ஞாயிறு, 29 அக்டோபர், 2017

‘வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ - ரஜினிகாந்த்

‘வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை
சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ 
‘வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’
ரஜினிகாந்த் பேச்சு
அக்டோபர் 29, 2017, 
துபாயில் 2.0 சினிமா பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நமது வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
துபாய், 

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

தமிழ்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் 2.0 தயாராகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

பாடல்கள் வெளியீட்டு விழா

‘2.0’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த பிரமாண்ட விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். திரை உலக பிரமுகர்கள் பலரும் நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.

விழா நிகழ்ச்சியை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தமிழிலும், நடிகர் ராணா தெலுங்கு, ஆங்கிலத்திலும், நடிகர் கரன் ஜோகர் இந்தியிலும் தொகுத்து வழங்கினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், இயக்குனர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பட அதிபர் சுபாஸ்கரன் ஆகியோர் மேடைக்கு முன்புறம் பார்வையாளர் வரிசையில் வந்து அமர்ந்தபோது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

2.0 படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 2 பாடல்கள் விழாவில் வெளியிடப்பட்டன. மற்றொரு பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முதல் பாடலான ‘இந்திர லோகத்து சுந்தரி’ என தொடங்கும் பாடலுக்கு நடிகை எமி ஜாக்சன் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.

ரஜினிகாந்த் பேச்சு

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

நான் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும்போது துபாய் விமான நிலையம் வழியாகத்தான் சென்றுள்ளேன். ஆனால் துபாய்க்கு வந்ததில்லை. இப்போது தான் துபாய்க்கு முதன் முறையாக வந்து இருக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளிலேயே துபாய் நகரம் அமெரிக்காவை போன்று உள்ளது.

2.0 திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவரும். நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். இந்த படம் ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெருமையை நானே சொல்லக்கூடாது. மக்கள் பார்த்து விட்டு சொல்வார்கள். நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

40 வருட சினிமா வாழ்க்கை

உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் பணம், புகழ் நமக்கு நிம்மதியை தரும் என்று சொல்ல முடியாது. புகழ், பணம் இருந்தாலும் கூட நிம்மதி இருக்காது, நிம்மதி இருக்கும்போது பணம் இருக்காது என்று நான் என்னுடைய 40 வருட சினிமா வாழ்க்கையில் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதுள்ள இளைய சமுதாயத்தினர் நிறையவே மாறிவிட்டனர். அவர்கள் நமது பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டவனின் அனுகிரகமும், மக்களின் அன்பும் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இளைஞர்கள் தாய்நாடு மற்றும் தாய் மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள். இதை வரவேற்கிறேன். ஆனால் சிலர் கலாசார வழக்கங்களை மறந்து வருகின்றனர். பணம், பெயர், புகழ் எல்லாமே மற்றவர்கள் பார்ப்பதற்குத்தான் நன்றாக இருக்கும், ஓரளவு தான் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரம்பத்தில் இவை சந்தோஷத்தை கொடுக்கும். ஆண்டவன் மேல் நம்பிக்கை இருப்பதால் ரஜினிகாந்த் ஆக இருப்பது சந்தோஷத்தை கொடுக்கிறது. இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டத்தை கொடுத்திருக்கும்.

இஸ்லாமியர்களின் பங்கு

இஸ்லாமிய சகோதரர்களுக்கும், எனக்கும் ஒரு பந்தம் உள்ளது. எனது வளர்ச்சி, உயர்வில் இஸ்லாமிய சகோதரர்களும் பெரும் பங்கு வகித்துள்ளனர். நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள் தான். சென்னையில் நடிக்க வந்த போது, முதன் முதலாக நண்பர் ஒருவர் வீட்டில் தான் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் இஸ்லாமியர்.

மேலும் சினிமாவில் பெயர், பணம், புகழ் வந்த பிறகு, தற்பொழுது நான் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர் தான். ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர் தான். அனைத்துக்கும் மேல் என் குரு ராகவேந்திரா சுவாமி கோவில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான். அதற்கும் மேலாக நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம் தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர் தான். இப்படி பல வகைகளில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது. இதை நான் குறிப்பிட்டு செய்யவில்லை. தானாக அதுவாகவே நிகழ்ந்ததாகும்.

