சனி, 24 ஜூன், 2017

“உலகுக்கு உப்பாக இருங்கள்!” - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

ள்ளி நாட்களின்போது தேவாலயச் சுவர் ஒன்றில், இந்த வாசகத்தைப் பார்த்தேன். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ஒவ்வொரு முறையும் மனதுக்குள் சொல்லிப் பார்க்கும்போது சிலிர்ப்பாக இருந்தது. உண்மையில் அது யாரால், எதற்காகச் சொல்லப்பட்டது என அப்போது தெரியாது. ‘ஏன் நான் உலகுக்கு உப்பாக இருக்க வேண்டும்... உண்மையில் ஒருவன் உலகுக்கு உப்பாக இருப்பது எப்படி?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பேன்.   

ஒரு முறை மரண வீடு ஒன்றில் ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ‘‘அவன் கொண்டுவந்த உப்பு அவ்வளவுதான். கதை முடிஞ்சி போச்சு’’ என இறந்து போனவரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள்! மனித வாழ்க்கை என்பது உப்புதானா? ஒவ்வொருவரும் தனக்கான உப்பைக் கொண்டு வருகிறார்களா? 

இலக்கியமும் வரலாறும் படிக்கப் படிக்க உப்பின் வரலாறும் பங்களிப்பும் புரியத் தொடங்கியது. உப்புதான் மானுடப் பண்பாட்டின் முக்கியக் காரணி. ஒவ்வொரு குடும்பமும் தனக்கான உப்பின் ருசியைக் கொண்டிருக்கிறது. பைபிளில் உப்பைப் பற்றி 30 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பின் பயன்பாட்டை அறிந்திரா விட்டால், மனிதர்கள் நாடோடி வாழ்க்கையை விட்டிருக்கமாட்டார்கள். 

உப்பை நேர்மைக்கும், நீதிக்கும் அடையாளச் சின்னமாகக் குறிக்கிறார்கள். உப்பின் மீது சத்தியம் செய்யும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், உப்பு விற்பனையைத் தடுக்க பெரும் உப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்படி உப்பின் வரலாற்றை அறிந்து கொண்டபோது ‘உலகுக்கு உப்பாக இருங்கள்’ என்ற இயேசுநாதரின் வாசகம், மனதில் பேரொளியுடன் ஒளிரத் தொடங்கியது.

இயேசுவின் மலைப் பிரசங்கத்தில்தான் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. தன்முன்னே திரண்டிருந்த எளிய மனிதர்களைப் பார்த்து இயேசு இவ்வாறு கூறுகிறார். ஞானம் என்பதே உப்புதானே! உப்பைப் பகிர்ந்து தருதல்தானே அன்பின் முதற்செயல். நம் வாழ்க்கை என்பது நமக்கானது மட்டுமில்லை. உலகுக்கான நமது பங்களிப்பு முக்கியமானது. உப்பு போல நம்மை முழுமையாகக் கரைத்துக்கொண்டு, உலகுக்கு உயிர்ப்புத் தர வேண்டும். உப்பு என்பது வெறும் சுவை மட்டுமில்லை; உயிரின் ஆதாரம். உப்பு மருந்தாகப் பயன்படுகிறது. உப்பு, எல்லாப் பொருள்களையும் பாதுகாக்கக் கூடியது.    
உப்பு நிறம் மாறியிருந்தால் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். மனிதர் களுக்கும் இது பொருந்தக்கூடியதுதானே. உப்பு எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அதில் தூசி கலந்துவிட்டால் குப்பையில் கொட்டி விடுகிறோம். 
உலகுக்கு எழுத்துதானே உப்பாக இருக்கிறது. எழுத்தாளன் என்பவனும் சமூகத்துக்கு உப்பாகத்தானே இருக்கிறான். உப்பு இல்லா விட்டால் சொரணை இல்லாமல் போய்விடும். உப்பு போட்டுச் சாப்பிட்டால் நன்றியுணர்ச்சி இருக்கும் என்பார்கள். எழுத்தும் மனிதர்களின் சொரணையை, மனஎழுச்சியை, உத்வேகத்தை உருவாக்கவே முனைகிறது. 

