திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது: ரவி தமிழ்வாணன்

"மக்கள் தொகை எண்ணிக்கை பெருகிவிட்டது; மனிதர்கள் குறைந்து விட்டனர். இதற்கு, முக்கிய காரணம், இயந்திர வாழ்க்கையை பின்பற்றுவது தான். ஆரம்பத்தில், அச்சு துறையில், எழுத்துக்களை கையில் கோர்க்கும் முறை இருந்தது. கணினி வளர்ச்சியால், ஆயிரம் பக்கங்களை நான்கு நாட்களில் உருவாக்கும் அளவிற்கு, அச்சு துறை முன்னேற்றம் கண்டுள்ளது. புத்தகங்கள் தான், கற்பனை சக்தியை வளர்க்கும் மிகப் பெரிய கருவி.

கணினி வளர்ச்சியில், அனைத்து தகவலும் விரல் நுனியில் கிடைத்தாலும், புத்தகத்தை படித்து பெரும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. புத்தகம் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவது போய், "டிவி' நிகழ்ச்சியில் அதிகம் நேரம் செலவிடுவது அதிகரித்து உள்ளது.புத்தகங்களை தொடர்ந்து படிக்கும் பழக்கம் மூலம், "டிவி' யில் அதிகம் நேரம் செலவிடுவது குறையும்.

ஒரு சில புத்தகங்கள், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. துரோகம் செய்யாத, கைமாத்து கேட்காத, மிகச் சிறந்த தோழன் புத்தகங்கள்தான். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். புத்தக படிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக, பல வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு சென்றிருக்கிறேன். பதிப்பாளன் என்பதால், அரசை பாராட்டுவதாக எண்ண வேண்டாம். தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், வேறு எந்த நாட்டிலும் நூலகம் கிடையாது. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக, அண்ணா நூலகம் அமைந்துள்ளது.ஒரு முறையாவது, அந்த நூலகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்.

இன்று, தாய்மொழி, புத்தகம் இந்த இரண்டிலும் இருந்து, இளைஞர்கள் விலகியுள்ளனர். ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது. பெற்றோர்கள், அடுத்த தலைமுறைக்கு, புத்தகங்களை சொத்தாக கொடுக்க வேண்டும்".

நன்றி: தினமலர் 28.2.2011

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...