வியாழன், 20 அக்டோபர், 2016

90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்

90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்

``எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் 
வேறொன்றறியேன் பராபரமே.’’
நினைத்துப்பார்க்கையில், பெருமிதத்தால் நெஞ்சம் விம்முகிறது!

இத்தனை நீண்டகால வரலாறும் பாரம்பர்யமும் இந்தியாவில் வெகுசில பத்திரிகைகளுக்கு மட்டுமே உண்டு. 90 ஆண்டுகளுக்கு முன்னர் `ஆனந்த விகடன்’ பத்திரிகையோடு தொடங்கிய விகடன் குழுமத்தின் பயணம், இப்போது ஆலமர விழுதுகளைப்போல ஆழ அகல வேர் பதித்திருக்கிறது. 

இந்த நீண்ட நெடிய வரலாற்றில் தமிழ்ச் சமூகம் அடைந்துவந்துள்ள மாற்றங்களும், அதில் விகடன் உருவாக்கிய தாக்கங்களும் ஏராளம். எதற்கும் எப்போதும் எவரிடமும் சமரசம் செய்துகொள்ளாத உறுதிதான் விகடனின் மிகப்பெரிய பலம். நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன், துலாக்கோலின் துல்லியத்துடன் தனது எண்ணங்களை முன்வைப்பதுதான் விகடனின் தனித்துவம். அதனாலேயே அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையில் தொடங்கி திரைப்பட விமர்சனம் வரை விகடனின் கருத்து என்ன என்பதை தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறார்கள். 
அச்சு ஊடகத்தில் மட்டும் தன்னை இருத்திக்கொள்ளாமல், இப்போது இணைய உலகிலும் தனது பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது விகடன். காலமும் தொழில்நுட்பமும் கைகோத்து, விகடனையும் வாசகர்களையும் இன்னும் நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. விகடனின் கிளைகள் அதிநவீனத் தொழில்நுட்பத்தோடு உறவாடினாலும், தமிழர்களின் ரசனையிலும் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்து நிற்பதுதான் நம் வெற்றியின் ரகசியம்.

விகடன் குழுமத்தின் ஒவ்வொரு காலகட்ட சாதனைகளுக்கும் வாசகர்களின் அன்பும் ஆதரவுமே ஆணிவேர். அதே சமயம் லட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனை வீச்சோடும், கருத்தாழத்தோடும், நையாண்டியோடும், வேகத்தோடும் போட்டிபோடுவது மிகப் பெரிய சவால்.  

இது, தொழில்நுட்பத்தின் யுகம். இதழ்கள், நூல்கள், தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் என எந்த ஊடகத்தின் வழியாக தமிழ்கூரும் நல்லுலகம் வாசிக்க, பார்க்க, கேட்க, பங்கேற்க விரும்பினாலும் விகடன் தயார். வரும் காலத்தில், இந்த ராஜபாட்டையில் வாசகர்கள் படைப்பாளிகளாகவும் விமர்சகர்களாகவும் பங்கேற்க வேண்டும். 

`எல்லோரும் இன்புற்றிருக்க!’ விகடனின் விருப்பம் இதுதான்.

வணங்குகிறோம்... வாழ்த்துங்கள்!

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?

சவுதி அரேபியா இளவரசர் 'துர்க்கி பின் சவுத் அல்-கபீர்' என்பவருக்கு  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அல் கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு இந்த தண்டனை.  அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகும். சவுதியில் 1977-ம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
குற்றங்களுக்கு கடுமையான தண்டனையளிப்பதில் பெயர் போன நாடு என்பதை,  சவுதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 

வியாழன், 13 அக்டோபர், 2016

கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதலா?

கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதலா?
கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே பலரும் பதறுவார்கள். அதிலும் முட்டை, சிகப்பு இறைச்சி (Red meat), பன்றிக்கொழுப்பு, வெண்ணெய் என்றால் அவ்வளவுதான். உடனே வரும் கேள்வி – இவற்றைச் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் அல்லவா?’
சிகப்பு இறைச்சியும், நிறைவுற்ற கொழுப்பும் இதயத்துக்குக் கெடுதலானவை என்று பலரும் நினைப்பது நம் இதயத்துக்குத் தெரிந்தால், விழுந்து விழுந்து சிரிக்கும். ஏன் எனில், நம் இதயமே மிகப்பெரிய சிகப்பு இறைச்சித் துண்டுதான். முழுக்க முழுக்க சிகப்பு இறைச்சியாலும், நிறைவுற்ற கொழுப்பாலும் ஆனதுதான். இதயம் மட்டுமல்ல, மனித உடலே அப்படித் தான். அதிலும் மனித மூளை என்பது மிகப்பெரிய கொலஸ்டிரால் பந்து. உள் உறுப்புக்களில் மிக அதிக அளவில் கொலஸ்டிராலைத் தேக்கி இருக்கும் மனித உறுப்பு, மூளையே. வேறு எந்த உறுப்புக்களை விடவும் பத்து மடங்கு அதிக கொலஸ்டிரால் நம் மூளையில் உள்ளது.
கொலஸ்டிரால் நம் தோழன். அதிலும் உற்ற தோழன். நம் உயிர் காத்து, ஆண்களுக்கு ஆண்மையையும், பெண்களுக்குப் பெண்மையையும் அளித்து, மாரடைப்பின் பிடியில் இருந்து நம்மைக் காக்கும் தோழன். கர்ணனுக்கு துரியோதனன் போல, அவ்வைக்கு அதியமான் போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா போல நமக்கு உற்ற நண்பன். கொலஸ்டிரால் இல்லையென்றால் நாம் இல்லை, நம் சந்ததி இல்லை, மனித இனம் மட்டுமல்ல, பாலூட்டிகள் என்கிற இனமே இல்லை.
கொலஸ்டிரால் என்பது பசை மாதிரி உள்ள ஒரு வகைப் பொருள். பலரும் நினைப்பது போல அதில் கலோரி எல்லாம் கிடையாது. கொலஸ்டிரால் உடலுக்குத் தேவையான மிக, மிக முக்கியமான ஒரு மூலப்பொருள். நம் உடல் இயங்க பல ஹார்மோன்கள் அவசியமானவை.
உதாரணமாக ஆண்களுக்கு ஆண்மையை அளிப்பது டெஸ்டோஸ்டிரான்  (Testosterone) எனும் ஹார்மோன். இந்த ஹார்மோன்தான் உயிர் அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. ஆண்களுக்கு முடி வளர்வது முதல் விந்தணு உற்பத்தி வரை அனைத்துக்கும்  மூலக்காரணி டெஸ்டோஸ்டிரான் தான். ஆண்களுக்கு வலிமையை அளிப்பதும் இதுதான். அதனால்தான் பெண்களை விட ஆண்களுக்கு அதிக உடல் வலு உள்ளது.
பெண்களுக்குப் பெண்மையை அளிப்பது ஈஸ்ட்ரோஜென் (Estrogen) எனும் ஹார்மோன். ஈஸ்ட்ரோஜெனால்தான் பெண்கள் வயதுக்கு வருகிறார்கள், மார்பக வளர்ச்சியைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு, கருமுட்டை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அவசியம்.
கொலஸ்டிராலுக்கும் ஹார்மோன்களுக்கும் இடையே உள்ள உறவு வெண்ணெய்க்கும், நெய்க்கும் இடையே உள்ள உறவு போன்றது. அதாவது உடலால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து ஹார்மோன்களுக்கான மூலப்பொருளே கொலஸ்டிரால்தான். உடலில் வேறு எந்த மூலப்பொருள் தட்டுப்பாடு வந்தாலும் ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், கொலஸ்டிரால் உற்பத்தி மட்டும் தடைபட்டால் அவ்வளவுதான். பல ஹார்மோன்களின் உற்பத்தி நின்று, உடலே ஸ்தம்பித்துவிடும்.
இத்தனை முக்கிய மூலப்பொருளான கொலஸ்டிராலை, நம் உடல் தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுள்ளது. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் சக்தி உள்ளது. இருப்பினும் நமக்குத் தேவையான கொலஸ்டிராலை நம் உணவு மூலமாகவும் பெறலாம். அதாவது இறைச்சி, முட்டை, பால், மீன் போன்ற உணவுகளில் கொலஸ்டிரால் உண்டு. அதே சமயம் எந்த ஒரு தாவர உணவிலும் கொலஸ்டிரால் கிடையாது.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள் உள்ள சவ்வை (Membrane) உற்பத்தி செய்ய கொலஸ்டிரால் அவசியமாகிறது. மேலும், ஒவ்வொரு செல்லிலும் நீர் புகாதபடி, ‘வாட்டர் ஃப்ரூப்’ ஆக செல்களைக் காப்பாற்றுகிறது. கொலஸ்டிரால் இல்லையெனில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரோஜெஸ்டிரான் (Progesterone), டெஸ்டோஸ்டிரான் (Testosterone), அட்ரினலின் (Adrenaline), கார்ட்டிசோல் (Cortisol) ப்ரக்னனோலோன் (Pregnenolone) போன்ற ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை நம் உடலில் உற்பத்தி ஆகாது.
இதனால் நம் உடல் கொலஸ்டிராலை உற்பத்தி செய்ய அதிக முயற்சி எடுக்கிறது. இத்தனை பணிகளுக்கும் தினமும் 2000 மி.கி. கொலஸ்டிரால் தேவை. அதனால், கல்லீரல் (Liver) நம் உணவில் இருந்து கொலஸ்டிராலை உற்பத்தி செய்வதில் பெரும் ஆற்றலையும், நேரத்தையும் செலவழிக்கிறது.
உணவில் இருந்து கொலஸ்டிராலை நம் உடல் உற்பத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. அது 30 படிகள் கொண்ட ஒரு வழிமுறை. இதைச் செய்வதால் கல்லீரலுக்கு அதிக வேலை. அதற்குப் பதிலாக, உணவின் மூலமாகவே நம் உடலுக்கு கொலஸ்டிரால் கிடைத்துவிட்டால்? கல்லீரலுக்கு அதிக ஓய்வு கிடைக்கும் இல்லையா! இதனால் அது புரதத்தை ஜீரணம் செய்தல், பைல் ஆசிட் (Bile acid) எனப்படும் ஜீரண ஆசிட்டை உற்பத்தி செய்தல் போன்ற வேறு வேலைகளில் ஈடுபடும்.
ஆக, எத்தனைக்கு எத்தனை கொலஸ்டிரால் நம் உணவில் அதிகமாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை நம் கல்லீரல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்கும்.
