சனி, 23 அக்டோபர், 2010

கனவுகளின் விளக்கம் 1 – சிக்மன்ட் ஃப்ராய்ட்

லகையே புரட்டிப்போட்ட பத்துப் புத்தகங்களில் ஒன்றான, சிக்மன்ட் ஃப்ராய்டின் "The Interpretation of Dreams" என்னும் நூலின் தமிழாக்கத்தினை எழுத்தாளர் நாகூர் ரூமி அவர்கள் வழங்குகிறார். படித்துப் பயன் அடைவோம்!

முன்னுரை

கனவு காண்பது மனித குலத்திற்கே பொதுவான செயல்பாடுதான் என்றாலும் இஸ்லாம், ஹிந்து மதம், புத்தம், கிறிஸ்தவம் போன்ற உலகப் பெரும் மதங்களில் ஊறி வாழும் மனங்களைக் கொண்ட இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் கனவானது ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடாகிறது. அது ஒரு religious issueஆக கருதப்படுகிறது என்றால் மிகையாகாது.

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற எந்த முக்கியமானதொரு நிகழ்ச்சிக்கு முன்னோ அல்லது பின்னோ நம் வீட்டுப்பெரியவர்கள் அதன் தொடர்பாகக் கனவு கண்டதாகச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். நான்கூட என் தாத்தா இறந்து போவதற்குமுன் என் வீட்டு பீர்க்கங்கொடி பட்டுப்போவதாகக் கனவு கண்டு அதை என் பாட்டியிடம் சொல்ல, அவள் யாரோ இறப்பதற்கான அறிகுறி அது என உணர்ந்து அழுதாள். பிறகு சில நாட்களில் என் தாத்தாவும் இறந்துபோனார்.

ஒரு கனவு கண்டுவிட்டால் அதை நாம் எல்லாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்றும் கனவுகளை சரியாக விளக்குவதற்கென்று தகுதி படைத்த சிலர் உண்டு என்றும் நம்புகிறோம். அப்படி ஒரு சிலருக்கு அத்தகுதிகள் உண்டு என்பது உண்மையோ பொய்யோ, அப்படி நாம் நம்பி அந்த ஒரு சிலரிடம் மட்டுமே விளக்கம் கேட்கிறோம் என்பதே கனவுக்கு நம் வாழ்வில் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும்.

எனவே முக்கியத்துவம் வாய்ந்த நம் கனவுகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது முதலில் அவசியமாகிறது. இதுவரை கனவின் விளக்கங்களாக தமிழ் உலகுக்கு வந்துள்ள எந்த நூலும் இந்த அவசியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக, கனவுக்கு அகராதி போட்டு அதன் அர்த்தத்தைச் சுருக்குவதாகவும் அற்புதமான கனவுகளைக் காண்பதற்குரிய தகுதி பெற்றவராக ஆசிரியர் தன்னைக் காண்பித்துக் கொள்வதாகவும்தான் உள்ளது.

ஆகவே, விளக்கம் அறிவதற்குத் தகுதி உள்ளவரைத் தேடும் அவசியமின்றி, நம்முடைய கனவுகளை அல்லது நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானபூர்வமானதொரு அடிப்படையைத் தருவதும் அந்த அடிப்படையைத் தந்த சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவரான சிக்மன்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) என்ற மேதையை இந்த தொடர்பில் அறிமுகப்படுத்துவதும் இந்த நூலின் நோக்கமாகும்.

அத்தியாயம் – 1

சிக்மன்ட் ஃப்ராய்ட் யார்?

விரல்விட்டு எண்ணக்கூடிய சில தனி மனிதர்களின் சேவைகளுக்கும் சாதனைகளுக்கும்தான் இந்த உலகமே கடமைப்பட்டுள்ளது என்பது வியப்புதரக்கூடிய உண்மையே. அந்த ஒரு சிலரில் சிக்மன்ட் ஃப்ராய்டும் ஒருவர். அவர் ஒரு பெரிய மேதை என்பதனால் மட்டும் நாம் அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் மனித மனம் என்னும் மகத்தான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள செலவிட்டார். அதன் பலனாக அவர் கண்டறிந்த உண்மைகள் இந்த உலகத்தையே உலுக்கின. அதன் சிந்தனைப் போக்கையே மாற்றின. அதுகாறும் மனிதனை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம், இலக்கியம், சமயம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம் போன்றவைகளின் மூலமாக அறிந்துவந்த உலகு, முதன் முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்து கொண்டது.

அதாவது, மனிதன் தன்னைப்பற்றி தனக்கே தெரியாத உண்மைகள அறிந்துகொள்ள ஃப்ராய்டின் கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் உதவின. Psychoanalysis மனஅலசல் முறையை ஃப்ராய்டுதான் முதன் முதலில் உருவாக்கினார். Psychoanalysis என்ற சொல்லைக் கொடுத்தவரே அவர்தான். மனித மனத்தின் செயல்பாடுகளையும் மனதைப் பீடிக்கும் நோய்களையும் கண்டுணரும் முறையாகவும் மருத்துவமாகவும் மனஅலசல் அமைந்தது. அதோடு, ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனத்தையும் அதன் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கலாச்சாரக்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் அது உதவியது.

ஒரு மருத்துவராக, குறிப்பாக நரம்பியல் நிபுணராக, தொழில்செய்த ஃப்ராய்ட் எத்தனையோ புத்தகங்களில் தான் கண்டுபிடித்த உண்மைகளைச் சொல்லியிருந்தாலும் அவருடைய The Interpretation of Dreams, கனவுகளின் விளக்கம், என்னும் நூலே மிகச்சிறந்ததாகவும் உலகத்தை மாற்றிய பத்து நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அதனை சுருக்கமாகத் தருவது ஃப்ராய்டை மட்டுமல்ல நம்மை நாமே தெளிவாகப் புரிந்துகொள்ளவும் நிச்சயம் உதவும்.

வாழ்க்கைக் குறிப்பு

ஃப்ராய்ட் கி.பி. 1856-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி ஃப்ரெய்பெர்க் (Freiberg) என்ற ஊரில், தற்போது செக்கோஸ்லாவேகியாவாக உள்ள மொராவியா ( Moravia) நாட்டில் பிறந்தார். 1859-ம் ஆண்டு அவர் குடும்பம் வியென்னா நகருக்குக் குடிபெயர்ந்தது. வியென்னா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்றார் ஃப்ராய்ட். மனித மூளையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தார். விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மனித மனம் சம்மந்தமான கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தார்.

திருப்புமுனை

1885-ன் இறுதியில் நரம்பு மண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சியைத் தொடர, பாரிஸ் நகரம் சென்றார். பத்தொன்பது வாரங்கள் அங்கு தங்கி ஜீன் மார்ட்டின் ச்சார்காட் (Jean Martin Charcot) என்ற பிரபல மருத்துவரின் கீழ் பணிபுரிந்தார். இது அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஹிஸ்டீரியா நோயாளிகளை ச்சார்காட் அணுகிய முறை ஃப்ராய்டுக்கு ஒரு முற்றிலும் புதிய தீர்வுக்கான விதையைக் கொடுத்தது. உதாரணமாக, உடலுறுப்பு ஒன்று இயங்காமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு ச்சார்காட் ஹிப்னாடிஸம் மூலம் நோய் நீங்கிவிட்டது என்ற கருத்தைத் திணிப்பதன் மூலம் நிவாரணம் உண்டாக்கினார். அதைப்பார்த்த ஃப்ராய்ட், மனித மூளையை நம்புவதைவிட மனித மனத்தின் சக்திகளை ஆராய்வது பயன்தரும் என்று புரிந்து கொண்டார்.

இரண்டு நட்புகள்

பாரிஸிலிருந்து திரும்பி வந்தபிறகு மார்த்தா பெர்னைஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆறு குழந்தைகளைப் பெற்றார். அதில் அன்னா என்ற மகள் அவரைப்போலவே பிற்காலத்தில் மனஅலசல் நிபுணரானார்.

திருமணமான காலகட்டத்தில் வில்எல்ம் ஃப்லீஸ் (Wilhelm Fleiss) என்ற மருத்துவரோடு நட்பு ஏற்பட்டு பதினைந்து வருட காலம் அது தொடர்ந்தது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். மனித உடலில் சில பகுதிகள் பாலுணர்ச்சியை அதிகம் தூண்டக்கூடியவையாக உள்ளன. குழந்தைகளுக்கும் பாலுணர்ச்சி உண்டு என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக இந்த நட்பு வித்திட்டது.

ஜோஸப் பிரவர் ( Joseph Breuer ) என்ற மருத்துவரோடு ஏற்பட்ட நட்பு இன்னும் ஆழமானது. முக்கியமானது. மன அலசல் என்ற முறை கண்டுபிடிக்கப் படுவதற்கே பிரவரின் நட்புதான் காரணமாக இருந்தது.

ஃப்ராய்ட் மனநோயாளிகளுக்கு ச்சார்காட் தந்த ஹிப்னாடிஸ முறையில் வைத்தியம் செய்துகொண்டிருந்தபோது, பிரவர்தான் அன்னா – ஓ என்ற பெண் நோயாளிக்கு வித்தியாசமான முறையில் சிகிச்சையளித்தார். நோயாளியை ரிலாக்;ஸ்டாக உட்கார அல்லது படுக்கச் செய்து, மனதில் வந்ததையெல்லாம் பேசச் செய்தார். மனதில் இருந்த குப்பைகளையெல்லாம் வெளியில் கொட்டிய உடனேயே, சிம்னி விளக்கைத் துடைத்தமாதிரி சுத்தமாகி, நோய் குறையவும் மறையவும் ஆரம்பித்தது. இங்கிருந்துதான், இதன் நீட்சியாகத்தான் ஃப்ராய்ட் தன் free association என்ற சிகிச்சை முறையைத் தொடங்கினார். ஃப்ராய்டும் பிரவரும் இணைந்து Studies in Hysteria என்ற நூலையும் எழுதினர்.

கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி

1897 ஜூலையிலிருந்துதான், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஃப்ராய்ட் கனவுகளைப் பற்றிய தனது ஆராய்ச்சியில் இறங்கினார். பிரபஞ்ச மனத்தை அறிந்துகொள்ள உதவும் ராஜபாட்டை என்று கனவுகளை அவர் வர்ணித்தார். 1899-ல் வெளியான கனவுகளின் விளக்கம் (The Interpretation of Dreams ) என்ற நூல்தான் இவரின் தலைசிறந்த படைப்பு அல்லது பங்களிப்பு என்று அறிஞர் பலராலும் கருதப்படுகிறது.

கனவுகள் யாவும் நனவில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் களமாக, வடிகாலாக அமைகிறது எனவும் அந்த ஆசைகள் பெரும்பாலும் பாலுணர்வு சம்பந்தப் பட்டதாகவே உள்ளன என்றும் கண்டறிந்து கூறினார். ஃபராய்ட் பொதுவாக மனிதனுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் ஆழ்மனதில் கிடக்கும் பாலுணர்வே காரணம் என்று நம்பினார். இது உண்மை என்றாலும் மிகைப்படுத்தப்பட்டது என்பதையும் தனது கொள்கைள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பாடு உணரத்தலைப்பட்டார்.

குறிப்பாக, முதல் உலகப் போரின்போது மனநோய்க்கு ஆளான போர்வீரர்களின் கனவுகளை அவர்களின் குழந்தைப்பருவ பாலுணர்வு அடிப்படையில் விளக்க முடியாததை இங்கு குறிப்பிடலாம். குழந்தைப்பருவ பாலுணர்வே – infantile sexuality – மனிதனின் ஒட்டுமொத்த குணாம்சத்துக்கும் காரணம் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி, மற்ற உணர்வுகளும் மனிதனை குறிப்பிட்ட குணாம்சங்களுள்ளவனாக மாற்ற வல்லவை என்பதை அவர் 1920 க்குப் பிறகு புரிந்துகொண்டார் என்பதை அவருடைய பிற்கால எழுத்துக்கள் காட்டும்.

1904-ல் வெளியான The Psychopathology of Everyday Life என்ற நூல் நம் அன்றாட வாழ்வில் நிகழும் மறந்துபோதல், வார்த்தைகளைத் தவறாகச் சொல்லுதல், மாற்றிச் சொல்லுதல் போன்றவற்றின் பின்னணியில் மறைந்து கிடக்கும் மனநோய்களைப் பற்றியது.

1905-ல் வெளியான Jokes and their Relation to the Unconscious என்ற நூல், நகைச்சுவையின் பின்னால் மறைந்துள்ள சோகத்தை, பிரச்சனைகளைப் பற்றியது.

இதே வருடம் வெளியான Three Essays on the Theory of Sexuality என்ற நூல் இவரை ஒரு பாலியல் மருத்துவ நிபுணராக நிர்மாணித்தது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, மனநோயாளியாக மாறுவதற்கும் சரி, பாலியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளே காரணம் என்று ஃப்ராய்ட் கருதினார். குழந்தை தாயின் தனங்களில் பாலருந்துவதற்கும் தாய், பால் கொடுப்பதற்கும்கூட பசியோ பாசமோ காரணமல்ல, பாலுணர்வே அடிப்படைக் காரணம் என்று விளக்கினார் என்றால் பார்த்துக் கொள்ள வேண்டும் ! இந்த கருத்தை பின்னாளில் எரிக் ஃப்ரம் (Erich Fromm) போன்ற சமூகவியலாளர்கள் மிகக்கடுமையாக விமர்சித்து ஆதாரபூர்வமாக மறுத்துள்ளனர்.

1920 களில்; வெளிவந்த அவருடைய புத்தகங்களான டீநலழனெ வாந Beyond the Pleasure Principle மற்றும் Ego and the Id ஆகியவை பாலுணர்வு என்ற வட்டத்திலிருந்து அவர் வெளிவர யத்தனித்ததைச் சுட்டும்.

