கவிஞனாக உங்களை மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் எது?’’


``நிறைய தருணங்களில் உணர்ந்திருக் கிறேன். நான்கு நல்ல கவிதைகள் எழுதிவிட்டால் வரும் பாருங்கள் திமிர்... நடக்கும்போதே நடை துள்ளலாக இருக்கும். அதையும் தாண்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைக் `கவிஞரே...’ என்று இயக்குநர் பாலா முதன்முறை கூப்பிட்டபோதும் உணர்ந்தேன். என் மேட்னெஸ் பிடித்துப்போய் அல்லது வயதின் மூப்பு காரணமாகவோ, அவர் என்னை அப்படி அழைத்திருக்கலாம். ஆனால், அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பிரபல இயக்குநர் அப்படிக் கூப்பிட்டபோது, எனக்குக் கர்வமாகத்தான் இருந்தது. இயக்குநர் கே.ராஜேஷ்வர் என்னை, `கவிஞரே...’ என்றுதான் அழைப்பார். நல்ல கவிதைகள் எழுதும்போதெல்லாம் ஒரு திமிர் வரும் பாருங்க... அது வேற... வேற. (முகத்தில் பெருமை உணர்வு பொங்குகிறது)’’
``உங்கள் முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’’

``என்னை நான் தாத்தாவாக உணர்ந்ததே இல்லை. இதில் ஒரு சுயநலமும் உண்டு. ஏனென்றால், நம்மை தாத்தா என நினைத்து விட்டாலே நம்முடைய க்ரியேட்டிவிட்டி அடிபட்டுப்போகும். இந்தியன் பொயட், ரைட்டர்... எல்லாருமே முப்பது முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாழ்க்கையைத்தான் எழுதிக்கொண்டிருக் கிறார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு போர்முனைக்கு ரிப்போர்ட்டராகப் போனது போன்ற வாழ்க்கை எல்லாம் இந்தியன் ரைட்டருக்கு இல்லை. இந்திரா பார்த்தசாரதி... தாத்தா! மூத்தவர் கி.ராஜநாராயணன் தாத்தா! ஆனால், என்றைக்கும் விக்ரமாதித்யன் தாத்தாவாக மாட்டான் (சிரிக்கிறார்). தாத்தாவாகிவிட்டால் ஓய்வுக்குள் போக வேண்டும். ரிட்டையர்மென்ட் ஆகவேண்டும். எனக்கு என்றைக்கும் ரிட்டையர்மென்ட் கிடையாது. இப்போதும் கோவிலனின் `தட்டகம்’ படிக்கிறேன். எம்.முகுந்தனின் `கடவுளின் குறும்புகள்’ படிக்கிறேன். தமிழில் இப்போது எழுதுகிற இளம்கவிஞர்களின் கவிதைகளைப் படித்துவிட்டு, அபிப்ராயம் சொல்லி அறிமுகப்படுத்துகிறேன். பின்னர் எப்படி நான் முதுமையை உணர்வேன்?’’

 ``கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைச் சொல்லுங்களேன்?’’

``நினைவில் இருப்பதைச் சொல்கிறேன். லக்ஷ்மி மணிவண்ணனின், `எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம்’, சபரிநாதனின், `சனீஸ்வரனிடம் பயிற்சிபெற்ற அம்மாச்சி’, ஷங்கர்ராமசுப்ரமணியனின், `மணி பாப்பா’, ஸ்ரீநேசனின், `வள்ளலார் தெரு’, கண்டராதித்தனின், `பாதாள பைரவி’ இளங்கோ கிருஷ்ணனின், `பெப்பரப்பேக்கள் கதை’, ராணி திலக்கின், `மயில் அடிபடும்’ காட்சி வருகிற ஒரு கவிதை, மாலதி மைத்ரியின் குழந்தை ரிலேட்டடான ஒரு கவிதை (தாய்-மகள் உறவு பற்றி வரும்), வெய்யிலின்  ‘அறத்தடி நீர்’, முகுந்த் நாகராஜன், வே.பாபு, செல்மா பிரியதர்ஸன் கவிதைகள் என இந்தப் பட்டியல் ரொம்பப் பெரிது.’’ 

``கலை சார்ந்த விஷயங்களில் அரசின்  செயல்பாடுகள், ஒரு கவிஞராக உங்களுக்குத் திருப்தியளிக்கின்றனவா?’’

``இலக்கியத்துக்கும் கலைக்கும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. இந்திய அரசாங்கத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். மத்திய அரசில் நேரு, மொரார்ஜி தேசாய் அரசாங்கம் வரைக்கும் கலைஞர்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கத்தான் செய்தன. இந்திரா காந்தியிடம் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? சிவாஜிக்கு அப்புறம் கமல் ‘செவாலியே’ விருது வாங்கினார். அதற்குத் தமிழக அரசிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புக்கூட பிரஸ் ரிலீஸாக வரவில்லையே... 

சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகும் புத்தகங்களில் திராபையாக இருப்பது இரண்டு மொழிகளில்தான். ஒன்று தெலுங்கு; மற்றொன்று தமிழ். மலையாளம், பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளில் தவறு நடக்காமல் விழிப்பாக இருப்பார்கள்.  சாகித்ய அகாடமியில் தமிழைப் பொறுத்தவரை டெமாக்ரஸி கிடையாது. ஒருமுறை அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தால், இன்னொரு முறை தேவதச்சனுக்குக் கொடு; கலாப்ரியாவுக்குக் கொடு. கொடுக்க மாட்டார்கள்! தமிழக அரசு, கலை குறித்த அறியாமையில் இருக்கிறது. இன்னொரு கொடுமை சொல்லவா... அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றவர்கள் தமிழக அரசின் இரண்டாம் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். யாரோ ஒரு அ.தி.மு.க - திமு.க-காரன் முதல் பரிசு வாங்கிட்டுப் போயிருப்பான்.’’

‘` `இவர்கள் எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால், கொண்டாடப்படவில்லை’ என்று நீங்கள் ஆதங்கப்படும் படைப்பாளிகள் குறித்து..?’’


``ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான காலம் வரும். கொண்டாடப்படுவார்கள். கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம். புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசுகிறோம்... நாம் பேசுவோம் என்பதற்காகவா அவர் எழுதினார்? லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய அளவுக்கு அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்னொரு விஷயம்... அவர் கவிதையில் ஒரு காம்ப்ளெக்சிட்டி இருக்கு. அப்படி இருப்பவருக்கு தாமதமாகத் தான் எல்லாம் நடக்கும். தேவதச்சனுக்கும் அதுதான் நடந்தது. அதைத்தாண்டி அவருக்கு ஒரு விஷ்ணுபுரம் விருது கிடைக்கிறது. விளக்கு விருது கிடைக்கிறது. யவனிகா ஸ்ரீராம், பிரான்சிஸ் கிருபா இருவரும் அவர்களின் கவிதைகளின் அளவுக்குக் கொண்டாடப்படவில்லை. சிலர் லாபி பண்றாங்க. அது ஒருவகைத் திறமைதான். ஆனால், அது ஒரு கவிஞனுக்கு வேண்டாமே... அதனால் காலம் வரும் வரை பொறுத்திருப்போம்.’’

`` `விக்ரமாதித்யன் குடியில் சாதி சார்ந்த பேச்சை முன்வைப்பார்’ என்று உங்கள்மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே... உங்கள் பதில் என்ன?’’

``அப்படி போதையில் நடந்திருக்கலாம். ஆனால், அது என் இயல்பில்லை. என்னை ஓர் இந்து வெள்ளாளன் என்று அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ் சொல்கிறது. அரசு சொன்னால், அதை ஏற்றுக்கொள்வதுதானே நல்ல குடிமகனுக்கு அழகு. (சிரிக்கிறார்) ஒண்ணே ஒண்ணுதான்... சாதி, மத, இன துவேஷம் எப்போதும் யார் செய்தாலும் சரியில்லை.’’

``உங்களுடைய இலக்கற்ற பயணம் எதன் பொருட்டானது?’’


``என்னால் ஓர் அச்சில் வார்த்தாற்போல ஒரே மாதிரி வாழ முடியவில்லை. இன்னும் சொல்வதெனில் எனக்கு அப்படி வாழப் பிடிக்கவில்லை. வாழ்வில் ‘மொனாட்டனஸ்’ என்னை சித்ரவதை செய்கிறது. அதை அவ்வப்போது மீற முயல்கிறேன். நான் மிதமிஞ்சிக் குடிப்பதுகூட இதனால்தான் என்றும் சொல்லலாம். இலக்கற்ற பயணத்தில் நான் எடையற்றுப் போகிறேன். இலவம் பஞ்சுபோல மிதக்கிறேன். ஒரு கலைஞனுக்கு இந்தச் சுதந்திர உணர்வு முக்கியம். வாழ்க்கை என்னை இறுக்கும்போது, அதிலிருந்து விட்டுவிடுதலையாகும் ஓர் ஏற்பாடாக இலக்கற்ற பயணங்கள் இருக்கின்றன. நான் ஒரு கவிஞன் என்பதன் அடையாளம் அது.’’

``வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?’’


``காலையில் டீ சாப்பிட, இட்லி சாப்பிட பாக்கெட்டில் பணம் இருந்தால் போதும். (கொஞ்ச நேரம் மௌனமாக இருக்கிறார்) பிள்ளைகள் கஷ்டப்படாதவாறு படிக்கவைத்து ஆளாக்குவதற்கு நிச்சயமாகப் பணம் வேண்டும். அது ரொம்பவும் முக்கியம்.’’

``தமிழில், ஒரு கவிஞன் கவிதையை மட்டும் நம்பி வாழும் சூழல் இருக்கிறதா?’’


``முடியவே முடியாது... கிடையவே கிடையாது. கவிதைப் புத்தகங்களுக்கு அரசாங்க நூலக ஆணையே கிடைப்பதில்லையே... கவிதைப் புத்தகம் ஐந்நூறுகூட விற்பதில்லையே.’’

``சினிமாவிலும் நடிக்கிறீர்கள். சினிமா என்பது உங்களுக்கு என்னவாக இருக்கிறது?’’