உணவின் வழியாக கல்லீரலுக்கு கொலஸ்டிராலைக் கொடுப்பது என்பது தினமும் ஐந்து மணிநேரம் கையால் துணி துவைக்கும் இல்லத்தரசிக்குச் சலவை இயந்திரம் வாங்கிக் கொடுப்பது மாதிரி.
நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்டிராலுக்கும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் கொலஸ்டிராலுக்கும் துளி வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. முட்டையில் உள்ள கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று சொன்னால், நம் கல்லீரல் மாங்கு மாங்கு என்று உற்பத்தி செய்யும் கொலஸ்டிராலும் கெடுதலானது என அர்த்தம் வரும் இல்லையா? உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருளை எதற்காக நம் கல்லீரல் உற்பத்தி செய்யவேண்டும்? கொஞ்சம் யோசியுங்கள்.
நம் உடலுக்குத் தினமும் தேவைப்படும் கொலஸ்டிரால் அளவு - 2000 மிகி. அதாவது கிட்டத்தட்ட பத்து முட்டைகளில் உள்ள அளவு. தினமும் எட்டு முட்டைகள் சாப்பிட்டால், நம் கல்லீரலுக்குச் சுமார் 1600 மி.கி. கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் வேலை மிச்சம் ஆகும். மீதமுள்ள நானூறு மி.கி. கொலஸ்டிராலை மட்டும் அது உற்பத்தி செய்துவிட்டு ஹாயாக ஓய்வெடுக்கும். எனவே, கொலஸ்டிரால் உள்ள உணவுகளை உண்டால் ஆபத்து என்று எச்சரிப்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது இல்லையா?
ஒரு அமெரிக்கருக்கு அவரது உணவின் மூலம் தினமும் 400 மி.கி. அளவுள்ள கொலஸ்டிரால் கிடைக்கிறது (அமெரிக்க அரசின் பரிந்துரை 300 மி.கி.). இந்திய அரசு, உணவில் தினமும் 365 மி.கி. மட்டுமே கொலஸ்டிரால் இருக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரைகள் அபத்தமானவை.
2000 மி.கி. கொலஸ்டிராலை உணவின் மூலமாகவே அடைய முடியுமா? பலராலும் முடியாது என்பதே உண்மை. உதாரணமாக சைவர்கள் தினம் 2 கப் பால் மட்டும் அருந்தினால் கிடைக்கும் கொலஸ்டிரால் அளவு வெறும் 50 மி.கி. தான். அதே நாலு முட்டையை உணவில் சேர்த்தால் 800 மி.கி. கொலஸ்டிரால் கிடைக்கிறது. உடன் அரை கிலோ சிக்கன் சேர்த்தால் கூடுதலாக 500 மி.கி. கொலஸ்டிரால்.
சைவ உணவை விட அசைவ உணவில் அதிக அளவிலான கொலஸ்டிரால் உள்ளது. இதனால்தான் சைவர்களுக்கு அதிக அளவில் ஹார்மோன் பிரச்னைகள், ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்புமிக்க கல்லீரல் பிரச்னைகள் (கொழுப்பானது கல்லீரலில் படிந்து கல்லீரலின் பருமன் அதிகரிப்பதே ஃபேட்டி லிவர்.) போன்றவை ஏற்படுகின்றன.
liver.jpg 
கல்லீரலில் இருந்து உடலெங்கும் உள்ள செல்களுக்கு கொலஸ்டிராலைக் கொண்டு சேர்ப்பது, கெட்ட கொழுப்பு (LDL- Low density Lipoprotein). செல்களில் படிந்திருக்கும் கொலஸ்டிராலை, மீண்டும் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று வெளியேற்ற உதவுவது, நல்ல கொழுப்பு (HDL - High density Lipoprotein).
உங்கள் கொலஸ்டிரால் அறிக்கையில் எல்டிஎல் அதிகமாக இருந்தால் ‘கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகிவிட்டது’ என மருத்துவர் கூறுவார். நீங்களும் பதறுவீர்கள். ஆனால் கெட்ட கொலஸ்டிரால் எனப் பெயர் வாங்கியுள்ள இந்த எல்டிஎல், உண்மையில் கொலஸ்டிராலே அல்ல. அது ஒருவகை புரதம் மட்டுமே. கொழுப்பு, நீரில் கலக்காது என்பதை நினைவில் கொள்க. அதனால் கொலஸ்டிராலை எல்டிஎல் எனும் புரதத்துக்குள் ஏற்றும் நம் கல்லீரல், ரத்தத்தின் மூலமாக உடலின் செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது.
இந்த எல்டிஎல், இதுபோல கொலஸ்டிராலைச் சுமந்து செல்வதால்தான் ஹார்மோன்கள் உற்பத்தி அனைத்தும் தவறாமல் நிகழ்கிறது. எல்.டி.எல் தான் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்களையும் செல்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கிறது. உடலில் கொலஸ்டிரால் அளவுகள் குறைந்தால் பைத்தியம் பிடித்தல், தற்கொலை எண்ணம் தோன்றுதல், ஹார்மோன் குறைபாடு, ஆண்மைக் குறைபாடு, மாரடைப்பு போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.
இதுவரை படித்து வருபவர்களுக்கு ஒரு கேள்வி நிச்சயம் தோன்றும். கொலஸ்டிரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பது மருத்துவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும் தெரியாதா? பிறகு ஏன் கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று இத்தனை நாளாக எச்சரித்து வந்தார்கள்?
ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை என்று வைத்துக்கொள்வோம்.
வில்லன் ஒருவரைக் கொலை செய்துவிடுகிறான். அந்த இடத்துக்கு நம் அப்பாவி கதாநாயகன் வருகிறான். கொலை செய்யப்பட்டவரின் உடலில் சொருகப்பட்டிருந்த கத்தியை எடுக்கிறான். அவன் கைரேகை அதில் படிகிறது. அப்போது அந்தக் காட்சியைப் பார்க்கும் ஒருவர், ‘அய்யோ கொலை செய்துவிட்டாயா?’ எனச் சத்தம் போடுகிறார். அவரே போலீஸிடம் புகார் கூறுகிறார். போலீஸும் ‘கதாநாயகனின் கைரேகை கத்தியில் இருந்தது’ என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து, தண்டனை வாங்கித் தருகிறது. அதன்பின் கதாநாயகன் சிறையில் இருந்து தப்பி, தான் நல்லவன் என்பதை நிரூபிக்கிறான். உண்மையான கொலைகாரன் கூண்டில் ஏற்றப்படுகிறான்.
