சனி, 26 பிப்ரவரி, 2011

இசைஞானி இளையராஜாவும் மாயாமாளவகௌளை ராகமும் - லலிதா ராம்


லலிதா ராம்
ள்ளியில் எப்படி முதன்முதலில் ஆனா – ஆவன்னாவில் பாடத்தைத் தொடங்குவோமோ, அதுபோல் சங்கீதத்தில் பாலபாடங்கள் அனைத்தும் மாயமாளவகௌளை ராகத்தின் அடிப்படியிலேயே இருக்கும். அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நம் கட்டுரைக் கச்சேரியையும் துவக்குவோம்.

திரையிசையில் காலம்கால்மாய் உபயோகமாகும் ராகங்களில் மாயமாளவகௌளை முக்கியமானது 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா'வில் துவங்கி, 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' வரையில் எறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களாலும் கையாளப்பட்ட ராகம் இது !

பதினைந்தாவது மேளகர்த்தா ராகமாகிய இந்த ராகத்தில், தியாகராஜரின், 'துளசிதள முலசே' என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது ('உன்னால் முடியும் தமிபி'யில் ரமேஷ் அரவிந்த், ஜெமினி கணேசனைக் கவர இந்தப் பாடலைத்தான் பாடுவார்; 'How to Name It' ஆல்பத்தின் 'Study of Violin' பகுதியில் இப் பாடல் முழுவதும் வரும்). திரையிசையில் இந்த ராகம் பல்வேறு சூழ்நிலைகளைச் சித்தரிக்க பயனாகியிருக்கிறது.

இசையமைப்பாளர்களுக்கு இந்த ராகம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறினால் இந்த ராகத்துக்குக் கிடைத்த வரமாக இசைஞானி இளையராஜாவைச் சொல்லலாம் அந்த அளவுக்கு மாயமாளவகௌளையின் ஆதிமூதல் அந்தம்வரை அலசித் தள்ளியிருக்கிறார் ராஜா. அவற்றுள் எந்த ஒன்றை உதாரணமாய் எடுப்பது என்று முடிவுசெய்வதற்குள் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்துவிடும் போலிருக்கிறது. ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தால், குறைந்தது 15 பாடல்களாவது என்னை முறைப்பதுபோல் ஒரு பிரம்மை ! ஒரு வழியாக, சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வழியில் குலுக்கல் முறையைப் பின்பற்றி, 'கோபுர வாசலிலே' திரைப்படத்தில் வரும், 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' எனும் பாடலைத் தேர்வு செய்தேன்.

'Yes, I love this Loveable Idiot' என்ற அறைகூவலுடன் துவங்கும் பாடலின் முன்னோட்ட இசையிலேயே சூழ்நிலையின் முழுத் தாக்கத்தையும் சித்தரிக்கிறார் ராஜா, காதாநாயகி உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உலகே அத்ர்ந்திட தன் காதலை வெளிப்படுத்தும்போது மடைதிறந்த வெள்ளமெனப் பொங்கும் உணர்வுகளை சில நூறு வயலின்களின் ஆக்ரோஷமான வெடிப்பின் மூலம் மனக்கண் முன் அழகாய் நிறுத்துகிறார் ! பாடலை நன்கு கவனித்தால், 'இடம் மாறும்', 'பரிமாறும்', 'வழிந்தோடும்', 'கலந்தாட' என்ற வார்த்தைகளெல்லாம் ஒரு வித அசைவைக் குறிக்கும் சொற்கள், இந்த அசைவை, அதன் முந்தைய வார்த்தைகளான (முறையே) 'இதயம்', 'இளமை', 'அமுதம்', 'அழகில்' ஆகிய சொற்களில் ஒருவித அசைவைக் கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தேகமானால் இந்த நான்கு வரிகளையும் அந்த அசைவு இல்லாமல் பாடிப்பாருங்கள் பாடலின் ஜீவனே போனதுபோல் தோன்றும். மிகவும் அனுபவித்து சிந்தித்தாலன்றி இவ்வாறு அமைத்திருக்கமுடியாது !

இந்த அசைவை 'கமகம்' என்று சொல்லுவார்கள். இந்த கமகம், இந்திய பாரம்பரிய இசைக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாகும்.

பாடலின் இடையிசையில் வயலினும், குழலும் மாறிமாறி இருவரின் சம்பாஷணையைப் போல் அமைந்திருக்கிறது – மொத்த பாடலும் ஒருவித பரவச நிலையை அழகாக சித்தரிக்கிறது. பாடல் முழுவதும் மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் அற்புதமாய் பின்னிவருவது தனிச்சிறப்பு ! உன்னதமான வாத்திய அமைப்போடு பாலு மற்றும் சித்ராவின் சர்க்கரைக் குரல்களில் இழையல் குழையல்களும், வாலியின் அற்புதமான பாடல் வரிகளும் இப்பாடல் சோபிக்க முக்கியக் காரணங்களாகும்.

இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்

* பூங்கதவே தாள் திறவாய் : நிழல்கள்

* ஏ ஷப்பா – கர்ணா

* பூவ எடுத்து ஒரு மாலை – அம்மன் கோவில் கிழக்காலே

* சொல்லாயோ சோலைக்கிளி – அல்லி அர்ஜுனா

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



1 கருத்து:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அருமையான பாடலும் ஆய்வும்.
நன்றி

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...