இதில் வேடிக்கை என்னவெனில், மனித மனத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து பிட்டுப்பிட்டு வைத்தவர்தான் ஃப்ராய்ட் என்றாலும் அவர் ஆராய்ந்த அத்தனை மனங்களுமே மனநோயாளிகளுடைய நோயுற்ற மனங்கள் ! அத்தகைய மனங்களிலிருந்து ஆரோக்கியமான உண்மைகள் கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

ஃப்ராய்ட் 1939-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி இந்த உலகைவிட்டு மறைந்தார். எனினும் கனவுகள் உள்ளவரை, கனவு காண்கின்ற கடைசி மனிதன் உள்ளவரை அவர் ஃபீனிக்ஸ் பறவையைப்போல உயிர்த்து எழுந்து கொண்டேயிருப்பார்.

ஃப்ராய்டின் கோட்பாடுகளில் தவறு உள்ளது என்பது பின்னால் நிரூபிக்கப் பட்டாலும், கனவு பற்றி விஞ்ஞானபூர்வமாக அறிந்து கொள்ள ஃப்ராய்டின் சிந்தனையை பரிச்சயம் கொள்வது முதலில் அவசியம். அதற்கு சிறந்;த வழி அவருடைய எழுத்தைப் படிப்பதுதான். உலகத்தை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்றான சிக்மன்ட் ஃப்ராய்ட் எழுதிய வுhந ஐவெநசிசநவயவழைn ழக னுசநயஅள என்ற நூலின் சாறு இனி வரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக்குடித்துவிட்டால், இனி கனவு கண்டு பயந்து எழ வேண்டிய அவசியமிருக்காது.

அத்தியாயம் – 2

கனவைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள்

வரலாற்றுக்கு முந்திய கருத்தும் கனவின் சில குணாம்சங்களும்

கனவைப் பற்றிய தனது ஆராய்ச்சியை ஃப்ராய்டு திடீரென்று ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்கிவிடவில்லை. தனக்கு முந்திய ஆராய்ச்சிகளையெல்லாம் படித்து அலசி கரைத்துக் குடித்துவிட்டுத்தான் அவர் தனக்கான சில முடிவுகளுக்கு வருகிறார். அடிக்கடி Wundt , Hildebrandt , Maury , Jessen , Radestock , Krauss , Strumpell , Kant போன்ற உளவியலாளர்கள், மருத்துவர்கள், தத்துவவாதிகள் போன்றோரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவார். கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அந்த ஆராய்ச்சிகள் பற்றிய அறிவு இன்றியமையாதவை. எனவே அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறோம். அதோடு, இந்த நூல் முழுவதும் பேசுவது ஃப்ராய்டுதான் என்றாலும் அங்கங்கே அழுத்தம்கொடுக்க வேண்டி அவ்வப்போது அவரே பேசுவதாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அதற்கு அர்த்தம் மற்றவையெல்லாம் அவர் சொல்லாதது என்பதல்ல.

இன்றல்ல நேற்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கனவுகளைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறான். ஆனால் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்த அணுகுமுறை மிகச்சமீபத்தியதே.

அரிஸ்டாட்டிலுக்கு முந்திய காலத்தில் கனவுகள் தெய்வீக அறிவிப்பு என்றும் தீர்க்கதரிசி ஆபிரஹாமுக்கு மகனை வெட்டி பலி கொடுக்க வேண்டுமென்று இறைவன் கனவில் கட்டளை பிறப்பித்ததைப் போன்ற நேரடி தீர்க்க தரிசனங்கள் என்றும் மேலும் வருங்காலத்தை முன்னறிவிக்க வல்லவை என்றும் கருதப்பட்டு வந்தன.

தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியமேற்படவில்லை.

எனினும் இந்த காலகட்டத்தில் சிற்சில உண்மைகள் அறியப்பட்டன. சின்ன வி;களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதன் கனவுகளிடம் இருந்துதான் கற்றுக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவு மிகைப்படுத்திக் காட்டும் தன்மையுடையது என்பதையும் நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியக் குறைவை அது அறிவிக்கும் எனவும், கனவானது தூக்க நிலையின் சிந்தனை என்பதாகவும் கிரேக்கத் தத்துவவாதி அரிஸ்டாட்டில் சரியாக அறிந்து வைத்திருந்தார்.கனவுகளைப் பற்றிப் பேசும் அவருடை இரண்டு புத்தகங்கள் மூலமாக இந்த தகவலை நாம் பெறுகிறோம். தீ மிதியில் கலந்து கொள்வதாக கனவு வரும். உண்மையில் உறங்கிக் கொண்டிருந்தவரின்; பக்கத்தில் யாராவது டார்டாய்ஸ் – சரி, மெழுகுவர்த்தி – ஏற்றி வைத்திருப்பர். அவ்வளவுதான்.

கனவுகள் வேறொரு உலகத்திலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன என்பதை தூங்கி விழித்த – தூங்கி வழிந்த அல்ல – அனைவருமே ஒத்துக்கொள்வர்.

கனவு நமது நனவு வாழ்வைக் காட்டுவதில்லை. நம்மை நனவு வாழ்விலிருந்து விடுவிப்பதே கனவின் நோக்கமாக உள்ளது. நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சனையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாக கனவு உள்ளது என்று டாக்டர் பர்டாக் ((Burdach) கூறுகிறார்.இதே கருத்தை பல ஆராய்சியாளர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததுதான் கனவில் வருகின்றன என்ற கருத்தை மோரி முன் வைக்கிறார். கனவு காண்பவரின் வயது, வாழ்முறை, அனுபவம், அவர் ஆணா பெண்ணா போன்றவைதான் கனவின் உள்விஷயங்;களைத் தீர்மானிக்கின்றன என்று ஜெஸ்ஸன் என்ற உளவியலாளர் கூறுகிறார்.

கனவானது நனவு வாழ்வோடு சம்பந்தப் பட்டிருந்தாலும் நனவு வாழ்வுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத விஷயங்களையும் காட்ட வல்லது என்று ஹில்டெப்ரான் கூறுகிறார். உதாரணமாக, செயின்ட் ஹெலினா தீவுக்கு கடற்பயணம் செய்து அங்கு சிறைக் கைதியாக இருக்கும் நெப்போலியனைச் சந்தித்து மதுவகைகளை அவனுக்கு அளிப்பதாக கனவு காணும் ஒருவன் நிஜவாழ்வில் நெப்போலியனை வெறுக்கக்கூடியவனாக, மதுவோடு சம்பந்தப் படாதவனாக, நெப்போலியன் இறந்த பிறகே பிறந்தவனாக இருக்கக்கூடிய வாய்ப்புண்டு.

பெரும் புதிராக உள்ள இந்த கனவு என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? காரணிகள் எவை? போன்ற கேள்விகளுக்கு விஞ்ஞானம் விடை காண முற்பட்டபோது கனவின் பல குணாம்சங்களைப் பற்றியும் அதன் விளைவாக அல்லது வழியாக மனித மனத்தின் இயக்கத்தைப் பற்றியும், ஆழத்தில் அமுங்கிக் கிடக்கும் ஆசைகளைப் பற்றியும் ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.

கனவின் குணாம்சங்களை அறிந்து கொள்ளும்போது கனவு மெல்ல மெல்ல தானே விளங்க ஆரம்பித்துவிடும். அதற்குமுன் சில பிரயோகங்களையும் (terms) எந்த அர்த்தத்தில் அவை இந்த நூலில் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றும் பார்க்க வேண்டியது அவசியம்.

1.குறியீடு(Symbol)

ஒன்றை மற்றொன்றால் குறிப்பது. அந்த மற்றொன்றே குறியீடு. ரோஜா என்றால் அது மென்மை, அழகு போன்றவற்றிற்குக் குறியீடு. அதேபோல் நெருப்பு என்றால் அது அழிவு, காமம், நிலையாமை இவற்றிற்குக் குறியீடு. இவற்றில் இரண்டுவகைக் குறியீடுகள் உண்டு. ஒன்று எல்லாக் காலத்துக்கும், நாட்டுக்கும் பொதுவான பிரபஞ்சக் குறியீடு (Universal Symbol). பிரபஞ்சக் குறியீடு யார் கனவில் வந்தாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான். மேற்கூறிய ரோஜா அல்லது நெருப்பு அதற்கு உதாரணம். மற்றொன்று தனிக்குறியீடு (Accidental Symbol). அதாவது தனி ஒரு மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக அர்த்தம் தருகின்ற குறியீடு. உதாரணமாக நாம் ஏதாவது ஒரு ஊருக்குப் போயிருக்கும்போது ஒரு துயரமான சம்பவம் ஏற்பட்டு விட்டால், பின்னால் அந்த ஊரின் பெயர் சொல்லப்படும் போதெல்லாம் நமக்கு அது ஒரு துக்க உணர்வை ஏற்படுத்தும். அந்த ஊரின் பெயர் நமக்கு துக்கத்தின் குறியீடு. ஆனால் எல்லோருக்கும் இது இந்த அர்த்தம் தராது. இது தனிக்குறியீடு.

2. வெளி விஷயம் ( Manifest Contest )

கனவில் வரும் காட்சி அல்லது காட்சிகளை வெளி விஷயம் என்று கொள்வோம். வெளி விஷயம் கனவின் அர்த்தம் அல்ல. உதாரணமாக வடதுருவக் குளிரில் நாம் விறைத்துக் கொண்டிருப்பதாக காட்சி வந்தால் அதன் அர்த்தம் நம்மீது யாரோ ஐஸ் கட்டியைப் போடுகிறார்கள் என்பதாக இருக்கலாம்.

3.உள் விஷயம் ( Latent Content )

கனவுக் காட்சிகள் மூலம் கனவு நமக்கு உணர்த்த வரும் விஷயம், கொண்டு வரும் செய்த, கொண்டிருக்கும் அர்த்தம். இவைகளை உள் விஷயம் என்று கொள்வோம்.

4.ஆழ்மனம் ( The Unconscious )

மனிதனின் மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1) வெளி மனம் (வுhந ஊழளெஉழைரள). அதாவது நமது பிரக்ஞை செயல்படுகின்ற பகுதி. 2) உள் மனம் (வுhந ளுரடிஉழளெஉழைரள). 3) பிரபஞ்ச மனம் அல்லது ஆழ் மனம் (வுhந ருnஉழளெஉழைரள). உள் மனமும் பிரபஞ்ச மனமும் மனிதனின் பிரக்ஞை நிலைக்கு அப்பாற் பட்டவை. இவைகளின் பிரிவின் நுணுக்கம் நமக்கு இப்போது அவசியமில்லை. கனவைப் பற்றிய தொடர்பில் பிரபஞ்ச மனம் என்று சொல்வது குழப்பத்தைத் தோற்றுவிக்குமாகையால் இதை ஆழ் மனம் என்று குறிப்போம். கனவின் குணாம்சங்களைப் பார்க்கும்போது, தேவையான இடங்களில் உதாரணங்களோடும் மிக முக்கியமானவைகளை தனித்தனியே பகுதிகளாகவும் பார்க்கலாம்.

5.கனவெண்ணம் ( Dream thought )

கனவை உருவாக்குகின்ற எண்ணம் அல்லது எண்ணங்கள்.

கனவின் குணாம்சங்கள்

விளக்கப் படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது என்றொரு முதுமொழி உண்டு. இது கவனிக்கத்தக்கது. கடிதம் ஒரு செய்தியைக் கொண்டுவருகிறது. அதேபோல கனவும் ஒரு செய்தியைச் சொல்லுகிறது. கடிதத்தைத் திறந்தால்தான் செய்தியைப் படிக்க முடியும். கனவை விளக்கினால்தான் அர்த்தம் புரியும். எனவே கனவு என்பது நமக்கு நாமே அனுப்பிக் கொள்ளும் கடிதம் அல்லது செய்தி. அது நாம் தூங்கும்போது நடக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்பாடு. காட்சி வடிவ சிந்தனை. அதன் குணங்களை அறிந்துகொள்வதற்கும் இதனை மனதில் நிறுத்திக்கொள்ளுதல் அவசியம்.

குணாம்சங்கள்

1. கனவு தானாக எதையும் சொல்வதில்லை. நம் நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்தே அது காட்சிகளை அமைக்கிறது. இதில் எவ்வித சந்தேகமுமில்லை. நமது விழிப்புநிலை அனுபவங்கள் கனவில் நினைவுகொள்ளப்படுகின்றன. அல்லது மறுஉயிர்ப்பு செய்யப்படுகின்றன. ஆனால் கனவுக்கும் நனவுக்கும் உள்ள தொடர்பை நாம் புரிந்து கொள்வது கடினம். நனவில் நாம் அறவே மறந்துவிட்டிருக்கிற, நினைவில் கொண்டுவரமுடியாத விஷயங்களை கனவு துல்லியமாக ஞாபகப் படுத்துகின்ற தகுதி பெற்றது. உதாரணமாக, நாம் நனவு வாழ்வில் எப்போதோ பரிச்சயம்கொண்ட அந்நிய மொழியை, நனவில் பேசியதைவிட சரளமாகவும் சரியாகவும் கனவில் பேசுவதைக் கூறலாம். விழிப்பில் இப்படிப்பட்ட வி; என் பிரக்ஞையில் கிடையவே கிடையாது என்று சாதிக்கின்ற அளவுக்கு மறந்து விட்டிருப்பவைகளை நினைவுகூர்கின்ற கனவுகளை ஹைபர்னீஸிக் ( hypermnesic ) கனவுகள் என்று உளவியலாளர் கூறுகின்றனர்.எனவே

2. கனவுக்கு அபார ஞாபக சக்தி உண்டு

3. கனவின் தெரிவு : கனவு, தான் நினைவுகூறத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விஷயம் அல்லது அனுபவம் நம் நனவு வாழ்வில் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, நம்மை மிகவும் பாதித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம்கூட முக்கியத்துவமற்றதுகூட கனவில் வரலாம். நமது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு, அதனால் மிகவும் பாதிக்கப்பட்டு, அதையே நினைத்துக்கொண்டு உறங்கினாலும், வரும் கனவு, அதை விட்டுவிட்டு, நாம் என்றோ ஒருநாள் தெருவில் சென்றபோது நம்மை எதிர்கொண்ட ஒருவரின் முகத்திலிருந்த, நாம் கவனிக்காது விட்ட, தழும்பை நினைவுகூறலாம். நமது பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞை அற்றோ, நமது மூளையில் பதிவான எதையும் நம் நினைவிலிருந்து நாம் நிரந்தரமாக இழப்பது கிடையாது என்பது இதிலிருந்து விளங்கும்.