‘கொலஸ்டிரால் எனும் நண்பன்’ படத்தின் கதையும் இதுதான். இங்கே கொல்லப்பட்டது நம் இதயம். கொலைகாரன் என தவறாகப் புரிந்து கொள்ளபட்ட கதாநாயகன் - கொலஸ்டிரால். கொலஸ்டிரால்தான் கொலைக்குக் காரணம் என புகார் கொடுப்பவர்கள், மருத்துவர்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட கொலஸ்டிரால், தான் நல்லவன் என்பதை நிருபித்து, உண்மையான கொலையாளிக்குத் தண்டனை வாங்கித் தரும் நேரம் இது.
எனில், வில்லன் யார்?
இன்ஃப்ளமேஷன் (Inflammation) எனப்படும் உள்காயம். மாரடைப்பின் காரணி இதுவே.
அப்படியானால் உள்காயத்தால் உண்டாகும் மாரடைப்புக்கு, கொலஸ்டிரால் மீது ஏன் பழி சுமத்தப்படுகிறது? மருத்துவர்கள் ஏன் அவ்வாறு புகார் தெரிவிக்கிறார்கள்?
சினிமாவில், கதாநாயகன் கத்தியுடன் இருக்கும்போது ஒருவர் பார்த்துவிடுகிறார், போலீஸில் புகார் தெரிவிக்கிறார் என்று பார்த்தோம். இங்கும் அந்தக் கதைதான். மாரடைப்பு வந்து இறந்தவர்களின் இதய நாளங்களை திறந்து பார்த்தபோது, அதில் முழுக்க கொலஸ்டிரால் இருந்தது. கொலஸ்டிரால் இதயநாளச் சுவர்களில் படிவதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது; மாரடைப்பு நிகழ்கிறது. எனவே, எந்தளவுக்கு இதய நாளங்களில் கொலஸ்டிரால் படிகிறதோ அந்தளவுக்கு மாரடைப்புக்கான அபாயம் உண்டாகும். இப்படித்தான் மருத்துவர்கள் நம் கதாநாயகன் மீது பழி சுமத்தினார்கள்.
சினிமாவில், கத்தி சொருகப்பட்டிருந்தவரைக் காப்பாற்ற கத்தியை வெளியே எடுத்தான் கதாநாயகன். அதேபோல, நம் உயிரைக் காக்கவே கொலஸ்டிரால் ரத்த நாளங்களில் படிகிறது.
அதாவது, ரத்த நாளங்களில் உள்காயம் எனப்படும் இன்ஃப்ளமேஷன் உருவாகிறது. நம் தோலில் காயம் பட்டால் அங்கே எரிச்சல் வந்து புண் ஆகும். புண்ணை ஆறவைக்க மேலே தோல் படியும் அல்லவா? அதேபோல இதய நாளங்களில் உள்காயம் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மேலே பூசப்படும் மருந்தே எல்டிஎல் கொலஸ்டிரால். எல்டிஎல் கொலஸ்டிரால்தான் உள்காயத்தை ஆற வைக்கிறது. ஆனால், அதே இடத்தில் உள்காயம் மேலும் மேலும் ஏற்படும்போது, மேலே அதிக அளவில் எல்டிஎல் படிகிறது. இப்படிக் காயம் ஏற்படுதலும், அதன் மேலே கொலஸ்டிரால் பூசப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு வருகிறது.
ஆக, கதாநாயகனான கொலஸ்டிரால், இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்காயம் ஏற்படாமல் இருந்தால் எல்டிஎல் கொலஸ்டிராலால் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது. உண்மையில், மொத்த கொலஸ்டிராலின் அளவு 300, 400, 500 ஆக இருந்தாலும் எந்த ஆபத்தும் கிடையாது. நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதே உள்காயத்தால்தான், கொலஸ்டிராலால் அல்ல.
அப்படியானால் உள்காயம் ஏன் உண்டாகிறது? இதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.
எளிய மாவுச்சத்து உணவுகளை (கார்போஹைட்ரேட்) உண்பதால் உள்காயம் உண்டாகும். அதாவது வெள்ளை அரிசி, சர்க்கரை, மைதா போன்றவை.
மாறுதல் அடையும் கொழுப்பு (Trans fat) எனப்படும் செயற்கைக் கொழுப்புகளை உண்பதாலும் உள்காயம் உண்டாகும். சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயை எடுத்துக்கொள்வோம். செக்கில் ஆட்டி எடுத்த சூரியகாந்தி எண்ணெயை யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம் அது அதிகச் சூடு தாங்காது. அந்த எண்ணெயை வைத்து வடை செய்ய முயன்றால், எண்ணெயைக் கொதிக்க வைத்தவுடன் அது எரிந்து புகைமண்டலத்தை வீடெங்கும் பரப்பிவிடும்.
sunflower oil.jpg 
இதற்காக சூரியகாந்தி, கனோலா, சஃபோலா, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள், லேபில் ஹைட்ரஜனேற்றம் என்கிற வேதிவினைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றின் கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவைச் செயற்கையாக உள்ளே நுழைக்கிறார்கள். இதனால் அந்த எண்ணெய்களின் கொழுப்புகள் திரிந்து டிரான்ஸ் ஃபேட் எனும் வகை கொழுப்பாக மாறிவிடுகிறது. அதன்பின் இந்த எண்ணெய்கள் ஜம் என சூடு தாங்குகின்றன. வடை, பூரி என சமையலுக்கு ஏற்றதாகிவிடுகிறது.
இதன்பின் இந்தச் செயற்கைக் கொழுப்புகள் என்ன ஆகின்றன? அவை நம் கல்லீரலுக்குச் செல்கின்றன. நம் உடலுக்கு இயற்கைக் கொழுப்புதான் நன்குப் பழக்கம்; இதுபோல உருவாக்கப்படும் செயற்கைக் கொழுப்பு வகைகளை என்ன செய்வது என்று உடலுக்குத் தெரியாது. இதனால் டிரான்ஸ் ஃபேட்டால் உள்காயம் அதிகரிக்கிறது.
மாரடைப்புக்கு மட்டுமல்ல, பல வகை வியாதிகளுக்கும் உள்காயமே காரணம். உள்காயம் இதயச் சுவர்களில் மட்டும் வராது அல்லவா? உடல் உறுப்புக்கள் அனைத்திலும் ஏற்படும். குடல் சுவர்களில் உண்டாகும் உள்காயத்தால் தீராத வயிற்றுவலி ஏற்பட வாய்ப்புண்டு. முதுகெலும்பில் ஏற்படும் உள்காயத்தால் தீராத முதுகுவலி வந்து அறுவை சிகிச்சை மூலம் முதுகுத்தண்டின் சில டிஸ்குகளை அகற்றும் நிலைக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மூட்டில் வரும் உள்காயத்தால் முடக்குவாத நோய் நம்மைத் தாக்கக்கூடும்.
வடைக்கு ஆசைப்பட்டு வியாதியை தேடிக்கொள்வது என்பது இதுதான் இல்லையா?
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்?
நல்லவன் மீது சந்தேகப்படுவதும் கெட்டவனை நம்புவதும் தீராத துன்பத்தைத் தரும்.
இங்கும் அதே கதைதானே. நல்லவனான கொலஸ்டிராலை கெட்டவன் என்றோம்; ஆனால், கெட்டக் குணங்கள் கொண்ட தாவர எண்ணெய்களையும், தீட்டிய வெள்ளை அரிசியையும் நல்லது என நம்பி மோசம் போனோம். தீராத துன்பத்தை அனுபவித்தோம்.
இனிமேலாவது விழித்துக்கொள்வோம்.