உலகுக்கு வழிகாட்டிய மகான்கள் தங்களை உப்பாகவே கருதியிருக்கிறார்கள். சமயங்கள் யாவும் அன்பையே வெளிப்படுத்துகின்றன. அன்பை அடையாளப்படுத்தும் பொருளாக எப்போதும் உப்பு இருக்கிறது. இன்றும் புது வீடு குடிபோகிறவர்கள் உப்பைத்தான் கொண்டு போகிறார்கள்.

நூறு வருஷங்களுக்கு முன்பு வரை கிராமத்தில் உப்பு மட்டுமே வெளியிலிருந்து வாங்கப்பட்ட பொருள். உப்பு விற்பவர் ஒற்றை மாட்டு வண்டியில் உப்பை ஏற்றிக்கொண்டு வந்து வீடு வீடாக விற்பனை செய்வார். அப்படி உப்பு வியாபாரி வரும் நாளில், மொத்தமாக தேவையான உப்பை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.  தானியங்களைக் கொடுத்துவிட்டு உப்பை வாங்கிச் செல்லும் பண்டமாற்று முறையும் இருந்தது.

உப்பைத் தனது ஏகபோக உரிமையாக வைத்திருந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்தே, காந்தி சத்தியாக்கிரகம் மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை 386 கி.மீ நடந்து சென்று உப்பை எடுத்தார்.  கையில் ஊன்றுகோலுடன் தனது பாத யாத்திரையைத் துவக்கியபோது காந்திக்கு வயது 61. யோசித்துப் பாருங்கள்... அறுபது வயதில் ஓய்வுபெற்று பூங்காவின் பெஞ்சில் அலுப்பும் சலிப்புமாக சாய்ந்து கிடக்கும் முதியவர்களுக்கு மத்தியில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். உலகுக்கு உப்பாக இருப்பது என்றால் இதுதான்.

பள்ளி நாட்களில் படித்த அந்த வாசகம், மெல்ல மனதில் வேரூன்றி இன்று பெரும் விருட்சமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு நானே ‘உலகுக்கு உப்பாக இருக்கிறேனா’ எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சுயபரிசோதனை முக்கியமானது. 

மகாத்மா காந்தி போராடிப் பெற்ற உப்புக்கான சுதந்திரத்தை இன்று நாம் இழந்துவிட்டோம். பன்னாட்டு நிறுவனங்கள் உப்பை ஏகபோகமாக விற்பனை செய்கின்றன. உப்பு தயாரிக்கும் சிறுவணிகர்கள் முடக்கப்படுகிறார்கள். ‘உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?’ எனக் கேட்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள், நமது சொரணையைத் தேய்த்து மொண்ணையாக்குகின்றன. நம்மைச் சுற்றி நிகழும் அவலங்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போவதுத் தவறு. நாம் விழிப்பு உணர்வுடன், சுரணையுடன், பிரக்ஞையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆகவே, ஒவ்வொருவரும் ‘நாம் உலகுக்கு உப்பாக இருக்கிறோமா’ எனக் கேட்டுக்கொள்ளவும், உப்பாக இருக்கவும் வேண்டியிருக்கிறது. 

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: கே.ராஜசேகரன்
COURTESY: JUNIOR VIKATAN

வியாழன், 22 ஜூன், 2017

‘சிவன் சொத்து குல நாசம்!’ - நாஞ்சில் நாடன்

சிவன் கோயிலில் தொழுது வலம் வருவோர், சற்று நேரம் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து எழுந்து செல்வார்கள். எழும்போது, உட்கார்ந்த உடைப் பிரதேசத்தை சற்றுத் தட்டிவிட்டுப் போவார்கள். ‘தூசு தட்டுகிறார்கள்’ என்றுதான் நினைப்போம். ஆனால், சிவன் கோயிலின் சிறு மண்கூட உடலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடக் கூடாதாம். ஏனெனில், ‘சிவன் சொத்து குல நாசம்’. 