4. பொதுவாக நமக்கு சாதாரணமாக வரும் கனவுகளின் மூலம் ( the source of normal dreams ) கனவு காண்பதற்கு முந்திய நாள் அல்லது அதற்கு முந்திய நாள் நிகழ்ச்சியாக இருக்கும். அதாவது மிகச்சமீபத்திய நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்திப் பார்ப்பது, கனவைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

5. எல்லாக் கனவுகளுமே பெரும்பாலும் குறியீட்டுத் தன்மை கொண்டவை. கனவின் காட்சிகளே குறியீடுகள். நம் நனவு வாழ்வின் அனுபவ உணர்வுகளை கனவுகள் அப்படியே காட்டுவதில்லை. எனவேதான் கனவுகளை விளக்க வேண்டிய அவசியமேற்படுகிறது. கனவின் காட்சிகள் பெரும்பாலும் தனிக்குறியீடுகளாகவே இருக்கும். கனவு கண்டவனின் வாழ்க்கைப் பின்னணியை நாம் அறியாவிட்டால் கனவெண்ணங்களை அறியமுடியாது. எனவே கனவுகள் குறியீட்டுத்தன்மை கொண்டவை அல்லது சங்கேத மொழி பேசுபவை அல்லது உள் விஷயம் கொண்டவை என்று அறியலாம். கனவின் வெளி விஷயம் , குறியீடு அல்லது குறியீடுகளாகும்.

உதாரணமாக, நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விட்டுவிடுவதாக கனவுகாண்பதாக வைத்துக்கொள்வோம். ரயில், அதற்காக நாம் ஓடிவருதல், ஆனால் ரயில் புறப்பட்டு விடுதல் ஆகியன காட்சிகள் அல்லது குறியீடுகள் அல்லது கனவின் வெளி விஷயம். இக்கனவு மரணத்தைப் பற்றிpய நமது பயத்தை வெளிப்படுத்துகிறது. மறைமுகமாக. என்றைக்காவது ஒருநாள் சாவோம் என்ற உண்மை தெரிந்திருந்தாலும் குறைந்த பட்சம் இப்போது வேண்டாம் என்றே நாம் நினைப்போம். இக்கனவின்படி நாம் ரயிலை விட்டுவிட்டோம். அதாவது நாம் புறப்படவில்லை. நமக்கு இப்போது புறப்பாடு, அதாவது மரணம், இல்லை. நீ இப்போது சாகமாட்டாய் என்று கனவு கூறுகிறது. புறப்பாடு என்ற வார்த்தை இறப்பைக் குறிக்கும் பிரபஞ்சக் குறியீடு. கனவில் ரயிலும் நம்மைவிட்டுவிட்டுப் புறப்படுவதும் நமக்கு மரணம் அப்போது இல்லை என்பதன் குறியீடுகள்.

கனவுகள் குறியீட்டுத்தன்மை கொண்டவை என்ற அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் கனவுகளை விளக்கவே முடியாது. அதோடு, ஒரு கனவை விளக்க, பிரபஞ்சக் குறியீடுகள் பற்றிய அறிவையும் நாம் கருதத்தக்க அளவு பெற்றிருத்தல் அவசியம்.

6. கனவுகள் நம்முடைய வாழ்வில் தனித்தனியே பார்க்கும்போது சம்பந்தமற்ற பல விஷயங்களை ஏதோ ஒரு தொடர்பின் அடிப்படையில் ஒன்றுசேர்த்து காட்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. ( A dream works in association ). உதாரணமாக மேற்கூறிய கனவையே எடுத்துக் கொள்ளலாம். ரயிலுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ரயில் என்பது புறப்படும். புறப்பாடு மரணத்தைச் சுட்டும். புறப்படுகின்ற எந்த வாகனத்தையும் மரணத்தின் குறியீடாக அது காட்டலாம். இன்ன மனிதருடைய கனவில் கனவு ஏன் மரணத்தின் குறியீடாக ரயிலைத் தேர்ந்தெடுத்தது? மற்ற வாகனங்கள் ஏன் வரக்கூடாது? போன்ற கேள்விகளுக்கு குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் பின்புலத்தை அறிந்தால்தான் விடை கிடைக்கும்.

7. ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ் மனத்திலிருக்கும் விருப்பமொன்று நிறைவேறி விட்டதாகக் காட்டும். அது பெரும்பாலும் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று ஃப்ராய்ட் கூறுகிறார். கனவைப் பற்றிய அவருடைய ஆராய்ச்சியில் மிகமுக்கியமான அம்சம் கனவு நமது விருப்பம் நிறைவேற்றுவதாகக் காட்டும் தன்மை கொண்டது என்பது. ( A dream is the fulfillment of a wish ) இந்த விருப்பம் பெரும்பாலும் நம் குழந்தைப் பருவத்திலிருந்து அமுக்கப்பட்ட ஒன்றாக ( repressed ) இருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட ரயிலைத்தவற விடும் கனவிலேயே இந்த விருப்ப நிறைவேற்றம் என்ற அம்சத்தைக் காணலாம். நாம் இப்போது சாகக்கூடாது என்ற விருப்பமே இப்போது நீ புறப்படவில்லை என்பதாக, விருப்பம் நிறைவேறிவிடுவதாக, காலன் என்ற ரயில் இவனை விட்டுவிட்டுப் போய்விடுவதாக, கனவில் வருகிறது.

ஃப்ராய்டின் நண்பர் ஒருவர் அவரிடம் தனது மனைவி மாதவிடாய் வருவதாகக் கனவு கண்டதாகக் கூறுகிறார். அப்படியானால் உண்மையிலேயே மாதவிடாய் வரவில்லை எனவும் அதாவது அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள் எனவும் ஃப்ராய்ட் விளக்கம் தருகிறார். அதாவது விடாய் வராதால், வரவேண்டும் என்ற விருப்பம் அவள் கனவில் நிறைவேறியுள்ளது.

இப்படிப்பட்ட விருப்பம் நிறைவேற்றும் கனவுகள் பெரியவர்களுக்கு வரும்போது அது அவர்கள் ஆழ் மனத்தில் அமுக்கப்பட்டுக் கிடந்த விருப்பமாகவும், குழந்தைகளுக்கு வரும்பொழுது, அது அவர்கள் நனவு வாழ்வில் நிறைவேற்றப்படாத சின்னச் சின்ன ஆசைகளாகவும் இருக்கும்.

8. கனவு குழந்தைப் பருவ விருப்பங்களை நினைவு கூறும். அவ்விருப்பங்கள் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.

9. கனவுகள் பாலுணர்ச்சியை உணர்த்தும். மறைமுகமாகவோ, பிரபஞ்சக் குறியீடுகள் மூலமாகவோ, தனிக்குறியீடு மூலமாகவோ அல்லது வெளிப்படையாகவோ. அது நமது குழந்தைப்பருவ ஆழ்மன விருப்பமாகவும் இருக்கலாம்.

10. கனவின் காட்சிகள் கனவெண்ணங்களின் நம்பகமான படப்பிடிப்பல்ல. அவைகளை பல வகைகளிலும் சுருக்கியும் சிதைத்துமே கனவு காட்சிகளாக்குகிறது. எந்த முழுமையான கனவிலும் இடைவெளிகள் உண்டு. பல கனவெண்ணங்களை கனவு சென்சார் செய்து விட்டுவிடுவதன் மூலம் கனவுகள் துண்டுதுண்டாகத் தொடர்பற்றவைபோல் தோன்றுகின்றன. கனவை விளக்குவது இதனாலும் கடினமாகிறது. எனவே கனவென்பது ஒரு சுருக்க நிகழ்வு.( It is a work of condensation ).

11. கனவு ஒரு கழிவாகவும் பயன்படுகிறது. கனவு ஏன் வருகிறது, அதன் நோக்கம் என்ன என்பது பற்றிய ராபர்ட் என்பவரின் ஆராய்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. நாம் பெரும்பாலும் நம் நனவு வாழ்வில் எந்த முக்கியத்துவமும் கொடுத்து கவனத்தில் வைத்துக்கொள்ளாத அற்பமான விஷயங்களைப் பற்றியே அதிகமாக கனவுகாண்கிறோம். இதனாலும் கனவை விளக்குவது கடினமான காரியமாகிறது. மேலும் கனவுகாணத் தகுதியில்லாத ஒரு மனிதன் காலப்போக்கில் பைத்தியமாகிவிடலாம். மூளை ஏற்கனவே நம்மை மிகவும் பாதித்த, சிந்தனை செய்த எண்ணங்களின் சுமையால் அழுத்தப்பட்டுள்ளது. இச்சமயம் சம்மந்தமில்லாத அற்ப வி;களும் மூட்டையாகச் சேர்ந்து விட்டால் மூளை குழம்பி பைத்தியம்தான் பிடிக்கும். எனவேதான் கனவு நம் மூளை பதிவு செய்த தினசரி அற்பங்களின் சுமையிலிருந்து கனவுக்காட்சிகள் மூலம் நம் சுமையைக் குறைக்கிறது. அந்த அற்ப விஷயங்களை வெளியேற்றிவிடுகிறது. கனவின் நோக்கம், செயல்பாடு இதாகிறது என்கிறார்.

12. கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். கனவை உருவாக்குகின்ற கனவெண்ணங்களில் ஏதாவதொன்று எதையாவது விமர்சனம் அல்லது கிண்டல் செய்கின்ற நோக்கம் கொண்டிருக்குமானால் கனவு அபத்தமானதாக இருக்கும். ஒரு முரண்பாட்டை எடுத்துச் சொல்ல வரும் கனவும் அபத்தமானதாகவே இருக்கும். ரொம்பவும் அபத்தமாகத் தோன்றுகின்ற கனவுகள் மிகவும் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கலாம். எனவே கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படியிருப்பதில்லை. கனவெண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாதவரை.

13. கனவுகள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை வாய்ந்தவை. இக்கருத்து தவறானதென்று வாதிடுவதற்கில்லை. இயற்கை உளவியலில் இதற்கு விளக்கம் காண முடியும் என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.

இக்குணாம்சங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. ஒன்றை விளக்கும்போது மற்றொன்று தெளிவாகலாம். கனவின் குணாம்சங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பே இது. இவ்வளவுதான் என்று சொல்வதற்கில்லை. மேலும் முக்கியமான தன்மைகளை தனித்தனியாக சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கனவை உருவாக்குவது எது?

நாம் தூங்கும்போது நம் தூக்கம் பாதிக்கப்பட்டால், அதற்கு பதில்போல, ஒரு எதிர்ச்செயல்பாடாக கனவு இருக்கிறது. அஜீரணக் கோளாறினாலேயே கனவு ஏற்படுகிறது என்ற முதுமொழியை இங்கே பொருத்திப்பார்க்கலாம்.

கனவுகள் தெய்வத்தின் விருப்பம் கொண்டு உருவாவது என்ற நம்பிய நம் மூதாதையர்கள் அதன் காரணிகள் யாவை என அறியும் முயற்சியில் ஈடுபடவில்லை. கனவு ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்துவிட்டது. எனவே அது விஞ்ஞானத்தின் பிரச்சனையாயிற்று. பல சந்தேகங்கள், ஆராய்ச்சிகளுக்குப்பின், கனவு உண்டாவதற்கு பல வகைப்பட்ட காரணங்கள் உண்டு எனவும், அது உளவியல் ரீதியாகவுமிருக்கலாம், உடலியல் ரீதியாகவுமிருக்கலாம் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்தது. உடல் ரீதியாக கனவைத் தூண்டுபவைகளில் புறஉணர்வுத் தூண்டுதல் மற்றும் உள்ளுறுப்பு உணர்வுத் தூண்டுதல் ஆகியவை பற்றி சற்று விரிவாக பார்க்க வேண்டியது அவசியம்.

புற உணர்வுத்தூண்டுதல் ((External Sensory Stimuli)

1883 – 84 வாக்கில் ஸ்ட்ரம்ப்பெல் என்ற மருத்துவர் அனஸ்தீஸியா எனப்படும் உணர்வற்ற தன்மையினால் பாதிக்கப்பட்ட தன் நோயாளி ஒருவரைப் பற்றிய குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அந்த நோயாளியின் முக்கியமான சில, புற உலகிற்குத் திறந்திருக்கிற, உணர்வு உறுப்புக்களை மூடிவிட்டால் அவர் தூங்கிவிடுவாராம் என்று குறிப்பிடுகின்றார். உதாரணமாக வாயையும் செவிகளையும் மூடிவிடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அவர் தூங்கிவிடுவார்.

கேட்பதற்கு விந்தையாக இருக்கும் இது நாமும் நம்மை அறியாமல் பின்பற்றுவதுதான். திட்டமிட்டு அதை நாம் செய்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமலிருக்கிறோம். அவ்வளவுதான். இது தவிர வித்தியாசம் எதுவுமில்லை நமக்கும் அந்த நோயாளிக்கும். நம்மால் உணர்வு உறுப்புகளுக்கு உணர்வுத்தூண்டுதல் முழுமையாகச் செல்லாமல் தடுக்கவோ, உணர்வு உறுகின்ற தன்மையை அந்த உறுப்புகளிலிருந்து பிரித்துவைக்கவோ முடியாது. ஸ்ட்ரம்ப்பெல்லின் பரிசோதனையை நாமும் தினம் தினம் நம்மையறியாமல் செய்து பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். நாம் உறங்கச்செல்லும்போது என்ன செய்கிறோம்? மிக முக்கிய உணர்வு உறுப்புகளாகிய கண்களை மூடிக்கொள்கிறோம் அல்லவா?