புதன், 12 அக்டோபர், 2016

ஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்!

ஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்!


புத்தகத்தின் பெயர்: த அப் சைட் ஆப் ஸ்ட்ரெஸ் (The Upside of Stress)
ஆசிரியர்: கெல்லி மெக்கோனிகல் (Kelly McGonigal)
பதிப்பாளர்: அவெரி (Avery)
ஸ்ட்ரெஸ் (Stress) - இன்றைக்கு நகர்ப்புறத்து மனிதர்கள் பலரும் கண்டு நடுங்கும் வார்த்தையாக இருக்கிறது. ஆனால், இந்த ஸ்ட்ரெஸ்ஸை நாம் எப்படி சமாளிப்பது என்பது குறித்து ‘த அப் சைட் ஆப் ஸ்ட்ரெஸ்’ என்கிற புத்தகத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியை கெல்லி மெக்கோனிகல்.

புத்தகத்தைத் திறந்து படிக்கத் தொடங்கிய உடனே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார் ஆசிரியை. அந்தக் கேள்வி, பின்வரும் வாசகங்களில் எது சரி என்பதுதான். 

* ஸ்ட்ரெஸ் மிக மிக மோசமானது. அதை தவிர்க்கவேண்டும். குறைக்கவேண்டும். அது நமக்கு வந்துவிட்டால் அதை மேனேஜ் (நிர்வாகம்) செய்யப் பழகவேண்டும்.

* ஸ்ட்ரெஸ் என்பது நமக்கு உதவக்கூடியது. அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்; அதை உபயோகரமாக மாற்றிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் நாம் பழகிக்கொள்ளவேண்டும்.

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லி விட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானவர்களின் பதில் இப்படித்தான் இருக்கும். ‘‘ஸ்ட்ரெஸ்ஸா... அய்யோ, அது விஷமாச்சே. ஆகவே ஆகாது சாமி’’ என்பதாகத்தான் இருக்கும். 

ஹெல்த் சைக்காலஜிஸ்ட்டான புத்தகத்தின் ஆசிரியரும் அதே கருத்துடனேயே இருந்து வந்துள்ளார். ஸ்ட்ரெஸ்ஸை எப்படித் தவிர்ப்பது, எப்படிக் கட்டுப்படுத்துவது என வகுப்புகள், ஆய்வுகள், புத்தகங்கள் என பல வேலைகளைச் செய்துவந்துள்ளார். அதாவது, ஸ்ட்ரெஸ் கெட்டது என்ற நம்பிக்கையுடனேயே ஓடித் திரிந்து அதைத் தவிர்ப்பது மற்றும் நிர்வகிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளைக் கண்டறிய பல காலம் செலவு செய்துள்ளார். 

‘‘ஆழ்ந்து மூச்சுவிடுங்கள்; நீண்ட நேரம் தூங்குங்கள்; பரபரப்படையாதீர்கள் என்று ஒரே அட்வைஸ் மழைதான் கிடைத்தது. ஸ்ட்ரெஸ் நமக்கு எதிரி என்கிற அடிப்படை எண்ணத்தை மனதில் அழிக்க  முடியாமல்  உருவானதினால் தானே! அதன் பாதிப்புகளிலிருந்து நாம் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில்தானே! 

இதன்பின்பு, ஸ்ட்ரெஸ் குறித்த எனது எண்ணத்தை நான் திடீரென்று மாற்றிக் கொண்டேன். இந்தப் புத்தகத்தின் மூலம் உங்களின் எண்ணத்தையும் மாற்ற முயற்சிக்கிறேன்’’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

ஏன் இந்த திடீர் மனமாற்றம் ஆசிரியையிடம் ஏற்பட்டது? 1998-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 30,000 பேரிடம், ‘உங்களுக்கு எந்த அளவு ஸ்ட்ரெஸ் இருக்கிறது’ என்கிற கேள்வி  கேட்கப்பட்டது. கூடவே, ‘ஸ்ட்ரெஸ் உங்கள் உடல்நிலையை பாதிக்கிறது என்று நம்புகிறீர்களா?’ என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது. 