கிடைக்கும் வாய்ப்பு

நமது வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் கஷ்டம். அந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்த வேண்டும். அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் நம்மை போல் முட்டாள் யாரும் இல்லை. ஒருவர், பெயர் புகழுடன் இருக்கிறார் என்றால் அது திறமையாலோ, கடின உழைப்பாலோ, மட்டும் அல்ல. அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார் என்பதால் தான். வாய்ப்புகள் சிலருக்கு தானாக வரும் அது ஆண்டவன் அருள். அப்படி வரவில்லை என்றால் நாம் தான் அந்த வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

தொடர்ச்சி அல்ல

இயக்குனர் ஷங்கர் பேசும்போது, “ரஜினிகாந்த் சாரிடம் நான் எதாவது படத்தின் கதையை சொன்னால் இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என எனக்கு அறிவுரை கூறுவார். அதை கேட்டு நானும் அந்த காட்சியை மெருகேற்றிக்கொள்வேன். மேலும் 2.0 படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவானது அல்ல. இது முழுக்க முழுக்க சமூக கருத்துடன் புதிய திரைக்கதையாக உருவாகியுள்ளது” என்று குறிப்பிட்டார். 

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

முடிவைப் பற்றிய சிந்தனை

முடிவைப் பற்றிய சிந்தனை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி
நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு எப்படி இருக்கும்?
இறைவழியில் நீங்கள் ஆழ்ந்து செல்ல முடியாமல் தடை செய்கிற பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. 
தான் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு நிச்சயமாக நல்லதுதான் என்று தோன்றும்போது மட்டுமே மனிதனுக்குத் தான் செய்யும் காரியத்தில் ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுகின்றன. காரியத்தின் முடிவைப் பற்றிக் குழப்பமும் அவநம்பிக்கையும் தோன்றும்போது, மேற்கொள்ளப்பட்டிருக்கும் காரியத்திற்கு அவை நிச்சயமாகத் தீங்கு செய்யும் என்பது எல்லாரும் உணர்ந்த ஒன்று.
இறைவழியில் ஈடுபடத் துடிக்கும் உங்களுக்கு, இந்தக் காரியம் முடிவில் நல்லதாக இருக்குமா? என்று குழப்பம் தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 
அப்படித்தான் இருக்கும், இப்படித்தான் இருக்கும் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் செய்து கொள்வதில் பயனில்லை. ஏனெனில் சில வேளைகளில் உண்மைக்கும் அனுமானத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.
அப்படியானால் வேறு என்னதான் செய்வது? – அதைத்தான் நாம் ஆராய வேண்டும்.
இறுதி நிலை பற்றிய சிந்தனையைக் கட்டோடு இறைவனிடம் விட்டுவிடுங்கள். உங்கள் சிந்தனைக்கு இங்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். ஒரு காரியத்தின் இறுதிநிலையைத் தீர்மானிப்பவன் இறைவன். எனவே அதனை அவனிடமே விட்டுவிடுவதைவிடச் சிறந்த காரியம் வேறில்லை.
ஒரு காரியத்தின் முடிவைப்பற்றிய சிந்தனையை இறைவனிடம் ஒப்படைப்பதால் இரண்டு நன்மைகள் ஏற்படுகின்றன.
முதல் நன்மை : நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு குழப்பமானதாகவும் பயனற்றதாகவும் தோன்றுகிறதா? முடிவில் நன்மை ஏற்படுமா – தீமை விளையுமா என்று உங்களுக்குத் தெரியவில்லையா?
இந்த நிலையில் உங்கள் மனம் எப்போதும் அலைமோதிக் கொண்டிருக்கும். குழப்பம், பயம், அதிருப்தி, கவனச் சிதறல் முதலிய துன்பங்களுக்குப் பலியாகித் துடிக்க வேண்டிய நிலைமை உங்களுக்கு ஏற்படும். 
இது நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்துக்குப் பெரும் இடையூறு என்று உங்களுக்குத் தெரியும். முடிவைப் பற்றிய பிரச்சினையை நீங்கள் இறைவனிடம் விட்டுவிட்டால், உடனுக்குடன் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். ஆத்மிகத் துறையில் ஈடுபடுகிறவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் இதுவும் ஒன்று.
அமைதியற்ற இதயத்தைத் துணைகொண்டு இறைவனை நெருங்கவே முடியாது. நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயலையும் அதற்குரிய பயனையும் இறைவனின் பொறுப்பில் விடும்போது, உங்களுக்கு நல்லதைத் தவிர்த்து வேறு எதுவும் ஏற்படாது என்று தெளிவாகத் தெரிந்துவிடும்.
எனவே உங்களுக்கு அமைதியும் பாதுகாப்பு உணர்வும் தாமாகவே ஏற்படுகின்றன. இவை மகத்தான பேறுகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எமது ஞானாசிரியர் ஒருவர் தமது சபைகளில் கீழ்க்காணூம் வாசகத்தை அதிகமாகக் கூறுவதுண்டு: 

‘வழிவகைகள் கண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள். உங்களைப் படைத்தவனிடம் பொறுப்பை விட்டுவிடுங்கள். உங்களுக்கு அமைதி ஏற்படும்!’