ஆனால், இந்தப் பழமொழி உலவும் தேசத்தில்தான் கோயில் உண்டியல்கள் உடைக்கப் படுகின்றன; உற்சவ மூர்த்திகள் கொள்ளை போகிறார்கள்; கோயில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன; பூசைக் கலசங்கள் காணாமல் போகின்றன; பொன் ஆபரணங்கள் களவாடப்படுகின்றன; தங்க, வெள்ளி அங்கிகள் அகற்றப்பட்டு உருக்கப்படுகின்றன; கோயில் வளாகங்களின் உள்ளேயே கொலை, வன்புணர்ச்சி நடக்கின்றன.  

‘எந்த சிவன் தன் சொத்துகளைக் களவாடிய கனவான்களின் குலத்தை இதுவரை வேரறுத்தான்?’ என்ற கேள்வியில் நியாயம் உண்டு! இன்னும் வளமாகத்தானே அவர்கள் இருக்கிறார்கள்? எனினும், எளிய மக்களிடம், அறவுணர்வு கொண்டோரிடம், இறைவனுக்கோ அல்லது மனசாட்சிக்கோ அஞ்சி நடப்பவரிடம், இந்தப் பழமொழி செத்துப்போகவில்லை என்றே தோன்றுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். சிவன் என்பது ஓர் அடையாளம்... அவ்வளவே! பள்ளிவாசல்களின் சொத்து என்றால் திருடலாமா? மரியாளின், அவளுடைய திருக்குமரனின் சபைச் சொத்து என்றால் கொள்ளையடிக்கலாமா? ‘சிவன்’ எனும் சொல்லை மாற்றிவிட்டு கடவுள், இறைவன், பிதா எனும் எந்தச் சொல்லையும் பொருத்திப் பார்க்கலாம். ‘சிவன் சொத்து’ என்பதை ‘மக்கள் சொத்து’ என்றும் ‘பொதுச்சொத்து’ என்றும் மாற்றிச் சொல்லலாம். இன்னும் எளிமையாக, ‘அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே’ எனலாம். 

இந்த ஒற்றை வரி, என் அப்பா மூலமாக எனக்கு வந்து சேர்ந்தது. என் தாத்தா அடிக்கடி அதைச் சொல்லுவார் என்பார் என் அப்பா. தாத்தா பெயர்தான் எனக்கும். சுப்பிரமணியப் பிள்ளை. 1900-த்தின் தொடக்கத்தில், சொந்த ஊரில் இருந்து பஞ்சம் பிழைக்க நாஞ்சில் நாட்டு வீரநாராயணமங்களத்துக்கு வந்தார். மாடு மேய்த்து, வடக்கு மலையில் இருந்து விறகு சுமந்து, புல் சுமந்து, சக்கடா வண்டி அடித்து, அறுவடையாகும் காலத்தில் அறுத்தடிப்புக் குழுவின் கூறுவடியாக இருந்து, பெண்ணும் கட்டி, ஊரின் ஈசான மூலையில் இரண்டே முக்கால் சென்டில் ஒரு குடிசை வீடு வாங்கினார். என் அப்பாவும் அந்த வீட்டில்தான் தனது 55-வது வயது வரை வாழ்ந்து மறைந்தார். 

அறுவடைக் காலங்களில் கூறுவடியாக இருந்து, வயல் அறுத்தடித்துக் கொத்து அளக்கும்போது நெல் மிச்சம் வரும். அதைச் சேர்த்து, ஊரின் நடுவே முத்தாரம்மன் கோயில் கட்ட முன்கை எடுத்தார் தாத்தா. ஒருமுறை கோயில் முதலடிகளிடம் கணக்கு கேட்டபோது, அடிவயிற்றில் குத்தி இழுக்கப்பட்டார். இதை எல்லாம் எனது மூன்றாவது நாவல் ‘மாமிசப் படைப்பி’ல் காணலாம். தாத்தா சாகும் காலத்தில், ‘‘கோயிலுக்கு முடிஞ்சதைச் செய்யுங்க... எந்தக் காலத்திலேயும் முதலடிப் பொறுப்பு ஒத்துக்கிடப் பிடாது. சிவன் சொத்து குல நாசம்’’ என்று சொன்னதாக அப்பா சொல்வார்.