எட்டு வருடத்துக்குப் பின் அந்த 30,000 பேரையும் மீண்டும் தொடர்பு கொண்டு ஆய்வு செய்ததில் தெரியவந்த விஷயத்தில்தான் ஆசிரியரின் மனமாற்றத்துக்கான காரணியே இருக்கிறது. அந்த 30,000 பேரில் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கிறது என்றவர்களில் பலரும் இறந்துபோயிருந்தனர். அதாவது, அதிக ஸ்ட்ரெஸ் என்பது இறந்து போவதற்கான வாய்ப்பை 43%  அதிகரித்து இருந்தது. இறந்து போனவர்கள் அனைவருமே ஸ்ட்ரெஸ் தன் ஹெல்த்தை பாதிக்கிறது என்பதை நம்பியவர்களாகவே இருந்தனர். 

குறைந்த அளவு ஸ்ட்ரெஸ்ஸே இருக்கிறது என்று சொல்லி, அதுவும் தனது உடல்நிலையை பாதிக்கும் என்று நம்பியவர்கள்கூட இறப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், ஸ்ட்ரெஸ் நமது உடல்நலத்தை பாதிப்பது இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நன்றாகவே இருந்தனர். அதிலும் குறைவான ஸ்ட்ரெஸ் உடல்நிலையை பாதிக்காது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நன்றாகவே இருந்தனர் என்று கண்டறியப்பட்டது. 

அதனால்தான் ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்ட்ரெஸ் என்பதே ஆளைக் கொல்லும் நோயாக மாறுவதில்லை. ஸ்ட்ரெஸ் நமது உடல்நலத்தைப் பாதிக்கும் என்கிற  எண்ணம் நமக்கு ஆழமாக வேறுரூன்றும்போதுதான் ஆளைக் கொல்கிறது’ என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சர்வேயில் தெரியவந்த முடிவுகளே தனது சிந்தனையை மாற்றியது என்கிறார் ஆசிரியை.

இதே போன்ற பல ஆராய்ச்சிகளும் இதே மாதிரியான கருத்துக்களையே வெளிக்கொண்டு வந்துள்ளன. இளவயதில் வயதான காலம் குறித்த எண்ணம் என்ன என்று கேட்டால், ‘‘ஜாலியா இருக்கும் பாஸ். வயதாவது நல்லதுதானே! அனுபவம் பெரிய ஆசான் இல்லையா?’’ என்று சொல்பவர்கள் ஒருபக்கம்;  ‘‘அய்யோ, கிழவனாகிடுவோம் பாஸ், பிறகு கஷ்டம்தான்’’ என்று சொன்னவர்களுக்கும் இடையே சுமார் ஏழு வருடம் வித்தியாசம் இருந்ததாம்.  அதாவது, கிழவனாகிவிடுவோம் என்று இளமையிலேயே கவலைப்படுபவர்களுக்கு எமன் சீக்கிரம் அழைப்பு விடுத்துவிடு கிறான் என்கிறது ஆய்வுகள்.
ஸ்ட்ரெஸ் நம்மைக் கொன்றுவிடும் என்று எல்லோரும் நம்மை பயமுறுத்துவதினாலேயே ஸ்ட்ரெஸ் மனிதர்களைக் கொல்கிறது. ஏன் பயமுறுத்து கிறோம்? ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக. ஆனால், அந்த பயம் ஆளைக் கொல்ல காரணமாகி விடுகிறது. பயம், கெட்ட பெயர், சுய விமர்சனம், மானக்கேடு என்பவை எல்லாம் எதிர்மறை விளைவுகளையே கொண்டுவருகிறதே தவிர, பாசிட்டிவ் விளைவுகளைக் கொண்டுவருவதில்லை என்கின்றன பல ஆய்வுகள். ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் குறித்து சொல்லப்படும்போது எல்லாம் ஸ்ட்ரெஸ்ஸின் நெகட்டிவ் விஷயங்கள் அனைத்தும் பூதாகரமாகக் காட்டப்படுகின்றன. அதனாலேயே ஸ்ட்ரெஸ் ஆட்கொல்லியாகி விடுகிறதே தவிர, ஸ்ட்ரெஸ் நிச்சயம் ஒரு ஆட்கொல்லி நோயில்லை. 

ஸ்ட்ரெஸ் குறித்த எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்வது எப்படி? ஸ்ட்ரெஸ் கெட்டது என்பதும் ஸ்ட்ரெஸ் நல்லது என்பதும் இரண்டு விதமான மனநிலை. இந்த இரண்டும் எப்படி மாறுபடுகிறது தெரியுமா? 

ஸ்ட்ரெஸ் கெட்டது எனும் மனப்போக்கு: 

*     ஸ்ட்ரெஸ் என்னுடைய உடலை வருத்தி எடுத்து உயிரைக் குடிக்கிறது.
*     ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பதால், என்னுடைய பெர்ஃபார்மென்ஸ் மற்றும் உற்பத்தித்திறன் குறைகிறது.
*     ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பதால், என்னால் எதிலும் கவனம் செலுத்தவோ, கற்றுக்கொள்ளவோ முடிவதில்லை.
*     ஸ்ட்ரெஸ் என்பதே கேடு. அதனால் அதைத்  தவிர்க்கவேண்டும். 