``நல்ல மனிதர்கள் என்மீது பாசமாக இருக்கிற இடம் சினிமா. பாலா, திருக்குமரன், லிங்குசாமி போன்ற இயக்குநர்கள் என்மீது அன்பாக இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அதிகமான பணம் கிடைக்கிறது. அது என் லௌகீக வாழ்க்கைக்கு நல்லது செய்கிறது. எல்லோருக்கும் என்னை அடையாளம் தெரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.’’

``கவிதை இல்லையென்றால், கவிஞனாக இல்லையென்றால் விக்ரமாதித்யன் யாராக இருந்திருப்பார்?’’ 

``நிச்சயம் ஒரு கணக்குப்பிள்ளையாக இருந்திருக்க மாட்டேன். அப்படி ஒரு வாழ்க்கையை வாழக் கூடாது என்ற பிடிவாதம் எனக்குள் உண்டு. எந்தத் தொழிலிலும் நிலையாக இருக்க மாட்டான் விக்ரமாதித்யன். எந்தத் தொழிலும் இவனுக்கு வராது... ஆனால், இவனுக்கான காசு இவனைத் தேடி வரும் என்பதுதான் என் ஜாதகம். ப்ரூஃப் ரீடராக நீடித்து இருந்திருந்தால் இன்னும் மோசமான குடிகாரனாகி, இந்தக் கேள்விக்கே பதில் சொல்லாமல் செத்துக்கூடப் போயிருப்பேன்.’’

``புதிதாக எழுதவரும் கவிஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?’’


``நிறைய படியுங்கள். அந்தந்தப் பகுதிகளில் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். அவர்களைத் தேடிப்போய்ப் பேசுங்கள். ஒருகாலத்தில் தமிழ் நவீன இலக்கியத்தில் மூத்தோர்களைப் போய்ப் பார்த்துப் பேசுவது பண்பாடாக இருந்தது. இதைக் கூடுமானவரை தொடருங்கள். அது உங்கள் கவிதைகளை நன்றாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும். சங்க இலக்கியங்களை உரைநூலோடு படியுங்கள். குறுந்தொகை, சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம்... எல்லாவற்றையும் படியுங்கள்.அவை உங்களுக்குள் ‘எளிதாகச் சொல்லும்’ முறையை வளர்க்கும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றால், பாப்லோ நெருதாவைப் படியுங்கள். கவிதையோடு சம்பந்தப்பட்டவர் களிடம் உங்கள் கவிதைகளைக் காட்டி அபிப்ராயம் கேளுங்கள்... அவ்வளவுதான். பின்பு அவரவர் திறம்.’’ 

``யாருமில்லாத தனித்தீவுக்கு உங்களை அனுப்பிவைக்கிறார்கள். கையில் ஒரு புத்தகம் மட்டும் எடுத்துச் செல்லலாம் என்றால் என்ன புத்தகம் எடுத்துப்போவீர்கள்?’’


``குறுந்தொகை.’’

``ஏன்?’’


``மனசுக்குப் பிடிச்சிருக்குப்பா. தப்பித்தவறி எனக்கு அடுத்த பிறவி இருந்தால், அப்போதும் நான் கவிஞனாகவே பிறக்க விரும்புகிறேன்... அதுவும், தமிழ்க் கவிஞனாகப் பிறந்து `குறுந்தொகை’ வாசத்தோடு கவிதைகள் எழுத விரும்புகிறேன்.’’

சாரு நிவேதிதா - நேர்காணல்

நன்றி - விகடன் தடம்.

"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை!” - சாரு நிவேதிதா

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: வி.பால் கிரகோரி
லக்கியம், சினிமா, அரசியல், ஆன்மிகம், இசை, மொழிபெயர்ப்பு என, தனது 25 வயதிலிருந்து தொடர்ந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமல்லாது ஆங்கில, மலையாள இதழ்களிலும் விரிவான தளத்தில் இயங்கிவருபவர். பொதுப்போக்குகளின் கருத்துகளுக்கு, ரசனைகளுக்கு எதிரான தடாலடி கருத்துகளை எவ்விதத் தயக்கமும் இன்றி  முன்வைப்பவர். எப்போதும் வெளிச்சத்திலேயே இருக்கும் மிகச் சில தமிழ்ப்  பிரபலங்களில் ஒருவர். சூரியனுக்குக் கீழ் உள்ள எது குறித்தும் யார் குறித்தும் பேசலாம் சாரு நிவேதிதாவிடம்...
“இலக்கிய வாசிப்புக்குள் எப்படி வந்தீர்கள்?”

“ஐந்து வயது வரை நான் வாய் பேசவே இல்லை என்று அம்மா சொல்வார்கள். பிறகு, கலியபெருமாள் கோயிலுக்கு (அரியலூர்) நேர்ந்துகொண்டதற்குப் பிறகு பேசியிருக்கிறேன். பேசிய உடனேயே ‘இதுக்கு இவன் பேசாமலே இருந்திருக்கலாம்’ என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்தார்களாம். நான் சிறுவயதில் மிகவும் நோஞ்சானாக இருந்தேன். ஆகவே, எங்கும் விளையாடச் சென்றதில்லை. ஒருமுறை பையன்களோடு விளையாடப்போய் கை உடைந்துவிட்டது. அது முதலே நான் ஆண் நண்பர்களோடு சேர்வதில்லை. பெண்களோடு சேர்ந்து பல்லாங்குழி, தாயம் என விளையாடுவது வழக்கமாகிவிட்டது. பெண்களோடு மட்டும்தான் சகவாசம். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஆண்களோடு விளையாடப் போகாததால், நான் நன்றாகப் படித்தேன். பெண்கள் ஒவ்வொருவராகத் திருமணம் செய்துகொண்டு போனபிறகு, ஒரு கட்டத்தில் ஒருவிதமான தனிமை உணர்வு வந்தது. அப்போது தீவிரமான திராவிட இயக்க எழுச்சிக் காலகட்டம் வேறு. ஊர் ஊராக நூலகங்கள் திறக்கப்பட்டன. அப்பா ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்; தி.மு.க. வெறியர். வாசிப்பு ஒரு முக்கியக் கலாசாரமாகப் பரவிக்கொண்டிருந்தது அப்போது. எங்கள் ஊரிலும் நூலகம் திறக்கப்பட, அங்கு சென்று வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு அந்தக் காலகட்டத்தில் பெரியாரும் தெரியாது; அம்பேத்கரும் தெரியாது.  ஆனால், படித்தால் இந்த ஊரைவிட்டுத் தப்பிவிடலாம் என்பது மட்டும்  தெரிந்திருந்தது.”

“என்ன மாதிரியான புத்தகங்கள் வாசித்தீர்கள்?”

“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் ஜெயகாந்தன் வரை கிடைத்ததையெல்லாம் வாசித்தேன். பிறகு, பி.யூ.சி-யில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலம் புரியவில்லை. அந்த வயதுக்கே உரிய சேட்டைகள் ஆரம்பித்தன.  வாசிப்பும் குறைந்தது. என் தாய்வழி மாமா இரண்டு பேர், நாகூரில் பெரிய ரெளடிகளாக இருந்தார்கள். அவர்களையே முன்னோடிகளாகக்கொண்டு, இரண்டு வருடங்கள் ஒரு ரெளடித்தனமான வாழ்க்கையை வாழ்ந்தேன். ஒரு சமயம்  ஒருவரை வீடுபுகுந்து தாக்கிவிட்டேன். போலீஸ் கேஸ் ஆகிவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் அப்போது ஒரு நல்ல இன்ஸ்பெக்டர் இருந்தார். “ஊருல ஒன்ன நல்ல பையனாச் சொல்றாங்க. ஒரு தடவ உன்மேல எஃப்.ஐ.ஆர். போட்டேன்னா, அப்புறம் உன் வாழ்க்கை மொத்தமா நாசமாயிடும். இனிமே இங்க  இருக்காத, வெளியூர் போயிடு...” என்று சொன்னார். அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் திருமணமாகி விவாகரத்து ஆன ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருந்தேன்.அவளுக்கு வயது கொஞ்சம் அதிகம். எனக்கு 17-18 இருக்கும். அவளுக்கு 23. ‘திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் மதம் மாற வேண்டும்; இல்லையென்றால் கட்டிவைத்து உதைப்போம்’ என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் மிரட்ட நான் ஊரைவிட்டு ஓடிவந்தேன். பிறகு போகவே இல்லை.”

“பிறகான வாசிப்பு?”


“திருச்சியில் கல்லூரியில் சேர்ந்ததும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். ஷேக்ஸ்பியரை வாசிப்பதற்கான அறிமுக நூல்கள், ஆங்கில நாவல்கள் என நிறைய வாசித்தேன். வேறு எதிலும் கவனம் இல்லை. வாசிப்பு வாசிப்பு என்று தீவிரமாக நூலகத்திலேயே கிடந்தேன். ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆஸ்கார் ஒயில்டு,ஜான் ஜெனே என வாசிக்க ஆரம்பித்ததும் ஜெயகாந்தன் எனக்குப் போதவில்லை. திருநெல்வேலி, மதுரைக்காரர்களைப் போலல்லாமல் நாகூர் போன்ற ஒரு பகுதியில் வாழ்ந்ததால், அடிப்படையில் ரஷ்ய இலக்கியம் எனக்குப் பரிச்சயமே இல்லாமல் போய்விட்டது. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் இலக்கியத்தையே பெரும்பாலும் வாசித்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு வேலை கிடைத்துவிட, கல்லூரியைத் தொடராமல் டெல்லிக்குச் சென்றேன். டெல்லிக்குப் போனபிறகுதான் ரஷ்ய இலக்கியம் படித்தேன். அதுவும் தஸ்தாயெவ்ஸ்கி மட்டும்தான். டெல்லி வாசிப்புதான் என்னை ஒரு வாசகனாக, எழுத்தாளனாக வடிவமைத்தது. டெல்லியில் சிவில் சப்ளைஸ் துறையில் 12 வருடங்கள் வேலை செய்தேன். ஏழைபாழைகளுக்கு ரேஷன் வழங்கும் துறை. லஞ்சம் தாண்டவமாடும். ‘கலைஞனுக்கு எதுக்குப் பணம்’ எனத் திரிந்த காலம் அது. மாதத்தில் ரெண்டு நாட்கள்தான் வேலைக்குச் செல்வேன். லஞ்சத்தில் பங்குகொடுக்க வேண்டியதில்லை என்பதால், என்னையும் யாரும் கண்டுகொள்வதில்லை. அமெரிக்கன் லைப்ரரி, மேக்ஸ்முல்லர் பவன், சென்ட்ரல் செக்ரட்ரியேட் லைப்ரரி, சாகித்ய அகாடமி லைப்ரரி எனத் தவமாய்க் கிடப்பேன். ஹங்கேரியன் சென்டரில் படம் பார்ப்பேன். மண்டி ஹவுஸ் ஏரியாவில் மட்டுமே அப்போது பத்து லைப்ரரிகள் இருந்தன. லெவிஸ்ட்ராஸ், ஃபூக்கோ, தெரிதா என வாசிப்பு எல்லை முடிவற்று விரிந்தது.”

