வியாழன், 29 செப்டம்பர், 2016

ஆண்பால் பெண்பால் அன்பால்

ஆண்பால் பெண்பால் அன்பால்


கவிஞர் மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர். 

மாதொருபாகனாக வாழும் கொடுப்பினை, எல்லோருக்கும் வாய்த்துவிடாது. என் மனம், ஒரு பகுதி ஆணாகவும் ஒரு பகுதி பெண்ணாகவும்தான் இருக்கிறது. ஒன்று இன்னொன்றை இடைவிடாமல் கனவு காண்கிறது; அறிய முற்படுகிறது. `என் கவிதைகளில் நான் ஏன் பெண்களைப் பற்றி அல்லது பெண்களின் மன உலகம் பற்றியே அதிகம் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை அடிக்கடி சந்திக்கிறேன். மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன், என் கவிதைகளைப் பற்றி குறிப்பிட்டபோது `அது பெண்கள் பால் வைத்த நேயம்’ எனக் குறிப்பிட்டார். 

என் வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்தை எடுத்துக்கொண்டாலும், அது பெண்களைப் பற்றிய நினைவுகளால் ததும்புகிறது. ஆண்கள் எப்போதும் நிழல்களாக, மங்கிய சித்திரங்களாக இருக்கிறார்கள். பாலூட்டும் பெண்கள் மீது வீசும் பால் வாசனைபோல, என் சொற்களின் இடையே பெண் வாசனை எப்போதும் இருக்கிறது. நான், பெண்களால் வளர்க்கப்பட்டவன்; பெண்களோடு வளர்ந்தவன். 

என் தாத்தா, சிங்கப்பூரில் மதபோதகராக இருந்து இறந்துபோனார். ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை, தனி ஒருத்தியாக நின்று உருவாக்கியவள் என் பாட்டி. அவள், எங்கள் வயல்களில் ஆட்சி செலுத்தினாள்; பருவத்துக்கு ஏற்ப எதையேனும் பயிரிட்டுக்கொண்டே இருந்தாள். பள்ளிக்குச் சென்றுவிட்டு, மனம் சோர்ந்தபடி வீட்டில் வந்து அமர்ந்திருப்பேன். என்னை, அவள் அப்படியே விடவில்லை. வயலில் பயிரிட்ட மக்காச்சோளக் கதிர்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். என் வீட்டு வாசலில் ஒரு சாக்குப்பையை விரித்து, நான் அவற்றை விற்க ஆரம்பித்தேன். பிறகு, மாமரங்கள் காய்க்கும் காலங்களில் மாங்காய்களையும் மாழ்பழங்களையும் கொண்டுவந்தாள். நிலக்கடலை, சீதாப்பழங்கள் என நான் எங்கள் தெருவின் பிரபலமான வணிகனாக மாறியபோது எனக்கு வயது ஒன்பது. பிறகு, சந்தையில் இருந்து கரும்புக்கட்டுகளை வாங்கிக்கொடுத்தாள். அவற்றை நான் துண்டு போட்டு விற்க ஆரம்பித்தேன். ஆரஞ்சுமிட்டாய், கடலைமிட்டாய், பால்கோவா, கல்கோனா என, என் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது. பணத்தைக் கையாள அப்போதே கற்றுக்கொண்டேன். 

`ஓர் எழுத்தாளனான நீங்கள் எப்படி ஒரு நிறுவனத்தைச் செயல்படுத்துகிறீர்கள்?' என யாராவது கேட்கும்போது, `என் பாட்டி, எனக்கு மாங்காய்களை விற்கக் கற்றுக்கொடுத்தாள்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். இது ஒரு தலைமுறை சார்ந்த விஷயம். அடிப்படையில் அவள் கடும் உடல் உழைப்பாளி; ஒரு விவசாயச் சமூகத்தின் பிரதிநிதி. வயலில் வேளாண்மை, வீட்டில் மாடுகளும் கோழிகளும் சூழ்ந்திருந்தன. 

பேரப் பிள்ளைகளுக்கும் பாட்டிகளுக்குமான உறவு, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவைவிட மேலானது. ஏனெனில், பெற்றோர் - பிள்ளைகள் இடையிலான உறவில் ஓர் அதிகார யுத்தம் நிழல்போல படர்ந்திருக்கும். ஆனால், தாத்தா-பாட்டி உறவில் அது தோழமையின் பெரும் வெளிச்சமாகப் பரவும். எந்த நிலையிலும் வாழ்க்கை சோர்ந்து அமரக்கூடியது அல்ல என்பதை கற்றுத்தந்தவள் என் பாட்டிதான்.

அத்தைகள், மாமிகள், சித்திகள், இளம் பருவத்துத் தோழிகள் என, பெண்களின் வழியே உருவான உணர்வுகள்தான் என் மனதின் பாதைகளை உருவாக்கின. நடை பயின்ற ஒரு வயதில் இருந்து மூன்று வயது வரை யாராவது ஓர் அத்தையையோ சித்தியையோ தேடி ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். 

`ஒருநாள்கூட அவனை வீட்டில் இருக்கவிட மாட்டீங்களா?’ என, என் சித்திகளிடம் அம்மா அலுத்துக்கொண்டிருக்கிறாள். பிறகு, நான் வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு காலம் வந்தபோது, இதை நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள். 

என் அம்மாவுக்கு நான் கொடுத்தது எல்லாம் துயரத்தின் கரைக்க முடியாத சுமைகள். மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தாள். தர்ஹாக்களுக்கு என்னை அழைத்துச்சென்றாள். எனது நினைவுகளில் முதலாவது வேளாங்கண்ணியில் மாதாவின் முன்பாக நான் அமர்ந்திருப்பது. பிறகு, அம்மாவும் நானும் டூரிங் தியேட்டரின் சினிமா இருளுக்குள் உட்கார ஆரம்பித்தோம்.  அம்மா, நான் எதை நினைப்பேனோ, அதுதான் `சரி' என நம்பினாள். ஐந்தாம் வகுப்பில் `நான் இனி பள்ளிக்குச் செல்லப்போவது இல்லை’ என்றபோது, ‘உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடு’ என்றாள். 