இரண்டாம் நன்மை : ஒரு காரியத்தை இறைவனிடம் ஒப்படைக்கும்போது அந்தக் காரியத்தின் முடிவு வரவேற்கத்தக்கதாக அமையும்.
ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்பதை அதன் முடிவை வைத்தே தீர்மானிக்க வேண்டும். ஆனால் எல்லாக் காரியங்களும் முடிவைப் பொறுத்தவரையில் குழப்பமானவைதான். 
நல்லவை போல் தோன்றுகிற எத்தனையோ காரியங்கள் தீய முடிவைக் கொடுக்கின்றன. அருமையான நல்ல முடிவுகள் பல, தீயவைபோல் தோன்றிய செயல்களிலிருந்து தோன்றியிருக்கின்றன. முடிவு எப்படியாகும் என்று உங்களுக்கு அறவே தெரியாது.
காரியத்தின் முடிவை எப்படியாவது நல்லதாக்கிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் நீங்கள் எவ்வளவு முயன்றாலும், இறுதி விளைவைப் பற்றித் தீர்க்கமாக எதுவும் கூற முடியாது. உங்களுக்கே தெரியாமல் தீங்கு ஏற்பட்டுவிட முடியும்.
இறுதி நிலையைப் பற்றி உங்களுக்கு நீங்களே தீர்மானம் செய்து கொள்வது, ஆசைக்கு அடிமைப்படுவது முதலான குணங்கள் ஆத்மிகத்துக்கு மகத்தான இடையூறுகளாகும்!
எனவே, எடுத்துக் கொண்ட காரியத்தில் அக்கறையோடு நிற்கும் நீங்கள் அதன் முடிவை இறைவனிட்ம் விட்டுவிட்டால் உங்களுக்கு எது நல்லதோ அதைக் கொடுத்தருளுமாறு அவனிடம் பிரார்த்தனை செய்தால் – இறுதியில் நல்லதைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படாது.
‘காரியத்தின் முடிவை இறைவனின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்று கூறுகிறீர்களே, எல்லாக் காரியங்களையும் இறைவனிடம் விட்டுவிட வேண்டுமா?’ என்று நீங்கள் கேட்கலாம்.
அப்படியில்லை. சில காரியங்களின் முடிவுகள் தீர்க்கமானவை. அந்தக் காரியங்களினால் நன்மை ஏற்பட முடியாது என்று உங்களுக்கு நிச்சமாகத் தெரியும். இவற்றில் நீங்கள் ஈடுபடவே கூடாது. 
எனவே விளைவைப் பற்றிய பிரச்சினையை இங்கு இறைவனிடம் ஒப்படைக்க முடியாது. இறைவன் தடை விதித்திருக்கிற காரியங்கள் அனைத்தும் இந்தப் பிரிவைச் சேருகின்றன.
வேறு சில காரியங்கள் நல்ல முடிவைக் கொடுக்கக் கூடியவை. இவை நிச்சயமாகத் தீயவிளைவுகளை உருவாக்க முடியாது. இறைவனின் கட்டளையிட்டிருக்கிற காரியங்கள் அனைத்தும் இந்தப் பிரிவைச் சேருகின்றன. 
எனவே இவற்றையும் இறைவனிடம் ஒப்படைக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயல்களுக்குரிய நற்பயன்களை அனுபவித்துக் கொள்ளலாம்.
மற்றும் சில காரியங்கள் முடிவைப் பொறுத்தவரையில் குழப்பமானவை. அவற்றினால் நன்மை ஏற்படுமா, தீமை ஏற்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது. 
‘நப்ஸ்’ என்று குறிப்பிடப்படும் செயல்கள் இந்தப் பிரிவுக்கு வருகின்றன. இவை நல்ல விளைவுகளைக் குறியாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும், சில வேலைகளில் இவை வரவேற்க முடியாத விளைவுகளைத் தோற்றுவித்து விடக்கூடும்.