அவர் இறக்கும்போது அப்பாவுக்கு கல்யாணம் ஆகி இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் எவரிடமும் அவர் புகைப்படம் இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த வீடு இருக்கிறது ஊரில். அவர் தந்து விட்டுப் போன ஒற்றை வரி இருக்கிறது நெஞ்சில். 
எவரிடம் இருந்தும் முறையற்றும் அநியாய மாகவும் பிடுங்கப்படும் சின்னச் சல்லியும், சிவன் சொத்துதான். சிலசமயம் தோன்றும்... பத்து ரூபாய் தொடங்கி பல்லாயிரம் கோடி வரையிலான இடைத்தரகு, கமிஷன், கையூட்டு, கொள்ளைப் பங்கு என அடித்து மாற்றுகிறவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? இருபது கோடி விலையுள்ள கார், கிலோகணக்கில் நகைகள், பண்ணை வீடுகள், மாளிகைகள், தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், இருபது தலைமுறைக்கான செல்வம்! உள்மனது கேட்கும், ‘என்னய்யா... இது சிவன் சொத்து இல்லையா?’ என்று. 

உலகப் புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் ப்ராட்லி சொல்வார், ‘It is not poisoned, it is poison itself’ என்று. அதேபோல், பொதுச்சொத்து என்பது விஷம் ஏற்றப்பட்டதல்ல. அதுவே விஷம்.   

ஓர் அநியாயத்தை, நீதி தட்டிக் கேட்க சராசரியாக 30 ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் வாழ்ந்து முடித்து இறந்தே போகிறார்கள். மக்களாட்சியில் மக்கள் கேட்கலாம். ஆனால் அவர்கள் ‘தீங்கு தடுக்கும் திறன் இலேன்’ என்கிறார்கள். 

சிவன் சொத்தை அபகரிப்பவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் இந்த நாட்டில்   மத்திய முதன்மை அமைச்சராக இருப்பவர் துப்பாக்கிக் குண்டு துளைத்து இறக்கிறார்? அவர் பிள்ளைகள் விமான விபத்திலும், குண்டு வெடித்தும் ஏன் இறக்கிறார்கள்? உலகின் அனைத்து வளங்களும் வசதியும் இருந்தும், என்றைக்கு எப்படி இறந்தார் என்பதே மர்மமான முறையில் எப்படி முதலமைச்சர் ஒருவரின் மரணம் இருக்கிறது? தமிழகத்தையே விலைக்கு வாங்கும் செல்வம் இருந்தும் எப்படி ஐம்பது வயதுக்குள் இறக்கிறார்கள்? எல்லை நீத்த செல்வம் சேர்த்தவர் கொலையுண்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும், கொன்றவர் எவர் என்று புகழ்பெற்ற இந்தியப் புலனாய்வுத்துறைக்கே ஏன் வெளிச்சம் இல்லை? கோடி கோடி கோடி சேர்த்த பலர் ஏன் சேனைக்கிழங்கு போல வாழ்கிறார்கள்? 

நான் ஆத்திகன் இல்லை. என்றாலும், நீதிப் பரிபாலனத்திலும் மக்களாட்சியிலும் நம்பிக்கை இழந்த மனநிலையில் பேசுகிறேன்... 

ஆம்... சிவன் சொத்து குலநாசம்!

