செவ்வாய், 19 அக்டோபர், 2010

இப்படியும் ஒரு மனிதர்!

நாகூர் தர்ஹா ஆஸ்தான வித்வான், கர்னாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் திரு. SMA. காதர் அவர்களைப்பற்றிய கவிதை.

வாழ்க்கையை எல்லோருக்கும்

பகிர்ந்து கொடுத்துவிட்டு

இசையை மட்டுமே –

சொத்தாய் வைத்துக் கொண்ட

இவர் – மனிதனுக்கும் மேலே..!

இதனால்தான் என்னவோ?

இரும்புப் பெட்டியை

தூரப் போட்டுவிட்டு

கிராமபோஃன் பெட்டியை

பக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாரோ?


இவர் வீட்டில்

வெள்ளித் தட்டுகள்

உணவு மேசையில்

சாதாரணமாய் கிடக்கும்..!

இசைத்தட்டுகள் மட்டும்

பூட்டிய அலமாரிக்குள்

பத்திரமாக இருக்கும்..!


அட இப்படியும் ஒரு மனிதரா..?

“மனைவிக்கு மரியாதை”

இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..

“வாங்க.. போங்க.. என்னங்க..

சொல்லுங்க..” – “அவங்க சொன்னாங்க”

இவைகள் எல்லாம் – இவரின்

இல்லற அகராதியில் –

மனைவியுடன் பேசும்

அன்பில் தோய்ந்த சொற்கள்..!


இவர் –

நல்ல குடும்பத் தலைவர்

நல்ல கணவர் ..

நல்ல தந்தை .. மட்டும் அல்ல..

நல்ல நடத்தைகளை

சொல்லிக் கொடுத்த ஆசான்..!


இவர் தங்கம்..

அதனால்தான் இவர் பிள்ளைகள்

வைரமாக ஜொலிக்கிறார்கள்..!


அட.. இப்படியும் ஒரு மனிதரா..?

இவர் – சட்டக் கல்லூரிக்குப் போகாத

நீதிபதி..!

இவரின் “நடுக்கட்டு சபை”

நாகூரில் பிரபலம்.

இது – கோர்ட்டு அல்ல ..

சான்றோர் சபை..!

இதில் – சட்டம் பேசாது..!

நீதி – சொல்லும்..!

தர்மம் – தீர்ப்பு வழங்கும்..!

“மேல் முறையீடு”

இன்றுவரை இல்லை..!


சம்பந்திகள் சச்சரவு

சொத்துப் பிரச்சனைகள்

முகத்தில் இனி முழிக்கவே மாட்டேன்

என வருபவர்கள் – நெஞ்சோடு நெஞ்சு

அணைத்துக் கொண்டு –

சிரிப்போடும் – சிறப்போடும் போகும் காட்சி

மந்திரம் அல்ல..

இந்த மனிதரின் சாதனை..!


“உங்களாலேத்தான்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு..!

ரொம்ப நன்றிங்க..” என்று சொன்னால் –

நம்மகிட்ட என்னா இருக்குது..

பேசவைத்தவனும் அவன்தான்..!

எல்லாம் அவன் கையிலே..!

செய்ய வைத்தவனும் அவன்தான்..!

நம்ப கையிலே ரேகைதான் இருக்குது..!

- என்றுச்சொல்லி கலகலவென சிரிப்பார்..!


இந்த சபையில் ஜூரிகளும் உண்டு…

B.A., காக்கா என்ற ஜலீல் காக்கா

இமாம் கஜ்ஜாலி காக்கா

M.G.K. மாலிமார் காக்கா

நாகை தமீம் மாமா ..


இந்த சரித்திர சபையில்

ஒருமுறை நான்

சாட்சியாய்ப் போனேன்

என் மதிப்பு கூடியது..!


நீதிபதிகள் –

அபராதம் போடுவார்கள்…

இவரோ – சிற்றுண்டி தருவார்

வடையும்/ தேநீரும்..!


இவர் சபையில் –

மனிதர்கள் வருவார்கள்…

மதங்கள் வந்ததில்லை..!


அட… இப்படியும் ஒரு மனிதரா..?

கற்பனையால் கயிறு திரித்து

மற்றவர்கள் எழுதிவைத்த

சரித்திரத்தால் –

வரலாற்று நாயகர்களாய்

வலம் வருவோர் நிறைய உண்டு..!


இவர் வாழ்க்கை வரலாற்றை

நேரில் சென்று கேட்டோம்..