“சிறுபத்திரிகை வழியாகத்தான் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கினீர்கள். எந்தக் கட்டத்தில் சிறுபத்திரிகையிலிருந்து விலகினீர்கள், ஏன்?”

“நான் விலகி வரவில்லை. ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை இயக்கமே முடிந்து விட்டது. `மணல்வீடு’, `நவீன விருட்சம்’ போன்ற பத்து பத்திரிகைகள் இன்றும் முனைப்போடு வந்துகொண்டிருக்கின்றன.என்றாலும், சிறுபத்திரிகை என்பது ஓர் இயக்கமாக, ஒரு வலுவான கருத்தியல் நம்பிக்கையாக, தீவிரமாக இருந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது முகநூல், ப்ளாக்ஸ், இணைய தளங்கள், ஆன்லைன் மேகஸீன்ஸ் என யாரும் எதிலும் எழுதலாம் என ஆகிவிட்டது. இணையத்தின் வழியாக உலகம் முழுவதுமான தமிழர்களால் வாசிக்க முடிகிறது. பரீட்சார்த்தமான முயற்சிகளை, மிகவும் தீவிரமான விஷயங்களை அப்போது சிறுபத்திரிகைகள் மட்டுமே பிரசுரித்தன. இன்று அந்தப் பிரச்னை இல்லை. எல்லா இதழ்களும் பிரசுரிக்கின்றன.  பிரசுரிக்கவில்லையானால், அவரவர் இணைய பக்கத்தில் எழுதிவிடுகிறார்கள். ‘காலச்சுவடு,’ ‘உயிர்மை’ போன்ற இதழ்கள் சிறுபத்திரிகைகளாகத் தொடங்கி, மிடில் மேகஸீன்களாக மாறிய காலகட்டத்தை, தேவையைக்கொண்டு இதைப் புரிந்துகொள்ளலாம்.”

“அப்படியானால், சிறுபத்திரிகைகளின் தேவை இனி இல்லை என்கிறீர்களா?”

“ஆமாம். 25 பக்கத்துக்கு நான் ஒரு கதையை எழுதி, அதை ‘நவீன விருட்ச’த்துக்கோ ‘மணல்வீடு’க்கோ அனுப்பி, அதை அவர்கள், லே அவுட் செய்து, அச்சாக்கம் செய்து, இரண்டு மூன்று மாதங்கள் கழித்து வரும். அதையே நான் என்னுடைய இணைய பக்கத்தில் பதிந்துவிட்டால்,  அடுத்த நிமிடமே அமெரிக்காவில் இருக்கிற ஒருவர் வாசிக்க முடியுமே! காலத்துக்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும். ஜெயமோகன் முழுக்கவே இணையத்தில்தானே எழுதுகிறார்!”

“நவீனத் தொழில்நுட்பங்களை அப்டேட் செய்துகொள்வது தேவைதான். அதே சமயம் சிறுபத்திரிகை  இயக்கத்தின் தீவிரத்தை, கறார் தன்மையை, நாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தி இருக்கிறோமா? இளைய தலைமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“லட்சக்கணக்கில் நீங்கள் பணம் கொடுத்தாலும், லட்சக்கணக்கில் உங்களிடம் கடன்பட்டிருந்தாலும், பஞ்சத்தில் சாகும் நிலைமையில், நீங்கள் சாப்பாடு போட்டிருந்தாலும் சரி; உங்களுடைய கதை நன்றாக இல்லை என்றால், சிறுபத்திரிகைக்காரன் பிரசுரிக்க மாட்டான். அங்கே சமரசமே கிடையாது. அவ்வளவு தீவிரமான காலகட்டம் அது. தன்னுடைய உயிர்மூச்சே எழுத்துதான் என்று நினைத்தார்கள். அதில், எஞ்சி இருக்கிற கடைசி ஆள் நான்தான் என்று நினைக்கிறேன். இப்போது அந்த உணர்வும் தீவிரமான கறார்தன்மையும் குறைந்துதான் போயிருக்கிறது! சிறுபத்திரிகை மரபைச் சார்ந்தவர்கள், நவீனத் தொழில்நுட்பச் சாத்தியங்களைக் கணக்கில்கொள்ள வேண்டும். நவீனப் புதிய தலைமுறை, சிறுபத்திரிகை மரபின் தீவிரத்தையும் நேர்மையையும் தன்னுள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பரஸ்பர புரிதலைக்கொண்டுதான் இலக்கியத்தை முன்நகர்த்த முடியும். எனவே, சிறுபத்திரிகைகளின் அத்தனை குணங்களோடும் அதை ஓர் இணைய பத்திரிகையாகக் கொண்டுவரலாம் என்கிறேன். சிறுபத்திரிகை இயக்கத்தின் அறமும் தீவிரமும் தொடர வேண்டும்.”
“எது உங்களைத் தொடர்ந்து எழுதவைக்கிறது?”

``எனக்குத் தெரியவில்லை. மூச்சுவிடுவதை எப்படிப் பிரக்ஞாபூர்வமாகச் செய்வதில்லையோ, அதுபோலத்தான் எழுத்தும். எது தன்னுடைய இருப்பை நமக்கு உணர்த்துகிறதோ, அப்போது அங்கே ஏதோ பிரச்னை என்று பொருள். எழுத்து என் இயல்பு. எழுத்து என்னிடம் தன் இருப்பை உணர்த்தியதே இல்லை. அது பாட்டுக்கு  நடந்துகொண்டிருக்கிறது. எழுத முடியாமல் போனால்தான், ‘ஏன் எழுத முடியவில்லை?’ என்று நான் யோசிக்க வேண்டும். 15 வருடங்களுக்கு முன்பு ஒரு மலையாள எழுத்தாளர் என்னிடம் கேட்டார் “Why do you write?” நான் சொன்னேன்: “I write as a bird flies!” குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, ஒரு விளையாட்டு வீரனுக்கு அவனது உடல் விளையாடத் தகுதியற்றதாகிவிடும். இலக்கியத்தில் அப்படி அல்ல. கைகளால் எழுத முடியாமல் போனாலும் டிக்டேட் பண்ணலாம். மூளை செயலிழந்து போகும் வரை ஓர் எழுத்தாளன் 25 வயது இளைஞனைப்போல எழுதிக்கொண்டே தான் இருப்பான்.’’ 

“புனைவு என்றால் என்ன?”

“நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்கிறீர்கள். பார்த்த விஷயத்தை இன்னொருவரிடம் சொல்கிறீர்கள். சொல்லும்போதே அந்த விஷயம் கதையாகிவிடுகிறது. அதில் புனைவின் அம்சங்கள் கலந்துவிடுகின்றன. அதாவது, ஒரு விஷயத்தைப் பார்த்து அதை ஒரு காட்சியாக, செய்தியாக, கருத்தாக ஒருவர் ‘conceive’ செய்வதே புனைவுச் செயல்பாடுதான். அதை எதைக்கொண்டு எழுதுவீர்கள்? 4,000 வருட மொழிக் கிடங்கிலிருந்து வார்த்தைகளை எடுக்கிறீர்கள். அது, பலர் உழுத நிலம். பலரின் புனைவு. குறிப்பிட்ட அந்தக் காட்சியை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? அதற்கு எது உதவுகிறது? பிறந்தது முதல் நீங்கள் அடைந்த அனுபவங்களையும் இந்தச் சமூகம் கொடுத்த கருத்துகளையும் கொண்டுதான் ஒரு மரத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ள முயலும் மூளைக்குள் கார்ல் மார்க்ஸ்,  வள்ளலார்,  தொல்காப்பியன், வேத வியாசன் என எவ்வளவு மனிதர்கள் நம்மை இடையீடு செய்கிறார்கள். புனைவல்லாத விஷயம் என்று என்ன உள்ளது இங்கே? வாழ்க்கையே தன்னளவில் ஒரு புனைவுதான்!”

“எழுத்தாளனை ஒரு சமூகம் ஏன் கொண்டாட வேண்டும்?”

“தி.ஜானகிராமனின் வீட்டுக்கு அவரது நண்பர் வருகிறார். குழந்தை படித்துக்கொண்டிருக்கிறது.  ஜானகிராமனிடம் `குழந்தை என்ன படிக்கிறது?’ என்று கேட்கிறார் நண்பர். ஜானகிராமன் குழந்தையிடம் ‘என்ன படிக்கிறாய் அம்மா?’ என்று கேட்கிறார். இதுதான் எழுத்தாளனின் நிலை;குணம். இந்தத் துறவு நிலையில் வாழ்ந்து எழுதுகிறவன்தான் எழுத்தாளன். உலகின் அனைத்து நல்லது கெட்டதுகளையும் எழுத்தில் பதிந்து, தான் வாழ்கின்ற சமூகத்தை ஆவணமாக்குகிறவன். தேசத்தின் முதுகெலும்பு அவன். நீங்கள் எழுத்தாளனைக் கொண்டாடுவதன் மூலம் உங்களை, உங்கள் சமூகத்தைக் கொண்டாடிக்கொள்கிறீர்கள். தாகூரை மாகாத்மா காந்தி, ‘குருதேவ்’ என்று அழைத்தார். ஒரு கவிஞனை தேசத்தின் மகாத்மா, குருதேவ் என்று அழைத்திருக்கிறார். ஆனால், பாரதியை அன்றைய அரசியல் தலைவர்கள் - பைத்தியம், பித்துக்குளி, பொறுக்கி என்றுதான் அறிந்து வைத்திருந்தார்கள். காந்திக்கு ‘பாரதியும்’ இன்னொரு  குருதேவ் என்று தெரிந்திருக்கிறது. அதனால்தான், ‘இவர் உங்கள் மொழியின் சொத்து. இவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நாம் பார்த்துக் கொண்டோமா?”