சந்திப்பு: வெ.நீலகண்டன், படம்: தி.விஜய்
Thanks to Junior Vikatan

மஞ்சள் மகிமை

மருத்துவக் குணங்கள்:
1.     மஞ்சக் காமாலை என்ற நோய் உண்டு. அது கல்லீரல் பாதிப்பால் வருவது  அதேப் போல் மனதை கெடுக்க மஞ்சள் இலக்கியமும் உண்டு.
2.     பெண்கள் பூப்படைவதை,அதற்கு கொண்டாடும் சடங்கை மஞ்சள் தண்ணீர் விழா என்று கூறுவார் .மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாதலால், மஞ்சள் கலந்து குளிக்கச் செய்தால் இந்த பெயர் போலும். மஞ்சள் பூசி  குளிக்காத தமிழ் பெண்ணை பார்க்கமுடியாது.
3.     அவர்கள் நெற்றியில் தினசரி இடும்  உண்மையான குங்குமும் ,மஞ்சள்லில் இருந்து செய்யப்படுவதே. மஞ்சள் ஆசியாவின் இப்பகுதிக்கே உரியது. உலகின்  80 % சதவிகித மஞ்சள் இந்தியாவில் விளைகிறது .அப்படி இருந்தும் அதன் உரிமையை பறி கொடுக்க இருந்தோம் .
4.     மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது ஒரு மீட்டர்   உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும்.  மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.
5.     இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்மின்ங்என்ற நிறமி இருக்கிறது.
மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,”கர்குமின்’ (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனும்  ஒரு கலவை. . உணவில் சேர்த்து சாப்பிடும் போது,மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறதுபாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.மஞ்சளில் உள்ள கர்குமின்ரசாயனம், உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.  இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம்.
6.     ஜீன்களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது..
மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்துஉண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.அவர்கள்  கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது; இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்துவிட்டோம். மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டது தெரியவந்ததுஎன்று தெரிவித்துள்ளனர் .
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ஆலப்புழை மஞ்சள்உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
7.     சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.  பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.  உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.  இந்திய சமையலில் மஞ்சள் நிரந்தர இடம் பிடித்துள்ளது . மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் வயது  முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய்  மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
8.     மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
9.     மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.
10.  எனவே தினசரி குறைந்த அளவு மஞ்சள் தூள் உணவில் சேர்த்துக்கொள்வது
வயது அதிகமானவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் .
11.  இப்போது புற்று நோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தரப்பயன்படும் மஞ்சள், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய புரதத்தை தடுக்கக் கூடியது என்கிறார்கள்.
லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் விரைப்புற்றுநோய், சருமப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
12.  மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
13.  மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. ரோமங்களையும் நீக்கும் தன்மை மஞ்சளுக்கு  உள்ளதால் மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது. சித்தவைதியத்தில் திரி மஞ்சள் என கூறப்படுகிறது. இது மஞ்சள் ,மர மஞ்சள் கஸ்துரி மஞ்சள் என்பது ஆகும். இது இருவகை உண்டு கப்பு மஞ்சள் மஞ்சள் கிழங்கின் பெரிய பாகங்களை நல்லண்ணெய்ல பக்குவம் செய்வர் .குண்டு மஞ்சள் எனப்படும். இரண்டு கரி மஞ்சள் ,அல்லது விரல் மஞ்சள். சானப்பாளில் வேக வைத்து பக்குவப்படுத்துவது.

14.  நீண்ட காலமாக மஞ்சள் தமிழர் வாழ்வுடன் இயந்து உள்ளதால் இன்னும் ஆயிரக்கணக்கான பயன் பாடுகளை அனுபவப்பூர்வமாக ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது.

சர்க்கரை நோய் சிகிச்சையில் மஞ்சளின் பயன்கள்

தகவல் உதவி: தி இந்து தமிழ், Published: July 18, 2015
டைப்-2 சர்க்கரை நோய் சிகிச்சையில் மஞ்சளில் உள்ள ஒரு பொருள் பயன்படுகிறது என்று இந்திய வம்சாவளி அறிவியலாளர் ஒருவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஞ்சளில் உள்ள கர்கியூமின் (Curcumin) என்ற ஒரு பொருளுடன் ஒமேகா-3 கொழுப்பு சேர்த்துக் கொடுக்கப்படும் போது டைப்-2 சர்க்கரை நோய் உருவாவது தாமதமாகும் அல்லது தடுக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகமிருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டைப்-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலினை நம்பியிராத சர்க்கரை நோயாகும். இது லைஃப் ஸ்டைல் மற்றும் மரபணுக்கூறுகளால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், கணையத்திசுவினுள் தற்காப்பு செல்கள் என்று அழைக்கப்படும் ‘மேக்ரோபேகஸ்’ என்பது நுழைந்து 'சைட்டோகைன்ஸ்' என்ற அழற்சி உருவாக்கும் புரோட்டீன்களை சுரப்பதால் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதப்படுத்தப்படுகிறது என்றும் இதனால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்றும் பல ஆய்வுகள் நிறுவி உள்ளன.