– இந்தப் பிரச்சினைகளைத்தான் நீங்கள் இறைவனின் பொறுப்பில் விட வேண்டும். இறுதிப் பயனை இறைவனிடம் விட்டுவிட்டுப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
‘காரியத்தின் முடிவை இறைவனிடம் ஒப்படைப்பது என்றால் என்ன பொருள்?’ என்று கேட்கிறீர்களா? 
குழப்பமும் தீயவிளைவும் ஏற்படலாம் என்று தோன்றுகிற காரியத்தில் இறைவன் உங்களுக்கு நல்ல விளைவைத் தோற்றுவித்துத் தரவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உங்கள் காரியத்தை இறைவனிடம் ஒப்படைக்கிறீர்கள் என்று பொருள். 
இப்படி இறைவனிடம் ஒப்படைக்கும் மனப்பக்குவம் எல்லாருக்கும் எளிதில் ஏற்பட்டுவிடும் என்று நான் கூறவில்லை. இது சிரமமானதொரு குறிக்கோள்தான்.எனினும் நீங்கள் அக்கறை எடுத்து முயற்சி செய்தால் இந்த மனப்பக்குவத்தை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.
எல்லாக் காரியமும் குறுக்கீடுகளுக்கும் ஆபத்துகளுக்கும் இலக்கானதுதான் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் மேற்கொள்ளும் காரியம் பயனற்றுப் போவதும் தீய பலனைக் கொடுப்பதும் சாத்தியம்தான் என்பதை எண்ணிப் பாருங்கள். 
இப்பட்பட்ட இடையூறுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தகுதியும் வலிமையும் உங்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்து பாருங்கள். உங்கள் பலவீனத்தினால், அறியாமையினால், கவனக்குறைவினால் எந்தத் தீமையும் ஏற்படலாம் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து சிந்தனை செய்தால், அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு விரைவில் ஏற்பட்டுவிடும்.
‘ஒருவன் தான் மேற்கொள்ளும் காரியத்தின் இறுதி விளைவை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். எல்லாவிதமான விபரீதங்களிலிருதும் அவனுக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?’ என்று நீங்கள் கேட்கலாம்.
உலகம் என்பது எல்லாவிதமான துன்பங்களுக்கும் சிரமங்களுக்கும் நிலைக்களனான ஒன்று என்பது உண்மை. இங்கே ஒரு செயல் எந்த விளைவையும் தோற்றுவிக்கலாம். 
ஆனால் பெரும்பான்மையாக நடக்கும் காரியங்களை வைத்து நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு மனிதன் தன் காரியங்களை இறைவனிடம் ஒப்படைக்கும்போது அவனுக்கு அனேகமாக நன்மைதான் ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் தீமை ஏற்படுவதுண்டு என்பதும் உண்மைதான். 
இப்படித் தீமை ஏற்படுவது ஒரு சில வேளைகளில்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: ஆபிதீன் பக்கங்கள்
நன்றி : அஃப்சரா பதிப்பகம்.