“39 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். படைப்புகளை எடுத்துக்கொண்டாலும் சரி, உங்களது கட்டுரைகளை, கருத்துக்களை எடுத்துக்கொண்டாலும் சரி, அவை தனக்குள்ளேயே ஏராளமான முரண்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன...”

“கால ஓட்டத்தில் மாறுதல்களும் முரண்களும்தான் இயல்பானவை. நான் நதிவழி போகும் இலைபோல. கம்யூனிஸ ஆதரவாளனாக, பெரியாரிஸ்ட்டாக இருந்திருக்கிறேன். கம்யூனிஸக் கனவு தகர்ந்ததுமே அதில் உள்ள ஓட்டைகள் தெரிய ஆரம்பித்தன. அதை நான் எழுதித்தானே ஆக வேண்டும்? பெரியார் நமது பாரம்பர்யத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நமது பாரம்பர்யத்தில் எவ்வளவு மருத்துவங்களும் கண்டுபிடிப்புகளும் உள்ளன, அவற்றையெல்லாம் பொய் என்கிறார் பெரியார். சாதி, மதம் இரண்டும் முக்கியமான பிரச்னைதான். ஆனால், அதன் மீதான எதிர்ப்பில் நமது பாரம்பர்ய விஷயங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார்கள். வள்ளலார் தண்ணீரில் விளக்கு எரித்திருக்கிறார். நான் ஒளியில்தான் மறைவேன் என்று எழுதி வைத்துவிட்டுப் போன வள்ளலாரின் உரைநடைதான், பெரியார் சொன்னதெல்லாம் தப்பு என்பதற்கு ஆதாரம். இதெல்லாம் ஏதோ சித்து விளையாட்டோ, கண்கட்டி வித்தையோ அல்ல. ஐம்பூதங்களைத் தன்னுடைய கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் வழி செய்ய முடிவது. இதையெல்லாம் கவனிக்காமல், ‘கொசுவுக்காக வீட்டைக் கொளுத்திவிட்டார் பெரியார்’ என்று எழுதியிருக் கிறேன். இப்படியான முரண்பாடுகளுடன்தான் ஒரு படைப்பாளி இயங்க முடியும்.”

“நாத்திகராக இருந்த நீங்கள் எப்படிக் கடவுள் நம்பிக்கையாளராக மாறினீர்கள்? என்ன நடந்தது?”

“ ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற புத்தகம் எனக்குள் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. பரமஹம்ச யோகானந்தர் எழுதியது. இவர் இறந்த பிறகும், ஒரு மாதம் வரை அவரது உடல் துர்நாற்றம் இல்லாமல் இருந்ததாம். வாழ்வில் ஓர் அனுபவம் கிடைக்கும் போது, அது உண்மை என்று தெரியும்போது, எப்படிச் சொல்லாமல் இருப்பது; நம்பாமல் இருப்பது? பிரான்ஸில் லூர்து மாதா தேவாலயம் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டு எல்லைஅது. அங்கு போக வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. நான் அப்போது பிரான்ஸ் சென்றிருந்தேன். நண்பரிடம் சொன்னபோது, ‘அப்படியெல்லாம் போக முடியாது சாரு, மாதா கூப்பிடணும்; அப்பதான் போக முடியும்’ என்றார். சரி என்று விட்டுவிட்டேன்.  இந்தியாவுக்குத் திரும்ப விமான டிக்கெட்டும் பதிவு செய்துவிட்டேன். ‘லா சப்பல்’ என்கிற இடத்தில் ‘அறிவாலயம்’ என்று ஒரு புத்தகக் கடை உண்டு. அங்கு ஒரு நபர் என்னிடம் கைகொடுத்து, ‘உங்கள் எழுத்துகளை வாசித்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் திருவிழாவுக்கு என் வீட்டிற்கு வர வேண்டும்’ என்று அழைத்தார். நான் பயண ஏற்பாடுகள் குறித்துச் சொன்னேன். அதையெல்லாம் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். எனக்கும் பயணம் பிடிக்கும் என்பதால் சென்றேன். அவரது வீடு, லூர்து மாதா தேவாலயத்துக்குப் பக்கத்து ஊரில் இருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் லூர்து மாதாவின் எதிரே மண்டியிட்டுப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது சம்பவம், எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறேன். சர்ஜரி செய்ய வேண்டும்.  இரண்டு லட்சம் பணம் வேண்டும். பக்கத்து பெட்டில் ஒருவன் கத்துகிறான். வலியில் அல்ல. அவனுடைய ‘பில்’லைப் பார்த்து. என் மனைவி அவந்திகா வந்தாள். ‘இரண்டு லட்சம் ஆகுமாம். என்ன பண்ணலாம்?’ என்றேன். ‘கவலைப்படாதே... பாபா தருவார், ஜாலியாக இரு!’ என்று சொல்லிவிட்டுப் போகிறாள். ஆன்மிகம் எவ்வளவு நம்பிக்கையைத் தருகிறது பாருங்கள்! சொன்னது போலவே மறுநாள் ஒருவர், இரண்டு லட்சத்துக்கு ஒரு காசோலையைக் கொடுத்துவிட்டுப் போகிறார்.  சர்ஜரி முடிந்து இரண்டு மாதம்  கழித்து அவரைப் பார்க்கப் போனேன். அவர் கேன்சர் வந்து இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அந்த இரண்டு லட்சத்துக்கான காசோலை கிடைத்தது இன்றும் ஆச்சர்யம்தான். இப்படியான ஆச்சர்யங்கள் நடக்காத வரை நான் நம்பக் கூடாது என்று இருந்தேன். சாட்சி கிடைத்தது; நம்புகிறேன்.”

“உங்களுடைய ஆரம்பகாலப் படைப்புகளிலிருந்து இன்று வரையிலான எழுத்துகள் வரை பாலியல் சார்ந்த பார்வைகளும் உரையாடல்களும் தொடர்ந்து வருகின்றன. எந்தக் கட்டத்தில் பாலியல் மீதான கவனத்தை அடைந்தீர்கள்?”


“எனக்கு 15–16 வயதிருக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி ‘அந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அந்த சாதிப் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள்’ என்று அம்மா சொன்னார்கள். உரையாடல்கள் வழியாக, அனுபவத்தின் வழியாக எனது பதின்வயதிலேயே பாலியல் சார்ந்த விஷயங்கள் எனக்குள் வந்துவிட்டன. எனக்கு மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தில் வாழும் எல்லோருக்கும் அமைகின்ற பொதுவான அனுபவங்கள்தான் அவை.  பாலியல் அத்துமீறலுக்கு ஆட்படாத ஒரு பெண்ணைக்கூட என் வாழ்நாளில் நான் சந்தித்ததில்லை. ஆண்களுக்கும் இது பொருந்தும். நானே அவ்வகையில் பாதிக்கப்பட்டவன்தான். ஒழுக்கம் என்ற பெயரில் இந்தியச் சமூகத்தில் அடக்கிவைக்கப்படும் காமத்தால் நேர்கின்ற அவலங்கள் இவை. தொடர்ந்து பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது குறைய வேண்டுமெனில், பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்க வேண்டும். அதுதான் முதன்மையான வழி. பின், காமம் சார்ந்த புனிதக் கருத்துகளை உடைத்து உரையாட வேண்டும். உடல் சார்ந்த பாலியல் தேவை என்பது மிக இயல்பானது என்பதை பதின் வயதினருக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பாலியல் உணர்ச்சித் தூண்டுதல்களுக்கான புறச்சூழலை, ஊடகங்களைத் திறந்துவைத்துவிட்டு, உணர்வுகளை அடக்கிவைக்கச் சொல்லும்போது பிரச்னையாகிறது. இங்கே நண்பர்கள், காதலர்கள் புழங்குவதற்கு பொதுவெளியே இல்லையே... எங்கும் ஏதோ குற்றவாளியைப் பார்ப்பதுபோல அவ்வளவு கெடுபிடி. என்னத்தைச் சொல்வது?”

“இப்போதும் சாரு நிவேதிதா ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா?”

“போஸ்ட் மாடர்னிஸம் என்பது ஒரு காலகட்டமல்ல. அது ஒரு புரிதல். அறிதல் முறை. நான் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், ஒரு பின்நவீனப் படைப்பு எந்த முன்முடிவுகளுமற்றதாக இருக்கும். என்னுடைய படைப்புகள் அத்தன்மை உடையவைதான். ஓர் ஆணின் போகச் செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், அதில் ஆரம்பம், உச்சம், முடிவு என்று மூன்று முனைகள்கொண்ட ஒரு முக்கோண வடிவம் வரும். அதில், உச்சம் எனும் மேல்முனைதான் அதிகாரம், மோடி,  டீச்சர், டாக்டர், போலீஸ் கமிஷனர், நம் அப்பா, முதலமைச்சர், ஹிட்லர், படைப்பாசிரியர் எல்லாம். போஸ்ட் மாடர்னிஸம் இந்த வடிவத்தை மறுத்து ஒரு பெண்ணின் போகச்செயல்பாட்டை முன்வைக்கிறது. இதில் மையம் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்துமே காமவெளிதான். மையம் தவிர்த்த கருத்தியலை முற்றிலுமாக அரசியலில், சிந்தனையில், எழுத்தில் பிரதிபலிப்பதுதான் பின்நவீனம். இலக்கியம், கட்டடம்,நுண்கலைகள் என அனைத்திலும் ஐரோப்பியர்கள் பின்நவீனத்தை முயன்றார்கள். ஆனால், இந்தியாவில் இலக்கியத்தைத் தவிர, வேறு எந்தத் துறையிலும் நிகழவே இல்லை. ஒருவர் போஸ்ட்மாடர்னிஸ்ட்டாக இருக்க, போஸ்ட்மாடர்னிஸம் படிக்க வேண்டும் என்பதில்லை. அது ஒரு பார்வை; அறிதல்முறை. சாரு எப்போதும் போஸ்ட்மாடர்னிஸ்ட் ரைட்டர்தான்!”
“ஆசிரியனின் மரணம், மையம் தகர்த்தல் என்று போஸ்ட் மாடர்னிஸம் பேசிக்கொண்டே ‘சாரு நிவேதிதா வாசகர் வட்டம்’ என்ற ‘மையம்’ சார்ந்த ஒரு வாசக அமைப்பை வைத்திருப்பது முரணாக இல்லையா?”