இந்த மேக்ரோபேகஸ் செயல்பாட்டைத் தடுத்தால் டைப் 2 சர்க்கரை நோய் பெருமளவு தடுக்கப்படலாம் என்பது ஆய்வாளர்கள் பலரின் துணிபு ஆகும்.

தற்போது நியுகாசில் நியூட்ராசியூட்டிகல்ஸ் ஆராய்ச்சி குழு, இந்திய வம்சாவளி மருத்துவ ஆய்வாளர் மனோகர் கார்க் தலைமையில் கூடி புதிய ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் மஞ்சளில் உள்ள கர்கியூமின் என்ற பொருளை ஒமேகா-3 என்ற கொழுப்புடன் சேர்த்துக் கொடுத்து 80 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இது குறித்து மனோகர் கார்க் கூறும் போது, “டைப் 2 சர்க்கரை வியாதியின் மூலக்காரணம் உடலில் தானகாவே ஏற்படும் அழற்சிக்கூறுகளாகும். இது இன்சுலின் சுரப்பதை தடுத்து விடுகிறது. இதனால் அழற்சி உருவாக்கத்தை அதன் முளையிலேயே கிள்ளி எறிவது ஒரு வழி.

இதனையடுத்து மஞ்சளில் உள்ள கர்கியூமின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு ஆகிய இரண்டு அழற்சிக்கு எதிரான மருந்துப் பொருளை இணைத்துக் கொடுத்தால் பலன் இருக்கும் என்று கருதினோம். 

மஞ்சளின் மற்ற மருத்துவ குணங்கள் நாம் அறிந்ததே” என்றார்.

மஞ்சளிலிருந்து பெறப்படும் கர்கியூமின் இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். 

“இப்போதெல்லாம் இந்தியாவில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை, காரணம் மேற்கத்திய துரித உணவு வகைகளுக்கு நாம் அதிகம் பழகத் தொடங்கிவிட்டோம். இதனால்தான் டைப் 2 சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகம் ஏற்படுகிறது. இந்தியாவில் இது தற்போது அதிகம் காணப்படுவது என்பது விரைவில் நாட்டின் ஒரு சுகாதாரச் சுமையாகவே மாறும் அபாயம் உள்ளது. 

200மி.கிராம் கர்கியூமின் மற்றும் ஒரு கிராம் ஒமேகா-3 கொழுப்பு கொண்ட கேப்சூல்கள் இந்தச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டது.

கர்கியூமின் மற்றும் ஒமேகா-3-ன் அழற்சி எதிர்ப்புக் குணங்கள் வேறுபட்டது. எனவே இவை இரண்டும் ஒன்றையொன்று பொருத்திக் கொண்டு செயல்படுகிறதா என்பதை சோதித்துப் பார்த்தோம். 

எங்களைப் பொறுத்தவரை இந்த சேர்க்கை மருந்து பாதுகாப்பானது, பக்க விளைவுகள் அற்றது. சர்க்கரை நோயை நிர்வகிப்பதில் பெரும் பயன் இதற்கு இருக்கிறது என்று கருதுகிறோம்” என்றார் மனோகர் கார்க்.

புதன், 14 ஜூன், 2017

நாளென ஒன்றுபோல் காட்டி!

நாளென ஒன்றுபோல் காட்டி! 