நான் எழுதிய என்னுடைய முதல் புத்தகம், 16 வயதில் வெளிவந்தது. ஒரு பிற்பகலில் தபால் மூலம் அந்தப் புத்தகத்தின் பிரதிகள் என்னை வந்து சேர்ந்தன. ஏன் எனத் தெரியாமல், அதை அன்று முழுக்க ஒளித்துவைத்திருந்தேன். மாலையில் அதை அம்மாவின் கையில் கொடுத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தாள். பிறகு, கேவிக்கேவி அழத் தொடங்கினாள். அவளது தோளில் அழுத்திக்கொண்டிருந்த என்னைப் பற்றிய பாரம், அந்தக் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தது. 

இப்போதும் எங்கேயாவது உடல் நலம் இல்லாத அல்லது மனநலம் இல்லாத குழந்தையோடு போராடிக்கொண்டிருக்கும் ஓர் அன்னையைக் காணும்போது மனம் கசிந்து நின்றுவிடுகிறேன். அத்தகைய குழந்தைகளுக்காக தன் வாழ்வின் அத்தனை மகிழ்ச்சிகளையும் கனவுகளையும் கைவிட்ட பெண்கள் இருக்கிறார்கள். தங்கள் ஆளுமையை ஒளித்துக்கொண்ட  அன்னையர்கள் இருக்கிறார்கள். என் அம்மா என் நிமித்தமான அத்தனை சிலுவைப்பாடுகளையும் ஏன் ஏற்றுகொண்டாள்? அவளின் வழியே நான் வந்தவன் என்பதாலா? இல்லை, அவள் இயற்கையின் ஓர் அநீதிக்கு எதிராகப் போராடினாள். கைவிட முடியாத ஓர் அறத்துக்காகப் போராடினாள். உடல் நலமற்ற ஒரு குழந்தைக்காகத் தன்னையே ஒப்புக்கொடுப்பது அவளைப் பொறுத்தவரை அறத்துக்கான, நீதிக்கான போராட்டம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிற ஆதார குணம். 

நான்காம் வகுப்பு படிக்கும்போது சுமதி என்கிற பெண், எங்கள் வகுப்புக்கு வந்தாள். ஒருநாள் மாலை, வகுப்பறையில் நானும் அவளும் மட்டும் இருந்தோம். அவள் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். அவளிடம் முதல் வார்த்தையை எப்படியாவது பேசிவிட வேண்டும் என நினைத்தேன். ``சுமதி’’ என்றேன். அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். 

“எங்க வீட்டுக்கு ஒருநாள் வர்றியா?'' என்றேன். 

“எதுக்கு?’’ என்றாள் சிரித்துக்கொண்டே.

“இல்லை... எங்க அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க’’ என்றேன் தடுமாறிக்கொண்டே. 

“எங்க அப்பா திட்டுவாரே!’’ என்று சொல்லிக்கொண்டே, மறுபடியும் எழுத ஆரம்பித்துவிட்டாள். 

அந்தியின் மஞ்சள் வெளிச்சம் அவள் முகத்தில் பிரகாசமாக விழுந்துகொண்டிருந்தது. அதே அந்தியின் வெளிச்சம்தான் இப்போதும் என் மனதில் விழுந்துகொண்டிருக்கிறது. எங்கேயோ அவள் ஏதோ ஒருவிதமாக இருக்கக்கூடும். நான் வாழ்நாள் முழுக்க இப்படித்தான் ஓர் அன்பை, ஒரு ப்ரியத்தை எந்த ஒரு பெண்ணிடமும் சொல்ல முடியாமல் தவித்து நின்றிருக்கிறேன். ஏதோ ஒன்று என் நெஞ்சில் அடைத்துக்கொண்டுவிடும். என் வாழ்க்கையில் இருந்த காதல்கள் அனைத்தும், அந்தப் பெண்கள் என் கன்னத்தில் அறைந்து எனக்குச் சொன்னவைதான். 

பெண் தன் ப்ரியத்தை ஒரு சிலந்தி வலைபோல பின்னுகிறாள். பல்வேறு நுட்பமான இழைகளின் வழியே ஓர் ஆணை ஆட்கொள்கிறாள். இந்த உலகத்தில் ஓர் ஆண் அடையும் அத்தனை துன்பங்களுக்கும் தான் மட்டுமே மருந்து என நம்பவைத்துவிடுகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் மனதை எடுத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. பல சயயங்களில், ஓர் ஆணை ஒரு பெண் நேசிப்பதற்கான காரணங்கள் எளிதில் அறிய முடியாதவை. திரைப்படங்களில் அல்லது பொதுவான சமூக மதிப்பீடுகளில் தன்னை அடக்கி ஆளக்கூடிய அல்லது தன்னைப் பாதுகாக்கக்கூடிய ஓர் ஆணைத்தான் ஒரு பெண் விரும்புகிறாள் என்ற ஒரு பிம்பம் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. இது ஆண்களால் இட்டுக்கட்டப்படுகிற பெண்மை குறித்த பொய்யான பிம்பம். உண்மையில் ஒரு பெண், தான் பாதுகாக்கக்கூடிய தன்னைச் சார்ந்திருக்க்கூடிய, தன் நிழலுக்காகப் பரிதவிக்கிற ஓர் ஆணைத்தான் விரும்புகிறாள். அவளிடம் அடைக்கலம் தேடிவருகிற ஓர் ஆணிடம்தான் அவள் சகஜமாகவும் இணக்கமாகவும் இருக்கிறாள்.
ன் 17-வது வயதில், இலங்கை வானொலியில் பி.ஹெச்.அப்துல் ஹமீது நடத்திய ஒலி மஞ்சரி நிகழ்ச்சியில், கவிதைகளும் கதைகளும் எழுதத் தொடங்கினேன். அப்போது அதை வாசிக்கும்போது அப்துல் ஹமீது, எழுத்தாளரின் முழு முகவரியையும் வாசிப்பார். ஒருநாள் ஒலிபரப்பான எனது கதை குறித்து ஒரு நீண்ட கடிதம், ஒரு பெண் கையெழுத்துடன் இலங்கையில் இருந்து வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து வந்த முதல் கடிதம். என் கைகள் நடுங்கின. அந்தக் கடிதத்தை எத்தனை நூறு முறை படித்திருப்பேன் எனச் சொல்ல முடியாது. பிறகு, நிறையக் கடிதங்கள் எழுதிக்கொண்டோம்.
நான் 40 பக்கக் கோடு போட்ட நோட்டை வாங்கி, அதில் முழுவதுமாக எழுதி அவளுக்கு அனுப்புவேன். எழுத என்ன இருந்தது என எனக்கு நினைவில்லை. அவள் யுத்தத்தின் கொடுங்கனவுகளை எழுதி அனுப்பினாள்; குண்டு வீச்சுக்குப் பயந்து பதுங்குகுழிகளில் இருந்த தினங்களைப் பற்றி எழுதியிருந்தாள்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என் பிறந்த தினம் ஒன்றில் எனக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையில் தன் காதலைத் தெரிவித்திருந்தாள். நான் மனம் கசிந்து அழுதேன். அதற்கு என்ன பதில் எழுதுவது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நான் முதன்முதலாக என்னை ஒரு முழு மனிதனாக உணந்த தருணம் அது. என் தாழ்வு உணர்ச்சிகளில் இருந்தும் இந்த உலகின் அநீதி குறித்த புகார்களில் இருந்தும் நான் விடுபட்ட தருணம் அது. ஆம், ஒரு பெண் தன் காதலால் ஓர் ஆணை விடுதலை செய்வதுபோல், ஒரு யுகப்புரட்சிகூட விடுதலை செய்வது இல்லை.  