இரண்டு மணி நேரம் சொன்னவர்

அவர் வரலாற்றை அல்ல..

அவர் குருவின் சரித்திரத்தை..!


அவர் உஸ்தாத் தாவூது மியான்

பிறந்த தேதி/ இறந்த நாள்

இவர் நினைவில் நிற்கிறது..!

இவர் – நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக

நியமனம் பெற்ற நாள் அல்ல..!

வருடமே நினைவில்லை..!

அட.. இப்படியும் ஒரு மனிதரா..?


“உமர் இஸ்லாத்தை தழுவிய சரிதை”

இவரின் – உன்னதமான பாடல்..!

இந்த பாட்டை பத்தாம் வயதில் கேட்டேன்..!

இன்றுவரை –

கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்..!

பாட்டு காதில் விழுகிறது..!

காட்சி கண்ணில் விரிகிறது..!


இவர் சுருதி –

இன்றுவரை மாறியதில்லை

இசையில் மட்டுமல்ல..!

வாழ்க்கையிலும்..!

ஏற்றம்/ இறக்கம் என்பதை

இசையில் ஆரோகணம்/ அவரோகணம்

என்பார்கள் – இசையில்

இவர் ஆரோகணம்/ அவரோகணம் அதிசுத்தம்..!

வாழ்க்கையில்.. ஆரோகணம் மட்டுமே..!


இவர் தாளம் –

எப்போதும் தப்பாது…

பாட்டில் மட்டுமல்ல..

வீட்டிலும்..!


86 வயது ஆயினும்

இதுவரை – அவரின் கைத்தடி

தம்பூராதான்..!


பாட்டால் நமக்கு அவர்

சொக்குப்பொடி போடுவார்..!

அவரோ – பட்டணம் பொடி போடுவார்..!


பாடிக்கொண்டு இருக்கும்போதே

அவர் வெள்ளை கைக்குட்டை

சமாதான கொடியைப் போல

மூக்கு வரை ஏறும்

உடன் இறங்கும்..!

பொடி போட்டது மூக்குக்கு மட்டுமே புரியும்..!

தும்மல் வராமல் பொடி போடும் மந்திரம்

இவருக்கு மட்டுமே/ தெரியும்..!


புனித மாதங்களின் முதல் பிறையில்

எல்லோரும் ஒதுவார்..!

இவர் பாடுவார்..!

இறைவனைத் துதித்து..!

அவன் –

தூதரை நினைத்து..!


மனிதர்கள் போல –

வாழ்ந்துக் கொண்டிருக்கும்

இந்த நாட்களில்

நாகூர் தமிழ்ச் சங்கம்

ஒரு உண்மையான மனிதரை கண்டுபிடித்து

“வாழ்நாள் சாதனையாளர் விருது”

கொடுக்கிறது..

விருது அவர்களுக்கு என்றாலும்

எங்களுக்கு அல்லவா

புகழ் வருகிறது..!


மாறி மாறி வேஷங்கள்

போடுகின்ற மனிதரிடை

தேறிவந்த மனிதர் இவர்

தெளிவான மனதுடையார்..!

கூறுகின்ற இவர் சொற்கள்

ஆறுதலை பிறக்க வைக்கும்..!

சேருகின்ற இடமெல்லாம்

வரவேற்பு சிறந்திருக்கும்..!


இசையாத பேர்களையும்

இசையவைக்கும் அன்பாளர்..!

இசையாலே மனம் தொட்டு

இன்பம் தரும் இசை ஆளர்..!

இறைநெறியில் நபிவழியில்

இணைந்திருக்கும் பண்பாளர்..!

இம்மைக்கும் மறுமைக்கும்

நலம் சேர்க்கும் நல்லடியார்..!


எப்போதும் சிரித்திருக்கும்

குழந்தை உள்ளம்..!

இவர் இசையை கேட்போரின்

இதயம் துள்ளும்..!

ஒப்பில்லா இவர்வாழ்க்கை

அன்பின் வெள்ளம்..!

உள்ளபடி இவர் நிறைவை

நாளை சொல்லும்..!


வல்லவனே..! யா அல்லாஹ்

யாசிக்கின்றேன்..! இவர்

வாழ்நாளை நலத்தோடு நீடிக்கச் செய்..!


- இஜட் ஜபருல்லாஹ்

(காக்கா - அண்ணன், இது நாகூர் முஸ்லிம்களின் வழக்குச்சொல்)
நன்றி: ஆபிதீன் பக்கங்கள் (abedheen.wordpress.com)

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...