திங்கள், 8 நவம்பர், 2010

தமிழ்ச் சினிமா - பாவேந்தர் பாரதிதாசன்

ருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே

ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்

திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பியர்கள்

தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்

‘இருவிழியால் அதுகாணும் நாள் எந்த நாளோ,

என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,

இருள் கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்

எதிர்வக்கும் நாள்எந்நாள்' என்றுபல நினைத்தேன்.



ஒலியுருவப் படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்

ஓடினேன்; ஓடியுட்கார்ந்து தேன்இரவில் ஒருநாள்

புலிவாழும் காட்டினில் ஆங்கிலப்பெண் ஒருத்தி

புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை

மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி

வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்

எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை

எழில் முதுகிற் கைவைத்தான்! புதுமை ஒன்றுகண்டேன்.



உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,

உயிர் அதிர்ந்த காரணத்தால் உடல் அதிர்ந்து நின்றே.

தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது

சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்

சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்

சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!

களங்கமில்லாத காட்சி, அதில் இயற்கை யெழில்கண்டேன்!

கதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே!



என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக!

ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்

உள்ளவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!

ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!



வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!

மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!

வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!

வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!

அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்!

அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை

கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!



பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!

பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!

சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்

சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து

வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!

மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.

இரக்கமுற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!



படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்

பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,

படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!

பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி

இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி

இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்

படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்

படமெடுத்தா டும்;தமிழர் பங்கமெலாம் போமே!

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...