எங்கள் அம்மா தனது 44 வயதில் இறந்துபோனபோது, என் தங்கைக்கு 15 வயது. நான், என் அப்பா, என் அண்ணன், என் தம்பி அனைவரும் திகைத்துநின்றோம். பெண் இல்லாத ஒரு வீடு, உடனடியாக பாழடையத் தொடங்கிவிடுகிறது. நாங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றபோது, அந்த வயதில் என் தங்கை வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். எல்லாவற்றையும் நிர்வகித்தாள்; எல்லா தேவைகளையும் நிறைவேற்றினாள். 

இதுதான் இந்தியக் குடும்பங்களின் வரலாறு. பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் அச்சாக இருக்கிறார்கள். அந்த அச்சு முறியும்போது, அந்தக் குடும்பம் சிதிலம் அடைய ஆரம்பிக்கிறது. பெண்கள் வகிக்கும் இந்தப் பாத்திரம் காரணமாக பெண்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற ஆரம்பிக்கின்றன. அவர்கள் தோள்களின் மீது, ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் அத்தனை பாரங்களும் ஏறிவிடுகின்றன.

90-களின் முற்பகுதி என் தற்கொலைப் பாதைகளின் தடங்களைச் சோதித்துக் கொண்டிருந்த காலம். என்னால் இயலாமையின் கசப்பைக் குடித்து முடிக்க முடியவில்லை. மன அழுத்தத்தின் உச்சங்களில் சூரியன் வராத பல நாட்கள் நீண்டன. அப்போது  திருச்சியில் இருந்து வந்துகொண்டிருந்த `சுட்டும் விழிச்சுடர்’ இதழில் நிறைய எழுதிக்கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் சுபத்ரா வழியே லல்லியைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு, என் வாழ்கையை அடியோடு மாற்றி அமைத்தது. வெளி உலகை நோக்கிய என் பாதைகள் லல்லியின் மூலம்தான் தொடங்கின. துவரங்குறிச்சி என்ற ஒரு சிறிய கிராமத்தின் முடிவற்ற அந்திகளின் தனிமையை, நான் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் லல்லி என் சொற்களின் பாதைகளின் வழியே என்னைத் தேடிவந்தார்.  எனக்கு முதன்முதலாக ஒரு சக்கர நாற்காலியை  வாங்கிவந்தார், திருநெல்வேலியில் என் மேல் படிப்பைத் தொடர்வதற்கு வழி செய்தார். நான் என் கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வெளியே வந்தேன். தன்னம்பிக்கை உள்ள மனிதனாக, தனித்து செயல்படும் மனிதனாக  உருவானதற்கு அன்று முதன்மையான காரணம் லல்லியே. அவர் மூலமாக சுந்தர ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். ச.தமிழ்ச்செல்வன் போன்ற சிறந்த நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. சுதந்திர உணர்வும் தனித்த ஆளுமையும் சமூக உணர்வும்கொண்ட ஒரு பெண்ணால்தான் அந்த வலிமையை இன்னொருவருக்குத் தர இயலும்.
லல்லியின் அன்பு மூலம் எனக்கு அதுவரை இல்லாத ஒரு சூழலும் புதிய பாதைகளும் திறந்தன. ஒரு பெண்ணின் வருகையும் இருப்பும் ஓர் ஆணின் கடந்தகால நிழல்கள் அனைத்தையும் அழித்துவிடக்கூடியது என்பதை நான் உணந்துகொண்ட காலம் அது. ஒரு விதத்தில் லல்லியின் மூலம் என் விதியின் சக்கரம் திரும்பியது. 

2000-ல் நான் சென்னை வந்த பிறகு என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணி சார்ந்தும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தேன். ஒரு புதிய சிநேகத்தின் வழியே, நான் அன்பின் பெரும் கனவுகளை அடைந்து, பிறகு பெரும் வீழ்ச்சியை சந்தித்த தினங்கள் அவை. கடும் மன அழுத்தத்துக்கான மருந்துகள் என்னை ஒரு பொம்மையைப்போல மாற்றிக்கொண்டிருந்தன. நான் என் விளிம்புக்கு வந்துவிட்டேன் என்றே நினைத்தேன். அப்போதுதான் செல்வியை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். முதல் சந்திப்பில் சில வருடங்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் ஒரு நிழலாக அறிமுகமாகி கடந்துசென்றாள். இந்த முறை என் வாழ்க்கையில் ஒரு வெளிச்சமாக ஊடுருவி வந்தாள். நான் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து விலகியபோது அங்கே பணியாற்றிய அவளும் எனக்காகவே விலகினாள். `ஒரு பதிப்பகத்தின் எல்லா செயல்பாடுகளும் எனக்குத் தெரியும். நாம்  ஏதாவது செய்யலாம்’ என்றாள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே அதன் சகலமுமாக இருந்தோம். சுஜாதா என்கிற ஒரே ஒரு வெளிச்சம்தான் எங்களை வழிநடத்தியது. நாங்கள் தோற்றுப்போய்விட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்துவிடக் கூடாது என்று உறுதியாகப் போராடினோம். வைராக்கியம்மிக்க நாட்கள் அவை. செல்வி அவளது வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல் போராடி தன்னை உருவாக்கிக்கொண்டவள். எந்த ஒன்றும் நமக்கு சாத்தியம்தான் என்று என்னை உணரவைத்தாள்.  இன்று என் வாழ்கையில் இருக்கும் ஒவ்வொன்றையும் உருவாக்கியதில் அவளது கரங்களும் மனமும் இருக்கின்றன. என்னை போன்ற ஒரு பைத்தியகாரனைப் பாதுகாப்பதன் எல்லா அபாயங்களும் அவளுக்குத் தெரியும்.  நான் என் முட்டாள்தனத்தின் வழியே என் வாழ்க்கையைப் பணயம்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் என்னை மீட்டிருக்கிறாள்.