என்றாலும் சக்தி வாய்ந்த எந்த உணர்வும் நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முடியும். உறக்கத்தில் நம்மை வந்தடைகின்ற அந்த தூண்டுதலே நம் கனவுகளுக்குக் காரணிகளாக அமையமுடியும். ஜெஸ்ஸன் என்பவர் இவ்வகையான புற உணர்வுத் தூண்டுதல்கள் மூலம் உண்டாகும் கனவுகளைப் பற்றிய சிறு பட்டியலைத் தருகிறார். அவர் கூறுகிறார் :

நம்மை தூக்கத்தில் வந்தடைகின்ற ஒவ்வொரு உணர்வும் அதற்குத் தொடர்புள்ள கனவுப் படிமங்களை அல்லது காட்சிகளை உருவாக்குகிறது. இடியின் சப்தம் நம்மை போர்க்களத்தின் நடுவே நிறுத்தலாம். சேவல் கூவினால் பயங்கரமாக ஒரு மனிதன் அலறலாம். கதவு கிறீச்சிட்டால் திருடர்கள் வரலாம் கனவில். நம் படுக்கைத்துணி இரவில் கீழே விழுந்து விட்டால் நாம் நிர்வாணமாக நடக்கலாம் அல்லது தண்ணீரில் விழலாம். நம் தலையணைக்குக் கீழ் தலை போய்விட்டால் கனவில் ஒரு பெரிய பாறைக்குக்கீழ் தலை நசுங்கலாம். விந்து பெருகிவிட்டால் காமாந்தகக் கனவுகள் வரலாம். சுடு தண்ணீரில் கால்களை வைத்துக்கொண்டிருந்த ஒருவர் தான் எட்னா என்ற எரிமலையின் மீது ஏறிவிட்டதாகவும் அதன் தகிப்பையும் கனவில் உணர்ந்தாராம். தலையைத் திறந்து கொண்டு உறங்கிய ஒருவருக்கு அவர் ஒரு மார்க்கச் சடங்கில் திறந்த தலையுடன் கலந்து கொள்வதாகக் கனவு வந்ததாம். நமக்கு திருப்பதிக்குப்போய் மொட்டையடித்துக் கொண்டு வருவதாகவோ அல்லது அரஃபாத் மைதானத்தில் மொட்டைத்தலையுடன் செல்வதாகவோ கனவு வரலாம்.

மோரி என்ற ஃப்ரெஞ்சுக்காரர் கனவுகளைப் பற்றி பல பரிசோதனைகள் நடத்தியவர். அவர் கண்ட இரண்டு பிரபலமான கனவுகளை இங்கு சொல்வது பொருந்தும்.

அவர் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் நெற்றியில் ஒரு துளி நீர் விடப்பட்டது. உடனே அவர் தான் இத்தாலியில் இருப்பதாகவும் பயங்கரமாக வியர்த்துக் கொட்டுவதாகவும் ஆர்விடோ எனும் வெள்ளைநிற மதுபானம் அருந்திக்கொண்டிருப்பதாகவும் கனவு கண்டார்.

இன்னொரு கனவில் அவர் உடல்நலமில்லாமல் படுத்திருக்கிறார். அவரது தாயாரும் பக்கத்தில் உள்ளார். அது நெப்போலியனின் பயங்கர ஆட்சிக்காலம். பலபேர் கொலைசெய்யப்படுகின்ற காட்சியை தானே பார்க்க நேரிடுகிறது. கடைசியில் இவரையும் கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்கிறார்கள். கில்லட்டின் என்று சொல்லப்படும் கொலைக்கருவியின் கீழ் இவர் தலை பலவந்தமாக வைக்கப்படுகிறது. தன் தலை தன் உடலிலிருந்து துண்டிக்கப்படுவதை அவர் காண்கிறார்.

மிகுந்த வேதனையுடன் அவர் விழித்தபோது தன் படுக்கையின் தலைமாட்டுப் பக்கம் கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்டிருந்ததாம். பரிசோதனைக்குப்பின் ஒரு கில்லட்டினின் கூர்மையான தகடுகள் தலையில் விழுந்திருந்தால் எப்படியிருக்குமோ அதே விதத்தில் அவர் தலையில் அடிபட்டு நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தனவாம்.

கனவுக்கான மூலக்காரணிகளுள் புற உணர்வுத் தூண்டுதலே மிகவும் நிச்சயப்படுத்தப்பட்டதாகும் என்று இம்மாதிரயான உதாரணங்கள் மூலம் அறிய முடிகிறது. நனவு வாழ்வில் பல வரு;கள் அல்லது பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம் எப்படி கனவில் சில நிமி;களாக அல்லது வினாடிகளாக சுருங்கிவிடுகின்றன என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. அதோடு, புறஉணர்வுத் தூண்டுதலால் வரும் கனவுகளில் தூண்டிய உணர்வுகள் அதே வடிவங்களில் வருவதில்லை. தொடர்புள்ள வௌ;வேறு வடிவங்கள் மூலம் நமக்கு உணர்த்தப்படும்.

அதோடு இன்ன புறஉணர்வுத் தூண்டுதலுக்கு இன்ன தொடர்புள்ள காட்சிதான் வரும் என்பதில்லை. ஒரே உணர்வுக்கு – உதாரணமாக அலாரத்தின் சப்தம் – பல தடவைகளில் வௌ;வேறு காட்சிகள் வரலாம். எனவே யானையைக் கண்டால் வயிற்று வலி, பூனையைக் கண்டால் இடுப்பு வலி என்று முடிந்த முடிவாக கனவு அகராதி போடுவது சிறுபிள்ளைத் தனமானது.

மனது எந்த சூழலில் ஒரு குறிப்பிட்;ட உணர்வை வாங்கிக்கொள்கிறதோ அந்த சூழலுக்குத் தகுந்த வடிவங்களை கனவில் அடைகிறது என்று ஸ்ட்ராம்ப்பெல், வன்ட் போன்ற உளவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் காலார நடந்து போகும்போது தூரத்தில் தெரியும் ஒன்று குதிரைபோல் நமக்குத் தோன்றலாம். சற்று அருகில் நெருங்கியதும் அது அமர்ந்திருக்கும் பசு என்று முடிவு கட்டலாம். கடைசியில் அங்கே நாலைந்துபேர் அமர்ந்திருக்கும் ஒரு கும்பலாக இருக்கலாம். இதைப்போலவே தூக்கத்தில் நம்மை வந்தடைகின்ற உணர்வுகளும் நிச்சயமற்ற தன்மை கொண்டனவாக இருக்கின்றன. எனவே அதன் அடிப்படையில் கனவில் பின்னப்படும் காட்சிகள் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தக்கபடி வௌ;வேறாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. உதாரணத்திற்கு ஹில்டெப்ரான்டின் கடிகாரக் கனவுகளைப் பார்க்கலாம்.

ஹில்டெப்ரான் ஒரே புறஉணர்வுத் தூண்டுதலினால் மூன்று வேறு வேறு காட்சிகளைக் கொண்ட கனவுகளைக் காண்கிறார். அவற்றில் இரண்டைப் பார்க்கலாம்.

முதல் கனவு : ஒரு வசந்தகாலக் காலை வேளையில் அவர் காலாற நடந்து போகிறார். பச்சை வயல் வெளிகள் வழியே. பக்கத்து கிராமத்துக்கு வந்துவிடுகிறார். கிராமத்தினர் தங்களது சிறப்பு ஆடைகளில், கைகளில் பைபிளை ஏந்திய வண்ணம் தேவாலயத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளனர். ஆமாம்;. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை ஜபம் சற்று நேரத்தில் ஆரம்பித்துவிடும். மணி அடிப்பவன் தேவாலயத்தின் மீதேறி மணியை நெருங்கும் சப்தம் கேட்டது. இப்பொழுது தொழுகையை அறிவித்து மணி அடிக்கும். அதுபோலவே மணி அடித்தது. ஆனால் அடித்துக்கொண்டே இருந்தது. நிற்காமல். செவிப்பறைகள் கிழியுமாறு. விழித்துப் பார்த்தபோது அலாரம்தான் அப்படி அலறிக்கொண்டிருந்தது.

இரண்டாவது கனவு : வீட்டு சமையல்காரி நிறைய பீங்கான்களையும் கோப்பைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, டைனிங் ஹாலை நோக்கி கொண்டுபோய்க் கொண்டிருந்தாள். அதிலிருந்த சைனா கோப்பையொன்று நழுவிவிடும் நிலையிலிருந்தது. பயந்தபடியே வாசல்படியில் அவள் தடுக்கி நிலைதடுமாற, எல்லாம் கீழே விழுந்து ஒரே சப்த மயம். ஆனால் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால் நொறுங்கும் சப்தமாக அல்ல. மணியடிப்பதுபோல. விழித்ததும் பக்கத்தில் அலாரம் அலறிக்கொண்டிருந்தது. அலாரத்தின் சப்தம் என்ற ஒரே காரணி ஏன் இரண்டு அல்லது மூன்று விதமான கனவுகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். ஆனால் கனவுகள் அப்படித்தான்.

மூர்லி வோல்டு (Mourly Vold) என்பவர் ஒரு பரிசோதனை செய்தார். அதாவது தூங்கிக்கொண்டிருப்பவரின் உடலுறுப்பில் ஏதாவதொன்றின் நிலையை, உதாரணமாக கையை, மாற்றுவதன் மூலம் கனவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கண்டுபிடித்தார். கீழ்க்கண்டவாறு அவர் தன் முடிவுகளை அறிவிக்கிறார் :

1. கனவில் ஒருவரின் உடலுறுப்பு எந்த நிலையிலிருக்கிறதோ அதே நிலையில்தான் விழிப்பு நிலையிலும் இருக்கும். அதாவது கனவில் கை அசைந்து கொண்டிருந்தால் நனவிலும் அசைந்துகொண்டுள்ளதாக அர்த்தம்.

2. கனவு காண்பவரின் உடலசைவு அல்லது அசைவின்மை கனவில் இன்னொருவரின் உடலசைவாக அல்லது அசைவின்மையாகத் தெரியலாம்.

3. தூங்கிக் கொண்டிருப்பவரின் உடல் உறுப்புக்களின் அசைவை நிறுத்தினால் அல்லது தொந்தரவு செய்தால் அதுகூட கனவாக வரலாம். காலாட்டிக்கொண்டே தூங்குபவரின் காலை நிறுத்தினால் அதனால்கூட கனவு வரலாம்.

4. தூக்கத்தில் உள்ளவரின் உடலுறுப்புகளின் நிலை கனவில் மிருகமாக வரலாம். கனவில் வரும் நாய்களும் பேய்களும் நமது கையாகவோ காலாகவோ முகமாகவோ இருக்கலாம் !

5. குறிப்பிட்ட நிலையில் உள்ள தூங்குபவரின் உடலுறுப்புகள் அதற்கேற்ற எண்ணங்களையும் கனவில் ஏற்படுத்தலாம். உதாரணமாக விரல்களின் நிலையில் எண்களைப்பற்றிய கனவுகள் வரலாம்.

ஒருமுறை ஃப்ராய்டுக்கு விரையின் அடியில் ஆப்பிள் அளவு பெரிய கொப்புளம் வந்து மிகவும் அவஸ்தைப்பட்டார். ஒவ்வொரு அசைவும் சித்திரவதையாக இருந்தது. அந்த நேரத்தில் தூங்கும்போது வந்த கனவில் அவர் குதிரை சவாரி செய்துகொண்டிருந்தார்! குதிரைச் சவாரியை ஃப்ராய்ட் ஒருமுறைதான் நிஜவாழ்வில் செய்திருந்தாராம். அந்த கொப்புளத்தின் வேதனையோடு எந்த வேலையையும் செய்திருக்கலாம் கஷ்டப்பட்டு. ஆனால் ஒரு வேலை மட்டும் நிச்சயமாகச் செய்திருக்கவே முடியாது. அதுதான் குதிரைச்சவாரி செய்வது! ஆனால் அதை நன்றாகச் செய்வதாகத்தான் கனவு! அதாவது அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற விருப்பத்தை கனவு நிறைவேற்றியிருக்கிறது.

நமது உடல் உறுப்புகளின் அனுபவங்களினால் ஏற்படும் கனவுகள் எந்த மாதிரியான காட்சிகளைத் தோற்றுவிக்கும் என்று முடிந்த முடிபாக கூற முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம்.

உள்ளுறுப்பு உணர்வுத் தூண்டுதல் ( Internal Organic Somatic Stimuli )

நமது உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களின் இயக்கங்களை நாம் எப்போதும் பிரக்ஞையில் கொள்வதில்லை. நம்மை அறியாமலேயே அவை நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் உள்ளுறுப்புக்கள் நோய்வாய்ப்படும்போது அவைகளின் அசௌகரியத்தை நாம் கனவுகள் மூலமாக அறியலாம். விழிப்பு நிலையில் அறிவதற்கு முன்பே கனவின் மூலமாக உள்ளுறுப்புகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்திக் கொள்வது சாத்தியமே. அரிஸ்டாட்டில்கூட தனது னுந னுiஎiயெவழைn என்ற நூலில் கூறுகிறார். அதாவது அரிஸ்டாட்டில் காலத்திலேயே கனவுகள் நோயறிவிக்கும் என்ற உண்மை உணரப்பட்டுள்ளது. மேலும் நமது மனமானது அல்லது மூளையானது உடல் சம்பந்தப்பட்ட உணர்வு நிகழ்வுகளை, விழிப்பு நிலையில்விட, உறக்க நிலையிலேயே அதிகமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்கிறது என்று ஸ்ட்ரம்ப்பெல் அறிவிக்கிறார்.

நாற்பத்துமூன்று வயதான ஒருத்தி அடிக்கடி கவலை தரும் கனவுகள் கண்டுகொண்டிருந்தாள். மருத்துவ பரிசோதனைகளுக்குப்பின் அவளுக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்தது. இருதயம், நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒழுங்கீனங்கள் அடிக்கடி கவலைக்கனவுகள் மூலமாக அறிவிக்கப்படுகிறது என்பது விஞ்ஞானரீதியாக எல்லா மருத்துவர்களும் ஒத்துக்கொண்ட ஒன்றாயிற்று.

குறைந்த நேரக்கனவாகவும் விழிக்கும் நிலையில் அது ஒரு பயங்கரமான மரணத்தை அல்லது ஒரு பயங்கர முடிவைக்கொண்டதாகவும் இருக்கும் கனவு இருதய நோயை அறிவிப்பதாக இருக்கும். மூச்சுத்திணறல், கூட்ட நெரிசல், ஓட்டம் முதலியவைகள் கனவில் வரும்போது அது நுரையீரல் பாதிப்பை அறிவிப்பதாக இருக்கலாம்.