- இந்திரா பார்த்தசாரதி

டெல்லியில் நான் இருந்தபோது, மூத்த பத்திரிகை நிருபர் ஒருவரை என் நண்பர் அறிமுகம் செய்துவைத்தார். நிருபர் பெயர் கிஷன் சபர்வால். எல்லைப் புற மாநிலத்தைச் சேர்ந்தவர். நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர். ஜப்பானிய செய்தி நிறுவனத்துக்கு நிருபராக இருந்தார். நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்று நண்பர் சொன்னார்.
அவர் வயதை ஊகிக்க முடியவில்லை. அறுபதும் இருக்கலாம், எண்பதும் இருக்கலாம்.
‘‘எனக்கு என்ன வயது இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?’’ என்று கேட்டார் சபர்வால் சிரித்துக்கொண்டே.
‘‘உங்களுக்கு ‘டெலிபதி’ தெரியுமா?’’ என்றேன் நான்.
‘‘என்னை முதலில் பார்க்கும் எல்லோருடைய மனத்தில் எழும் முதல் கேள்வியே இதுதான். என் வயது ஐந்து’’என்றார் புன்னகையுடன்.
நான் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன்.
‘‘ருடால்ஃப் எஹ்ரன்பர்க் படித்திருக்கிறீர் களா?’’
‘‘இல்லை…’’
சபர்வால் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.
‘‘அவர் ஓர் விஞ்ஞானி. அவர் கருத்தின்படி, ஒருவன் இன்னும் எத்தனை ஆண்டுகள் மற்றவர் களுக்குத் தொந்தரவு கொடுக்காமல், பணியாற்ற முடியும் என்பதை வைத்துதான் அவன் வயதைக் கணக்கிட வேண்டும். இன்னும் ஐந்தாண்டுகள் என்னையே நம்பிப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால்தான், ஐந்து வயது என்றேன். அந்த அளவுக்கு என்னிடம் இன்னும் ஐந்தாண்டு ஆற்றல் எஞ்சியிருக்கிறது!” என்றார் சபர்வால்.
அப்போது எனக்கு அமெரிக்க உளவியல் அறிஞர் கார்ல் யூங் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் எந்த அளவுக்கு அவரால் சாதிக்க இயலும் என்ற துலாக்கோல் இருக்கிறது. அது தன் எல்லையை அடைந்த நிலையில், பிறகு இயக்கமே இருக்காது. அவர் தம் ஆற்றல்கள் முழுவதையும் பயன்படுத்திவிட்டார் என்று அர்த்தம். அப்போதுதான் ஆற்றலின் அல்லது அவர் உடலின் மரணம் சம்பவிக்கிறது.
ஜோசப் தியோடர் கான்ராட் கொர்ஸெனி யோஸ்கி என்ற எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஜோசப் கான்ராட் என்கிற பெயரில் புகழ்பெற்ற இந்த ஆங்கில எழுத்தாளர், போலந்தைச் சேர்ந்தவர். 21 வயது வரை அவருக்கு ஆங்கிலம் சுத்தமாகவே தெரியாது. பிரிட்டிஷ் கப்பல் துறையில் சேர்ந்து உலகம் சுற்றியவர். 35 வயதில் தம் முதல் நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர். பிறகு ‘ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்’, ‘லார்ட் ஜிம்’ போன்ற அற்புதமான நவீனங்களை எழுதினார். ‘நவீனத்துவத்தின் பிதா மகர்’ என்று அவரை அழைப்பது உண்டு. அவர் இறந்துபோவதற்கு முன் 13 ஆண்டுகள் அவர் எழுதவே இல்லை. 67 வயதில் அவர் இறந்தார்.
அவர் இறந்து போவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென்று சுத்தமாக ஆங்கில மொழியை மறந்து, போலிஷ் மொழியில் பேசத் தொடங்கிவிட்டாராம். அவருக்கே, தாம் தம் தாய்மொழியில் பேசுகிறோம் என்கிற நினைவே இல்லையாம். அதாவது, அவர் சிருஷ்டி ஆற்றலின் முழு எல்லையும் சாத்தியமான பிறகு, அவருக்குள் இருந்த படைப்பாளியின் மரணம் சம்பவித்திருக்கின்றது. ஆங்கிலமும் மறந்துவிட்டது. இறுதிக் காலங்களில் எழுதவும் முடியவில்லை.
இந்தப் பின்னணியில்தான் சில மேதைகள் இளமையிலேயே இறந்துபோவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதிசங்கரர், விவேகானந்தர், பாரதி, கணித மேதை ராமா னுஜன், ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் சாதனையின் எல்லையை அடைந்த நிலையில்தான் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