ன் வாழ்வில் எத்தனையோ பெண்களுடனான சிறுசிறு வசந்தங்களில் இருந்திருக்கிறேன். நான் யாராவது ஒரு பெண்ணின் கோப்பையில், எப்போதும் நிரம்பிக்கொண்டே இருந்திருக்கிறேன். அவர்கள் எனக்குத் தந்த காதலின் அமுதத்தைப்போலவே, பிரிவின் நஞ்சையும் முழுமையாக அருந்தியிருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் என் வாழ்க்கையில் இல்லாமல் போகாவண்ணம் என் சொற்களில் அவர்களைப் பாதுகாத்துவைத்திருக்கிறேன். நான் ஒழுங்காகச் சாப்பிடுகிறேனா என, எங்கு இருந்தோ ஒரு சிநேகிதி கேட்கும்போதும், `உன் மரணத்துக்குப் பின்னான உலகை நான் எப்படி எதிர்கொள்வேன்?' என்ற என் கவிதையைப் படித்துவிட்டு ஒருத்தி கண்ணீர்விட்டு அழும்போதும், `என்னை இந்த வாழ்க்கை அழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல!' எனத் தோன்றும்.

ஒரு பெண்ணை நேசிப்பது பெரிய விஷயம் அல்ல; ஒரு பெண்ணின் நேசத்துக்குத் தகுதி உடையவனாக ஓர்ஆண் தன்னை மாற்றிக்கொள்வதுதான் பெரிய விஷயம். பெரும்பாலான ஆண்கள் ஒரு பெண்ணின் அன்புக்குத் தகுதியற்றவர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணை அதிகாரத்தாலோ, பணத்தாலோ, சமூகம் வழங்கும் பண்பாட்டு உரிமைகளாலோ, ஒருபோதும் ஓர் ஆணால் வெல்ல முடியாது. ஒரு பெண்ணை எப்படியாவது அபகரித்துவிடலாம் என நினைப்பவர் எவரும் மூடர்களே. அவளது அன்பின் நெருப்பு, எங்கோ மலை உச்சியில் ஒரு ரகசியக் குகையில் இருக்கிறது. அவளாக மனம் இரங்கினால் ஒழிய அவளிடம் இருந்து ஒரு துரும்பைக்கூட எவரும் பெற்றுவிட இயலாது.

ஒரு பெண்ணின் அன்பு எனும் இதழ்கள் எவ்வளவு சீக்கிரம் மலரக்கூடியதோ, அதே வேகத்தில் மூடிக்கொள்ளவும் கூடியவை. ஒரு பெண் விலகிச் செல்லும்போது ஓர் ஆண் பதற்றம் அடைகிறான். அது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனக் கருதுகிறான். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது, சதுரங்கக் கட்டங்களில் நகரும் ஒரு ராணியினுடையது. அவள் தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அவ்வளவு எளிது அல்ல. சில சமயங்களில், ஒரு பெண் தன் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஒன்றை ஏன் விட்டுக்கொடுத்துவிடுகிறாள் என்பதை ஒரு தன்முனைப்பு உள்ள ஆண் மனதால் புரிந்துகொள்ள இயலாது. அதை `துரோகம்' என்றோ, `நாடகம்' என்றோ அவன் நம்ப விரும்புகிறான். ஆனால், வாழ்வின் குரூரமான நாடகங்களில் பெண் எப்போதும் ஒரு பாத்திரமாக இருக்கிறாள். அவள் பெரும் கருணையின் வடிவமாக இருக்கும் அதே சமயத்தில், ஒரு சிறிய கருணைக்காக வாழ்க்கையிடம் எப்போதும் மன்றாடியவண்ணம் இருக்கிறாள்.

இந்த யுகம்... பெண்களின் யுகம்; அவள் தன் உடலையும் மனதையும் வரலாற்றின் நீண்ட தண்டனைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளும் யுகம்; தனக்கு எல்லாவற்றிலும் ஒரு தேர்வும் முடிவும் இருக்கிறது என அறிவிக்கும் யுகம்; அன்பை, காதலை, காமத்தை, சிநேகிதச் சமத்துவத்தின் அச்சில் சுழலச்செய்யும் யுகம். இது, ஆண்களை ஆத்திரம் அடையவைக்கிறது; அவர்களைக் கண்காணிக்கவைக்கிறது; சொந்த மகள்களையே கொல்வதற்கு ஆள் அனுப்பவைக்கிறது; நேசித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றவைக்கிறது; நேசிக்க மறுத்த பெண்ணை நடுத்தெருவில் கொலை செய்யவைக்கிறது; மகத்தான விடுதலையின் காலம் இந்த வேதனைகளைக் கடந்துதான் மேல் எழவேண்டியிருக்கிறது.

“நீ அம்முவுக்குத்தான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவியா?’’ என்று அப்பு எப்போதும் சண்டைபோடுகிறான். என் சிநேகிதிகளின் வரிசையின் கடைசியில் என் சின்ன மகள் என்னைக் கேலிச் சிரிப்புடன் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறாள்! 


பெண் 

மூன்று முறை அணைக்கிறாள்
முதல் முறை
பரம்பரை ஞாபகங்கள்
அவள் மனத்திலிருந்து துகள் துகளாய் உதிரும்படி
அரிக்கும் ஒரு கரையானாக

இரண்டாம் முறை
தாய் புகட்டிய முலைப்பால்
அவன் இரைப்பையிலிருந்து வற்றும்படி
நக்கும் ஒரு பூனையாக

மூன்றாம் முறை
அவள் பிள்ளைகளின் பயணங்களுக்கு
நீர் வேண்டுமென்று திமில் நிறைக்கும்
ஒரு ஒட்டகமாக.

- மகுடேசுவரன்
விடிய விடிய 

உன் அருகில் 
உறங்கிக்கொண்டிருந்தது
ஒரு பெண் 
தலைமுறை சாபங்களினால் 
அவள் கல்லாய் 
சமைந்திருந்தாள் 
ஆனாலும் விடிய விடிய 
உன் அருகில் 
உறங்கிக்கொண்டிருந்ததும்
ஒரு பெண்தான்.