ஆனால் நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியக் குறைவே கனவுகள் வரக்காரணம் என்று எண்ணுவது தவறாகும். ஆரோக்கியமானவர்களுக்கும், ஏன் எல்லோருக்குமே ஒவ்வோர் இரவும் கனவு வரலாம். எனவே கனவு கண்டவுடன் உடனே நமது உடலில் ஏதோ கோளாறு என்று எண்ணத்தேவையி;ல்லை. கனவுகள் நோயையும் அறிவிக்கும் அவ்வளவுதான்.

கனவுகளின் ஞாபக சக்தி

யானைகளுக்கு அபார ஞாபக சக்தி என்று சொல்வர். ஆனால் கனவுகளின் ஞாபக சக்தியோ பல நூறு யானைகளுக்குச் சமம். கனவில் வரும் காட்சிகள் யாவும் நம்முடைய நனவு வாழ்வின் அனுபவங்களிலிருந்து எடுக்கப் பட்டவையே. அதாவது நனவு வாழ்வின் அனுபவங்கள் கனவில் மறுபடியும் நினைவு கொள்ளப்படுகின்றன. நூற்றுக்கு நூறு அப்படியே நினைவுகூறப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் கனவுக்கும் நனவுக்குமுள்ள இந்த தொடர்பு கனவையும் நனவையும் ஒத்துப்பார்த்தால் எளிதாகப் புரிந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு. பல சமயங்களில் இந்த தொடர்பு புரிந்து கொள்ளவே படாமல் (முடியாமல்) ரகசியமானதாகவே இருந்துவிடுகிறது. இந்த ரகசியத் திரையை கிழிப்பதற்கு கனவின் ஞாபக சக்தி பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கனவில் கண்ட ஒரு விஷயம், ஒரு அம்சம், ஒரு பொருள், ஒரு ஆள், ஒரு பெயர் இன்ன பிற நனவில் நாம் கண்டதாகவோ தெரிந்ததாகவோ இருக்காது. நனவு வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு அனுபவமே கிடையாது என்றுகூட நாம் அடித்துக் கூறலாம். ஆனால் நீண்டதொரு இடைவெளிக்குப்பின் ஏற்படும் ஒரு புதிய அனுபவம் நாம் முன்னால் கனவில் கண்டது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்பதை உறுதிப்படுத்தலாம்.

டெல்போஃப் (Delboeuf ) என்ற தத்துவவாதி ஒருவர் ஒரு கனவு கண்டார். தன் வீட்டு நீள வராந்தா பனியால் நிரம்பியுள்ளது. அதில் இரண்டு சிறிய பல்லிகள் பாதி புதையுண்டு உறைந்த நிலையில் உள்ளன. ஆனால் சாகவில்லை. இரக்கம் கொண்ட அவர் அப்பல்லிகளை விடுவித்து அவைகளின் வீட்டுக்குள் (ஓட்டைக்குள்) கொண்டு விடுகிறார். அதோடு அவைகள் சாப்பிடும் சில இலைகளையும் அதற்குள் போடுகிறார். அந்த இலைகளின் தாவரப்பெயர் அஸ்ப்ளீனியம் ரூட்டா முராலிஸ் என்றும் கனவு சொல்கிறது. கொஞ்ச நேரம் கழித்து பல்லிகளை விட்டுவந்த ஓட்டைகளை நோக்கி மேலும் இரண்டு, மூன்று, நான்கு என ஒரு பல்லிப் பட்டாளமே ஊர்வலமாக வர ஆரம்பிக்கிறது. ஜூராஸிக்பார்க் படத்தில் வரும் டைனோக்களின் கூட்டம் மாதிரி.

கனவிலிருந்து விழித்த பிறகு அவருக்கு ஒரே ஆச்சர்யம். ஏனெனில் அஸ்ப்ளீனியம் என்று ஒரு தாவரப்பெயரே அவருக்குத் தெரியாது. பின் எப்படி அப்படி ஒரு பெயர் கனவில் வந்தது? உண்மையில் அப்படி ஒரு பெயர் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தால் இருந்தது ! அஸ்ப்ளீனியம் ரூட்டா முராரியா என்றிருந்தது !

இந்த கனவை அவர் கண்டது 1862ல். அதன் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து தனது நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அங்கே பூக்களைப் பதியவைத்து அதன் தாவரப் பெயர்களும் கீழே எழுதப்பட்;ட ஒரு ஆல்பம் இருந்தது. அதைப் புரட்டிக்கொண்டிருந்தார். அதில் அவர் கனவில் கண்ட அஸ்ப்ளீனியம் இருந்தது. வேடிக்கை என்னவென்றால், அதன் கீழே அதன் தாவரப்பெயர் அவர் கையாலேயே எழுதப்பட்டிருந்தது !

இப்போது எல்லாம் விளங்கிவிட்டது. 1860ல் (அதாவது பல்லிக் கனவு வந்ததற்கு இரண்டு வருடங்களுக்கு முன்) அவரது நண்பரின் சகோதரி அவரைப் பார்க்க வந்தார். அவர்தான் அந்த தாவர ஆல்பத்தைக் கொண்டுவந்தார். ஒரு தாவரவியல் நிபுணர் சொல்லச் சொல்ல, அந்த ஆல்பத்திலிருந்த ஒவ்வொரு பூவின் தாவரப் பெயரையும் அவளுக்காக அவர்தான் தன் கைப்பட எழுதினார். அப்போது எழுதியதுதான் அஸ்ப்ளீனியம் !

சரி. ஆனால் இதுவரை பாதிக்கனவுதான் விளங்கியுள்ளது. 1877ல் ஒருநாள் (பல்லிக் கனவுக்கு பதினைந்து வருடம் கழித்து) ஒரு பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தார். அதில் ஒரு பக்கத்தில் ஒரு பல்லிக்கூட்ட ஊர்வல ஃபோட்டோ அல்லது வரைபடம் இருந்தது. அந்த பத்திரிக்கை 1861ம் வருடத்தையது. அதைப் பார்த்தபின்தான் தானும் அந்த பத்திரிக்கையின் சந்தாதாரர் என்ற நினைவு வந்தது !

ஒருவருக்கு அடிக்கடி முஸ்ஸிடன் என்ற சொல் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அது ஃப்ரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஊரின் பெயர் என்பதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. பின் ஒரு கனவு கண்டார். அதில் அவர் ஒரு ஆளுடன் பேசுகிறார். அந்த ஆள் தான் முஸ்ஸிடனிலிருந்து வருவதாச் சொல்கிறான். அது எங்கே உள்ளது என்று கேட்க, அது டோர்டோன் என்ற பகுதியில் உள்ள ஊர் என்று சொல்கிறான்.

கனவு கொடுத்த இந்த தகவல்மீது நம்பிக்கை இல்லாமல் விசாரித்தார் அவர். கனவு சொன்ன தகவல் முழுக்க முழுக்க சரியானது என்று தெரிந்தது. கனவில் பெறப்படும் அறிவு நனவு வாழ்வினதைவிட துல்லியமானதாகவும் சரியாகவும் உள்ளது என்பதையும் கனவின் துல்லியமான ஞாபக சக்தியையும் இவை நிரூபிக்கின்றன.

ஒரு இசையமைப்பாளர் கனவில் ஒரு மெட்டைக் கேட்டார். அது ரொம்ப புதியதாகவும் இருந்தது. நனவு வாழ்வில் எங்குமே, எப்போதுமே கேட்டமாதிரி இல்லை. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இசை பற்றிய புத்தகத்தில் அந்த மெட்டு பற்றிய குறிப்புகளைக் கண்டு ஆச்சர்யமுற்றார்.

தன் நோயாளிகளில் பலர் தங்கள் நனவு வாழ்வில் மறந்துவிட்ட பல மேற்கோள்களையும் சில கெட்ட வார்த்தைகளையும் கனவுகளில் நினைவு கூர்ந்ததாக ஃப்ராய்டு கூறுகிறார். ஒரு நோயாளி ஒருவர் தன் கனவில் ஹோட்டலில் போய் கோன்;ட்டுஸோசா என்ற ஒன்றைக் கொண்டு வரும்படி ஆர்டர் கொடுக்கிறார். ஆனால் அவர் ஆர்டர் செய்த பொருள் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. அது ஒரு போலந்து நாட்டு மதுபான வகை என்று ஃப்ராய்டு சொல்கிறார். பிறகு ஒருநாள் ஹோட்டல் வாசல் விளம்பரப் பலகையிலிருந்து ஃப்ராய்டு சொன்னது சரிதான் என்று அந்த நோயாளி அறிந்துகொள்கிறார்.

ஃப்ராய்டுக்;குக்கூட பல வரு;களாக ஒரு தேவாலயத்தின் கோபுரமும் ஒரு இருட்டான பகுதியும் அதையொட்டி பயமுறுத்தும் உருவங்களும் அடிக்கடி கனவில் வந்துகொண்டிருந்தன. 1895ல் அவர் இத்தாலியில் உள்ள பாடுவா நகர பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். மறுபடி 1907ல் சென்றபோதுதான் கனவில் கண்ட தேவாலய கோபுரத்தை அங்கே கண்டார். மேலும் அவர் கண்ட பயமுறுத்தும் உருவங்கள் தேவாலயத்தின் பக்கத்திலிருந்த மதுக்கடையின் சித்திர வேலைப்பாடுகள் எனவும் தெரிந்து கொண்டார்.

கனவு தனக்கான காட்சிகளையும் நிகழ்வுகளையும் அமைப்பதற்காக நனவு வாழ்வின் பல நிலைகளிலிருந்தும் வி;களை எடுத்துக் கொள்கிறது. அதில் முக்கியமானது குழந்தைப் பருவ அனுபவம்.

மோரி தன் குழந்தைப் பருவத்தில் தன் ஊருக்குப் பக்கத்தில் இருந்த ட்ரில்போர்ட் என்ற ஒரு கிராமத்திற்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு ஒரு பாலம் கட்டப் பட்டுக்கொண்டிருந்தது. அதன் மேற்பார்வையாளராக அவர் தந்தையார் இருந்தார். மோரி கண்ட கனவில் அவர் மறுபடியும் குழந்தையாகி ட்ரில்போர்ட் தெருக்களில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாதிரியான சீருடை அணிந்த ஒருவர் வந்து தன் பெயர் ஸி எனவும் தான் அந்த பாலத்தின் வாட்ச்மேன் எனவும் கூறினார்.

இந்த கனவை மோரி நம்பவில்லை. ஆனால் தன் வீட்டு வேலைக்கார கிழவியிடம் கேட்டபோது அது உண்மைதான் என்பது உறுதியானது.

என்னுடைய கனவொன்றில் ஒரு டாக்டர் வந்தார். அவருடைய முகம் என் பள்ளிக்கூடத்து வாத்தியார் ஒருவரின் முகத்தைப்போல இருந்தது. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. என் கனவை அம்மாவிடம் சொல்லிக் கேட்டபோது, ஆமாம் அப்படி ஒரு டாக்டர் இருந்தார். அவருக்கு ஒற்றைக்கண் என்றார்கள். என் பள்ளிக்கூட வாத்தியாருக்கும் ஒற்றைக்கண்தான் ! அந்த டாக்டரை நான் பார்த்து முப்பத்தெட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அவரைப் பற்றி என் நனவு வாழ்வில் ஒருமுறைகூட எண்ணிப்பார்த்தது கிடையாது – என்று ஃப்ராய்டு கூறுகிறார்.

கனவுகளுக்கு அபார ஞாபக சக்தி உண்டென்பது மட்டுமல்ல, அவை கடந்த காலத்திலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விஷயம் நமக்கு நனவு வாழ்வில் ஆர்வமில்லாததாக, முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் அது கனவுக்கு முக்கியமானது. நம்முடைய நினைவாற்றலானது கனவில் நடந்து கொள்ளும் விதம் நினைவாற்றலைப் பற்றிய எந்த ஒரு கருத்தையும் முன்வைப்பதற்கு மிகவும் முக்கியமானது. நனவு வாழ்வில் பெறப்பட்ட எந்த அறிவையும் நாம் நிரந்தரமாக இழப்பதில்லை என்பதை இது உறுதி செய்கிறது. கனவென்பதே ஒருவிதமான ஞாபகப் படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்லுமளவிற்கு நினைவாற்றல் கனவுகளுக்கான விளக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படி நினைவுகூறும் கனவுகளைத்தான் ஹைபர்னீஸிக் ( (hypermnesic) கனவுகள் என்று சொல்வர். ஆனால் கனவுகளில் நினைவு கூறப்படுவதெல்லாம் பகுதிகள்தான். இதை ஒரு விதியாகவே வைத்துக்கொள்ளலாம். ரொம்ப விதிவிலக்காக ஒருசில கனவுகளில் மட்டும்தான் கனவு வாழ்வின் அனுபவங்கள் முழுமையாக அப்படியே நினைவுகூறப்படுகின்றன.

கனவு ஏன் மறந்துபோகிறது?

விழித்ததும் கனவு கரைந்து போகிறதென்பது காலங்கண்ட உண்மை. என்றாலும் அவைகளை நினைவுகொள்வது சாத்தியம்தான். இப்படி கனவுகளை நினைவுகொள்ள முயலும்போது, கனவின் ஒரு பகுதிதான் ஞாபகம் வந்ததாகவும் பெரும்பகுதி மறந்துவிட்டதாகவும் தோன்றும். விழித்தவுடன் இருக்கின்ற நினைவும் நேரம் செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்லும். ஒரு கனவைக் கண்டு விழித்தவுடன் நினைத்துப் பார்ப்பதற்கும், ஆசுவாசமாக சாயங்காலம் எண்ணிப்பார்ப்பதற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. நேரம் ஆகஆக, கனவின் நிறைய வி;கள் மறந்துவிட்டிருக்கும். கனவு கண்டோமா என்பதே சந்தேகத்திற்கு உரியதாகிவிடும். பொதுவாக அனைவருக்கும் இந்த அனுபவம்தான்.