எது நடந்தாலும் நடக்கட்டும்

எது நடந்தாலும் நடக்கட்டும்

**
இறைத் தீர்ப்பு
மனிதனின் வாழ்வில் உயர்வையும் தாழ்வையும் தோற்றுவிக்கிற விதியையே (இங்கே)  நான் இறைத் தீர்ப்பு என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில் இறைத் தீர்ப்பு இல்லாமல் எதுவும் எங்கும் நடக்க முடியாது.
உங்கள் விதி எப்படி அமையப் போகிறது? அது நல்லபடியாக அமையப் போகிறதா – இல்லை, உங்களைத் தூக்கிப் போட்டு விளையாடப் போகிறதா? – இறைவழியில் ஈடுபடத் துடிக்கும் உங்களுக்கு இப்படிப்பட்ட வினாக்கள் தோன்றக் கூடும். இவற்றிற்கு உங்களால் விடை காண முடியாது. இதனால் உங்களுக்குக் குழப்பமும் அவநம்பிக்கையும் தோன்றலாம். இதன் இறுதி விளைவு இது : உங்கள் வழிபாட்டுக்குத் தடை ஏற்பட்டுவிடும்.
எனவே இந்தப் பிரச்சினையில் இறைத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்; எது நடக்கக் கூடாதோ அது தவிர்க்கப்படட்டும். நடந்தே தீர வேண்டிய ஒன்றை நடக்கக் கூடாததாக மாற்ற முற்படாதீர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்வது மனிதப் பண்புகளில் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்று.
இறைவனின் தீர்ப்புப்படி எது நடந்தாலும் நடக்கட்டும் என்னும் உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நாம் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
முதற்காரணம் : உங்கள் வாழ்வில் தோன்றுகிற ஏற்றத் தாழ்வுகளை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றால், இந்தப் பிரச்சினையில் உங்களுக்கு அமைதி ஏற்பட வழியே கிடையாது. உங்கள் உள்ளத்தைக் கவலையும் அச்சமும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.  கடந்த கால அனுபவம் நிகழ்கால சூழலோடு கலந்து எதிர்காலத்தில் நடக்கப்போகும் காரியத்தைக் குழப்பம் கொண்டதாகக் காட்டும். ‘அது ஏன் அப்படி நடந்தது?’ ‘இது ஏன் இப்படி நடக்கவில்லை?’, ‘இன்னது நிச்சயமாக இப்படி நடக்குமா?’ எனும் சிந்தனைகள் உங்கள் உள்ளத்தைவிட்டு என்றைக்கும் நீங்காது.
உங்கள் உள்ளத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகள், குழப்பங்கள் இருக்கும்போது, உங்களால் இறைவழிபாட்டில் எப்படி ஈடுபட முடியும்? இறைவன் உங்களுக்கு ஒரே ஒரு உள்ளத்தைத்தான் கொடுத்திருக்கிறான். நடந்த காரியத்தைப் பற்றிய கவலைகளையும் நடக்கப்போகும் காரியத்தைப் பற்றிய அச்சத்தையும் போட்டு அந்த ஒரே ஒர் இதயத்தையும் நீங்கள் நிரப்பிவிட்டீர்கள். அப்புறம், இறைவனைப் பற்றிய நினைவுக்கும் மறுமை பற்றிய சிந்தனைக்கும் உங்கள் இதயத்தில் இடம் ஏது?
ஷகீக் பல்கி அவர்கள் கூறிய கூற்று ஒன்று இக்கருத்தை நமக்குத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. ’நடந்துபோன காரியங்களைப் பற்றிய வருத்தமும் நடக்கப் போகும் காரியங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் இந்த நேரத்தின் ‘பரக்கத்’தைக் கொண்டு சென்றுவிட்டன!’
இரண்டாம் காரணம் : வாழ்வில் தோன்றுகிற ஏற்றத் தாழ்வுகளை ஒரு மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அவன் இறைவனின் தீர்ப்பில் திருத்தம் செய்ய முற்படுகிறான் என்பதே பொருள். இதனால் அவன் இறைவனின் சினத்துக்கு இலக்காக வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன் இறைத் தீர்ப்பை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளும்போது இறைவனின் சினத்திலிருந்து அவனுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இறைவனின் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேனல்லவா? – இப்படி நான் கூறுவதற்கு இது இரண்டாம் காரணம்.
இறைத்தூதர் ஒருவரைப் பற்றிக் கூறப்படும் செய்தியொன்று இங்கு நினைவுகூரத் தகுந்தது. வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்ட துன்பங்கள் குறித்து அவர் இறைவனிடம் மனத்திற்குள்ளேயே முறையிட்டார். அந்த முறையீட்டுக்கு இறைவன் இப்படிச் செய்தி அனுப்பினான். ‘இழிவும் குறைபாடும் இல்லாதவன் நான் என்று அறிந்திருந்தும் நீர் என் மீது குறை சொல்கிறீரா? உமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நான் தீர்ப்பு வழங்கியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது என் தீர்ப்பு குறித்து நீர் என் வெறுப்புக் கொள்கிறீர்? உமக்காக உலகத்தையே நான் மாற்றியமைக்க வேண்டும் என்று விரும்புகிறீரா? என் விருப்பத்துக்கு மாறாக உம் விருப்பத்துக்குத் தக்கபடி நான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், நான் எண்ணுவதற்கு மாறாக, நீர் எண்ணுவது நடக்க வேண்டும் என்றும் நீர் ஆசைப்படுகிறீரா? என் கண்ணியத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: என் தீர்ப்புக்குத் திருத்தம் தேடும் எண்ணம் மீண்டும் ஒருமுறை உமது மனத்தில் தோன்றினால் உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘நபித்துவத்’தைப் பறித்துவிடுவேன்!’