- மாதுமை

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒரு கணம் என்பார்வை உன் மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.

- ஆத்மாநாம்

மாயம்

நீ
தெரிந்துகொள்ள வேண்டாம்
உனக்காக
நான்
எனக்குப் பிடித்த
காபியிலிருந்து தேநீருக்கு மாறியது
தெரிந்துவிட்டால்
காபி
எனக்குப் பிடிக்காத
தேநீராகவும்
இருக்கும்
மாயம் எனக்கு
மறைந்துபோகும்.

- தேவதச்சன்

பவழமல்லி

கதை கேட்கப் போய்விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல் வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?

- ஞானக்கூத்தன்

பாண்டி விளையாட்டின்
முதல் உப்பை நான்
கடவுளுக்குக் கொடுத்தது
கிடையாது

முதல் பல் விழுந்தபோது
சாணியில் பொதிந்து
சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது

ஒரே ஒரு தடவைதான்
விட்டில் பூச்சிகளை
பக்கத்துக்கொன்றாய்
நூலில் கட்டி
பரிதவிக்கவிட்டிருக்கிறேன்

மருத மர நிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய்
சசி.
- கலாப்ரியா

உனக்கென்ன
சாமி பூதம் 
கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுதுபோகும்
வலப்பக்கக் கடல்மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே-
நாளையேனும் மறக்காமல்
வா.

- பாலகுமாரன்
Courtesy: விகடன்

வாக்கு அரசியல் ஆபத்தானது!

வாக்கு அரசியல் ஆபத்தானது!


ருமையான தட்பவெட்பம், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள், அன்பும் பண்பும்கொண்ட பாசமான மக்கள்... என, கோவை நகரம் தனித்துவமான அடையாளங்களைக்கொண்டது. அது வளர்ச்சிக்கான நகரம். அதனால்தான் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், நம்பிக்கையோடு தங்கள் பிள்ளைகளைப் படிக்கவும் பிழைக்கவும் கோவைக்கு அனுப்பிவைக்கிறார்கள். 

முந்தைய காலங்களில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மீண்டுவந்திருக்கிறது கோவை. அந்த ஃபீனிக்ஸ் குணத்தினால்தான் இந்த நகரின் மீது நம்பிக்கைவைத்து, பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்கின்றன. `இந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்துவிடுமோ?' என்ற ஓர் அச்சம் மீண்டும் உருவாகியிருக்கிறது.

இந்து முன்னணிப் பிரமுகர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவையில் கலவரம் மூண்டதில், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன; வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன; கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களால் கோவை மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். காரணம், 1997-98ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து தலைவிரித்தாடிய கலவரமும், அதற்கு எதிர்வினையாக நடந்த குண்டுவெடிப்புகளின் அதிர்வுகளும் இன்னமும் கோவை மண்ணில் மிச்சம் இருக்கின்றன.

அரசியல் பதற்றத்தை உருவாக்கக்கூடிய கொலைகள் நடைபெறும்போது, அந்த இறுதி ஊர்வலங்களில் கலவரம் வெடிக்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அப்படியிருக்க, பதற்றம் மிகுந்த நேரத்தில் 10 கி.மீ தூரத்துக்கு அந்த இறுதி ஊர்வலத்தை நடத்த போலீஸார் எப்படி அனுமதி அளித்தனர்?

`இந்து முன்னணிப் பிரமுகரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உளவுத் துறை முன்கூட்டியே ஊகிக்கவில்லையா? கொலை நடந்தபிறகு, ஒரு பெரிய கலவரத்தை நிகழ்த்த ஒரு கூட்டம் திட்டமிடுகிறது என்ற தகவல்கூட, உளவுத் துறையினருக்கு வரவில்லையா? அல்லது உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கையைப் பார்க்க முடியாத அளவுக்கு, உயர் அதிகாரிகளுக்கு வேறு முக்கிய வேலை கொடுக்கப்பட்டதா?' என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல இங்கே யாரும் இல்லை.

மோட்டார் நகரம், காட்டன் சிட்டி, தென் இந்தியாவின் மான்செஸ்டர் என, கோவைக்கு நிறைய அடையாளங்கள் உண்டு. `மதக்கலவர பூமி'யாக மீண்டும் அது மாறிவிடக் கூடாது!

சட்டம்-ஒழுங்கு கெடுகிறது, சமூக அமைதி கெடுகிறது, தொடர் குற்றங்கள் அரங்கேறுகின்றன. கொலைக்காகக் கலவரம், கலவரத்தின் பேரில் சூறையாடல் என, அசாதாரணமான சூழல் சர்வசாதாரணமாக நிகழ்வது ஆபத்தானது. சாதி அரசியலை, மத அரசியலை, வாக்கு அரசியலை மனதில்கொண்டு இதுபோன்ற குற்றங்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, அதைவிட ஆபத்தானது. அத்தனை குற்றங்களையும் வேரோடு களையவேண்டியது அரசின் கடமை!

நன்றி: விகடன்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

செங்கோல் வீழும்; எழுதுகோல் வாழும்!

செங்கோல் வீழும்; எழுதுகோல் வாழும்!

By ஜெ. ஹாஜாகனி  


போற்றுதலுக்குரியவர்களை வரலாறு பொன்னெழுத்துகளால் பொறித்து வைத்திருப்பதைப் போலவே, தூற்றுதலுக்குரியவர்களையும் தன் முற்றத்தில் மொட்டைத்தூண்களைப் போல் நிற்க வைத்துள்ளது.
கற்றவர்களையும், மற்றவர்க்காய் வாழும் குணம் பெற்றவர்களையும் வாரிக் கொடுத்த வள்ளல்களையும், வாய்மை மிகுந்த அறிஞர்களையும் வரலாறெனும் கண்ணாடி வருங்காலத் தலைமுறைக்குக் காட்டுவது போலவே, கொடுங்கோலர்களையும், குணக் கேடர்களையும், மக்களை வஞ்சித்த மாபாவிகளையும், அதிகாரத்தில் இருந்து கொண்டு அராஜகம் செய்த அநீதியாளர்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிறது.

பதவியை சதமெனப் பகற்கனவுகண்டு, அறிஞர்களின் தகுதியறியாமல், அவர்களை அவமதித்தவர்கள் காலங்காலமாய்த் தூற்றுதலுக்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால்தான் வான்புகழ் வள்ளுவர்,
வில்லேர் உழவர் பகைகொளினும்கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
 என்று எச்சரிக்கிறார்.