ஆனால் விதிவிலக்காக சில கனவுகள் அப்படியே ஞாபகமிருக்கும். இருபத்தைந்து முப்பது வரு;களுக்கு முன் தன் நோயாளிகள் கண்ட கனவுகளைக்கூட அவர்கள் அட்சரம் பிசகாமல் ஞாபகம் வைத்திருக்க, அவற்றை தான் ஆராய்ச்சி செய்ய முடிந்ததாக ஃப்ராய்டு கூறுகிறார்.முப்பத்தேழு வரு;களுக்கு முன்பு நான் கண்ட கனவு ஒன்று இன்னும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

விழிப்பு நிலையில் நாம் ஏன் பல விஷயங்களை மறந்துபோகிறோம்? அதே காரணங்களால்தான் கனவுகளையும் மறந்து போகிறோம். நனவில் நம் மனதில் தங்கக்கூடிய அளவுக்கு வலுவாக இல்லாத பலவீனமான விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். கனவுக் காட்சிகளும் அப்படித்தான். வலுவான காட்சிகள் நினைவிலும் பலவீனமானவை மறந்தும் போகின்றன. ஆனால் பலவீனம் காரணமாகத்தான் கனவுகள் மறந்து போகின்றன என்று அடித்துக் கூறிவிடவும் முடியாது.

ஏனெனில், பல சமயங்களில், கனவுகளில் வந்த மிகத்தெளிவான படிமங்கள், விஷயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் நிழலாட்டம் பலகீனமான பல விஷயங்கள் நினைவில் உள்ளன.

மேலும், திரும்பத் திரும்ப ஒரு விஷயம் நடந்தால், அது நமது நினைவில் பதியும். இது நனவு வாழ்வில்தான் சாத்தியம். ஆனால் கனவுக்காட்சிகளோ மிகவும் பிரத்தியேகமானவை. வீடியோ படம்போல ரீவைண்டு பண்ணி பார்க்க முடியாது. ஒரு முறைதான். இதன் காரணமாகவும் கனவுகள் மறந்து போகின்றன.

கனவுகள் மறந்து போவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவற்றின் ஒழுங்கின்மை. காட்சிகள், கருத்துக்கள், உணர்ச்சிகள், வசனங்கள் எல்லாம் திரைப்படம்போல ஒன்றோடொன்று கோர்க்கப் பட்டு, வரிசைக்கிரமமாக இருந்தால் அதன் ஒழுங்கும் அர்த்தமும் நினைவுகொள்வதற்கு ஏதுவாக இருக்கும். ஒரேயொரு கவிதை வரியைக்கூட கண்டபடி சொற்களைப் பிரித்து மாற்றிப் போட்டுவிட்டால் மனசில் நிற்காது. நினைவில் தங்குவதன் காரணமே ஒழுங்கு, இசைவு, வரிசை, அர்த்தம் ஆகியவைதான். ஆனால் கனவோ எந்த ஒழுங்குமற்றது. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதது. அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது.எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன.

விழித்த மறு கணமே அது துண்டு துண்டாகச் சிதறிவிடுகிறது. ஆனால் ரொம்ப அரிதாக முழுவதுமாக நினைவு கொள்ளப்பட்ட கனவுகள் அதி வினோதமானவை, ஒழுங்கற்றவை என்று ரேட்ஸ்டாக் கூறுவது இதுகாறும் சொன்னதை உடைப்பதாக உள்ளது.

சூரியன் உதிக்கும்போது நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்துவிடுவதுபோல, விடிந்துவிட்ட(விழித்துவிட்ட) நாளுக்கான உணர்வுகள் உடலையும் மனதையும் வந்தடையும்போது, கனவுகள் தங்கள் பிடியை விலக்கிக் கொள்கின்றன. இதன் காரணமாகவும் அவை மறந்து போகின்றன.

கனவுகளைப் பற்றி பெரும்பாலோர் எந்தவித அக்கறையும் கொள்வதில்லை. அக்கறையின்மை, ஆர்வமின்மை காரணமாகவும் கனவு மறந்து போகிறது. கனவுகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனுக்கு அப்படிச் செய்யாதவனைவிட அதிகமான கனவுகளும் வரும். கனவுகள் அதிகமான அளவில் நினைவிலும் இருக்கும். கனவுகளை நினைவில் வைத்திருப்பதில் உள்ள சிரமங்களும் கனவுகளை ஆராய்கின்ற ஒருவனுக்கு இருக்காது.

கனவுகள் ஏன் மறந்து போகின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்தவர்கள் மேலும் சில முடிவுகளுக்கு வந்தார்கள்.

காலையில் மறந்து போன ஒரு கனவு, அந்த நாளின் பிற்பகுதியில் நினைவுக்கு வரலாம். அல்லது அன்று நடக்கும் ஒரு அகஸ்மாத்தான நிகழ்ச்சி மறந்துபோன கனவை அல்லது அதன் முக்கிய குறிப்புகளை டக்கென்று நினைவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் கனவின் பெரும்பகுதி மறந்துவிட்டிருக்கும் பட்சம், நினைவு கொள்ளப் பட்ட பகுதிகள் எந்த அளவுக்கு கனவுக்கு உண்மையானவை என்றும் சொல்ல முடியாது. நம்முடைய ஞாபக சக்தி கண்டதை காணாததாகவும் காணாததை கண்டதாகவும் சொல்லி விடலாம்.

எனவே கனவுகளை நினைவு கூறும்போது நம்முடைய ஞாபக சக்தி கனவுகளை சிதைத்து விடுகின்ற வாய்ப்பு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இவைகள் கனவுகளை நினைவுகொள்வதில் உள்ள பிரச்சனைகள்.

கனவுகளின் உளவியல் ரீதியான தன்மைகள்

நமது மன இயக்கங்களின் விளைவாகத்தான் கனவுகள் உண்டாகின்றன என்பதுதான் கனவுகளைப் பற்றிய நமது ஆராய்ச்சியின் துவக்கம். எனினும் உருவாகிவிட்ட அதாவது தயாரிக்கப்பட்டுவிட்ட ஒரு கனவானது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதன் தனித்த, அற்புதமான இயக்கத்தில் அதற்கு பிரம்மா நாம்தான், நம் மனம்தான் என்பதையே நாம் மறந்து விடுகிறோம். நான் கனவு காண்கிறேன் என்று சொல்லாமல் ஒரு கனவு வந்தது என்று ஒரு தனித்த அந்தஸ்தை அதற்கு கொடுக்கத் தயங்குவதில்லை நாம்.

கனவுகள் பெரும்பாலும் கண்ணால் காணக்கூடிய காட்சிகள் அல்லது படிமங்கள் (எளைரயட iஅயபநள) மூலமாகவே சிந்திக்கின்றன. தேவைக்கேற்றபடி சப்த படிமங்களையும் மற்ற புலன் சார்ந்த படிமங்களையும் உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கின்றன. விழிப்பு நிலையில் நாம் கருத்துக் கோள்களை சிந்திப்பதுபோல, கனவுகள் காட்சி ரூபத்தில் சிந்திக்கின்றன. கனவு என்பதே காட்சி வடிவ சிந்தனை என்று சொல்லலாம்.

இவ்வகை காட்சிகள் மூலமாக, கனவுகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை உருவாக்குகின்றன. அந்த காட்சிகள் ஏதோ ஒன்றை நிகழ்த்துகின்றன. எனவே கனவில் நாம் சிந்திப்பதில்லை. அனுபவிக்கிறோம். அதாவது உண்மையிலேயே நடப்பதாக நம்புகிறோம். விழித்த பிறகுதான், நாம் கனவு கண்டுகொண்டிருந்தோம் அல்லது வித்தியாசமானதொரு முறையில் சிந்தித்துக் கொண்டிருந்தோம், உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்பது புரியும். பகல் கனவுக்கும் (day-dreaming) உண்மையான கனவுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான். பகல் கனவென்பது வெறும் கற்பனை என்பது நமக்கே தெரியும்.

புற உலகத் தொல்லைகளிலிருந்து நமது மனமும் நாமும் விடுபட்டிருக்கும்போதுதான் தூக்கமும் கனவும் சாத்தியமாகிறது. ஆனால் தொல்லை என்று சொல்லும்போது அது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப் படுகிறது. ஒருவனுடைய தொல்லை இன்னொருவனுக்கு தாலாட்டாகும் வாய்ப்பும் உண்டு. விளக்கு எரியும்போதே தூங்கிப் பழகியவனுக்கு இருட்டில் தூக்கம் வராது.

தூங்கும்போது மனது புற உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. ஆனால் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப் படுவதில்லை. தூங்கும்போது கேட்கவோ உணரவோ முடியாதெனில் தூங்குபவனை எழுப்பவே முடியாதே !

புற உலகத் தூண்டுதல்களின் வலிமையினால் மட்டும் தூங்கும் ஒருவன் எழுந்துவிடுவதில்லை. அவனை எழுப்ப உளவியல் ரீதியான, மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு சூழல் தேவைப்படுகிறது. தூங்கும் ஒருவனை ஏதோ ஒரு வார்த்தையைச் சொல்லி எழுப்ப முடியாது. ஆனால் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் எழுந்து விடுவான். சிம்ரன், ஜோதிகா என்று சொன்னாலும் எழலாம். ஏனெனில் அவர்களும் அவன் மனதோடு மிகவும் சம்பந்தப்பட்டவர்கள்!

எனவே தூங்குகின்றவனுடைய மனமானது புற உலகிலிருந்து அவனை வந்தடையும் தூண்டுதல்களுக்கிடையேயான வித்தியாசத்தை உணர்கிறது. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட புற உணர்வுத் தூண்டுதல் சூழ்நிலையின் இருப்பும் இல்லாமையும்கூட அவனது தூக்கத்தைக் கலைக்க வல்லதாயுள்ளது. அதனால்தான் ஆலையின் சப்தத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவன் கரண்ட் போனால் விழித்துக் கொள்கிறான். இருட்டில் தூங்கிப் பழகியவன் திடீரென்று ஸ்விட்ச் போட்டால் (ஒளி வந்தால்) விழித்துக் கொள்கிறான். தூக்கம் கலையாத சூழ்நிலைகளே கனவுகளுக்கு ஏற்றவை என்பதை சொல்லத் தேவையில்லை.

கனவுகள், அதன் காட்சிகள் எல்லாம் ஒன்றோடென்று தொடர்பில்லாதவையாக உள்ளன. முரண்பாடுகளை அவைகள் எளிதாக ஏற்றுக் கொள்கின்றன. எந்த எதிர்ப்புமின்றி. நடக்க முடியாதவைகளை அவைகள் இயற்கையென ஏற்றுக்கொள்கின்றன. தர்க்க ரீதியான அறிவுக்கு அவை எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கனவுகளில் பேசுவதைப் போலவோ நடப்பதைப்போலவோ ஒருவன் நிஜ வாழ்வில் செய்ய முயன்றால் அவன் பைத்தியமென கணிக்கப் படுவான்.

ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தன்மையானது கனவுகளுக்கு அடிப்படையானது. அதாவது ஒரு மூளையுள்ள மனிதனின் மன இயக்கங்கள் எல்லாம் ஒரு முட்டாளுடையதாக மாறிப்போனால் உள்ள நிலைமைதான் கனவினுடையது. மூன்றையும் மூன்றையும் பெருக்கினால் இருபதாகும். நாய் கவிதை பாடும். வருடங்கள் நிமிஷங்களாகும். கனவில் எல்லாம் நடக்கும். ஆச்சர்யங்களின்றி. அதுதான் இயற்கை என்பதைப் போல்.

கனவில் ஒழுக்க உணர்வு

கனவுகள் மனிதனின் நல்லது கெட்டது பற்றிய பிரக்ஞையைக் கொண்டுள்ளனவா என்ற கேள்விக்கு உளவியலாளர்கள் ஆம் என்றும் இல்லை என்றும் பதில் தந்துள்ளனர்.

நனவில் நாம் இருப்பதைவிட நல்லவனாக நாம் கனவில் மாறுவதில்லை. மாறாக, நம் மனசாட்சி கனவில் தூங்கிவிடுகிறது. எந்தவித விருப்பு வெறுப்போ வருத்தமோ இன்றி நாம் கனவில் திருடலாம், வன்முறை நிகழ்த்தலாம், கொலைகூட செய்யலாம் என்று ஜெஸ்ஸன் கூறுகிறார்.

வோல்கெல்ட் (Volkelt) கூறுகிறார் : பால் உறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கனவு காண்பவன் கட்டவிழ்த்தது போல் உள்ளான். எந்தவித வெட்கமும் அடைவதில்லை. தான் மட்டுமல்லாது, தான் நனவு வாழ்வில் மிகவும் மதிக்கும் சிலரோடு விரும்பத் தகாத காரியங்களில் மிகவும் இயற்கையாக ஈடுபட்டிருப்பதை அவன் காண்பான்.

இதற்கு நேர் மாறாகவும் சிலர் கருத்து வைக்கின்றனர். நிஜ வாழ்வில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அதற்கு மாறாக நாம் கனவினல் பேசுவதோ நடந்துகொள்வதோ இல்லை என்கிறார் Schopenhauer. ஒரு நல்லவன் கனவிலும் நல்லவனாகவே உள்ளான். கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற கெடுதிகளிலிருந்து அவன் தன்னை கனவிலும் காத்துக்கொள்கிறான். ஆனால் கெட்டவனோ கனவிலும் அப்படியே உள்ளான் என்கிறார் ஹாஃப்னர்((Haffner).

இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள் ஒழுக்கக் குறைவான கனவுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட கனவுகள் ஒரு நல்லவனுக்கு வந்தாலும் அதற்கு அவர்கள் அவனை பொறுப்பாக்குவதில்லை. எப்படி ஒரு அபத்தமான கனவு வந்தால் அதை வைத்து கனவு கண்டவனின் அறிவில் கோளாறு உள்ளது என்று முடிவு செய்ய முடியாதோ அதே போல ஒழுக்கக் குறைவான கனவுகளுக்கு அதைக்கண்டவனும் பொறுப்பாக முடியாது என்பது இவர்களின் வாதம். ஆனால் இதில் விஷேம் என்னவென்றால், எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான கனவுகள் வரத்தான் செய்கின்றன என்பது ஒரு அழகான உண்மை !