இதில் மறைந்து கிடக்கிற ஆழ்ந்த தத்துவத்தையும் எச்சரிக்கையையும் பகுத்தறிவு படைத்தவர்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டும். ‘நபித்துவத்’தைப் பெற்ற ஒருவரே இப்படி எச்சரிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களைப்பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது? மனத்தில் தோன்றும் எண்ணத்துக்கே இப்படி தண்டனை கொடுக்கப்படும்போது, தமக்கு ஏற்படுகிற துன்பங்களை எடுத்துக் கூறி புலம்பியழுகிறவர்களின் நிலைமை எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள். இறைத் தீர்ப்பைப் பார்த்து ஒரே ஒருமுறை வெறுப்புக் கொண்ட இறைத்தூதருக்கு இப்படி எச்சரிக்கை செய்யப்பட்டால், தம் வாணாள் முழுவதும் இறைத் தீர்ப்புக்கு எதிராக ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்படி எச்சரிக்கப்பட வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.
இந்த இறைத் தூதர் தமக்கு ஏற்பட்ட இன்னல் குறித்து இறைவனிடம் முறையிட்டார். அவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் அவர் முறையிடவில்லை. இறைவனிடம் நேரடியாக விடுக்கப்பட்ட முறையீட்டுக்கு இப்படி எதிர்ப்பு கிடைத்தால், இறைவனை மறந்துவிட்டு அவனல்லாத எல்லாரிடமும் விடுக்கப்படுகிற முறையீடுகளுக்கு எப்படி எதிர்ப்புக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
நமது மனத்தால் தோன்றுகிற தீமைகளிலிருந்தும் நமது செயல்களால் விளையும் விபரீதங்களிலிருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக! நமது நடைமுறையில் தோன்றுகிற ஒழுங்கீனங்களை மன்னித்தருள வேண்டும் என்றும், அவற்றைத் தனது அன்புக் கண் கொண்டு திருத்தியருள வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன்.
‘இறைவனின் தீர்ப்புகளைத் திருப்தியோடு ஏற்றுக் கொள்வது என்றால் என்ன பொருள்?’ என நீங்கள் கேட்கக் கூடும்.
உங்கள் வாணாளில் தோன்றுகிற துன்பங்கள் குறித்து உங்களுக்குச் சங்கடம் தோன்றவில்லை என்றால், நீங்கள் இறைத் திருப்தி எனும் படித்தரத்தை அடைந்திருக்கிறீர்கள் என்பது பொருள்.
உங்களுக்கு துன்பம் ஏற்படும்போது இது ஏற்படாமல் இருந்தால் நல்லது என்று எண்ணினால் அந்தப் படித்தரத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்பது பொருள். உலகில் நடைபெறும் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனின் தீர்ப்பே மூல காரணம் என்று உணரும் நீங்கள் இறைத் தீர்ப்பை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், உங்களால் இறைவழியில் முன்னேறவே முடியாது. ஏனெனில் கவலையும் அச்சமும் குடிகொண்டிருக்கும் இதயத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை தழைக்க முடியாது.
உங்கள் வாழ்வில், உங்கள் ஆத்மிகப் பயணத்தில் துன்பத்தைத் தவிர்த்து வேறு எதுவும் தோன்ற முடியாது என்று நான் கூறவில்லை. உலக வாழ்வில் துன்பத்தை விட இன்பமே அதிகமாகக் காணப்படுகிறது. உங்களுக்கு நல்லது நடந்தால் அதற்குக் காரணமான இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் இறைவனின் தீர்ப்பு இல்லாமல் எதுவும் நடக்க முடியாது. உங்களுக்கு கெட்டது வந்தால் அதனைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இறைவன் அளித்த தீர்ப்புக்குத் திருத்தம் காண முற்படாதீர்கள்.
நீங்கள் இப்படி நடந்து கொண்டால், உங்கள் மனத்தில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும். கவலைக்கும் அச்சத்துக்கும் குழப்பத்துக்கும் அங்கே இடம் இருக்காது. இப்படிப்பட்ட இதயத்தை வைத்து இறைவழியை அணுகும்போது அது ஒருபோதும் துணை நிற்கத் தவறாது.
ஆரம்பமும் முடிவுமில்லாத இறைவனே அனைத்துப் புகழுக்கும் உரியவன்.
**
நன்றி : அஃப்சரா பதிப்பகம்; ஆபிதீன் பக்கங்கள்.