கம்பனை அவமதித்தான் குலோத்துங்கச் சோழன். கடற்கடந்த பேரரசின் அதிபதியவனுக்கு, கவிச்சக்கரவர்த்தி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சோழ அரசவையிலிருந்து வெளியேறிய கம்பனிடமிருந்து வெடித்து வந்ததொரு வெண்பா.
""மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு''
சோழனின் அரசாங்கம் சுவடின்றி அழிந்தபின்னும் சொல்லரசன் கம்பனின் வெண்பா சுடர்வீசி நிற்கிறது. செங்கோல்கள் வீழ்ந்த பிறகும், எழுதுகோல்கள் நித்தியமாய் நிற்கின்றன.
அரண்மனையும், ஆடம்பர வாழ்வும், ஆணவப்போதையை அதிகம் ஊட்டும்போது, எதிரில் வருவோர் யாவரையும் ஏளனமாய்க் கருதினால், இழிவு சுமக்கநேரும் என்று எச்சரித்து உச்சரிக்கின்றன இறவாத பாடல்கள் சில....

உச்சமெனப்பட்ட அரசனின் அதிகாரத்தைத் துச்சமெனக் கருதிய தூய புலவர்கள் வரலாறுகளில்வாழ்கின்றனர்.
"நாமார்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்'
- என்றார் திருநாவுக்கரசர்.

சிறு பதவிகளில் இருப்போர்கூட தங்கள் செம்மாந்த அதிகாரத்தை நிலைநாட்ட, தனக்குக் கீழுள்ளவர்களை அவமதிப்பதையும், அலைக்கழிப்பதையும் பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
நம் அதிகாரத்தைக் காட்டி விட்டோம் என்கிற அற்ப இன்பத்தை அவர்கள் அடையலாம். ஆனால், சொல்லேருழவர்களின் சூட்டுக்கு ஆளானால், அது காலங் காலமாய் வடுவாய் நின்று வருத்தும் என்பதைமமதை மனிதர்கள் அறியத் தவறுகின்றனர்.
ஒரு முறை, மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதி முடித்த படமொன்றிற்கு ஊதியம் பெறுவதற்காக தயாரிப்பாளரைப் பார்க்கச் சென்றுள்ளார்.
தருக்கும், செருக்கும் கொண்ட அந்தத் தயாரிப்பாளர், பட்டுக்கோட்டையாரை ""வெளியே நில்லுங்கள்' என்று கூறுகிறார்.... பாட்டுக்கோட்டையோ, தன்பாட்டையே சூட்டுக் கோலாக்கிச் சுடச் சுட எழுதினார்,
தாயால் பிறந்தேன், தமிழால்
அறிவுபெற்றேன்
நாயே நேற்றுன்னை நடுத்தெருவில்
சந்தித்தேன்
நீ யார் என்னை நில்லென்று சொல்ல

அதிகாரங்களுக்கு அடங்காமல், மமதையாளர்கள்முன் மயங்காமல், அறிவு நாணயத்தோடு வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், சிறுமை கண்ட இடங்களிலெல்லாம் சிங்கமெனப் பொங்கியுள்ளனர்.

உன் அதிகாரம், ஒரு கவிதை இயற்றுமாறுஎனக்குக் கட்டளையிட முடியாது. (Your Highness cannot command me to compose a poem)  என்றான் ஓர் ஆங்கிலக் கவிஞன்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி அநீதிகளை அரங்கேற்றுவோர், சமகாலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திலும் தூற்றப்
படுவர்.

"அநீதி இழைக்கப்பட்டவருக்கும், இறைவனுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை' என்று எச்சரித்தார்கள் நபிகள் நாயகம். அவனது கண்ணீர் மிகு பிரார்த்தனை எத்தகைய அதிகாரங்களையும் வீழ்த்திவிட வல்லது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அக்காலத்தில் அநியாயக்காரர்கள் மீது புலவர்கள் அறம்பாடும் வழக்கம் இருந்ததையும், அறம் பாடப்பட்டவர்கள் அழிந்தொழிந்ததையும் அறிய முடிகிறது.

அதிகாரத்தால் அராஜகம் செய்வோரின் வாழ்வு எப்படிஇருக்கும் என்பதை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று நயம்பட விளக்கும்.

""அதிகாரி வீட்டு நாய் செத்தது
அனைவரும் வந்தார்கள்
அதிகாரியே செத்தார்
ஒரு நாயும் வரவில்லை''

ஓய்வில்லா அடக்குமுறையை செலுத்தியவர்கள், ஓயும்போது நாயும் வராது என்பதற்கு இந்த நறுக்கு ஒருநல்ல சான்று.

அதிகாரங்களில் பெரிய அதிகாரம் ஆட்சியதிகாரம். ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசன், மக்களை விட மேம்பட்டவன். அவன் சராசரி குடிமக்களுக்குச் சமமானவன் இல்லை என்பது உலகளாவிய அளவில் உள்ள உளப்பான்மை.

அரசகுடியில் பிறந்து குடிமக்கள் காப்பியம் எழுதியபுரட்சிக்கவி இளங்கோ, ஒரு அயல்நாட்டு (சோழநாட்டு) குடிமகனுக்கு தான் அநீதி இழைத்ததை, அவன் மனைவியின் ஆவேச மிகுவாதத்திறத்தால் உணர்ந்து -
மன்பதைக் காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்
என்று கூறி உயிர் துறந்ததையும், அவன் துணைவி கோப்பெருந்தேவி, "கணவனை இழந்தோர்க்குக்காட்டுவதொன்றில்' என்று கதறி, அவனோடு உயிர்விட்டதையும், காப்பியத்தில் காட்சிப்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு படிப்பினை தருகிறார்.

இந்திய தேசத்திற்கு கலீஃபா உமரின் ஆட்சி போன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தேசத்தந்தை அண்ணல் காந்தி.
கலீஃபா உமர், எகிப்து நாட்டிற்கு அம்ருபின் ஆஸ் என்ற புகழ்பெற்ற நபித்தோழரை ஆளுநராக நியமித்திருந்தார்கள். ஒருமுறை ஆளுநரின் மகன் அதிகாரஆணவத்தோடு எகிப்து குடிமகன் ஒருவரை சாட்டையால்அடித்துவிட்டார். அடிபட்ட எகிப்தியர், தலைநகர் மதீனா சென்று குடியரசுத் தலைவர் கலீஃபா உமரிடம் நடந்ததை முறையிடுகிறார். கலீஃபா உமர், ஆளுநர் அம்ருபின் ஆஸ் மற்றும் அவரது மகன் இருவரையும் தன் அவைக்கு வரவழைத்து அடிபட்ட எகிப்தியர் கையில் சாட்டையைக் கொடுத்து, ஆளுநரின் மகனை அடிக்கச் செய்தார்.

