புதன், 6 ஜூலை, 2011

நபிகளாரின் இறுதிப் பேருரை

1417 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்: அதில் பத்து விஷயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.  மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.) இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. ( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பத்தினருக்கல்ல, அவருக்கே வழங்கப்படும்.  தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாயம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3. ( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4. ( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.) முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5. (மக்களே!) பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியருக்கு உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள்.  அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6. (மக்களே!) எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்!  ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது, எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது, இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7. (மக்களே!) எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.

8. (மக்களே!) உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

9. (மக்களே!) அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)

சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10. ( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? 'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!  இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன்,முஹம்மது ரஸூலுல்லாஹ்

ஏழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர் எம்.கே.டி.

ழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர், வெண்கலக் குரலோன் எம் கே தியாகராஜபாகவதர். இசைத்துறையிலும், நாடகத் துறையிலும் திரைத்துறையிலும் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். மாயவரத்தில் ஒரு பொற்கொல்லரின் குடும்பத்தில் பிறந்த அவர் இளம் வயதிலேயே திருச்சிராப்பள்ளியில் தமது திறமையை வெளிப்படுத்தினார். படிப்பைவிட, பொற்கொல்லர் தொழிலைவிட அவருக்கு பாட்டில்தான் ஆர்வம் இருந்தது. தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்காத அவர், வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அவரைத் தேடி வந்த தந்தை, சிறுவன் தியாகராஜன் கடப்பாவில் பெரிய ரசிகர் கூட்டத்திற்கு நடுவில் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தார். திருச்சிக்கு அழைத்து வந்தார்.

அமெச்சூர் நாடகக் கம்பெனி நடத்தி வந்த எஃப் ஜி நடேச ஐயர் பத்து வயது தியாகராஜனின் பாட்டினால் ஈர்க்கப்பட்டு ஹரிசந்திரா நாடகத்தில் அவருக்கு ஒரு வேடம் கொடுத்தார். நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். இளம் வயதிலேயே தியாகராஜ பாகவதர் எனும் பெயரையும் பெற்றார். 1926-ல் பவளக்கொடி மூலம் தலை சிறந்த நாடக நடிகரானார். நடிகர்களுள் அரசிளங்குமரன் என்றழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பர்மா, மலேயா, இலங்கையிலும் இவரது புகழ் பரவியது.

பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக்கியபோது பாகவதரும், எஸ் டி சுப்புலக்ஷ்மியும் நடித்தார்கள். இது 1934-ல் வெளிவந்தது. இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி. அதன் பிறகு பாகவதர் நடித்த அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். சிந்தாமணியும், அம்பிகாபதியும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டன. சிந்தாமணி ஓராண்டுக்கு மேல் ஓடியது., வெளிநாடுகளிலும் ஓடியது. இதை முறியடித்தது, 1944-ல் வெளிவந்த பாகவதரின் ஹரிதாஸ்தான். இது சென்னை பிராட்வே தியேட்டரில் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடியது.

நாத்திகத்தை பரப்பும் எந்த படத்திலும் நடிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழ் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். ஆதலால் தமிழிசைச் சங்கம் மட்டுமே அவருக்கு மேடை வாய்ப்பு கொடுத்தது. திருவையாறு தியாகராஜ ஆராதனையில்கூட அவர் பங்கெடுத்துக் கொள்ள இயலவில்லை.

1940-களில் அவர்தான் கொடிகட்டிப் பறந்த தமிழ் நடிகர். ஆனால், அப்போது விதி விளையாடியது. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் அவரும் அன்றைய நகைச்சுவை மன்னரான என் எஸ் கிருஷ்ணனும் சிறை வைக்கப்பட்டார்கள். பின்னர் பிரிவி கவுன்சில் வரை சென்று மேல் முறையீட்டில் வெற்றி பெற்றார்கள். 1947-ல் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பிறகும் பாகவதருக்கு திரைப்படத்துறை முந்தைய ஆதரவை தர மறுத்தது. தாமே சொந்த படங்கள் எடுக்கத் துவங்கினார். மற்றவர்களது ஒருசில படங்களில் தலை காட்டினார். அவற்றில் எதுவும் வெற்றி பெறவில்லை. ஒருவேளை தமிழ் திரைப்பட ரசிகர்கள் அவரைவிட அதிகமாக மற்ற திரைப்படங்களை ரசிக்கத் துவங்கிவிட்டார்களோ என்னமோ!

காரணம் என்னவாக இருந்தாலும் மன்னர்போல வாழ்ந்த தியாகராஜ பாகவதர் மனமுடைந்து, செல்வங்களை எல்லாம் இழந்து, ஆன்மீகப் பாதைக்கு திரும்பினார். யாத்திரை செல்லும் கோயில்களில் மட்டுமே பாடலானார். 1959 நவம்பர் முதல் தேதி அவர் மறைந்தார்.

இருப்பினும் உலகெங்கிலும் இன்றும் எம் கே தியாகராஜபாகவதருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.

ஒருநாள் ஒருபொழுதாகிலும், சத்துவகுணபோதன், உனைக்கண்டு மயங்காத, தீன கருணாகரணே, பூமியில் மானிட, மனமே நீ!, தியானமே, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வள்ளலைப் பாடும் வாயால், ஞானக்கண் ஒன்று, வதனமே சந்திர பிம்பமோ, அம்மா மனம் கணிந்து, ராதே உனக்கு போன்ற அவரது பாடல்களின் ஒலிப்பேழைகள் இன்னமும் விற்கத்தான் செய்கின்றன. பல நெஞ்சங்களில் இன்றும் வாழ்கிறார் மாமேதை எம் கே டி.

நன்றி:

திரு. ஹெச். ராமகிருஷ்ணன்

சென்னை ஆன்லைன்



திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...