ஷோல்ஸ் கூறுகிறார் : உண்மை கனவில் இருக்கிறது. வெளி உலகிற்கு நாம் எந்த முகம் காட்டிக் கொண்டிருந்தாலும் கனவில் நம் உண்மையான முகத்தை நாம் கண்டுகொள்வோம். உண்மையில் கண்ணியத்திற்குரிய ஒரு மனிதன் கனவில் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ள மாட்டான்.

இந்த பிரச்சனை பற்றி ஆழமாக ஆராய்ந்த ஹில்டெப்ரான்கூட மனிதன் தன் கனவில் புரியும் (தகாத) செயல்களுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது. ஆனால் பொறுப்பு ஏற்காமல் இருக்கவும் முடியாது என்கிறார். மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல. மேலும், நம்முடைய நோக்கத்தின்மீது யாராவது மாசு கற்பிக்க முற்படும்போது, கனவிலும் நான் அப்படி நினைத்ததில்லை என்று நாம் கூறுவதுண்டு. நம்முடைய விழிப்பு நிலையில் நம் பிரக்ஞையில் நெருப்பில்லாமல் கனவில் புகையாது. ஏனெனில் கனவு எதையும் சுதந்திரமாக கண்டுபிடிப்பதில்லை. ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் அது வலை பின்னுகிறது.

எனவே கனவானது நம்முடைய விழிப்பு நிலையில் அறிய வழியில்லாத நம் மனதின் ஆழங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது. அது மனிதனுடைய உண்மையான குணாம்சத்தைக் காட்டுகிறது. முழுமையாக அல்ல என்றாலும். இதுவே இப்படிப் பட்ட கனவுகளின் முக்கியத்துவம் ஆகும் என்பதாகக் கூறுகிறார்.

ஸ்ட்ரிக்கர் சொல்வதோடு இப்பகுதியை முடிக்கலாம் : கனவுகள் முழுமையாக மாயத்தோற்றங்களை மட்டும் கொண்டிருப்பதில்லை. உதாரணமாக ஒருவன் கனவில் கள்ளர்களைக் கண்டு பயப்படுவதாக வைத்துக் கொண்டால், அக்கள்ளர்கள் பொய் என்றாலும் அந்த பயம் உண்மை.

கனவுகளும் மன நோய்களும்

கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்து கனவுகள் வெளிப்படுத்தும் மன நோய்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை என ஃப்ராய்ட் கருதுகிறார்.

கனவு காண்பவனின் நினைவும் மன நோயாளியின் நிலையும் ஒன்றே என்று உளவியலாளர் நினைக்கின்றனர். கனவு மன நோயின் ஆரம்பத்தை அறிவிப்பதாகக்கூட இருக்கலாம். ஒரே கனவிலும் மன நோய் தன்னை வெளிப்படுத்தலாம். அல்லது படிப்படியாக பல கனவுகள் மூலம் தெரியவரலாம். பைத்தியம் என்பவன் விழிப்பு நிலையிலேயே நடந்துகொண்டே கனவு காண்பவன் என்கிறார் ஜெர்மன் தத்துவ ஞானி கான்ட். பைத்தியம் என்பது விழிப்பு நிலையில் ஏற்படும் கனவு என்கிறார் க்ராஸ்(Krauss). கனவு ஒரு குறுகிய கால மனநோய். மனநோய் என்பது ஒரு நீண்ட கனவு என்கிறார் N.ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் நடக்கின்ற அனைத்தையும் நாம் கனவில் அனுபவிக்கிறோம் என்கிறார் வன்ட்.

மனநோயாளிக்கும் கனவு காண்பவனுக்குமிடையே பல ஒற்றுமைகளை தனது ஆராய்ச்சியில் காண்கிறார் ராட்ஸ்டாக். இந்த ஆராய்ச்சியின் விளைவு கனவையும் மனநோயையும் பற்றிய ஒரு முக்கிய கோட்பாடாக விரிகிறது. உதாரணமாக வறுமையினால் மனநோய்க்கு ஆளான ஒருவன் பெரிய பணக்காரனைப்போல பாவனைகள் செய்வதையும், தன் அன்பான குழந்தையை இழந்ததால் பைத்தியம் பிடித்த ஒருத்தி, அந்த நிலையில் தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவிப்பதையும் காணலாம். இதே போன்றதே நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவன் தான் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக இருப்பதாக கனவு காண்பதும் ஏழை ஒருவன் தன்னை பணக்காரனாகக் கனவு காண்பதும்.

அத்தியாயம் – 3

கனவுகளை விளக்கும் முறை

கனவுகள் யாவையும் விளக்க முடியும். அதாவது கனவுகளை விளக்குவது என்பதன் பொருள் என்னவென்றால் கனவுக்கு ஒரு அர்த்தம் தருதலாகும். ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தமுண்டு. அது எவ்வளவு ரகசியமானதானாலும் சரி.

இரண்டு முறைகள்

கனவுகளை விளக்குவதற்கு ஆரம்ப காலத்திலிருந்தே இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. முதல் முறை, ஒரு கனவை அப்படியே முழுசாக எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வேறொன்றை, வேறொரு அர்த்தத்தை அதனிடத்தில் வைப்பது. இது குறியீட்டு விளக்க முறை (Symbolic Interpretation). பைபிளில் ஃபிர்அவ்னின் ((Pharaoh) கனவை யூஸூஃப் (Joseph) விளக்குவது இந்த வகையைச் சேர்ந்தது. ஏழு கொழுத்த பசுக்கள் ஏழு நோஞ்சான் பசுக்களை சாப்பிட்டுவிடுவதாக அவன் கனவு காண்கிறான். எகிப்தில் ஏழு வருடம் பஞ்சம் வரும் என்றும் அது, முந்தைய ஏழு வருடங்களின் செழிப்பையும் வளத்தையும் காலி செய்துவிடும் என்றும் யூஸூஃப் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். இங்கே பசுக்கள் பஞ்சத்திற்கும் செழிப்புக்கும் குறியீடு.

இறந்த தனது தந்தையை எரியூட்டுவதற்கு முந்திய நாளிரவு ஃப்ராய்ட் ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் அல்லது போஸ்டரைப் பார்க்கிறார். அது நீங்கள் ஒரு கண்ணை மூடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் என்று சொல்கிறது.

தந்தையின் ஈமச்சடங்குகளை மிகவும் எளிமையாகச் செய்யவே ஃப்ராய்ட் விரும்புகிறார். தந்தையின் விருப்பத்திற்கிணங்க. ஆனால் மற்ற உறவினர்கள் அவ்வளவு எளிமையாகச் செய்வதை விரும்பவில்லை. ஈமச்சடங்கிற்கு வருபவர்கள் முன்னிலையில் அந்தஸ்து குறைவாக இருக்கக்கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக கனவு வருகிறது. ஒரு கண்ணை மூடினால் கண்ணடிப்பதுபோல் இருக்கும். அதாவது உறவினர்கள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கனவு சொல்வதாக ஃப்ராய்ட் எடுத்துக்கொள்கிறார். இதுவும் குறியீட்டு விளக்கம்தான்.

கனவுகள் வருங்காலத்தைச் சொல்பவையாக உள்ளன என்ற கருத்தே பைபிள் காலத்திலிருந்து, தீர்க்கதரிசிகளின் காலத்திலிருந்து பெறப்பட்ட எச்சம்தான் என்று ஃப்ராய்ட் கருதுகிறார். இந்த குறியீட்டு விளக்கங்கள் யாவும் வருங்காலத்தைச் சுட்டுபவையாகவே பெரும்பாலும் உள்ளன என்றாலும் இப்படித்தான் குறியீட்டு விளக்கம் தரவேண்டும் என்பதற்கான அளவுகோல்களோ முறைகளோ எதுவும் கிடையாது.

எனவே இவ்வகை விளக்கங்களில் வெற்றி என்பது விளக்குபவரின் தகுதியைச் சார்ந்தே இருந்தது. இப்படி விளக்கக் கூடியவரும் அசாதாரணமானவராகவும் சிறப்புத் தகுதிகள் உள்ளவராகவும், அருள்பாலிக்கப்பட்ட தெய்வீகமானவராகவும் கருதப்பட்டார். ஆனால் இந்தவகை விளக்கங்கள் புரிந்து கொள்ள கடினமான, குழப்பமான கனவுகளை விளக்கப் போதுமானதாக இல்லை.

இரண்டாவது முறையை அவிழ்க்கும் முறை ((Decoding Method) என்று சொல்லலாம். இந்த முறையானது கனவை ஒரு சங்கேத பாஷையாக எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கனவை விளக்க முற்படுகிறது. இது கனவை மட்டும் பார்க்காமல், கனவு காண்பவருடைய குணம் மற்றும் அவரது சூழ்நிலை, வாழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

எனவே இந்த முறைப்படி, ஒரே கனவு நாலு பேருக்கு நாலு விதமாக அர்த்தப்படல் சாத்தியமாகிறது. கனவை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளாமல் அதன் பகுதிகளை தனித்தனியே இந்த முறை அலசுகிறது. கனவுகள் குழப்பமானதாகவும் புரிந்து கொள்ள கடினமானதாகவும் இருந்ததுதான் இந்த அவிழ்க்கும் முறை வரக்காரணமாக அமைந்தது.

ஆனால் இந்த இரண்டு முறைகளுமே விஞ்ஞானத்தின் வரம்புகளுக்குள் வராதவை. முதல் முறையைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இரண்டாவது முறையோ ஒரு அர்த்த அகராதியை (key dream-book) நம்பியுள்ளது.

ஆனால் ஒரு ஆச்சர்யம் என்னவெனில், சில கனவுகளை விளக்குவதற்கு இன்றைய விஞ்ஞானத்தால் முடியவில்லை. ஆனால் அந்தக் காலத்திலிருந்து போற்றிப் பாதுகாக்கப் பட்ட நம்பிக்கைகளே பெருமளவில் கனவுகளை விளக்க உதவுகின்றன என்பதை என்னுடைய அனுபவத்தில் அறிந்து கொண்டேன். எனினும் கனவுகளுக்கு அர்த்தம் உண்டு என்றும் அவைகளை விளக்க ஒரு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை சாத்தியம்தான் என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.

ஃப்ராய்டின் கனவு விளக்க அலசல் முறை

அடிப்படையில் ஃப்ராய்ட் ஒரு மனநோய் மருத்துவர். குறிப்பாக ஹிஸ்டீரியா எனப்படும் மனநோய்க்கு ஆளானவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலே அவர் பல வருடங்கள்; செலவிட்டார். அவருடைய அணுகுமுறைகளில் அவர் பெரும்பாலும் ஜோஸப் பிரவரையே பின்பற்றி வந்தார். மன அலசல் என்ற ஒரு முறையைக் கண்டுபிடித்ததில்தான் அவர் பிரவரிடமிருந்து தனித்துவிடுகிறார். இந்த ஹிஸ்டீரியா நோயாளிகளின் பிரச்சனைகளும் அதற்கான ஃப்ராய்டின் மனஅலசல் முறைத் தீர்வுகளும்தான் அவரைத் தன் நோயாளிகளின் கனவுகளையும் கிட்டத்தட்ட அதே முறையில் விளக்குவதில் கொண்டுபோய் விட்டது.

கனவானது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றாகவும் அதே சமயம் நோய்;க்கான தீர்வைச் சுட்டும் வழியாகவும் உள்ளது என்று அவர் கண்டார். அதை விளக்குவதற்கு நோயாளிகள் மருத்துவரோடு ஒத்துழைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக இரண்டு வகைகளில் அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

ஒன்று : மன இயக்கங்களை அவர்கள் முன்னைவிட உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

இரண்டு : மனதில் வருகின்ற எண்ணங்களையெல்லாம் சின்னது பெரியது, முக்கியமானது முக்கியமற்றது, நல்லது கெட்டது, நியாயமானது அநியாயமானது, அழகானது அசிங்கமானது போன்ற பாகுபாடுகள் எதுவும் செய்யாமல், தீர்ப்பு எதுவும் வழங்காமல், சாதாரணமாக நமது அறிவு செய்கின்ற விமர்சன வேலைகளையெல்லாம் செய்யாமல் வருவதையெல்லாம் அப்படியே மறைக்காமல், ஒன்று விடாமல் டாக்டரிடம் கொட்டிவிட வேண்டும்.

இது மிக முக்கியமானது. இந்த மனநிலைக்குச் சாதகமான உடல் சூழ்நிலையையும், (உதாரணமாக தளர்ச்சியாக சாய்ந்து கொள்வது, கண்களை மூடிக்கொள்வது), ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ரீதியில் அவர்கள் தங்கள் கனவுகளையும் சொல்வார்களேயானால் அவைகளை பூரணமாக விளக்கி விடுதல் சாத்தியம் என்கிறார் ஃப்ராய்ட்.

கனவுகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது முதல் படி. நீண்ட ஒரு கனவின் ஒரு பகுதியாக ஒரு சப்தம் கேட்பதாக வைத்துக்கொண்டால் அந்த சப்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நோயாளியை டாக்டர் கேட்பார். நோயாளி சுதந்திரமாக சொல்வதை (free association) வைத்து கனவை ஃப்ராய்ட் புரிந்து கொள்வார்.

இந்த முறை பாரம்பரியமாக கையாளப்பட்டு வந்த குறியீட்டு முறைக்கு முற்றிலும் மாற்றமானது. ஆனால் அவிழ்க்கும் முறைக்கு மிகவும் நெருக்கமானது. எனினும் அதனினின்றும் வித்தியாசமானது. ஏனெனில் முடிந்த முடிபாக உள்ள எந்த ஒரு கனவு அகராதியையும் ஃப்ராய்டின் முறை நம்பியிருக்கவில்லை.