ஸ்ட்ரெஸ் நல்லது எனும் மனப்போக்கு:

*     ஸ்ட்ரெஸ் என்னுடைய பெர்ஃபார்மென்ஸை யும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கச் செய்கிறது.
*     ஸ்ட்ரெஸ்ஸே என் உடலை உறுதியாக்குகிறது.
*     ஸ்ட்ரெஸ்ஸே என்னை அதிகமாக கற்றுக் கொள்ளவும் வளரவும் செய்கிறது.
*     ஸ்ட்ரெஸ் எனக்கு உதவுவதாகவும் பாசிட்டிவ் ஆனதாகவும் இருக்கிறது.

ஒரு வேலையை செய்ய நினைக்கும்போது டென்ஷன் வருகிறது. ‘கூலாக இரு. கூலாக இரு’ என நாம் நமக்குள்ளே சொல்லும் வேளையில், நம்முடைய மனது கூலாக மறுக்கிறது. அந்த நேரத்தில் வேறு யாராவது வந்து, ‘என்ன இன்னும் முடியலையா’ என்று கேட்டால் கொட்டித் தீர்த்துவிடுகிறோம். அதே சமயம், கூலாக இரு என்று சொல்வதற்கு பதிலாக, ‘அடேய்... எவ்வளவு பெரிய வேலையை நாம் செய்யப் போகிறோம்’ என்று உற்சாகமாக நினைத்தால், அந்த உற்சாகமே ஸ்ட்ரெஸ்ஸை நமக்கு உகந்ததாக மாற்றி, வேலையை எத்தனை இடையூறுகள் வந்தாலும் சுலபத்தில் முடிக்க உதவும்.

அதெப்படி சாத்தியம்? ஒரு வேலையை முடிக்கத் தேவையான பணம், நேரம், ஆள் படை எல்லாம் குறைவாக இருக்கும்போது, அந்த வேலையை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாது. ஆனாலும், அந்த வேலையை குறித்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும் எனில்  ஸ்ட்ரெஸ் வரத்தானே செய்யும் என்பீர்கள். அப்படி வரக்கூடிய ஸ்ட்ரெஸ், கையில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் விஷயங்களை  பலமிழக்கச் செய்துவிடும். எனவே, ‘இருக்கிற  விஷயங்களை வைத்துக்கொண்டே அந்த செயலை முடிக்கிறேன் பார்’ என்ற உற்சாகத்துடன் செயல்படுவதே ஸ்ட்ரெஸ்ஸை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முறையாகும் என்கிறார் ஆசிரியை.

இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்தால் ஸ்ட்ரெஸ்ஸை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு காரியங்களை வெற்றிகரமாக முடித்து சாதனை படைக்கலாம்.
 
 - நாணயம் டீம்
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

களை கட்டிய  கார் விற்பனை!

ணம், தசரா  பண்டிகைகளை முன்னிட்டு கார்களின் விற்பனை செப்டம்பரில் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது.  மாருதி நிறுவனம் 1,37,277 கார்களை விற்று, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 29.4% வளர்ச்சி கண்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 14,501 கார்களை விற்று  கடந்த ஆண்டைவிட 24 சதவிகிதமும் மகேந்திரா நிறுவனம் 20,537 கார்களை விற்று 5 சதவிகித வளர்ச்சியும் கண்டிருக்கிறது. ஜெனரல் மோட்டார் நிறுவனம் 2,101 கார்களை விற்று கடந்த ஆண்டைவிட 15.2% மைனஸ் வளர்ச்சியும் கண்டிருக்கிறது. இந்த மாதம் தீபாவளி என்பதால் கார் விற்பனை இன்னும் அதிகரிக்குமா?

செவ்வாய், 11 அக்டோபர், 2016

கார்போஹைட்ரேட் நல்லதா? கெட்டதா?

கார்போஹைட்ரேட் நல்லதா? கெட்டதா?

ந்த ஒரு செலிப்ரிட்டியிடமும் உங்கள் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் என்ன என்று கேட்டால், லோ-கார்ப் அல்லது கார்ப் ஃப்ரீ உணவுதான் என்கின்றனர். ஃபிட்டாக இருப்பதற்காக இளம் பெண்கள் பலர் கார்போஹைட்ரேட் உணவை தவிர்ப்பதாக சொல்கின்றனர். மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் என்றாலே இன்றைக்கு மிக மோசமான உணவு என்று பார்க்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இன்றைக்கு உணவு ஆலோசனை பெற வரும் பெரும்பாலானவர்கள் கேட்கும் முதல் கேள்வியே, கார்போஹைட்ரேட் மோசமானதா, அதைத் தவிர்ப்பது நல்லதா என்றுதான். இதற்கு பதில், இல்லை என்பதுதான்.

உடலை ஃபிட்டாக்கும் டயட் முறைகள் எல்லாம் கிட்டத்தட்ட லோ-கார்ப் உணவைத்தான்  பரிந்துரை செய்கின்றன. நமது உணவு முறையும், அதாவது கடந்த 50 ஆண்டுகளாக முழுக்க கார்போஹட்ரேட்டினால் ஆனதாகத்தான் உண்டு பழகிவிட்டோம். உணவை கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். அதில், நான்காவதாக இருப்பது நார்ச்சத்து. இதுவும் ஒருவகை கார்போஹைட்ரேட்தான். ஆனால், இது செரிக்க முடியாத கார்போஹைட்ரேட். உடல் இயங்கத் தேவையான ஆற்றலை அளிப்பது கார்போஹைட்ரேட்.