வியாழன், 19 அக்டோபர், 2017

வாழ்வை மாற்றிய புத்தகம்

வாழ்வை மாற்றிய புத்தகம்


``மிகச் சிறந்ததை மட்டுமே தேடிப் பெறு.

உன்னிடத்திலும் நீ செய்யும் செயல்களிலும் நம்பிக்கை கொள்.

உன் இலக்குகளை அடையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.

கவலைப்படுகிற வழக்கத்தைக் கைவிட்டு, அமைதிக்குப் பழகு.

தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் தொழில்ரீதியிலும் உறவுகளை மேம்படுத்திக்கொள்.

சூழல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உனக்குண்டு என நினைத்துக்கொள்.

உன்னிடத்தில் இரக்கம்கொள்.


இப்படி, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பத்தியும் பாசிட்டிவிட்டி பேசும். `அடிப்படையில் ரொம்பவே நெகட்டிவிட்டி உள்ள ஒரு மனுஷி நீ. அது தவறு, மாற்றிக்கொள்!’ என எத்தனையோ பேர் எனக்கு அட்வைஸ் செய்தும், என்னால் அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இன்று வரையிலும் நான் அப்படித்தான் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் தோழி `தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்க்கிங்’ புத்தகத்தை எனக்கு வாசிக்கக்கொடுத்தார். முழுவதும் படித்த பிறகும் நான் நெகட்டிவிட்டியிலிருந்து வெளியே வந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், நான் 100 சதவிகித பாசிட்டிவ் மனுஷிதான் என்பதை, என் வாழ்வின் பல தருணங்களும் நிகழ்வுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. `வெற்றிகரமான நபராக உன்னை நீயே கற்பனை செய்து பார். அந்த வெற்றி என்பது பொருளாதார ரீதியிலோ, அந்தஸ்திலோதான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீ செய்யும் வேலையில் உனக்கு திருப்தியும் மனநிறைவும் கிடைத்தாலே நீ வெற்றி பெற்றுவிட்டதாகவே அர்த்தம்' என்பார் இந்நூலாசிரியர்.  இதேதான் என் வாழ்க்கை.  நமக்குப் பிடித்து ஒரு வேலையைச் செய்யப் பழகினோமானால் ஆத்மார்த்தமாக அதனுள் நுழைவோம். அது ஒருவித லயிப்பு. அப்படி என் வேலையைத் தொடங்கும்போதே அது எனக்குப் பிடித்துவிடுகிறது.

சினிமாவில் நடிப்பதற்கான கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். படத்துக்குப் படம் 100 சதவிகித உழைப்பைத் தர முனைகிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு வெற்றிப் படம் என நம்புகிறேன். தேசிய விருதை என் கைகளில் சேர்த்தது முதல் நடிகையாக எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அந்தஸ்து வரை அனைத்துக்கும் காரணம், என் ஆழ்மனதில் பதிந்த பாசிட்டிவிட்டிதான். எல்லாருக்குமே பிடித்தது வாய்க்குமா என்பது சந்தேகம்.  பிடிக்காதவை வரும்போது அவற்றைக் கையாளும் உத்தியையும் இந்தப் புத்தகம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
என் ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் மாணவிகளோ, வேறு யாரோ என்னிடம் ஏதேனும் குறைகளுடன் பேசும்போது அதே விஷயத்தை பாசிட்டிவாக அணுக கவுன்சலிங் தருகிறேன். `உனக்கொரு குறை வந்தால், அதைக் குறையாகப் பார்க்காதே... அந்தக் குறையுடன் கூடவே அதற்கான நிவர்த்தியையும் கடவுள் கொடுப்பார். நீ ஓர் உதாரணமாக நின்று யாரிடமோ பேச உன்னைத் தயார் படுத்துகிறார் என எடுத்துக் கொள். நீ ஒரு பாசிட்டிவ் உதாரணமாகப் படைக்கப்பட்ட நபர் என நினைத்துக்கொள்’ என்று சொல்வேன். இதைச் சொல்லும்போது அவர்கள் மெள்ள மெள்ள பாசிட்டி விட்டிக்குள் திரும்புவதையும் பார்க்கிறேன்.

`ஹேப்பினெஸ் ஹேபிட்’ என ஒரு டெக்னிக் பற்றியும் இந்தப் புத்தகத்தில் சொல்கிறார் ஆசிரியர். அதாவது சந்தோஷ மான தருணங்களைப் பற்றி அசைபோடுகிற பழக்கத்தை வளர்த்துக்கொள்வது. தினமும் காலையில் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியளித்த தருணங்கள், நிகழ்வுகள், நபர்களைப் பற்றி நினைத்துப்பார்ப்பதே அன்றைய பொழுதை அழகாக்கும் என்கிறார்.