“பாவம்ங்க! (பலத்த சிரிப்பு) நீங்கள் நினைப்பதுபோல எனக்கு மட்டுமல்ல, வாசகர் வட்டத்தில் யாருக்கும் ஓர் அதிகாரமும் கிடையாது. எல்லாம் மிடில் கிளாஸ் ஆட்கள். சமீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்தபோது, அவர்கள்தான் ஆளுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் என்று தந்து உதவினார்கள். நாலு லட்சம் மருத்துவச் செலவுக்குக் கட்டி ஒரு தகப்பனைப்போல என்னைக் காப்பாற்றினார்கள். இல்லை என்றால், செத்துப்போயிருப்பேன். தமிழ் நாட்டில் ஓர் எழுத்தாளனின் நிலை இதுதான்.”

“எப்படிப் பார்த்தாலும் ஓர் அமைப்பு தேவைப்படுகிறது இல்லையா?”

“தேவைதான். ஆனால், அது ஒரு மதம்போல மாறிவிடக் கூடாது. எனது வாசகர் வட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள். என்னை அதிகமாகத் திட்டுவதே  அவர்கள்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம். கடந்த ஆறு மாதங்களாகக் கூடவே இல்லை. என்னை ‘அதிகார மையம்’ என்று சொன்னீர்கள் அல்லவா? ‘கூடுங்கள் கூடுங்கள்’ என்று சொல்கிறேன். கூடவே மாட்டேனென்கிறார்கள். இவ்வளவுதான் என் அதிகாரம். நான் வாரிசு என்று சொல்கிற அராத்துவை, வட்டத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இன்னொரு வேடிக்கை, நான் குடியை நிறுத்தியதும் வாசகர் வட்டமே கலைந்துவிட்டது. சாரு நிவேதிதா வாசகர் வட்டமே ஒரு போஸ்ட் மாடர்னிஸக் குறியீடுதான்.”

“மது அருந்துவதை நிறுத்திவிட்டதற்கு என்ன காரணம்?”

“வேலைகள் நிறைய இருக்கின்றன. நேரம் வீணாகிறது என்பதால், நிறுத்தி விட்டேன். உண்மையாகவே வேறு எந்தக் காரணமும் இல்லை.”

“மது அருந்துவதை நிறுத்திவிட்டாலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பவர் நீங்கள். டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


மக்கள் போராடுவது ஒருபுறம் இருக்கட்டும். எல்லா ஊடகங்களும் ஏதோ சுதந்திரப்போர்போல இதை முன்னிலைப் படுத்துகின்றன. டாஸ்மாக் பிரச்னையை ஒழித்தால், இந்த நாடு சுபிட்சம் பெறும் என்பதுபோல நம்ப வைக்கிறார்கள்.  தொடர்ந்து தர்மாவேசத்தோடு இதை ஒரு போர்ச் செயலாக  செய்து வருகிறார்கள். இந்த விஷயம் தேவைக்கதிகமாகப் பூதாகரப் படுத்தப் படுகிறது என்றே சொல்வேன். இவ்வளவு ஆவேசத்தோடு நடக்கிற இந்த ‘அறப் போராட்டம்’ சமூகத்தின் முக்கியமான மற்ற பிரச்னைகளை முன்னிட்டு ஏன் நடத்தப்படவில்லை? கல்வி மொத்தமாக தனியார்மயமாகிப் பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. அதைப்பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை; போராடுவதில்லை? இந்தக் கல்வி முறையில் எல்லோருடைய பிள்ளைகளைப்போலவும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளைகளும் கல்வி கற்க வாய்ப்பிருக்கிறதா? எங்கே புரட்சி பண்ண வேண்டுமோ அதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடைகளை உடைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடுமா? இவர்கள் நாடுவதெல்லம் தற்காலிக முடிவுகள்... தற்காலிகத் தீர்வுகள்.

சில விஷயங்களைப் பகிங்கரமாகப் பேசினால், நான் கொல்லப்படலாம். ஆனாலும், பேசித்தான் ஆக வேண்டும். இங்கு விற்கப்படுகின்ற மதுவுக்கான ‘லிக்கர்’ தமிழகத்தின் இரண்டு பிரதான ஆளும் கட்சிகளான தி.மு.க, - அ.தி.மு.க -வால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றும் விஷயத்தில் அவர்களுக்குள் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் இந்த  ‘லிக்கர்’ உற்பத்தி, வியாபாரம் போன்ற விஷயங்களில் எந்தப் பிரச்னையும் வருவதில்லை. இதில், முக்கியமான விஷயம், இந்த மதுவை வேறு எந்த மாநிலத்திலும் விற்க முடியாது. ஏனென்றால், இது மனிதர்கள் குடிக்கவே லாயக்கில்லாத தரமற்ற மது. உயிருக்கு ஆபத்தான கொடூரமான கலப்பட மது. தாய்ப்பாலைப்போல அவ்வளவு சுவையான, தீங்கில்லாத கள்ளைத் தடை செய்துவிட்டு, கலப்பட மதுவை ஏன் விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்க இங்கே ஆளில்லை. ‘குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறான், மனைவியை அடிக்கிறான்’ என்று சொல்கிறார்கள். இந்த மாதிரியான மதுவைக் குடித்தால், நானேகூட என் மனைவியை அடிக்கக்கூடும். அப்படித்தான் ஆகும். ஆக்ரோஷத்தையும் வன்முறையையும் தூண்டுகிற மதுவாக இருக்கிறது இது. நாகரிகமாகவும் ஆரோக்கியமாகவும் உணவில் ஒரு பகுதியாக, அளவாகக் குடிக்கத் தெரியாத சமூகம் இது. முதலில் நாம் எவ்வளவு தூரம் நாகரிகமடைந் திருக்கிறோம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது.”

“இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளைக் கட்டாயமாக்கும், பரவலாக்கும் முயற்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பொதுவாக மாணவர்கள் நான்கு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைப்பேன். ஆனால், நம் மாணவர்கள் ஒரு மொழியைக்கூட ஒழுங்காகக் கற்றுக்கொள்வதில்லை. தமிழ் நாட்டில் இருக்கிற ஒரு மாணவர், இங்கிலீஷோடு இந்தி மற்றும் சம்ஸ்கிருதம், உருது, அரபி ஆகிய மூன்றில் ஒன்றையாவது கற்றுக்கொள்ள வேண்டும். பிரெஞ்ச்,  ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் ஒன்றையும் சேர்த்துக் கற்றுக் கொள்ளலாம். இதுபோலவே இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட ஒருவர், தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதெல்லாம் தன்னார்வத்தால் நிகழ வேண்டும். திணித்தால் எதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓர் இந்தியனாக நான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அது அவசியமும்கூட. ஆனால், அதைத் திணித்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் திணிப்பு பி.ஜேபி-யின் அஜெண்டாக்களில் ஒன்று. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.”

“மாட்டுக்கறி என்பது உழைக்கும் மக்களின் பிரதான புரதச் சத்துக்கான உணவு. அதன் மீதான தடையை, எதிர்மறையான பிரசாரத்தை எப்படி உணர்கிறீர்கள்?”


“இதை இந்து பாசிஸம் என்றோ, பி.ஜே.பி பாசிஸம் என்றோகூட சொல்ல முடியாது. வாஜ்பாய் இருந்தபோது இவ்வளவு இல்லையே. இதை மோடி பாசிஸம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண வாக்காளனாக, அப்பாவித் தனமாகத் தேர்தல் சமயத்தில், ஓர் ஊழல் கட்சிக்கு மாற்றாக இருப்பார் என்று மோடியை நம்பினேன். ஆனால், இப்போது மோடிக்கு காங்கிரஸே பரவாயில்லை என்று தோன்றுகிறது. கொடுமையான பாசிஸம்!”

“அம்பேத்கர், பெரியார், காந்தி, மார்க்ஸ் போன்றோரின் கருத்தியல்கள் முன்பைக் காட்டிலும் தீவிரமாக வாசிப்புக்கு உள்ளாவதைக் கவனிக்கிறீர்களா?”

“பெரியாரின் தத்துவம், வெறுப்பின் அடிப்படையில் உருவானதாக நான் புரிந்துகொள்கிறேன். எந்த அரசியல் சித்தாந்தமும் அன்பினால் மட்டுமே கட்டமைக்கப்பட வேண்டும். அந்த வகையில்  காந்தி எனக்கு முக்கியமானவராகப் படுகிறார். ‘ பசு எனக்கு தெய்வம். ஆனால், அதை உணவாகக்கொண்டவர்கள் அதைச் சாப்பிடுவது, அவர்களின் உரிமை. அதை நான் ஒருபோதும் குறைகூற மாட்டேன்’ என்கிறார் காந்தி. இந்த மனோபாவம்தானே இன்றைய தேவை? அவர் பிரிட்டிஷ்காரனை வெறுக்கவில்லை; புரிந்துகொள்ளச் செய்தார். புரிந்துகொண்டான்; ஓடிவிட்டான். இன்றைய சமூகத்துக்கும் அரசியலுக்கும் தேவையான தத்துவார்த்த ஆயுதம் என்று எடுத்துக்கொண்டால், 

காந்தியினுடையதுதான் சிறந்தது; பாதுகாப்பானது. சாத்வீகமான அகிம்சை முறையிலான போராட்டம்தான் இனி சாத்தியப்படும். அதுதான் சரியானதாக இருக்கும்.”