இந்த முறையில் ஒரே கனவு பத்து பேருக்கு பத்துமாதிரியான அர்த்தங்கள் கொடுக்கும் சாத்தியமுண்டு. இந்த மாதிரி படிப்படியாக அலசிப் பார்க்காமல் கனவின் அர்த்தங்களை தன்னால் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் ஃப்ராய்ட். இந்த ரீதியில் மனநோயாளியின் கனவில் தொடங்கி, சாதாரண ஆரோக்கியமானவர்களின் கனவிலிருந்து தன்னுடைய மற்றும் தன் குழந்தைகளின் கனவுகள்வரை இந்த அலசல் முறையைப் பயன்படுத்தி விளக்குகிறார்.

இர்மா கனவு

தன்னுடைய கனவு ஒன்றையே முதலில் உதாரணமாக தந்து விளக்குகிறார் ஃப்ராய்ட். இர்மா என்ற ஒரு இளம் விதவை ஹிஸ்டீரியா நோயாளிக்கு அவர் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருடைய சிகிச்சை முழு வெற்றி அளிக்கவில்லை. இர்மாவின் மனக்கவலைகள் மற்றும் மன இறுக்கம் மறைந்ததே தவிர, உடல் உபாதைகள் குறைந்தபாடில்லை. ஃப்ராய்ட் சொன்ன ஒரு தீர்வையும் இர்மாவின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறையின்போது சிகிச்சை தற்காலிகமாக தடைபட்டிருந்தது.

ஒருநாள் இர்மாவின் கிராமத்து வீட்டில் தங்கியிருந்த ஓட்டோ என்ற இன்னொரு மருத்துவ நண்பரை ஃப்ராய்ட் சந்திக்கிறார். இர்மா பற்றி விசாரிக்கிறார். பரவாயில்லை ஆனால் இன்னும் சரியாகவில்லை என்று ஓட்டோ சொல்கிறார். அந்த பதில் ஃப்ராய்டை எரிச்சல் படுத்துகிறது. அன்று இரவு அவர் ஒரு கனவு காண்கிறார்.

கனவில் ஒரு வீட்டின் பெரிய ஹாலில் விருந்துக்காக பலர் கூடியுள்ளனர். அங்கே இர்மா வருகிறாள். உடனே ஃப்ராய்ட் அவளை தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கிறார். அவள் தனது தொண்டை, வயிறு மற்றும் அடிவயிறு ஆகியவற்றில் தாங்கமுடியாத வலி இருப்பதாகச் சொல்கிறாள். அவர் வாயைத்திறந்து காட்டச் சொல்கிறார். அவள் தயங்குகிறாள். பின்னர் திறந்து காட்டும்போதும் ஆரம்பத்தில் சரியாகத் திறக்கவில்லை. நண்பர்-மருத்துவர் ஓட்டோவும் அங்கிருக்கிறார். ஓட்டோ அவளுக்கு ஒரு இன்ஜெக்; வேறு போட்டுள்ளார். இப்படிச்செல்கிறது கனவு.

இந்த கனவை வார்த்தை வார்த்தையாக, காட்சி காட்சியாக அலசி புரிந்து கொள்ள முயல்கிறார் ஃப்ராய்ட். இர்மா நிஜ வாழ்வில் மனம் திறந்து அவரிடம் எதையும் சரியாகச் சொல்லவில்லை என்பதே அவள் கனவில் வாயைத் திறக்கத் தயங்குவதும் சரியாகத் திறக்காததும் குறிக்கிறது என்றும் மேலும் அவளுடைய வேதனைகளுக்கு தான் காரணமல்ல அந்த ஓட்டோதான் காரணமாக இருக்கவேண்டும் என்ற தனது விருப்பத்தை கனவு நிறைவேற்றுவதாகவும் கூறி முடிக்கிறார்.

கனவின் முக்கியமான தன்மையான விருப்ப நிறைவேற்றம் என்பதை அவர் இக்கனவின் விளக்கத்தின் மூலம் ஸ்தாபிக்க முயலுகிறார்.

அத்தியாயம் – 4

கனவென்பது விருப்ப நிறைவேற்றம்

(A Dream is the Fulfilment of a Wish)
ஒரு இசைக்கருவியின் மீது எதிர்பாராமல் நடந்த தாக்குதலால் உண்டாகும் வரையறுக்கப் படாத அபஸ்வரங்கள் அல்ல கனவுகள். மாறாக, அவைகள் முழுக்க முழுக்க அர்த்தங்கள் பொதிந்தவை. அவைகள் நமது ஆசைகளின் நிறைவேற்றங்கள். நமது கனவுகள் நனவாவது முதலில் கனவுகளில்தான் !

கனவுகள் நமது ஆசைகளை நிறைவேற்றுகின்றன என்று சொல்லிவிட்டோம். ஆனால் இது எல்லாக் கனவுகளுக்கும் உள்ள பொதுவான குணம்தானா அல்லது சில குறிப்பிட்ட கனவுகளுக்கு மட்டும்தானா என்று பார்ப்பது அவசியம். ஒரு கனவு ஆசையை நிறைவேற்றுவதாகவும், இன்னொன்று பயத்தை நிறைவேற்றுவதாகவும், இன்னொன்று சிந்தனையை, இன்னொன்று வெறும் ஞாபகத்தைக் காட்டுவதாக – இப்படி இருக்கலாமல்லவா?

ஆனால் இந்த குழப்பங்கள் எதுவும் தேவையின்றி, விருப்ப நிறைவேற்றக் கனவுகள் யாவும் மிகவும் வெளிப்படையாக அமைகின்றன. இதை நிரூபிப்பது மிகவும் எளிது. ஆனால் இத்தகைய கனவுகளின் ஒளிவு மறைவற்ற இந்த மொழி எப்படி நம் முன்னோர்களுக்கு புரியாமல் போனது என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

உதாரணமாக, ஆலிவ் அல்லது அதையொத்த அதிகமாக உப்பிடப்பட்ட உணவை நான் மாலையில் சாப்பிட்டால், இரவில் நிச்சயமாக தாகம் எடுக்கும். அந்த தாகம் என் தூக்கத்தைக் கலைத்து எழுப்பிவிடும். ஆனால் விழிப்பதற்கு முன் கனவு வரும். இப்படி வரும் கனவுகளிலெல்லாம் ஒரே காட்சிதான். நான் எதையாவது குடித்துக் கொண்டிருப்பேன். பிறகு விழித்துவிடுவேன். உண்மையிலேயே எதையாவது குடித்து என் தாகத்தைத் தணித்துக்கொள்ள. குடிக்க வேண்டுமென்ற விருப்பத்தை தாகம் ஏற்படுத்துகிறது. கனவு அந்த விருப்பத்தை நிறைவேற்றுகிறது. ஃப்ராய்டின் விதையில் அடிபட்டபோது கண்ட குதிரைச் சவாரி கனவையும் எடுத்துக்கொள்ளலாம்.

வசதியான கனவுகள்

விழிப்பு ஏற்படுத்தாமல் தூக்கம் தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிற கனவுகள் எல்லாமே ஒருவகையில் வசதியான கனவுகள்தான். கனவுகள் தூக்கத்தைக் கெடுப்பதில்லை. அவை தூக்கத்தின் காவல் தெய்வங்கள். கனவுகள் வருவதன் முக்கியமான காரணங்களில் ஒன்றே நன்றாக தூங்கவேண்டும் என்பதுதான். ஒவ்வொரு வெற்றிகரமான கனவும் இந்த விருப்பத்தை நிறைவேற்றுகிறது.

பொதுவாக நான் நன்றாக உறங்குபவன். சின்னச் சின்ன தேவைகளுக்காகவெல்லாம் லேசில் எழமாட்டேன். என் தாகத்தைத் தணிக்க என் கனவே போதுமானதாக இருந்திருந்தால் நான் விழித்திருக்கவே மாட்டேன். அப்படிப்பட்ட கனவுகளை நான் வசதியான கனவுகள் ((dreams of convenience) என்று அழைக்கிறேன்.

வசதியான கனவுகளில், செயலின் இடத்தை கனவே எடுத்துக் கொள்கிறது. பல நேரங்களில் நமக்கு இத்தகைய கனவுகளே வருகின்றன. என் மருத்துவ நண்பன் ஓட்டோவைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை நிறைவேற்ற அந்த இர்மா கனவே போதுமானதாக இருந்ததைப் போல, தண்ணீர் தேவைப்பட்ட கனவு இல்லாதது என் துரதிருஷ்டமே. இர்மா கனவு ஒரு வசதியான கனவு. என் இளமைக் காலங்களில் இத்தகைய கனவுகள் நிறைய வரும்.

என்னைப் போலவே தூக்கத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு மருத்துவ மாணவன் ஒரு கனவைச் சொன்னான். அவன் வீட்டுக்கார அம்மா எப்போதுமே அவனை காலையில் எழுப்பி விடுவாள். ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டுமென்று. ரொம்ப பொறுப்பாக. அன்று காலையில் அவள் வந்து அவனை சப்தம் போட்டு எழுப்பியபோது, அதற்கு பதிலாக, அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் அவன் ஆஸ்பத்திரி படுக்கை ஒன்றில் இருக்கிறான். அதில், பெப்பி, மருத்துவ மாணவன், வயது 22 என்ற போர்டும் இருந்தது. நான் ஆஸ்பத்திரியிலேயே இருப்பதால், இனிமேல் நான் அங்கே போக வேண்டியதில்லை என்று கனவிலேயே அவன் சொல்லிக் கொண்டான். எனவே திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டான்!

மாதவிடாய் கனவு

தன் மனைவிக்கு மாதவிடாய் வந்ததாக அவள் கனவு கண்டதாக ஒரு நண்பர் ஃப்ராய்டிடம் சொல்லிக்காட்டி விளக்கம் கேட்கிறார். மாதவிடாய் வராததால், வரவேண்டும் என்ற விருப்பத்தை கனவு நிறைவேற்றியிருக்கிறது. அதாவது, விடாய் வராததால் அவள் கர்ப்பமாகி இருப்பதற்கான அறிகுறிக் கனவு இது என்று ஃப்ராய்ட் விளக்குகிறார். இது ஏற்கனவே சொல்லப்பட்டதும்கூட.

பால் திட்டுக் கனவு

ஒரு குழந்தை பெற்ற ஒருத்தி தன் பனியனின் மேல்பக்கம் பால் போன்ற நிறத்தில் திட்டுத் திட்டாகத் தெரிவதாக கனவு கண்டதாக அவள் கணவன் கூற, அதுவும் கருவுற்ற அறிவிப்புதான் ஆனால் இரண்டாவது குழந்தைக்குக் கொடுப்பதற்கு பால் நிறைய சுரக்க வேண்டும் என்று அவள் விரும்புவதாக ஃப்ராய்ட் விளக்குகிறார்.

இம்மாதிரியான விருப்ப நிறைவேற்றக் கனவுகள் அடிக்கடி வரும். அதோடு அவைகள் எளிமையானதாகவும் சின்ன சின்ன கனவுகளாகவும் இருக்கும். இம்மாதிரியான கனவுகள் குழந்தைகளுக்கு அடிக்கடி வருகின்றன. அவைகள் வளர்ந்தவர்களின் கனவுகளைப் போல சுவாரஸ்யமானவைகளாக இருப்பதில்லை. ஆனாலும் குழந்தைகளின் கனவுகள் விருப்ப நிறைவேற்றக் கனவுகளுக்கு நல்ல உதாரணங்களாக அமைகின்றன.

குழந்தைகளின் கனவுகள்

ஒருமுறை ஃப்ராய்ட் தன் குழந்தைகளை ஏற்காடு கொடைக்கானல் மாதிரியான ஒரு மலைப்பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறார். சிம்னி ஹ்யூட் என்ற மலைப்பகுதியைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி சிலாகிக்கிறார். ஒவ்வொரு மலை கண்ணில் படும்போதும் இதுவா இதுவா என்று கேட்டுக்கேட்டு அவர் ஐந்து வயது மகன் நச்சரிக்கிறான். இல்லை என்ற பதில் அவனை ஏமாற்றிக் கொண்டே வருகிறது. மறுநாள் காலை சந்தோஷ முகத்துடன் அவன் வந்து சொல்கிறான் : நேற்று இரவு நாம் எல்லோரும் சிம்னி ஹ்யூட்டில் இருந்ததாக கனவு கண்டேன். ஏரியை முதன் முதலாக படகில் கடந்துசென்றபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது ஃப்ராய்டின் மூன்று வயது மகளுக்கு. ஆனால் ஒரு வருத்தம். படகுப் பயணம் ரொம்ப சீக்கிரம் முடிந்துவிட்டது. ஆனால் அன்று இரவு கனவில் அவள் படகில் நீண்ட நேரம் மனதார சவாரி செய்துகொண்டிருந்தாளாம்!

(தொடரும்)

4 கருத்துகள்:

Nagoer Rumi சொன்னது…

நன்றி ராஜ கம்பீரன். நிற்க, கனவுகளின் விளக்கம் ஃபிராய்டின் ஆராய்ச்சிக் கட்டுரையல்ல. உலகை மாற்றிய பத்து புத்தகங்களில் அதுவும் ஒன்று.

அன்புடன்
நாகூர் ரூமி

ராஜகம்பீரன் சொன்னது…

சார், நன்றி - பின்னூட்டமிட்டமைக்கு. உடனடியாகப் பிராயச்சித்தம் தேடிக்கொண்டேன். இடுகை சரி செய்யப்பட்டது - திருத்தங்களுடன். காண்க!

mohamedali jinnah சொன்னது…

பரக்கத் said...

சிரிப்பா வருது..காமெடி கீமடி பணணலையே...

நான் எம்.ஏ., பி.எட். (Economics Major - Ist Class), 1993-ல் பதிவு செய்துவிட்டு வளைகுடா வேலையில் இன்று வரை தொடர்கிறேன் - பதிவையும் புதுப்பிதது வருகிறேன்.

ஆனால், இதுவரை ஒரு இண்டர்வியூகூட வரவில்லை. எங்கே இட ஒதுக்கீடு? தெரியவில்லை.
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை

mohamedali jinnah சொன்னது…

நல்ல கட்டுரை
OMG WOW
இப்படி ஒரு கட்டுரை இன்னும் அருமையான கட்டுரைகள் கொட்டிக்கிடக்கின்றன .எல்லோருக்கும் இது போய் சேர
என்னிடமும் கொடுங்கள்.

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...