நாம் உட்கொள்ளும் அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எளிய கார்போஹைட்ரேட்(Simple), கூட்டு கார்போஹைட்ரேட் (complex) என இரண்டு வகையில் மாவுச்சத்து கிடைக்கிறது.  கூட்டு கார்போஹைட்ரேட்டை நல்ல கார்போஹைட்ரேட் என்று சொல்வார்கள். இதன் மூலக்கூறு அமைப்பு, நார்ச்சத்து உள்ளிட்டவை காரணமாக செரிமானம் ஆக நம்முடைய உடல் அதிக செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது இல்லை. 

பாலிஷ் செய்யப்படாத அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், சிறு தானியங்கள் என இயற்கை வடிவில் கிடைக்கும் எந்த ஒரு பொருளிலும் கூட்டு கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளது. இவற்றில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைவாக இருக்கும். கிளைசமிக் இண்டக்ஸ் எண் குறைவாக இருக்கும். கலோரியும் அதிகமாக இருக்காது. வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
அதுவே, எளிய கார்போஹைட்ரேட் உடனடியாக செரிமானம் ஆகி, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. சர்க்கரை, ப்ராசஸ் செய்யப்பட்ட பாலிஷ் அரிசி, மைதா உள்ளிட்டவை இதற்கு உதாரணம். இவற்றில், ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லை. கிளைசமிக் இண்டக்ஸ் அதிகம். அதிகம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தராது. இதில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான கலோரி, கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படும்.

பொதுவாக உடல்பருமனுக்கு கார்போஹைட்ரேட்தான் காரணம் என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். உண்மையில், கார்போஹைட்ரேட் காரணம் அல்ல... அதிகப்படியான சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருள் போன்ற எளிய கார்போஹைட்ரேட்தான் உடல்பருமனுக்குக் காரணம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரிசி, கோதுமை என கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், பத்து ஆண்டுகளில்தான் உடல்பருமன் அதிகரித்திருக்கிறது. ஏன்?  இதற்கு, எளிய கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் காரணம்.

கெட்ட கார்போஹைட்ரேட்: 


செயற்கையானது, பதப்படுத்தப்பட்டது, சுத்திகரிக்கப்பட்ட அனைத்து உணவுப் பொருளும் கெட்ட கார்போஹைட்ரேட் வகையைச் சார்ந்ததுதான்.

கார்பனேட்டட் பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட அனைத்து பானங்கள், வெள்ளை அரிசி, பிரெட், பேக்கரி உணவுகள், ஐஸ் கிரீம்,  எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவை.

நல்ல கார்போஹைட்ரேட்

இயற்கையானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, நார்ச்சத்து நிறைந்தது என்பதுதான். இந்த உணவில் இருந்து, நார்ச்சத்தை நீக்கிவிட்டால் எந்த பலனும் இல்லாமல் போய்விடும். அதேநேரத்தில், முழுமையானதாக இருக்கும்போது, அதில் எவ்வளவு கார்போஹைட்ரேட் இருந்தாலும் அது நல்லதுதான்.

எல்லா காய்கறிகளும், பழங்களும் சாப்பிடலாம். சர்க்கரை அதிகம் இருக்கும் பழங்களை அளவுடன் சாப்பிடலாம். முழு தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், நட்ஸ், விதைகள் அனைத்தும் நல்லது.
ஹெல்த்தியான கார்போஹட்ரேட் பழக்கத்துக்கு மாறுவது எப்படி?

அரிசி உணவு: கைக்குத்தல்,  சிவப்பரிசி,  மாப்பிள்ளைச்சம்பா போன்ற அரிசிக்கு மாறலாம். அதிலும் சிவப்பு அரிசி பெஸ்ட். குக்கரில் வேகவைப்பதைவிட, வடித்து உண்பதே சிறந்தது. நீங்கள் வடிக்கும் போது அதிலிருக்கும் 90 சதவிகித ஸ்டார்ச் என்கிற மாவுப்பொருள் வெளியேறிவிடும்.

கீரை வகைகள்: 
காலை உணவாக கீரை ஸ்மூத்தி செய்யலாம். தண்ணீரை கொதிக்க வைத்து கழுவிய கீரையை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்து அரை விரல் இஞ்சி, இரண்டு பல் பூண்டு, சிறிது உப்பு போட்டு மிக்ஸியில் அடித்து குடிக்கலாம். பசியை கன்ட்ரோல் செய்யும். ஹெல்த்தியும் கூட 

காளான், குடமிளகாய்:
 ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம்.  

முளைகட்டிய பயறுகள்: 
பயறாக உண்டால் ஹை-கார்ப் பட்டியலில் வரும் ஆனால், முளைகட்டினால் ஹெல்த்தி உணவாக மாறிவிடும். 100 கிராம் முளைகட்டிய பயறுகளில் இருப்பதும் வெறும் 23 கலோரிகளே.

காலிஃப்ளவர், புரொகோலி, முட்டைகோஸ்:  புரொகோலி மற்றும் காலிஃப்ளவரில் நார்ச்சத்து, வைட்டமின் சி  உள்ளது. 100 கிராம் காலிஃப்ளவரில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி இருக்கிறது. 100 கிராம் முட்டைகோஸில் 25 கலோரியே உள்ளது. மேலும், கால்சியம், தாதுக்கள்  உள்ளன.

அவகேடோ (வெண்ணெய் பழம்): 
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வெட்டிப்போட்டு சாலட் செய்து சாப்பிடலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. தேன் கலந்து ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

வெள்ளரிக்காய், சிவப்பு முள்ளங்கி, டர்னிப், சிவப்பு கோஸ், பரங்கிக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணிக்காய் போன்ற லோ கார்ப் வகை காய்கறிகளுடன் ஒரு கப் வடித்த சாதமும் காய்கறிகள் கொண்ட குழம்பும் என உங்கள் உணவு வழிமுறையை அமைத்துக்கொள்ளலாம்.

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...