“ ‘கூடங்குளம்’, ‘மெரினா’ போன்ற போராட்டங்கள் மிகுந்த சாத்வீகமான முறையில்தான் நடந்தன. ஆனால், போராட்டத்தின் முடிவுகள் எப்படி இருந்தன என்பதற்கு நாம் அனைவருமே சாட்சி. யதார்த்தத்தில் அகிம்சைப் போராட்ட முறை சாத்தியப்படுகிறதா?”


“என்னைப் பொறுத்தவரை ‘மெரினா போராட்டம்’ வெற்றிகரமானது. கடைசி நாளில் போலீஸ் கலைந்துபோகச் சொன்னபோது கலைந்திருக்க வேண்டும். ஆனால், வேறு சில சக்திகள் உள்ளே புகுந்து, புதிய புதிய கோரிக்கைகளை வைத்து, கடலுக்குள் இறங்கி, கலைய மறுத்து போலீஸை வன்முறைக்குத் தூண்டிவிட்டார்கள். இளைஞர்கள் நடத்தியவரை அது வெற்றிகரமான போராட்டம்தான். அவ்வகையான அகிம்சைப் போராட்டம்தான் சிறந்த வடிவமாக இருக்க முடியும்.”

“இன்றைய இடதுசாரிகளின் நிலைப்பாடுகள் குறித்து?”

“தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் செய்ததில் ஒரு சதவிகிதம்கூட இங்கு இவர்கள் செய்யவில்லை. அதனால்தான், இவர்களால் இங்கு பெரிதாக வர முடியாத நிலை நீடிக்கிறது. மனிதனை மனிதன் சுரண்டக் கூடாது என்பதுதான் கம்யூனிஸத்தின் அடிப்படை. அதை கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லாமலேயே ஐரோப்பிய நாடுகளில் செய்துகொண்டிருக்கிறார்கள். இங்கு இன்னும் கம்யூனிஸம் உள்வாங்கப் படவே இல்லை.”

“தற்கொலை எண்ணம் வந்ததுண்டா?

“எனக்குத் தற்கொலை எண்ணம் வந்தது பற்றி காமரூபக் கதைகளில் எழுதியிருக்கிறேன். பதிப்பாளரிடம் இருந்து ஒவ்வொரு வருடமும் ‘புத்தக விற்பனை ரிப்போர்ட்’ ஒன்று வரும். ‘எக்ஸைல் - 120 காப்பி’ என்று அதில் பார்க்கும்போது, ‘ஏன்டா இந்த ஊர்ல உட்கார்ந்து எழுதிக்கிட்டிருக்கோம். போய்ச்சேரலாமா...’ என்று நினைத்ததுண்டு (சிரிக்கிறார்). மற்றபடி சீரியஸாகத் தற்கொலை எண்ணம் வந்ததில்லை. டிப்ரஷனே எனக்கு வந்ததில்லை. நானொரு குழந்தையைப் போல வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”

“வருடா வருடம் புத்தகச்சந்தையில் விற்பனை கூடுவதாகச் சொல்கிறார்களே..?”

“புத்தகக் காட்சி என்பதே அபத்தம். மீடியா உருவாக்கும் கானல் நீர். லட்சக்கணக்கில் விற்பதாக, கோடிக்கணக்கில் விற்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், புத்தகத்தின் ‘சேல்ஸ் ஸ்டேட்மென்ட்’ வாங்கிப் பார்த்தால், 10 பிரதிகள்தான் விற்பனை ஆனதாகக் காட்டுகிறது. பப்ளிஷர்ஸ் பொய் சொல்வதாகச் சொல்லவில்லை. வாசகர்கள் தூக்கிக்கொண்டு போகிற பைகளைத் திறந்து பார்த்தால், எல்லாம் ஆன்மிகம், 

சுயமுன்னேற்றம், சமையல் புத்தகங்கள். புத்தகக் காட்சியில் இலக்கியத்துக்கு இடமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.”

“நிலையான நண்பர்களே உங்களுக்கு இல்லையே, ஏன்?”


“உதாரணமாக, ஒருவர் அவருடைய இருத்தலின் அடையாளமாக அவரது கவிதைகளை மட்டுமே கருதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கவிதைப் புத்தகம் போடுகிறார்; நான் வாசிக்கிறேன்; பிடிக்கவில்லை என்றால், ‘சரி, நண்பராயிற்றே’ என்று விட்டுவிடுவேன். ஆனால், அதைச் சொல்லியே ஆக வேண்டும் எனும் நிலை வரும்போது, ‘இது ஒரு குப்பை’ என்று சொல்லிவிடுகிறேன். விமர்சனம் கொல்வதற்கு நிகராகிவிடுகிறது. ஆக, அவர் ஜென்ம விரோதியாகிவிடுகிறார். அவ்வளவுதான். பெரும்பாலும் விமர்சனத்தினால்தான் நட்பு முறிதல்கள் நிறைய ஏற்பட்டுள்ளன. ஒருவகையில் அதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், என் எழுத்தைக் குப்பை என்று நினைக்கும் ஒருவரோடு, என்னால் பழகவோ, வாழவோ முடியாது. ‘என் எழுத்தின்மீது உனக்கு எப்போது விமர்சனம் வருகிறதோ, உடனே என்னை விவாகரத்து செய்துவிடு!’ என்று என் மனைவியிடம் நான் சொல்வதுண்டு.”

“ஒரு படைப்பை, சினிமாவை முதலில் சிறப்பானது என்று சொல்லிவிட்டுப் பின் திட்டுவது, முதலில் திட்டிவிட்டு, பின் சிறப்பானது என்று சொல்வது என ஒரு குழப்பம் உங்களிடம் உள்ளதே?”

“இலக்கியத்தில் அப்படி நடந்ததே இல்லை. 19 வயதில் அசோகமித்ரனை தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று சொன்னேன். இப்போது எனக்கு 64 வயதாகிறது. இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். ஒரே ஒரு சினிமாவில் மட்டும் அப்படி நடந்துவிட்டது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் வெளியான சமயத்தில் மிஷ்கின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தேன். அதனால், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ எனக்குப் பிடிக்கவே இல்லை. படம் முழுவதையும் வெறுப்பிலேயே பார்த்தேன். ‘குப்பை’ என்று சொல்லிவிட்டேன். பிறகு நிதானமாகக் கொஞ்சகாலம் கழித்துத் திரும்பப் பார்த்தேன். படம் உண்மையாகவே பிடித்திருந்தது. ‘ஆஹா, மிஷ்கின் நம் நண்பன்டா’ என்று நினைத்துக்கொண்டேன். நம்புகிற உண்மையை எப்போதும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது என் இயல்பு. ஒரு சாமியாரைப் பற்றிப் பாராட்டி எழுதியிருந்தேன். பிறகு, அவரைத் திட்டி எழுதுகிறேன் என்றால், அது அவருக்குள் ஏற்பட்ட மாற்றம். அதனால், அப்படி எழுதும்படி ஆனது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?”

“ஷோபா சக்தியின் ‘காயா’ சிறுகதை குறித்த விமர்சனத்திலும் இந்தக் குழப்பம் நடந்ததே?”


“ஆமாம். சிவாஜி கணேசன் படம் பார்க்கும்போது அழுதுவிடுகிறோம் இல்லையா? அதுபோல முதல்முறை அந்தக் கதையை வாசிக்கும்போது நடந்துவிட்டது. அடுத்த நாளே மீண்டும் வாசித்தேன். அதிலுள்ள ஏமாற்று வேலைகளைக் கண்டுபிடித்தேன். முதல் நாள் போட்ட ‘அற்புதத்தை’ எடுத்துவிட்டு இந்தக் கதை ஏன் ஏமாற்று வேலை என்பதை விரிவாக எழுதினேன். இதுபோல யாரும் செய்ய மாட்டார்கள். மாற்றி மாற்றிச் சொன்னாலும், எனக்கு உண்மைகளைச் சொல்வதில் எப்போதும் தயக்கமில்லை.”
“நீங்கள் அதிகக்காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நகரம் சென்னை. இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையைப் பற்றிய உங்களது பார்வை என்ன?”

“சென்னையில் நான் 27 வருடங்களாக வாழ்ந்துவருகிறேன். ஆனால், சென்னையிலேயே நான் இல்லை. இவ்வளவு வருடங்களாகச் சென்னையில் இருப்பதாக நான் உணரவேயில்லை. ஓர் அறையில் இருக்கிறேன்; மாலுக்குப் போகிறேன், வருகிறேன்; பார்க்குக்குப் போகிறேன், வருகிறேன்; அவ்வளவே. சென்னையுடன் நான் உறவாடவே இல்லை. இன்றைக்கு சென்னையில் இருக்கும் ஒரு மேட்டுக்குடிப் பையனுக்கும் தமிழ் மொழிக்குமான உறவு எப்படியோ, அப்படித்தான் சென்னைக்கும் எனக்குமான உறவு. அந்தப் பையனுக்கு எப்படி மிகச் சொற்பமான தமிழ்ச் சொற்கள்தான் தெரிந்திருக்குமோ, அப்படித்தான் எனக்கும் சொற்பமான சென்னைதான் பரிச்சயம். இத்தனை வருடங்களாக சென்னையுடன் நான் இன்ட்ராக்ட் செய்யவே இல்லை. வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, எண்ணூர், தண்டையார்பேட்டை - இவையெல்லாம் எங்கே இருக்கின்றன என்றே எனக்குத் தெரியாது. சைதாப்பேட்டை என் வீட்டிலிருந்து 20 நிமிட தூரம்தான்.  ஆனால், சைதாப்பேட்டையின் தெருக்கள் எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.”

“ஏன் நீங்கள் சென்னையை அறிந்துகொள்ள விரும்பவேயில்லை?”