ஆத்திரம் தீர அவர் அடித்து முடித்ததும், ஆளுநரிடம், "மக்களை அவர்களின் தாய்மார்கள் சுதந்திரமாகப் பெற்றெடுத்திருக்க எப்போது நீங்கள் அவர்களை அடிமைப்படுத்த ஆரம்பித்தீர்கள்' என்று சொல்லால் சுடுகணை தொடுத்தார்.

பணக்காரர்களோடு மட்டும் தனித்தொடர்பு வைத்துக்கொண்டு தானும் பணக்காரத் தன்மையோடு நடந்த ஓர்ஆளுநரை தலைநகருக்குத் திரும்ப அழைத்து, வனாந்தரங்களில் ஆடுகளை மேய்த்து வருமாறு கலீஃபாஉமர் ஆணையிட்டார். ஆடு மேய்த்து பக்குவம் பெற்றதும், மீண்டும் அவரை ஆளுநராக்கினார்.

இன்று எவருக்கும் பதில்சொல்ல அவசியமில்லாத எஜமானத்துவத்தோடு இருக்கும் யாவரும், மறுமையில் தனது ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய அடிமையாக இறைவன் முன் நிற்கப்போகும் நிலையை எண்ணி செயல்பட வேண்டும் என்பது இஸ்லாமின் கோட்பாடு.
நபிகள் நாயகம் ஒரு பணிப்பெண்ணை ஒரு பொருள் வாங்கிவர அனுப்பினார்கள். அப்பெண்ணோ விளையாட்டுத்தனத்தால் வழியில் வேடிக்கைப் பார்த்து விட்டுவெகு தாமதமாய் வந்தாள். அவள் வரும்போது நபிகள் கையில் பல்துலக்க உதவும் மிஸ்வாக் குச்சி இருந்தது.

அப்பெண்ணிடம் அண்ணல் நபி, "மறுமை நாளின் கேள்விக்கணக்கு பற்றிய அச்சம் மட்டும் இல்லாதிருப்பின், உன்னை இந்தக் குச்சியால் அடித்திருப்பேன்' என்றார்கள்.
பணியாளை எஜமான் என்ன கொடுமைக்கும் உள்ளாக்கலாம் என்ற காலத்தில், பல் துலக்கும் குச்சியால் பணியாளை அடிப்பதையும் இறையச்சம் தடுக்கிறது, நபிகளுக்கு.

சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ளமுதலாளிகள் சிந்திக்க வேண்டிய செய்தி இது.
அபூ மஸ்வூத் என்ற தோழர், தனது பணியாளரைஅடிப்பதைக் கண்ணுற்ற நபிகள் நாயகம், "இன்று அவர்மீது உமக்கிருக்கும் ஆதிக்கத்தைவிட பன்மடங்கு ஆதிக்கம் உன்மீது இறைவனுக்கு இருக்கிறது' என்றார்கள்.
இறையச்சத்தால் நடுநடுங்கிய அபூ
மஸ்வூத் உடனடியாக அந்த அடிமைப் பணியாளரை விடுதலைசெய்தார்கள்...
ஓங்கிய உயர்விலும் பாங்குற நடந்த பண்பாளர்களை உலகம் போற்றிகொண்டே இருக்கிறது.
அதிகாரத்தில் இருக்கையில் அகங்காரத்தைக்காட்டியவர்களை அகிலம் தூற்றிக் கொண்டே இருக்கிறது.
உலகம் தூற்றும் வாழ்வு வாழோம்; போற்றும் வாழ்வு வாழ்வோம்!

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

முள்ளும் மலரும் படத்தில் நான் - பாலு மகேந்திரா

முள்ளும் மலரும் படத்தில் நான் - 
பாலு மகேந்திரா
பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் நெல்லு”   இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.
பெரும்பாலனவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள்  மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21-படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா-வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னட மொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை  இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்தப் படத்தின் இசை இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக  இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு அழியாத கோலங்கள் என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்க்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார்.  இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.
அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.
கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம்.  அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக  அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.எனவே எனது அழியாத கோலங்கள் படத்தைதள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility)  மிக அதிகமானது. ஒரு பத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும்  த்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக்  கோங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது.  முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல்உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார்.செந்தாழம் பூவில் என்றஅந்தப் பாடலை இளையராஜா அற்புதமாகஅமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...
இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்து.இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்து. இதை மகேந்திரனிடம்  சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின்  உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும்   இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.
முள்ளும் மலரும்  படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என  முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில்  முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்
களல்ல! 

திங்கள், 19 செப்டம்பர், 2016

முழு உடல் பரிசோதனைகள் என்னென்ன?

