திங்கள், 7 பிப்ரவரி, 2011

சத்து இருக்கும்போதே செத்துப் போ!

ருபதுகளில்... எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு!

ஜன்னல்களை திற்ந்து வை. 
படி... எதையும் படி !
வாத்யாசனம் கூட
காமம் அல்ல, கல்விதான்... படி!

பிறகு, புத்தகங்களை எல்லாம்
உன் பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைப்பொத்தான், கடிகாரம்,
காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால்
எந்திர அறிவுகொள்!

ஏவாத ஏவுகணையேனும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்!
மனித முகங்களை மனசுக்குள் பதிவுசெய்! 
சப்தங்கள் படி!  சூழ்ச்சிகள் அறி!

திருடு... திருப்பிகொடு!
பூமியில் நின்று வானத்தை பார்...
வானத்தில் நின்று பூமியை பார்!

உன் திசையை தெரிவுசெய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலை சுகி...காதலில் அழு!

இருபதுகளின்...
இரண்டாம் பாகத்தில் மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த
இன்பம் கையளவுதான்...
மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கை என்பது
உழைப்பும் துய்ப்பும் என்று உணர்!
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்... இன்னும்...
சூரியகதிர்கள் விழமுடியாத ஆழத்தில்!.

முப்பதுகளில்...
சுறுசுறுப்பில் தேனீயாய் இரு!
நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு...உழை...
நித்தம் கலவி கொள்!

உட்காரமுடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒழித்து வைத்திருப்பான்...
கைப்பற்று!

ஆயுதம் தயாரி... பயன்படுத்தாதே!
எதிரிகளை பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,
இடி பிளக்காத ஆழத்துக்கு அனுப்பு!
கிளைகளை,
சூரியனுக்கு நிழல் கொடுக்கும்
உயரத்துக்கு பரப்பு!  நிலைகொள்...
நாற்பதுகளில்...
இனிமேல்தான் வாழ்க்கையின் ஆரம்பம்..
செல்வத்தின் பாதியை
அறிவின் முழுமையை செலவழி!

எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டை ஓடுகளில் தீட்டு!
ஒருவனை புதைக்க
இன்னொருவனை குழிவெட்ட சொல்!
அதில் இருவரையும் புதை...

பொருள் சேர்...
இரு கையால் ஈட்டு!
ஒரு கையாலேனும் கொடு!
பகல் தூக்கம் போடு...

கவனம்... இன்னொரு காதல் வரும்!
புன்னகை வரை போ...புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு,
இனிமேல் லட்சியத்துக்கு
நீதான் இலக்கு!

ஐம்பதுகளில்...
வாழ்க்கை... வழுக்கை...
இரண்டையும் ரசி!
கொழுப்பை குறை!
முட்டையின் வெண்கரு...
காய்கறி, கீரை கொள்!
கணக்குப் பார்!
நீ மனிதனா?
என வாழ்க்கையை கேள்.
லட்சியத்தை தொடு!
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!

அறுபதுகளில்...
இதுவரை வாழ்க்கைதானே
உன்னை வாழ்ந்தது...
இனியேனும்...
வாழ்க்கையை நீ வாழ்ந்து பார்!
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு!
மனிதர்கள் போதும்...
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு...
கிளியோடு பேசு...
மனைவிக்கு பேன் பார்!
பழைய டைரி எடு!
இப்போதாவது உண்மை எழுது!

எழுபதுகளில்...
இந்தியாவில், இது உபரி...
சுடுகாடு வரை நடந்துபோக
சத்து இருக்கும்போதே
செத்துப் போ!

ஜண கண மண!


நன்றி: கவிஞர் வைரமுத்து



2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி

RaaKu saamy சொன்னது…

மிக அருமை . பகிர்வுக்கு நன்றி

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...