“இந்த ஊர் எந்த விதத்திலும் என்னுடன் உறவாடவில்லை. நாகூரிலிருந்து டெல்லி போனவுடன் பெரிய சைஸிலான நாகூருக்கு வந்திருப்பதாகத்தான் உணர்ந்தேன். நான் பிறந்தது இந்துக் குடும்பத்தில்தான் என்றாலும், என் வாழ்க்கை இஸ்லாமியக் கலாசாரத்தில் தோய்ந்தது. ஓர் இந்துத் தமிழனுக்குக் காகம் நெருக்கமான பறவையாக இருப்பதுபோல, எனக்கு புறா. ‘எந்த ஊரில் புறா நிறைய இருக்கிறதோ, அந்த ஊர் ஆசீர்வதிக்கப்பட்டது’ என்று `ஸீரோ டிகிரி’யில் ஒரு வரி எழுதியிருக்கிறேன். காரணம், புறாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் பிறந்து வளர்ந்த நாகூரின் நினைவு நாஸ்டால்ஜியாக வந்துவிடும். மெரினாவில் விவேகானந்தர்  இல்லத்துக்கு எதிரே ஆயிரக்கணக்கான புறாக்கள் ஒன்றாக எழும்பிப் பறக்கும்போது எனக்கு நாகூரின் நினைவுகள்தான் வருகின்றன. டெல்லி முழுக்கவும் புறாக்கள் மயம்தான். இப்போது அந்த டெல்லியைப் பார்க்க முடியாது. அங்கு முக்கியமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். தமிழகத்தின் ஆகச்சிறந்த கலைஞர்கள் அனைவரின் பேச்சையும் இசையையும் நாடகங்களையும் அங்குதான் அனுபவித்தேன். ‘காதம்பரி’ என்று ஒரு தியேட்டர் அங்கு உண்டு. வெறும் இரண்டு ரூபாய்தான் டிக்கெட். பாலமுரளி கிருஷ்ணா கச்சேரியை எல்லாம் பத்து முறைக் கேட்டிருக்கிறேன். இப்படி டெல்லி என்பது கலாசாரங்களின் தலைநகராகவும் இருந்தது. சென்னையில் அப்படியான ஒரு கலாசாரப் பிணைப்பு எனக்கு ஏற்படவே இல்லை. எல்லா நகரங்களும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவையாகவும், உயிர் பயத்தை அளிப்பவையாகவும் மாறி வருகின்றன. அவற்றையும் மீறி ஒரு சர்வதேசக் கலாசாரத்தின் இயங்குதளமாக டெல்லி மற்றவையிலிருந்து வேறுபடுகிறது. சென்னையில் வெறும் அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது.’’
“பிறகு எப்படி இவ்வளவு காலமாகச் சென்னையில் வசித்துவருகிறீர்கள்?”

“அவந்திகா இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணிப் பெண். இந்த ஊரைவிட்டு வரவே முடியாது என்று சொல்லிவிட்டாள். அதனால், இங்கே வாழும்படி ஆகிவிட்டது. இல்லையென்றால் எப்போதோ பாரிஸ் சென்றிருப்பேன். வேறு ஒரு மாநிலத்தில் போய், தமிழன் என்று வெளியில் சொல்லிக்கொள்ள முடியவில்லை. சொன்னால், டி.டி.வி.தினகரனையும், சசிகலாவையும் நம்மோடு சேர்த்துப் புரிந்துகொள்கிறார்கள். சமாதியில் ‘டமார் டமார்’ என்று ஆங்காரமாகச் சத்தியம் செய்த சசிகலாவின் விஷுவல்ஸ்தான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். தமிழ் செம்மொழி, இந்தியெல்லாம் நேற்றைக்கு வந்தது, தமிழுக்கு நாலாயிரம் வருடப் பாரம்பர்யம் இருக்கிறது என்கிறோம். எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் மாதிரி ஆள்களின் காலில் போய் விழுகிறோம். மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, அவருக்கு அடுத்த இருக்கையில் ராஜ்நாத் சிங் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்கிறார். இங்கே அப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்க்க முடியுமா? தலைவர்கள் தங்கள் கண்களில் இருந்து மறையும்வரைக் குனிந்தவாக்கில்  ஓர் ஆபாச போஸிலேயே நிற்கிறார்கள் அரசியல்வாதிகள். இன்று அனைத்துத் துறைகளிலும் அடிமைப்புத்தி வந்துவிட்டது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவிலும் இப்படியான ஆள்கள்தான் வந்துவிட்டார்கள். இப்படியான ஆள்களுடன் இணைந்து எப்படி நான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்? தஞ்சாவூரிலும் வாழ்ந்திருக்கிறேன். அது ஒரு நிலப்பிரபுத்துவ வாழ்க்கைதான். ஆயிரமாயிரம் மக்களை அடிமையாக்கி வேலை வாங்கிக் கோயில்களெல்லாம் கட்டியிருக்கிறார்கள். தேவதாசிகள், பெண்ணடிமைத்தனம், சாதி என எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் அங்கு அந்த மண்ணோடும் மக்களோடும் என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. தஞ்சாவூரிலும் மதுரையிலும் என்னை இணைத்துக்கொள்ள முடிகிறது. அது சென்னையில் முடியவில்லை. சென்னை, ஒரு மீனவ கிராமமாக இருந்தது. அந்தக் கிராமமும் இப்போது இல்லை. தொழில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்ற காலனிகள் போன்றுதான் இருக்கிறது சென்னை. வஞ்சிரம் மீன் கிலோ 1,400 ரூபாய்க்கு விற்கிறது. விறால் மீனே இங்கு கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன், ‘ஏழைகளின் விறால்’ என்று சொல்லப்படுகிற ‘தேளி’கூட இங்கே இல்லை. விறால் மீன் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. விறால் மீன் கிடைக்காத ஊரெல்லாம் ஓர் ஊரா? அவந்திகாவிடம் அடிக்கடி சொல்வேன்: ‘உனக்காக நான் செய்துகொண்டிருக்கும் மிகப் பெரிய தியாகம் இந்த ஊரில் வசிப்பது!’ என்று. அதுதான் உண்மையும்.’’
“சென்னை வளரவேயில்லை என்கிறீர்களா?”

``சென்னையின் வளர்ச்சி என்பது கேன்சரைப் போன்ற வளர்ச்சிதான். வளர்ச்சி என்றால், அடிப்படையில் சரியான நடைபாதை; உருப்படியான மேம்பாலங்கள்; பாதுகாப்பான போக்குவரத்து போன்றவை இருக்க வேண்டும். சென்னையைப் பார்க்கும்போது ஒரு மாதிரி க்ரேஸியாகத் தெரிகிறது. திடீரென்று காசு வந்துவிட்டால், பெரிது பெரிதாகத் தங்கச் சங்கிலியும் வெள்ளைச்சட்டையும் போட்டுக்கொண்டு அவலட்சணமாகத் திரிவார்களே சிலர்,  அது போலத்தான் இருக்கிறது. ஆனால், மைலாப்பூர் பிடித்திருக்கிறது. ஏனென்றால், இது வேறு உலகம். மாலையில் நோன்புக் கஞ்சி, சூப், மசூதிகளின் புறா, சர்ச், கோயில்களின் மணியோசை என வேறு மாதிரியாக இருக்கிறது. நெருக்கடியாக இருந்தாலும் மைலாப்பூரில் ஒரு வாழ்க்கை இருக்கிறது.”

“தமிழகத்தின் பல்வேறு வட்டாரம் சார்ந்த இலக்கியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சென்னை சார்ந்த முக்கியமான இலக்கியங்களாக எதைக் குறிப்பிடுவீர்கள்?”

“சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன் போன்ற பலர் இங்கே வந்திருக்கிறார்கள். சென்னை சார்ந்து கொஞ்சம் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால், இங்கிருந்து யாரும் உருவானதாகத் தெரியவில்லை. இது ஒரு ரயில்வே ஸ்டேஷன் போலத்தான் இன்னும் இருக்கிறது. அந்த வகையில் சிறப்பாக எழுதப்பட்ட நகரங்களாக மும்பையையும் டெல்லியையும் சொல்லலாம். ‘சுகேத் மேஹ்தா’ என்பவர் ‘மேக்ஸிமம் சிட்டி’ என்றொரு பெரிய புத்தகம் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க மும்பையைப் பற்றியது. ஆயிரம் பக்கங்கள். அப்படிப்பட்ட ஒரு நூலைப்போல சென்னையைப் பற்றி யாரும் எழுதவில்லை. இங்கே குதிரைக் கூட்டம்போல எல்லாம் சினிமாவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.”

“சென்னை குறித்து பல சினிமாக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவையெல்லாம் முக்கியமான பதிவுகள்தானே?”

“இங்குதான் சினிமாவே இல்லையென்கிறேனே! அப்படி சினிமாவில் சென்னையைப் பதிவுசெய்ய வேண்டும் என்றால், முதலில் இவர்கள் சினிமா குறித்த நாவலான ‘கரைந்த நிழல்களை’ படமாக்கியிருக்க வேண்டும். அவர்கள் துறை சார்ந்த நாவல்தானே அது. அதுவே நடக்கவில்லையே? ‘மான்சூன் வெட்டிங்’ படம் பாருங்கள். அந்தப் படத்தில் டெல்லி குறித்து நான் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். ‘மெட்ராஸ்’ படத்தை முக்கியமாகச் சொல்கிறார்கள் . ஆனால், அது வடசென்னையை மட்டும்தானே பிரதிபலிக்கிறது? என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் சென்னை இன்னும் சரியாகப் பதிவாகவில்லை.”

“இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எழுத்து குறித்து உங்களது கருத்து..?”

“இங்கு வேலை பிரமாதமாக நடந்து வருகிறது. சமீபத்தில் உம்பர்தோ எக்கோவின் ‘தி நேம் ஆப் தி ரோஸ்’ படித்தேன்.  படுமுட்டாள்தனமான நாவல் அது. ஒரு தேவாலயத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக விவரிக்கிறார். அந்தத் தேவாலயத்தின் கதவைப் பற்றி மட்டுமே தனியாக ஓர் அத்தியாயம். அதோடெல்லாம் ஒப்பிடுகையில் இங்கு எவ்வளவோ தீவிரமாக இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.”
“இலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் இயக்கம் எப்படி இருக்கிறது?”