முழு உடல் பரிசோதனைகள் என்னென்ன?
நீரிழிவு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு ஒருவர் வந்திருந்தார். அவருடன் துணைக்கு வந்திருந்த நண்பரிடம், நீயும் பரிசோதித்துக் கொள் என்றார்.
நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஒரு நோயும் இருக்காது என நண்பர் மறுத்தார். என்றாலும்  வந்தவர் விடவில்லை. நண்பரைச் சம்மதிக்க வைத்து விட்டார். இருவருக்கும் பரிசோதனை முடிந்தது. நோய் ஏதாவது இருக்குமோ என்ற பதைபதைப்புடன் வந்த வருக்கு எல்லாமே நார்மல். மாறாக, உடன் வந்த நண்ப ருக்கு நீரிழிவு நோய், ரத்தக் கொழுப்பு, சிறுநீரகக் கற்கள் எனப் பல பிரச்சினைகள்.
முன்னெச்சரிக்கை அறிகுறிகளைச் சரியாக உணர்ந்து கொள்ளாத பலரும், தங்கள் உடலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றுதான் நம்புகிறார்கள். ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவை நம்மை அறியாமலேயே பல்வேறு நோய்களை உடலுக்குள் கொண்டுவந்து விடுகின்றன. உள்ளுக்குள் மறைந்துகொண்டிருக்கும் நோய் ஒரு நாளில் திடீரெனத் தாக்கும். அப்போது நோய் முற்றிய நிலையில் இருக்கும் என்பதுதான் சிக்கல். எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்த வரை நம்மில் பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர். நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்தஅழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலைச் சிரமப்படுத்து வதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே கண்டுபிடித்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் புத்தி சாலித்தனம். இதற்கு முழு உடல் பரிசோதனை உதவுகிறது.
கவனிக்க!
பொதுவாகச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை யோடு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூட்டுகள் என ஒவ்வோர் உறுப்புக்கும் தனிப்பட்ட சிறப்புப் பரிசோதனைகளும் உள்ளன.
ஆண்களுக்குப் பிரத்யேகமாகப் பி.எஸ்.ஏ. பரிசோ தனை, பெண்களுக்குப் பிரத்யேகமாகத் தைராய்டு பரிசோதனை, மமோகிராம் மற்றும் பாப் சிமியர் பரிசோதனை, முதியவர் களுக்குப் புற்றுநோய்க்கான டியூமர் மார்க்கர்ஸ் பரிசோதனை, குடல் புற்றுநோய்க் கான கொலோனோஸ்கோப்பி பரிசோதனை மற்றும் எலும்பு வலுவிழப்பு நோய்க்கான டெக்சா ஸ்கேன் , வைட்டமின் டி, கால்சியம் பரிசோதனைகள், மூட்டு வலிக்கான பரிசோதனைகள் செய்யப்படும்.
இப்போது புதிதாக டி.என்.ஏ. பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இவற்றைப் பயனாளி விரும்பினால் மட்டும் செய்து கொள்ளலாம். அல்லது முழு உடல் பரிசோதனையில் ஏதேனும் ஒரு உறுப்புக்குப் பிரச்சினை இருக்கிறது எனத் தெரிந்து, அந்த உறுப்புக்கான சிறப்புப் பரிசோதனை தேவைப்படுகிறது என்று மருத்துவர் பரிந்துரைத்தால் செய்துகொள்ளலாம்.
யாருக்கு அவசியம்?
குடும்ப வழியில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், பிறவிக் கோளாறுகள் போன்றவை இருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்த வர்கள் 20 வயதில் ஒருமுறை முழு உடல் பரி சோதனை செய்துகொள்வது நல்லது. அதற்குப் பிறகு தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைச் செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக 35 வயதைக் கடந்தவர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது.
புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், நோய்த் தடுப்பு மருந்துகள் அல்லது ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப் பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒருமுறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.
என்னென்ன நன்மைகள்?
பிரீ-டயபடிஸ் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயின் முந்தைய நிலையில் உள்ளவர்கள், இதன் மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம். அல்லது நோயைத் தள்ளிப்போடலாம்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், கருப்பை வாய் போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கிற நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.
பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கெனவே நோய் இருந்தால், நோயின் தன்மையை அறிந்து சிகிச்சையை மாற்றியமைத்து, உயிருக்குப் பாதுகாப்பு தர முடியும்.
புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்தி லேயே கண்டுபிடித்துவிட்டால் நோயைக் குணப்படுத்துவது குறித்து யோசிக்க முடியும்.
ஏற்கெனவே புற்றுநோய் இருந்தால், உடலில் மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.
பலரும் முழு உடல் பரிசோதனையை வீண் செலவு என்றுதான் நினைக்கின்றனர். அப்படியில்லை. ஆரோக்கியம் காக்க நீங்கள் செய்யும் முதலீடு இது. பிற்காலச் செலவைத் தடுக்கும் சேமிப்பும்கூட.
என்ன முன்னேற்பாடு?
காலையில் வெறும் வயிற்றில் பரிசோதிக்க வேண்டும்.
முடிவு தெரியக் குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப் படும்.
முன்பதிவு செய்துகொண்டு, எப்படி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பரிசோதனைக்குச் செல்வது நல்லது.
பரிசோதனைக்கு முன்பு அல்லது பின்பு மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும்.
மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்னென்ன பரிசோதனைகள்?
ரத்த அழுத்தப் பரிசோதனை
பொதுவான ரத்தப் பரிசோதனைகள் TC, DC, ESR
ரத்த வகை, ஆர்.ஹெச். வகை
ரத்தச் சர்க்கரை அளவு வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தும்
ரத்தக் கொழுப்புப் புரதங்கள் அளவு
ரத்த யூரியா அளவு
சீரம் கிரியேட்டினின் அளவு
ஹெச்பி.ஏ.ஒன்.சி. அளவு
சீரம் யூரிக் அமிலம் அளவு
ரத்த அயனிகள் பரிசோதனை
ஹெச்.ஐ.வி. பரிசோதனை
ட்ரெட் மில் பரிசோதனை
தைராய்டு சுரப்புப் பரிசோதனை
ஸ்பைரோமெட்ரி பரிசோதனை
கல்லீரலுக்கான பரிசோதனைகள்
பொதுவான சிறுநீர்ப் பரிசோதனைகள்
மலப் பரிசோதனை
மார்பு எக்ஸ்-ரே
இ.சி.ஜி.
எக்கோ
வயிறு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள்
மருத்துவ ஆலோசனை
உணவு மற்றும் வாழ்க்கைமுறை ஆலோசனைகள்
குறிப்பு: மேலே சொல்லப்பட்ட பரிசோதனைகள் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மருத்துவ மனைக்கு மருத்துவமனை வெவ்வேறு பெயர்களுக்கு மாறுவதும் உண்டு. விசாரித்துவிட்டுச் செல்வது நல்லது. அரசு மருத்துவமனைகளில் ரூ. 250-க்கு இது செய்யப் படுகிறது. ஆனால், அங்கே செய்யப்படும் பரிசோதனை களில் சில மட்டும் குறையலாம்.

நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!


நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

திருமணம், வீட்டு சிறப்பு விழாக்களில் மட்டுமே வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வாழையிலைகள் ஓரங்கட்டப்பட்டு, தீமை விளைவிக்கும் நெகிழித் தட்டுகளும் காகிதங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது.
வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.
உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சி யுண்டாக்கும் தன்மை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத் தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை உணவு அற்புதமான தேர்வு.
வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு.
எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக் கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸி டண்டான பாலி ஃபீனால்கள் வாழை இலையில் பொதிந்திருக் கின்றன.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...