என்னுடைய இதயம் கவர்ந்த ஹீரோ என்றால், நடிகர் வடிவேல். `ஐம் இன் லவ் வித் ஹிம்’ என்பேன். என்னைச் சிரிக்க வைக்கிறவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் தூங்கச்செல்வதற்கு முன் எங்கள் வீட்டில் நானும் என் மகள்களும் பேசிச் சிரிக்கிற சத்தம் எங்கள் தெருவையே அதிரச் செய்யும். அன்றைய நாள் நடந்த நல்ல விஷயங்களைப் பேசிச் சிரிப்போம். அது நல்ல உறக்கத்தையும் கனவுகளையும் தரும். வடிவேல் காமெடியை ரசித்து ரசித்துச் சிரிப்போம். இந்த `ஹேப்பினெஸ் ஹேபிட்'டை தினசரி வாழ்வின் பல விஷயங்களிலும் பின்பற்றுவேன். காலையில் என் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கும்முன்  `குட் மார்னிங் லேடீஸ்’ எனச் சொல்லிக் கைதட்டுவேன். பல மைல் தூரம் பயணம் செய்து வகுப்புக்கு வரும் பெண்களின் களைப்பெல்லாம் சட்டென மாறும். `எவ்வளவு சத்தமாகக் கை தட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு ஆயுள் கூடும்’ என்பேன். அந்தக் கைதட்டலில் எங்கள் ஏரியாவே அதிரும். இவையெல்லாமே பாசிட்டிவிட்டியின் அறிகுறிகள்தாம். யார் அதிக சத்தமாகக் கைதட்டுகிறார் என்பது, எங்கள் வகுப்பின் க்ளாப் சேலன்ஜ்.
`இது நடக்குமா, இதில் நான் வெற்றி பெறுவேனா என்ற சந்தேகங்களுக்கு இடமளிக்காமல், எந்த ஒரு விஷயத்தையும் நூறு சதவிகித நம்பிக்கையுடன் நோக்க வேண்டும்' என்றும் கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம். `நினைக்கிற விஷயம் நடக்கும் என்பதற்கு உங்கள் ஆழ்மனத்தைத் தயார்படுத்துங்கள். அதுவே அந்தக் காரியத்தை நிகழ்த்திக்கொடுக்கும்’ என்கிறார்  புத்தக ஆசிரியர்.

என் வாழ்வின் சமீபத்திய நிகழ்வொன்று இதை உறுதிப் படுத்தியது. நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அவர் எனக்கு அதற்குமுன் அறிமுகமில்லை. இரண்டாவது நாள்தான் நாங்கள் முதன்முறையாகப் பேசிக் கொண்டோம். அந்த அறிமுகத்தில் என் மகளின் காலேஜ் அட்மிஷன் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை அவரிடம் சொன்னேன். `நிச்சயமா கிடைச்சுடும் மேடம்.  நீங்க வேணா பாருங்க... அடுத்த முறை நாம மீட் பண்ணும்போது `காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு’னு சொல்வீங்க’ என்றார். ஏன் சொன்னார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அவர் சொன்னதுபோலவே அடுத்த சந்திப்பில் என் மகளுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைத்த விஷயத்தை அவரிடம் சந்தோஷமாகச் சொன்னேன். `எந்த நேரத்துல அப்படிச் சொன்னீங்கன்னு தெரியலை. அப்படியே நடந்திருச்சு’ என நான் சொன்னபோது, `பாசிட்டிவா பேசறதும் இருக்கிறதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் மேடம்... பாசிட்டிவிட்டிதானே லைஃப்’ எனச் சிரித்தார் நயன்தாரா. அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அது பொருந்தும்.

நான்தான் என்னை நெகட்டிவ் திங்க்கர் எனச் சொல்லிக் கொள்கிறேன். ஆனால், என்னுடன் பழகும் பலரும் நான் பாசிட்டிவிட்டியைப் பரப்புவதாகவே சொல்கிறார்கள். அதைச் சாத்தியப்படுத்தியது இந்தப் புத்தகம்தான் என்றே நம்புகிறேன்.’’

கொட்டை பாக்கு

கொட்டை பாக்கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .


ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பக்க‍விளைவுகளும் பின்விளைவுகளும் இல்லாத மருந்தாக பயன்படுத்தி வந்திருப்ப‍து ஆச்ச‍ரியப்பட வேண்டிய விஷயம்.
அந்த வரிசையில் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன்கூடவரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டுவைத்தியம்; வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறுசிறு துண்டுகளாக்கி , சாப்பாட்டிற்குப்பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும். ஆனால் கடித்து அதனை துண்டாக்க‍க் கூடாது; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பிவிடுங்கள். பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ்நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...