சபர்வால், அவர் சொன்னபடி ஐந்தாண்டுகளும் சில மாதங்கள் கழித்து இறந்தபோதுதான், அவர் குறிப்பிட்ட ருடால்ஃப் எஹ்ரன்பர்க் என் நினைவுக்கு வந்தார். சபர்வால் இறந்தபோது, அவர் காலண்டர் வயது தொண்ணூறு.
மரணத்தைக் கண்டு அஞ்சக் கூடாது என்பதற்காகத்தான் ருடால்ஃப் அப்படிச் சொல்லி யிருப்பாரோ என்று தோன்றுகிறது. ‘காலா என் காலருகே வாடா’என்று சொன்ன பாரதி, 39-வது வயதில் இறந்தார். நம் நாட்டைக் காட்டிலும், மேல் நாடுகளில் மரணத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். காரணம், நம் நாட்டைக் காட்டிலும் அங்கு மனித உயிரின் விலை அதிகம். இந்தியாவில் இப்போது பசுவின் உயிர் விலை, மனித உயிரின் விலையைவிட அதிகம்!
கனடா மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில், ‘மரணமும் இறந்துகொண்டிருத்தலும்’(Death and dying) என்ற ஒரு துறை இருந்தது. அந்தத் துறை மாணவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். நான் அங்கு போயிருந்தபோது, வயதான பெண்மணி ஒருவர் என்னைக் கேட்டார்: ‘‘இந்தியாவில் நீங்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’’
நான் சொன்னேன்: ‘ ‘இந்தியாவில் நாங்கள் மரணத்தை முற்றுப்புள்ளியாகக் கருதுவதில்லை. எங்களுக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால், இறந்துபோன தாத்தாவோ, பாட்டியோ மீண்டும் பிறந்திருக்கிறார் என்று சொல்வது வழக்கம். அதனால்தான் சாவு அச்சுறுத்தும் செய்தியாக எங்களுக்கு இருப்பதில்லை’’ என்றேன்.
அப்போது ஒரு கிழவர் கேட்டார்: ‘‘நான் வாரணாசியைப் பற்றி ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அதில் கங்கை ஆற்றில் பாதி எரிந்தும், பாதி எரியாததுமான உடல்களைக் கங்கை ஆற்றில் தூக்கி எறிகிறார்கள். இதனால், சாவைக் கண்டு நீங்கள் அஞ்சவில்லை என்பது புரிகிறது. ஆனால், ஆற்றை அசுத்தப்படுத்த வேண்டுமென்பது அவசியம்தானா?’’
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது தயங்கினேன்.
என் சங்கடத்தைப் புரிந்துகொண்டவர்போல், இன்னொருவர் கேட்டார்: ‘‘பிறப்பதும் அபத்தம், இறப்பதும் அபத்தம் என்கிறாரே சார்த்ரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’’
‘‘2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கவிஞர் ஒருவர் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்’’ என்றேன் நான்.
‘‘என்ன பேசியிருக்கிறார்?’’
‘‘காலம் என்பது ஒரு கற்பனை. அதை ஒரு மாபெரும் வாளாக நினைத்துப் பாருங்கள். அந்த வாளில், மனித உயிர் ஒவ்வொன்றும், ஒரு நாள் கழிந்தது என்ற பாவனையில் தொடர்ந்து அறுபட்டுக்கொண்டே போகின்றது. பாவனையாக இருந்தாலும், இந்த வாழ்நாள் எல்லைக்குள் தம் ஆற்றலைச் செயல்படுத்தியாக வேண்டும் என்று, எல்லாவற்றையும் உணர்கின்றவர்கள் முயற்சிக்கிறார்கள் என்கிறார் கவிஞர். அபத்தத்தை முறியடிக்கும் வழியும் இதுதான்’’ என்று விளக்கமாகச் சொன்னேன்.
‘‘அந்தக் கவிதையை உங்கள் மொழியில் சொல்லுங்கள்’’ என்று கேட்டார் ஒரு பெண்மணி.
‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்’
- என்று குறளைச் சொன்னேன்.
அவர்கள் குறளை ரசித்திருக்கக்கூடுமென்று எனக்குத் தோன்றியது.

-இந்திரா பார்த்தசாரதி
COMMENT   ·   PRINT   ·   T+  

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...