“நான் கவனித்தவரை பெண் படைப்பாளிகள் அதிகமாக வாசிப்பதில்லை. சி.சு.செல்லப்பா, க.நா.சு, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, கு.ப.ரா,  தி.ஜானகிராமன்,  கரிச்சான் குஞ்சு இவர்களைப் பற்றியெல்லாம் பெண் படைப்பாளிகள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை.  எதைப்பற்றியுமே அவர்கள் எழுதுவதில்லை. கவிதை சுருக்கமாகவும் எழுதுவதற்கு சுலபமாகவும் இருப்பதால், அதிலேயே தேங்கிவிடுகிறார்கள். சல்மா தவிர வேறு யாரும் நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதில்லை.செளகர்யமான இடத்தில் இருந்துகொண்டு கவிதை எழுதியபடி பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்கு உரைநடையில்தானே சவால்கள் இருக்கின்றன? தேன்மொழி தாஸ், லீனா மணிமேகலை, பெருந்தேவி போன்றோருடைய கவிதைகள் எனக்குப் பிடித்தமானதுதான். என்றாலும், உரைநடைக்குவந்து அவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்வதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.”

“டெல்லியில் இருக்கும்போது நிறைய நாடகங்கள் பார்த்ததாகக் குறிப்பிட்டீர்கள்.தமிழில் நாடகங்களின் நிலை என்னவாக இருக்கிறது?”


“இன்றைய நவீன நாடக இயக்கம் அவ்வளவு தீவிரமாக இல்லை. எப்படி சோழ மண்டல ஓவியர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறதோ, அப்படித்தான் நவீன நாடக உலகமும் இருக்கிறது.”

“ஆரம்பத்தில் நீங்களும் நாடகங்களில் ஈடுபட்டீர்கள் அல்லவா? அந்த நாடக அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்...”

“என் வாழ்வில் ஒரே ஒரு நாடகம்தான் போட்டேன். அதோடு சரி, இந்த ஊரில் இனி நாம் நாடகம் போடக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். அந்தப் பிரச்னையின்போது எனக்காகப் பேசிய கே.ஏ.குணசேகரனுக்கும் செம அடி. அதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த நாடக வளாகத்தை விட்டு வெளியே வந்தாலும் அடிப்போம் என்று வெளியிலும் ஒரு கும்பல் காத்திருந்தது. ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஒளிந்திருக்க வேண்டியதாகி விட்டது. இருபது பேரின் பாதுகாப்போடு என்னை வெளியே அனுப்பிவைத்தார்கள்.”

“அப்படி என்னதான் செய்தீர்கள் நாடகத்தில்..?”

“அந்த அரங்கத்தில் சிகரெட் குடிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், முதல் காட்சியிலேயே சிகரெட்டுடன் மேடையில் நான் அமர்ந்திருப்பேன். டேப் ரெக்கார்டரில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருக்கும். கொலை வெறியாகிவிட்டார்கள். முதல் காட்சியிலேயே குழப்பம் ஆரம்பித்து விட்டது. அடுத்த காட்சி, இரண்டு ஆண்கள் ஜீன்ஸ் அணிந்து வெற்று மார்புடன்  ஓர்  உடல் இன்னொரு உடலை ஈர்க்கிறது என்கிற பாவனையில் நடன அசைவுகளை வெளிப்படுத்துவார்கள். பின்னணியில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருக்கும். மூன்றாவது காட்சி, ‘சிதம்பரம் பத்மினி’ சம்பவத்தை நினைவுகூரும்விதமாக மேடையில் ஒரு பெண் வருகிறாள். அவளின் பிறப்புறுப்பில் போலீஸ்காரன் ஒருவன் கத்தியை வைக்கிறான். அப்போது சில்க் ஸ்மிதா பாடல் ஒன்று ஒலிக்கிறது. நான்காவது காட்சி, ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ மாதிரியான அப்போதைய ஒரு பாடலை ஒலிக்கவிட்டோம். அவ்வளவுதான், கூட்டம் மேடையேறி அடிக்கத் தொடங்கிவிட்டது (சிரிக்கிறார்).”

“ஒருபுறம் ‘என்னிடம் காசே இல்லை; நான் ஓர் ஏழை’ என்று எழுதுகிறீர்கள். மறுபுறம் விலை உயர்ந்த மதுவகை, உணவுகள், அதிக செலவாகும் நாய் போன்ற பிராணிகளை வளர்த்துக்கொண்டு ஒரு ‘லக்ஸுரி’ வாழ்க்கை வாழ்கிறீர்கள்... இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது?”
“ஏழ்மை என்பதின் அர்த்தம் ஆளாளுக்கு வேறுபடுகிறது. மணிரத்னம் ஜப்பானில் ஒரு காட்சி எடுக்கவேண்டும் என்றால், தயங்காமல் கிளம்பிப் போவார். காரணம், அவருக்கு இருக்கும் வாய்ப்புகள். ஆனால், சீலேவுக்குப் போக வேண்டும் என பல வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்; போய் வரச் செலவாகும்; ஐந்து லட்சம் இல்லை என்று 30 வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் அது சாத்தியமாகவில்லை.  இதைத்தான் ஓர் எழுத்தாளனின் ஏழ்மை என்கிறேன். ஆனால், நான் ஏழ்மை என்று எழுதுவதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு நான் போனில் அழைத்தால், ‘கட்’ செய்துவிட்டு அவர்கள் அழைக்கிறார்கள். தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது?”

“இளையராஜாவின் இசை குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறீர்கள்... நீங்கள் வியக்கும் அளவுக்கான ஒரு சிறப்பம்சம் கூடவா அவரது இசையில் இல்லை?”

``பாப் மார்லியின் இசையைக் குப்பை என்று சொன்னதிலிருந்துதான் இளையராஜா மீது எனக்கு விமர்சனமும் கோபமும் உண்டானது. பாப் மார்லி, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்துவந்த ஓர் இசைக் கடவுள். அவரை அப்படிச் சொன்னதில் உண்டான என் கோபம் நியாமானதே. அதைத்தான் எழுதினேன். அதேசமயம், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் பார்த்த பிறகு, ‘கடவுளே மனிதனாகப் பிறந்தால் மட்டும்தான், இப்படி இசை அமைக்க முடியும்’ என்று எழுதினேன். உண்மைதான், அவருக்குச் சரியான படங்கள் வாய்க்கவில்லை.”

“ஏதாவது இசைக்கருவி கற்றுக்கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?”

“நானும் நாகூர் அனிபா மகனும், தினமும் காரைக்கால் போய்   கிட்டாரும் பியானோவும் கற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். குறைந்தது ஒருநாளைக்கு மூன்று முதல் நான்குமணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்கிற நிலை. நேரமில்லாததால், நான் விட்டுவிட்டேன். அவர் கற்றுக்கொண்டார்.”

“விருதுகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கின்றனவே...” 


“இது என்ன புதிதா? இலக்கியத்திற்கு மதிப்பே இல்லாத ஒரு சமூகத்தில் நமக்கு நாமே விருதுகள் கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாளைக்கு ஜெயமோகன் எனக்கொரு விருது கொடுப்பார். என்னிடம் காசு வந்தால், நான் ஒரு விருது அமைப்பை உருவாக்கி ஜெயமோகனுக்கு விருது கொடுப்பேன். சமூகம் கவனிக்கவில்லை; கவனிக்காது; நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டியதுதான்.”

“உங்களைச் சாருவாக மாற்றிய புத்தகங்கள் குறித்துச் சொல்ல முடியுமா?”


“ ‘நீ சராசரி அல்ல; மந்தையோடு மந்தையாகச் செல்லும் ஆடு அல்ல’ என்று உணர்த்தியது ஜெயகாந்தனின் புத்தகங்கள். இன்னும் அதிகம் போகவேண்டும் என்று  தோன்றவைத்தவர்கள் அசோகமித்ரனும் ஆதவனும். இது நமது இடமல்ல, நாம் இயங்க வேண்டிய இடம் வேறு என்று உணரச்செய்தது பிரெஞ்ச் இலக்கியங்கள். அவை எண்ணிக்கையற்றவை, குறிப்பிட்டு இன்ன இன்ன புத்தகங்கள் என்று சொல்ல முடியவில்லை.”

“உங்களின் ஏதாவதொரு நாவலைத் திருத்தி எழுத வேண்டும் என்று விரும்புகிறீர்களா?”

ஆமாம். ‘எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும்’ நாவலைத் திருத்தி எழுதப்போகிறேன். அவ்வளவு விஷயங்களை  விட்டிருக்கிறேன். கண்டிப்பாக ஆயிரம் பக்கங்கள் வரும்.”

“முன்பெல்லாம் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார் சாரு, இப்போது சாந்தமாகிவிட்டார் என்கிறார்களே... என்ன காரணம்?”


“(சிரிக்கிறார்) பெரிதாக ஒன்றுமில்லை. ‘ரான்சில் 10’ என்று ஒரு மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். முன்பு, ரத்த அழுத்தம் அதிகம் இருந்தது; கொதித்துக்கொண்டிருந்தேன். இப்போது இந்த மாத்திரையால் சாந்தமாகிவிட்டேன். உடலுக்குள் நடக்கிற கெமிக்கல் ரியாக்‌ஷன்கள்தானே எல்லாம்!”

“உலகத்தின் ஏராளமான படைப்பாளிகள்  ‘கனவுகளை’ முக்கியமானதாகக் கருதுகிறார்கள். படைப்புகள் சார்ந்து அவை உதவுவதாகச் சொல்கிறார்கள். கனவுகள் சார்ந்து உங்களின் அனுபவம்?”

“கலைஞனுக்கு தனியே கனவென்று ஏதும் இல்லை. அவன் எப்போதும் கனவுகளில்தான் வாழ்கிறான். `ஸீரோ டிகிரி’ நாவலே கனவு நிலையில் எழுதப் பட்டதுதான்.” 

“உங்களது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு தூரம்?”

“என் எழுத்துதான் என் வாழ்க்கை. என் வாழ்க்கைதான் என் எழுத்து!”

“தமிழ் இலக்கியத்தில் சாரு என்னவாக நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

“எப்போதைக்குமான இளைஞர்களின் குரலாக!”

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...